தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், 202122ஆம் ஆண்டிற்கான திருத்த வரவுசெலவுத் திட்டத்தை 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13ஆம் நாள் சட்டமன்ற பேரவை முன் வைத்து ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் முத்திரை பதித்துள்ளன. முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை தந்துள்ளார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு கடமைப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளின் அடிப்படையிலான தலைநிமிரும் தொலைநோக்கு திட்ட அறிக்கையில் உள்ள அம்சங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் அரசுத் துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளன.
அரசின் இந்த சரிவை நிறுத்தி, நிதி நிலைமையை சீர்படுத்துவது மக்களுக்கு நாங்கள் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஒரே நேரத்திலோ அல்லது ஒரே ஆண்டிலோ செய்து முடிக்க இயலாத அளவிற்கு இப்பணி மிகக் கடினமாக உள்ளது. இதற்கு குறைந்த பட்சம் இரண்டு மூன்று ஆண்டுகள் வரையிலும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெளிப்படத்தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுநர்களிடமிருந்து கருத்துரைகள் பெறுதல் மற்றும் உறுதியான நடவடிக்கை ஆகிய நான்கு முக்கிய கூறுகளுடன் கூடிய இந்த அரசு செயல்படும் முறையை முதலமைச்சர் தெளிவாக வகுத்துள்ளார். அதே சமயத்தில் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை படிப்படியாக செயல்படுத்துவோம். முதலமைச்சர் பதவியேற்ற நாளிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.
தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று, தனியாக ஒரு வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதாகும். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை நாளை தாக்கல் செய்வார் என இந்த அவைக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
இந்தத் திட்டத்தின் கீழ், மொத்தம் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய சரிபார்த்தலுக்கு பின்னர் 2,29,216 குறைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளன என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றிய மாநில நிதி உறவுகள்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு முறையில் ஒன்றிய அரசால் கூட்டாட்சி மனப்பான்மையை நீர்த்துப்போகுமாறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. பெட்ரோல் மீதான ஒட்டுமொத்த ஒன்றிய வரி 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு 10.39 ரூபாயிலிருந்து இன்று 32.90 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல், டீசல் மீதான வரி 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் 3.57 ரூபாயிலிருந்து இன்று 31.80 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்றிய அரசால் விதிக்கப்பட்ட மேல்வரிகள், முழுமையாக அக்குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வில்லை எனவும், குறிப்பிட்ட காலத்திற்கு விதிக்கப்படும் கூடுதல் வரிகள் காலவரையன்றி தொடர்கின்றன எனவும் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்குவதற்காக வருவாய் மற்றும் வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உள்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை இந்த அரசு நிறுவும்.
தரவுகளை மையமாக கொண்டுள்ள ஆளுகை தரவுகளை மையமாக கொண்டுள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான பின்வரும் முக்கிய முயற்சிகளை செயல்படுத்துவதற்கு இந்த அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை நன்கு அறிய, அனைத்து துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும். எனவே மாநிலத் திலுள்ள அனைத்து பொது சேவை களிலும் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
கொள்முதல் செய்யும் அனைத்து துறைகளிலும் மின்னணு கொள்முதல் முறை (ங்ல்ழ்ர்ஸ்ரீன்ழ்ங்ம்ங்ய்ற்) கண்டிப்பாக பின்பற்றப் படும். அரசு கொள்முதல் முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கென, தனி மின்னணு கொள்முதல் வலைத்தளம் ஒன்று உருவாக்கப்படும்.
திறனையும், வெளிப்படத்தன்மையும் மேம்படுத்துவதற்காக, திட்டமிடுதல், விலை விவர அட்டவணை புதுப்பித்தல், செந்தர விலை பட்டியலை புதுப்பித்தல், திட்ட வடிவமைப்பு, பணிகளின் மதிப்பீடுகள், ஒப்பந்த புள்ளிகள், பணிகளை அளவிடுதல் மற்றும் பணிப் பட்டியல்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.
அரசு சொத்துக்கள் மற்றும் இடர் மேலாண்மை
பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு, மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். அதில் அனைத்து அரசு நிலங்கள் தொடர்பான முழு விவரங்களும் உள்ளடங்கும்.
வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு ஒன்று அமைக்கப்படும். அதன் மூலம், பொது நலன் திறம்பட பாதுகாக்கப்படு வதையும், அரசுக்கு வளங்கள் உடனுக் குடன் கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில், வரிவிதிப்பு, நில விவகாரங்கள், பணியாளர் விவகாரங்கள் மற்றும் கொள்முதல் பிரச்சனைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும். இந்த வழக்கு மேலாண்மை அமைப்பு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களை கொண்ட அனுபவமிக்க குழுவால் கண்காணிக்கப் படும்.
அதிக நம்பகத்தன்மை மற்றும் அதிகரிக்கப்பட்ட உற்பத்தித் திறன் அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். அனைத்து அரசுத் துறைகளிலும், முகமைகளிலும் உள் தணிக்கை செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்வதற்காக அரசில் செயல்படும் அனைத்து தணிக்கைத் துறைகளும் நிதித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்.
சட்டமன்றத்தின் பங்கினை வலுவூட்டுதல்
சட்டமன்றத்தின் நூற்றாண்டை குறிக்கும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த மன்றத்தில் 1921ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். 2010 முதல் வழங்கபடாமலிருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது, இனி ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 3ஆம் நாள் 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்.
தலைமை செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துத் துறை அலுவலகங்கள் வரையிலும், தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.
உலக அளவில் போற்றப்படும் தமிழ்ப் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.
இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறைப்படி மேற்கொள்ள, நாட்டில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அளவாக, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, முதற்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள்
முதியோர் ஓய்வூதியத் திட்டம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, அனைத்துத் தகுதிவாய்ந்த நபர்களும் விடுதலின்றி பயன்பெறுவதை இந்த அரசு உறுதி செய்யும். மாநிலத்திலுள்ள மக்களுக்கு சமூகப்பாதுகாப்பிற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதில் முன்னணி நிலையை தமிழ்நாடு மீண்டும் பெறும் வகையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு 4807.56 கோடி ரூபாய் என உயர்த்தப்பட்டது.
நில மேலாண்மை
நிலம் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்காக, துல்லியமான புவியிடங்காட்டி (உஏடந) மற்றும் ஏனைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாநிலம் முழுவதிலும் நவீன நில ஆய்வை இந்த அரசு மேற்கொள்ளும்.
இந்த நோக்கத்திற்காக, நில நிர்வாக ஆணையாளரின் தலைமையின் கீழ் தமிழ்நாடு சிறப்பு சமூகத் தாக்க மதிப்பீடு மறுவாழ்வு மற்றும் குடியமர்வு பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.
பேரிடர் மேலாண்மை
மாநில பேரிடர் நிவாரண மற்றும் தணிப்பு நிதியை அதிகரிக்கவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் தொகையை விடுவிக்கவும் வேண்டுமென ஒன்றிய அரசை நாம் வலியுறுத்துவோம்.
காவல்துறை
காவல்துறையில் ஒப்பளிக்கப்பட்ட 1,33,198 பணியிடங்களில், மீதமுள்ள 14,317 காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெரும் குற்றங்களில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், பொருளாதார குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரும் வகையில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை
தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
சாலை பாதுகாப்பு
ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும். மேலும், போக்குவரத்து ஆணையரகம், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.
நீதித்துறை நிர்வாகம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில், அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும். உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள அனைத்துக் காலிப்பணியிடங்களையும் நிரப்புவதற்குத் தேவையான ஆதரவை இந்த அரசு வழங்குவதுடன், நீதிமன்றங் களின் சிறப்பான செயல்பாட்டிற்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைத் திறன்படப் பயன்படுத்துவதற்கும் உதவி புரியும்.
பொது விநியோகத் திட்டம்
இந்த திட்டத்தினை பயன்படுத்தி 2021ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இரு தவணைகளாக, 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கும் கொரோனா நிவாரண ரொக்க நிதியுதவியாக 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது மற்றும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலின் உச்சத்தில் மளிகைப் பொருட்களின் சிறப்புத் தொகுப்பு ஒன்று வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, 9,370.11 கோடி ரூபாய் செலவில், இந்த கோவிட் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டன. இது, நாட்டிலேயே வழங்கப்பட்ட மிகப்பெரிய கோவிட் நிவாரணத் தொகுப்பாகும்.
தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலை கடைகளை ஏற்படுத்து வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்வதற்கு குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.
நீர் வளங்கள்
இந்த அரசு மாநிலத்தின் குறைந்த நீர் ஆதாரங்களை முறைப்படி பயன்படுத்தி அவற்றை பாதுகாப்பதற்கு அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கும் விதமாக நீர்வளங்களுக்கு தனியே ஒரு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. முதலமைச்சரின் நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக, அடுத்த 10 ஆண்டுகளில், 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்.
மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை போன்ற முக்கிய அணைகளின் நீர்த்தேக்க கொள்ளளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த, தேவையான திட்டங்களை இந்த அரசு வகுக்கும்.
நவீன தொழில்நுட்பங்களான ஆளில்லா விமானங்களின் மூலம் ஆய்வு, தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு, மொத்தம் 30 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
மீன்வளம் 202122ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களை அமைக்க மொத்தம் 433.97 கோடி ரூபாயும், மீன் இறங்கு தளங்களை மேம்படுத்த 143.46 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்
தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங் களின் ஒத்துழைப்புடனும், மக்களின் முழுஅளவிலான பங்களிப்புடனும், பலதரப்பட்ட நம் மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவுத் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்.
பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, முதலமைச்சரின் தலைமையின் கீழ், இந்த அரசு மொத்த 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்றினை அமைக்கும்.
ஆளில்லா விமானங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் மேலாண்மை அமைப்புகள் (ஙஒந), நவீன ஆயுதங்கள் மற்றும் வன நிலப்பரப்பிற்கேற்ற வாகனங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் வனப்படையை நவீனப் படுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப் படும்.
அடுத்த 5 ஆண்டுகளில், சர்வதேச நீலக் கொடி சான்றிதழை பெறுவதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ஒன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும்.
கட்டுமானத் தொழில்நுட்பங்கள்
திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி, திட்ட மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பட்டியலிடும் நடைமுறைகள் இவையனைத்தும் ஓராண்டுக்குள்ளாக முழுமையாக மின்னணுமயமாக்கப்படும்.
ஊரக வளர்ச்சி
மாநிலத்திலுள்ள அனைத்து 79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். கிராமப்புறங் களில் அமைந்துள்ள 1,27 கோடி குடும்பங் களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்படும். தற்போது வீட்டிற்கான குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள்ளாக குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.
முழுமையாடாத அனைத்து வீடுகளும் விரைந்து முடிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்வதுடன், 202122ஆம் ஆண்டில் மொத்தம் 8,017.41 கோடி ரூபாய் செலவில், மேலும் 2,89,877 வீடுகள் கட்டப்படும். கிராமப்புறங் களில் தற்போது வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான 50 ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக மாநில அரசின் தரப்பிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால், ஒரு வீட்டிற்கான அரசு மானியம் 2.76 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் ஏழை, எளிய பயனானர்களுக்கு விரைவாக, விலைக் குறைவாக வீடுகள் கட்டுவதற்காக. நவீன, விலை குறைவான கட்டுமான தொழில்நுட்பங்களை இந்த அரசு ஊக்குவிக்கும். 202122ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தில், 3,548 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி, நடப்பு ஆண்டிலிருந்து ஒரு தொகுதிக்கு 3 கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப் படும்.
இந்த அரசு 202122ஆம் ஆண்டில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தொடங்கவுள்ளது. இத்திட்டம், குக்கிராம அளவில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பிற்கான இடைவெளி களை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.
