தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூகநீதிக்கு உழைத்திட்ட பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாளில் வழங்கப் படுகிறது.
இவ்விருதுகளை பெறுவோர் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் 2020-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது முனைவர் ந, நித்தியானந்த பாரதி; தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரன்; அண்ணல் அம்பேத்கர் விருது முனைவர் க, அருச்சுனன்; பேரறிஞர் அண்ணா விருது முனைவர் கோ. சமரசம்; பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் மா.சு. மதிவாணன் ; மகாகவி பாரதியார் விருது முனைவர் ப. சிவராஜி; பாவேந்தர் விருது த. தேனிசை செல்லப்பா; தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது முனைவர் சே. சுந்தரராசன்; முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் மருத்துவர் மணிமேகலை கண்ணன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.
அய்யன் திருவள்ளுவர் விருது
தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் முதல் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
2020-ஆம் ஆண்டு அய்யன் திருவள்ளுவர் விருது பெற்றவர்:
ந. நித்தியானந்த பாரதி
பாவேந்தர் பாரதிதாசன் விருது
திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல் களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப் படுகிறது. இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.
2019-ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் விருதை பெற்றவர்:
த. தேனிசை செல்லப்பா
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கும் திட்டம் 1979-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது.
2019-ஆம் ஆண்டு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பெற்றவர்:
முனைவர் சே. சுந்தரராசன்
மகாகவி பாரதியார் விருது
தேச விடுதலை, பெண் விடுதலைக்காக பாடல் இயற்றிய பாரதியார் பெயரில் பாரதியார் விருது 1979-ஆம் ஆண்டு முதல் வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. பாரதியார் படைப்புகளை ஆய்வு செய்வோர், பாரதியார் பற்றித் திறனாய்வு செய்வோர், பாரதியார் புகழை பரப்பும் வகையில் கவிதை- உரைநடை நூல் தொண்டு செய்வோர் ஆகியோர் இவ்விருதினை பெறத் தகுதி படைத்தவர்களாவர்.
2019 -ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது பெற்றவர்:
முனைவர் ப. சிவராஜி
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
தமிழ்நாடு அரசு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2000-ஆம் ஆண்டில் தோற்றுவித்தது. இவ்விருது ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.
2019-ஆம் ஆண்டு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்:
மருத்துவர் மணிமேகலை கண்ணன்
தந்தை பெரியார் விருது
தமிழக மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கை களை அகற்றவும், சாதி ஒழிக்க, பெண் அடிமைத் தனத்தை எதிர்க்க, திராவிட இனத்தை மேம்படுத்த பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவர் தமிழர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி. இவர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துகளை பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப் படுகிறது.
2019-ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதை பெற்றவர்:
செஞ்சி ராமச்சந்திரன்
பேரறிஞர் அண்ணா விருது
பேரறிஞர் அண்ணா பகுத்தறிவு, திராவிட கருத்துகளை தனது எழுத்தாற்றல், பேச்சு, நாடக படைப்புகள் போன்றவற்றால் பரப்பியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகத்தை 1949-இல் துவக்கி, 1967-1969 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர். இவரது பெயரால் பேரறிஞர் அண்ணா விருது என தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
2019-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர்:
முனைவர் கோ. சமரசம்
அண்ணல் அம்பேத்கர் விருது
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர், நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், தீண்டாமை ஒழிய போராடியவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக போராடியவர் பாபாசாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சமூகநீதிக்காக பாடுபடும் சான்றோர் ஒருவருக்கு இவரது பெயரில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.
2019 -ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்:
முனைவர் க, அருச்சுனன்
பெருந்தலைவர் காமராஜர் விருது
தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து, மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தி, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். பெருந்தலைவர், கிங்மேக்கர் என புகழப்பட்ட இவரது பெயரில் பெருந் தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது
2019 -ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றோர்:
முனைவர் மா.சு. மதிவாணன்
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் தங்கப்பதக்கத் தையும் அவர் அணிவித்தார்.