மறைந்த முதலமைச்சர் கலைஞர் அறிமுகப்படுத்திய மிகப் புகழ்பெற்ற திட்டம் நமக்கு நாமே திட்டம். இத்திட்டம், உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து உள்ளூரின் முக்கியமானப் பணிகளை மேற்கொள்ள மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 202122ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் 809.79 கோடி ரூபாய் செலவில் 202122ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும். நடப்பாண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் 5,500 கோடி ரூபாய் சிறப்பு கோவிட் கடன் உட்பட 20,000 கோடி ரூபாய் கடன் உறுதி செய்யப்படும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
குப்பைகள் உருவாகும் நிலையிலேயே 100 சதவிகிதப் பிரித்தலை உறுதி செய்வதன் வாயிலாகவும், வீடுகள்தோறும் குப்பைகள் சேகரித்தல் மற்றும் 100 சதவிகிதம் அகற்றுவதன் வாயிலாகவும் நாம் குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவோம். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும். அனைத்து நகர்புறங்களிலும் பாதசாரிகள் மற்றும் மாற்றுத்.திறனாளிகள் எளிதில் பயன்படுத்தத்தக்க நடைபாதைகள் அமைக்கப்படும்.
நமக்கு நாமே திட்டத்தில் இதுபோன்ற பணிகளில் கணிசமாக பங்களிப்பவர் களுக்கு ஒவ்வோராண்டும் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மக்கள் சேவையில் மாநகராட்சி மற்றும் நமது சேவையில் நகராட்சித் திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் இணையவழி சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படும்.
திருச்சிராப்பள்ளியில் புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் பமஎஒஉஈஞ நிதியுதவியுடன் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் நோக்கத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்திற்கு ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு 202122ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளது.
202122க்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில், சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய மேம்பாட்டு வங்கியின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கென 202122ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் 87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு, சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0 தொடங்கப்படும்.
சென்னை நகரில் 3 இடங்களில் அதாவது கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல், கொன்னூர் நெடுஞ்சாலை ஸ்ட்ராண்ஸ் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மொத்தம் 2,056 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தப்படும். சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் மொத்தம் 2,371 கோடி ரூபாய் செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும். ஆந்திர பிரதேசத்திலிருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்த்தேக்கங் களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
சென்னை நகரக் கூட்டாண்மை
சென்னை நகரக் கூட்டாண்மை திட்டம் விரைவில் உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்படும்.
நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு
அதன்படி, பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், வெள்ள நீர் வடிகால்கள், சாலைகள், கட்டடங்கள் போன்ற பொதுச் சொத்துகளை கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளிலும் நீர்நிலைகளை புதுப்பித்தல் போன்றவற்றிலும் நகர்ப்புற ஏழைகளை ஈடுபடுத்துவதன் மூலம் பயன்தரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்னோடி திட்டமாக இந்த அரசு ஒரு நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏற்படுத்தும்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
தமிழ்நாடு 1961ஆம் ஆண்டு வீட்டுவசதி வாரியச் சட்டம், தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு குடிசைப்பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம், தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு அடுக்கு மாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் உள்ளிட்ட வீட்டுவசதித் துறையின் பழைய சட்டங்கள் மறு ஆய்வு செய்யப் படும். மேற்சொன்னவாறு, பெருந்திட்டங் களின் கீழுள்ள நிலப்பரப்பு 22 சதவீதமாக உயர்த்தப்படுவதை இந்த அரசு உதவி செய்யும்.
புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள், மதுரை, கோயம்புத்தூர் திருப்பூர் பகுதி, வேகமாக வளர்ந்து வரும் ஒசூர் பகுதிக்கு ஏற்படுத்தப்படும்.
மேலும் 10 ஆண்டு காலத்திற்குள், தமிழ்நாடு முற்றிலுமாக குடிசைகளற்ற மாநிலமாக விளங்க வேண்டுமென்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் திற்காக 3,954.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் உள்பட ஆட்சேபணையுள்ள புறம்போக்கு நிலங்களிலிருந்து, குடிசை யில் வாழும் மக்களை மனிதாபிமானத் துடன் நியாயமான முறையில் மறுகுடியமர்த்துவதற்காக, அனைத்து பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து ஒரு புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை வகுக்கப்படும்.
இரண்டாவது தமிழ்நாடு வீட்டுவசதித் துறை வலுவூட்டும் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் விரைவில் மேற்கொள்ளப்படும். ஆசிய வளர்ச்சி நிதியுதவியுடன், நகர்ப்புற ஏழை மக்களுக்கு பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலைத்திருக்ககூடிய அனைவருக்குமான வீட்டுவசதித் திட்டத்தின் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நிறைவடைந்துள்ளன.
நெடுஞ்சாலைகள்
அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்கக்கூடிய 2,200 கி.மீ. சாலைகளை 4 வழிச்சாலை களாகவும், வட்ட தலைமையகத்தை இணைக்கும் 6,700 கி.மீ. ஒற்றை மற்றும் இடைநிலை வழிச் சாலைகளை இரட்டை வழி நெடுஞ்சாலைகளாக மேம்படுத்துவதே இந்த அரசின் நோக்கம். தற்போது புறவழிச் சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
போக்குவரத்து
முதலமைச்சர், மாநிலத்தில் உள்ள வெண்பலகை கொண்ட நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்திருந்தார். இந்த நோக்கத்திற்காக, 703 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 750 கோடி ரூபாய் டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 623.59 கோடி ரூபாய் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசு, நிதி மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பேருந்து சேவைகளின் இயக்கத் திறனை மேம்படுத்துவதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும். போக்குவரத்து நிறுவனங்கள் சிக்கனமாக செயல்படுவதை உதவி செய்வதற்கும், விதிமுறை அடிப்படை யிலான செயல்திறன் குறியீடுகளின் இலக்கை அடைவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இலவச அல்லது மானியம் அளிக்கப்பட்ட பேருந்து பயணம் வேண்டுமென அரசு விரும்பும் இனங்களில், நெறிசார் செலவு அளவுருக்களின் அடிப்படையில் வெளிப்படையான மானியம் வழங்கப்படும். இந்தப் புதிய முறை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்படும்.
மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில் திட்டத்தின் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி புறவழிதடத்திற்கான சேவைகள், 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதாவது நான்கு ஆண்டுகளுக்குள் தொடங்கும். மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த இரண்டாம் கட்டமும் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். அதே நேரத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை தாம்பரம் வழியாக விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டிக்கும் பணியை இந்த அரசு விரைவாகத் தொடங்கும். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும்.
எரிசக்தி
ஏறத்தாழ 2,500 மொகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளிலிருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது.
எனவே, கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது.
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சந்திக்கும் பெரும் நிதி இழப்புகள் முற்றிலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப் படவுள்ள சென்னைகன்னியாகுமரி தொழில் பெருவழித்திடம் மின்துறை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங் களின் நிதி மறுசீரமைப்பு விரிவாக ஆய்வு செய்யப்படும். அந்த அறிக்கையின் மீது அரசு விரைந்து செயல்பட்டு மின் வாரியத்தின் கழக நிறுவனங்கள் நொடிந்து போவதிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில், சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் வாயிலாக, மாநிலத்தின் 17,980 மெகாவாட் மொத்த மின் உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்படும்.
வேளாண்மைக்கான இலவச மின்சாரம் மற்றும் வீட்டிற்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும் 19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலக் கல்விக் கொள்கை
தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற் கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்களை கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்.
பள்ளிக்கல்வி
பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக இந்த வரவுசெலவுத்திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின் படி, கற்றல் விளைவுகளின் அடிப்படை யில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டு வரப்படுவதை அரசு உறுதி செய்யும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில் நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் 13.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
2025ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும், அடிப்படைக் கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய எண்ணும் எழுத்தும் இயக்கம், 66.70 கோடி ரூபாய் மதிப்பிட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 114.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.
மேலும், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20.76 கோடி ரூபாயில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி, கவின்திறன் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன், மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை குறைப்பதே இந்த அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு விரைவாக செயல்படும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவை யான கொரோனா தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கற்றலில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதற்காக பள்ளி நேரங்களை தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே குறைதீர் கற்றல் வழங்குவதற்கான விரிவானத் திட்டம் அறிமுகப்படுத்தப் படும்.