___________
அடல் ஜல் திட்டம்
குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில், முன்னுரிமை அடிப்படையில் சமுதாயப் பங்களிப்புடன் கூடிய நிலத்தடி நீர்மேலாண்மை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த இத்திட்டம் வகை செய்கிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இம்மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங் களுக்கு உட்பட்ட சுமார் 8,350 கிராமப் பஞ்சாயத்துகள் பயனடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பஞ்சாயத்துகள் வாயிலாக நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்தி, தேவைக்கேற்ற மேலாண்மையை அடிப்படை நோக்கமாக கொண்டு பழக்க வழக்க மாற்றத்தை ஏற்படுத்த அடல் ஜல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மொத்த ஒதுக்கீடான ரூ.6,000 கோடியில், 50% உலக வங்கி கடனாக பெறப்பட்டு, அதனை மத்திய அரசு திருப்பிச் செலுத்தும். எஞ்சிய 50% தொகை மத்திய அரசின் வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீடாக வழங்கப்படும். உலக வங்கிக் கடன் மற்றும் மத்திய நிதியுதவி முழுவதும் மாநிலங்களுக்கு நிதியுதவியாக வழங்கப்படும்.
கண்காணிப்பு அமைப்புகள், திறன் உருவாக்கம், தண்ணீர் உபயோகிப்போர் சங்கங்களை வலுப்படுத்துவது உட்பட, மாநிலங்களில் நீடித்த நிலத்தடி நீர் மேலாண்மைக்கு அமைப்பு ரீதியான ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கான அமைப்பு ரீதியாக வலுப்படுத்துதல் மற்றும் திறன் உருவாக்கத் தொகுப்பு.
புள்ளி விவரப் பரவல், தண்ணீர் பாதுகாப்பு திட்டங்களை தயாரித்தல், தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களை ஒருங்கிணைத்து தேவைக்கேற்ற மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேலாண்மை நடைமுறைகளை செயல்படுத்துவது உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட நிலத்தடி நீர் மேலாண்மை நடைமுறைகளில் சாதனை படைக்க ஏதுவாக, மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவ தற்கான ஊக்கத்தொகை தொகுப்பு.
அடல் ஜல் திட்டத்தால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்படும்:
நிலத்தடி நீர் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தி, பல்வேறு மட்டங்களிலும் நிலத்தடி நீர் சேகரிப்பு புள்ளி விவரங்களை மேம்படுத்தி, அவற்றை பகிர்ந்து கொள்வதோடு, பகுப்பாய்வு செய்து பரவலாக்குவது.
மேம்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், மேம்பட்ட மற்றும் நடைமுறை சாத்தியமான தண்ணீர் திட்டங்களை மதிப்பீடு செய்வதோடு சமுதாயம் சார்ந்த தண்ணீர் பாதுகாப்புத் திட்டங் களை பஞ்சாயத்து அளவில் மேற்கொள்வது.
மத்திய - மாநில அரசுகளால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, நீடித்த நிலத்தடி நீர் மேலாண்மைக் கான நிதியை நியாயமாகவும், திறம்படவும் பயன்படுத்துதல்.
நுண்ணீர் பாசனம், மாற்றுப் பயிர் சாகுபடி, மின்சார ஊட்டி பிரிப்பு போன்ற தேவைக்கேற்ற நடவடிக்கைகள் மூலம், கிடைக்கக்கூடிய நிலத்தடி நீர் வளத்தை,திறம்பட பயன்படுத்துதல்.
உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஜல் ஜீவன் இயக்கத்திற்கான நிதி ஆதாரம் நிரந்தரமாக கிடைக்கச் செய்தல்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக் குவது என்ற இலக்கை அடைய உதவும்.
பங்களிப்புடன் கூடிய நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டத்தை ஊக்குவிக்கும்.
மேம்பட்ட முறையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான, திட்டத்தை பெருமளவில் செயல்படுத்தி, பயிர் சாகுபடி முறைகளை மேம்படுத்துதல்.
நிலத்தடி நீர் ஆதாரத்தை சிக்கனமாகவும், சரிசமமாகவும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதோடு, சமுதாய அளவில் பழக்க வழக்க மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அடல் ஜல் திட்டத்தை தொடங்கி வைத்தார்.