உயர்கல்வி
இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும். மேலும் தரத்தை மேம்படுத்தி, அதிகளவிலான கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரசான்றுக் குழுவின் தரநிலையை அடைவதற்கு அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்.
அதிக எண்ணிக்கையிலான காலி பணியிடங்கள், குறிப்பாக, ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்.
25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் விடுதிகள் கட்டப்படும்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங் களுக்கான இணைவு வழங்கும் பல்கலைக்கழகமாக ஆணை பிறப்பித் ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஏதுவாக இருக்கும்.
மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக் கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத் துடன் இணைந்து துவக்கப்படும்.
மருத்துவம் மற்றும் குடும்ப நலம்
நோய்த் தொற்றைத் தடுக்க தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமாகும். நாள்தோறும் 8 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடும் திறன் பெற்றிருந்தும், 2.4 லட்சம் அளவில் மட்டுமே தடுப்பூசி வரப்பெறுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு போதுமான அளவில் தடுப்பூசி வழங்கவேண்டிய தேவையை முதலமைச்சர், பிரதமரின் கவனத்திற்கு அடிக்கடி எடுத்துச் சென்றார்.
முதலமைச்சரால் மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான முன்மாதிரித் திட்டம் உருவாக்கப்பட்டு மொத்தம் 257.16 கோடி ரூபாய் செலவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர், அனைவரின் பாராட்டையும் பெற்ற 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைகள் திட்டத்தை 15.09.2008 அன்று தொடங்கி வைத்தார். இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை யானது 1,303 ஆக உயர்த்தப்பட்டு, சேவைகளின் தரம் மேலும் மேம்படுத்தப் படும்.
23.7.2009 அன்று தொடங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவ நிறுவனங் களிலுள்ள சிறந்த மருத்துவ வசதிகள் ஏழை மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வண்ணம், கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் நோய்களும், சிகிச்சை முறைகளும் இந்த அரசால் விரிவுப்படுத்தப் பட்டன.
கலைஞர், தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைத்திட திட்டமிட்டார். அதற்கென, உரிய நிலமும் கண்டறியப்பட்டது. அதற்கு பின், இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளை போல் சித்தாவிற்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென, முதல்கட்ட நிதியுதவியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு மானியங்களை வழங்குவ தற்காக, 215.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையங் களில் தொழில் 4.0 எனும் நவீன தரத்திற்கு உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி இளைஞர்களுக்கு வழங்கப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நெய்வேலியில் அமைக்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தொழிற்சாலைகளில் திறம்பட வேலை செய்வதை உறுதி செய்வதற்காக, எதிர்கால வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சியினை, தெரிவு செய்யப்பட்ட 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்க 60 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
தொழில்கள்
ஒற்றை சாளர அமைப்புமுறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகளும் ஒற்றை சாளர வலைவாசலின் கீழ் கொண்டு வரப்படும்.
வளர்ந்து வரும் துறைகளில் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்து வதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றிற்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் அறிவிக்கப் படும். அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர் களுடனான உறவு வலுப்படுத்தப்படும். முதலீட்டாளர்களின் முதலில் சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதற் காகவும், சிறப்பாக திட்டமிடுவதற்கும், மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளை பற்றி விவரமான, துல்லியமான தரவுதளம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாக கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. அதனை முன்னெடுக்கும் வகையில் நிதிநுட்ப கொள்கை ஒன்று வெளியிடப்படும். மேலும், வழிகாட்டி நிறுவனத்தில் இதற்கென பிரத்யேகமான நிதிநுட்ப பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு, நிதிநுட்ப நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும். சென்னையில் இரண்டு கட்டங்களாக நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக நந்தம்பாக்கத்தில் இந்த நிதிநுட்ப நகரம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
பழைய மாமல்லபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப துறை பெருவழியாக வளர்ச்சியடைவதற்கு, 2000ஆம் ஆண்டில் சென்னையில் கலைஞரால் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது முக்கிய காரணமாகும். இப்போது தமிழ்நாட்டிலுள்ள நிலை ஒஒ மற்றும் நிலை ஒஒஒ நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டத் தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
ஓசூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழி களை நிறுவுவதாக ஒன்றிய அரசு அறிவித்த போதிலும், அதற்கான ஒன்றிய அரசின் உதவி குறைவாகவே உள்ளது. கோயம்புத்தூரில், 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், 3500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இப்பூங்காக்களில், தயார்நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் (டப்ஹஹ் & டப்ஹஹ் ச்ஹஸ்ரீண்ப்ண்ற்ண்ங்ள்) உட்பட உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்கென இப்பூங்காக்களில், முதற்கட்டமாக 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்படும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்
தமிழ்நாட்டில் உள்ள இந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி, கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும், இந்நிறுவனங்கள் வளர்ச்சி அடைய தேவைப்படும் நடிவடிக்கைகள் பரிந்துரைக்கவும், டாக்டர்.ந.சுந்தர தேவன் இ.ஆ.ப. (ஓய்வு) தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான கடன் உத்தரவாத திட்டத்தை மேலும் பல இம்மாதிரியான நிறுவனங்கள், குறிப்பாக குறு தொழில் நிறுவனங்கள் கடன் பெறும் வகையில் செயல்படுத்தும். இந்நிறுவனங்கன் வணிகத் திறனின் அடிப்படையில் நிதி நிறுவனங்களும் நவீன நிதி தொழில்நுட்ப நிறுவனங்களும் கடன் வழங்க ஏதுவாக, மின்னணு தகவல் தரவுகள் அடிப்படையிலான கடன் மதிப்பீட்டு முறை ஏற்படுத்தப்படும். இந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பங்குச் சந்தைகள் மூலம் முதலீட்டைப் பெற முயலும் இந்நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்து, 30 லட்சம் ரூபாய் வரை பட்டியலிடும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு கடன் அளித்தவர்கள் தங்களது கடன்களை மறு கட்டமைப்பு செய்ய முன்வந்தால், அரசு கடன் உத்தரவாதத்துடன் நிதி நிறுவனங்களின் உதவியுடன் கடன் வழங்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களின் நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிப்ப தற்கான வழிவகைகளை உறுதி செய்வதற்கான வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடித் தளங்களின் கீழ் (பதங்உந), அனைத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.
ஐந்து பெரிய தொழிற் தொகுப்பு களை மருந்து மற்றும் பெட்ரோய ரசாயனங்கள் துறையிலும், துல்லியமான உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து (நம்ஹழ்ற் ம்ர்க்ஷண்ப்ண்ற்ஹ்) ஆகிய துறைகளிலும் 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.
265 ஏக்கர் மொத்த பரப்பளவில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. சிட்கோ தொழில்துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்காக விலைக் கொள்கை சீரமைக்கப்படும்.
கனிமங்களும், சுரங்கங்களும்
சுற்றுப்புறம் மற்றும் சூழலுக்கு பாதிப்பின்றி சுரங்கப் பணிகளை செயல் படுத்திட இந்த அரசு நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும்.
இது தவிர, பசுமை சுங்க மேல்வரி விதிக்கப்பட்டு ஒரு பசுமை நிதியம் உருவாக்கப்படும். இதன் மூலம் கைவிடப் பட்ட குவாரிப் பகுதிகள் முறைப்படி மூடப்பட்டு பாதுகாக்கப்படும். ஆறு கோடி வருடங்களுக்கு முந்தைய உள்நாட்டு புதை வடிவங்கள் கண்டறியப் பட்டுள்ள அரியலூர்பெரம்பலூர் மாவட்டங்களில், புவியியல் புதைபடிவ பூங்கா ஒன்று பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை
துணிநூல் துறையில் கவனம் செலுத்துவதற்காக, ஒரு தனி இயக்குனரகம் உருவாக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பவியல் துறை
தற்போது 131 சேவைகள் இசேவை மையங்கள் வாயிலாகவும், 55 சேவைகள் இணையதளம் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்திற்குள், 29 துறைகள் மூலமாக வழங்கப்படக்கூடிய 600க்கும் மேற்பட்ட சேவைகளும் மின்னணு முறையில் வழங்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை
போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் 130 கோடி ரூபாயில் நிலை நிதி ஏற்படுத்தப்படும்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மை வாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.
பக்தர்களின் அனுபவத்தை அதிகரிப் பதற்கும் 539 திருக்கோயில்களுக்கான பெருந்திட்டங்கள் அரசால் வகுக்கப் பட்டு வருகின்றன.
சுற்றுலா
கன்னியாகுமரி மற்றும் பூம்புகாரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும்.
சமூக நலம்
திருநங்கைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 1,071 கைவிடப்பட்ட திருநங்கையர் பயன்பெறும் வகையில், மூன்றாம் பாலினத்தவருக்கான ஓய்வூதியத் திட்டத்திற்காக 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்த குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இந்த அரசு சிறப்பு முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை 5,963 குழந்தைகள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 95.96 கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்துவதற்காக சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முன்பருவக் கல்வி பயிலும் குழந்தை களுக்கு, கல்வி சார்ந்த பொருட்களை வழங்குவதற்கு 23.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதிய உணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்திற்கு முட்டைகள் மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை சீரமைக்கப்படுவதன் மூலம் செலவினங்கள் குறைக்கப்படும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் உதவியுடன் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 123.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர சில்லறைச் செலவினக் கட்டண உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும். தற்போதுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக் கான விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதன ஒதுக்கீடாக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட் டினை இந்தக் கல்வியாண்டில் இருந்து வழங்க, ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளது.
பொது நிதி மேலாண்மை
வரும் 202223ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையுடன், எளிய மொழியில் பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும். இதனால் அரசின் நிதிநிலையை பற்றி ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய விவாதங்கள் ஊக்குவிக்கப்படும்.
உரிமைத்தொகை வழங்கல்
இத்திட்டத்தின் நோக்கம், நிதியுதவியை இல்லத்தரசிகளுக்கு வழங்குவதே ஆகும், என உறுதியளிக்கிறேன்.
எனவே, குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை.
வரவுசெலவுத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்
வணிகவரித் துறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, கூடுதலான மனித வளங்களை களப்பணிக்கு அளிக்கவும், புலனாய்வு மற்றும் தணிக்கை பிரிவுகளை வலுவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இணங்க ஒரு வணிகவரி மாவட்டம் இருக்கும் விதமாக துறையின் அலுவலகங்கள் மாற்றியமைக்கப்படும். உயர் தரவு பகுப்பாய்வின் மூலம் வரி ஏய்ப்பு செய்வோர் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ரோந்துப் பணி குழுக்கள் 100 ஆக அதிகரிக்கப்பட்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களை தடுப்பதற்காக அவர்களுக்கு வாகனங்கள் மற்றும் தஎஒஉ கருவிகள் வழங்கப்படும். விலைப்பட்டியல் வியாபாரிகள் உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை உட்பட, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் நிலுவையிலுள்ள 28,000 கோடி ரூபாயை வசூலிக்க எளிமையாக, அரசிற்கு பலனளிக்கக்கூடிய விதமாக சமாதான் திட்டம் அறிவிக்கப்படும்.
மோசடியான ஆவணங்கள் மூலம் ஏமாற்றப்பட்ட உண்மையான உரிமையாளர்களின் துயரத்தை நீக்க 1908ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தை திருத்தி, அத்தகையை ஆவணங்களின் பதிவை ரத்து செய்ய பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படும். இதுவரை நிலுவையில் உள்ள இம்மாதிரி மோசடி நிகழ்வுகளுக்கும் இந்த மாற்றம் பொருந்தும். கள நிலவரம் பற்றி ஆராய்ந்து, வழிகாட்டி மதிப்பினை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க, ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும். உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு பதிவு மற்றும் வாடகை ஒப்பந்த ஆவணங்களை இணைய வாயிலாகவே பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். 1.1.1975 முதல் மட்டுமே வில்லங்கச் சான்றினை இணையவழியில் பார்க்க முடியும். இந்த வசதி, 1.1.1950 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவு செய்யப்படும். அதற்கு முந்தைய ஆவணங்களும் பட்டியலிடப்பட்டு கணினிமயமாக்கப் படும்.