ஜாலியன் வாலாபாக் என்றதும் அந்தத் துயரமான சம்பவம்தான் நம் நினைவுக்கு வரும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்ற இடம் இது. "பாக்' என்றால் தோட்டம் என்று பொருள். ஜாலியன் வாலாபாக் 6.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள மிகப் பெரிய தோட்டம். இது பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில், உலகப் புகழ்பெற்ற பொற்கோயிலுக்கு அருகில் இருக்கிறது.

பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித்சிங்கிடம் பணிபுரிந்த சர்தார் ஹிமத்சிங் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் இது. அவர் குடும்பம் "ஜல்லா' என்ற கிராமத்திலிருந்து வந்ததால் ஜாலியன் வாலாபாக் என்று பெயர் பெற்றது.

தோட்டத்தைச் சுற்றி குறுகிய நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் பிரதான நுழைவாயிலைத் தவிர, மற்ற வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பிரதான வாயிலுக்கு ஒரு குறுகலான சந்து வழியாகத்தான் வரவேண்டும். உள்ளே வந்தால் மிகப்பெரிய அழகான தோட்டம். இதில் சுதந்திரப் போராட்டக் கூட்டங்களும் திருவிழாக்களும் நடைபெற்று வந்தன. மற்ற நாட்களில் குழந்தைகள் விளையாடும் இடமாக இருந்தது. சீக்கியர்களின் மிகப் பெரிய அறுவடைத் திருவிழாவான "பைசாகி' நடைபெற்றுக்கொண்டிருந்தது. திருவிழாவுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். சில மாதங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த ரௌலட் சட்டத்தால், நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. விசாரணை இல்லாமலேயே யாரையும் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்பதுதான் அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம். குறிப்பாக பஞ்சாப், வங்காள மக்கள் அந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

பஞ்சாப் தலைவர்களை ஆங்கிலேய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தது. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் கோபமடைந்தனர்.

Advertisment

Jallianwala Bagh massacre

ஏப்ரல் 13, 1919-ஆம் ஆண்டு. திருவிழாவைக் கொண்டாடுவதற்குப் பொதுமக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் பொற்கோயிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடல். பிரிட்டிஷ் அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருந்தார்கள். (பலருக்கு ஊரடங்கு உத்தரவு பற்றி தெரியாது என்றும் கூறப்படுகிறது) அன்று சீக்கியர்களின் புனித நாளான பைசாகி தினம் என்பதால் சீக்கிய பக்தர்கள் அதிக அளவில் இருந்தார்கள்.

1699-இல் இந்த தினத்தில்தான் ஏற்றத் தாழ்வற்ற தூய்மையான கால்சாவை உருவாக்கினார் 10-வது சீக்கிய குரு கோவிந்த் சிங். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று அந்தப் பூங்காவில் மக்கள் கூட்டம் அமைதியாக அமர்ந்திருந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புரட்சியை அடக்குவதற் காக என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட ரௌலட் சட்டம், மக்களின் உரிமையை முற்றிலும் பறிப்பதாக அமைந்தது. இச் சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்தி வந்த சமயம் அது.

அப்போது 50 கூர்க்கா படையினருடன் அந்த இடத்துக்கு வந்துசேர்ந்தார் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயர். மக்களுக்கு எந்தவித எச்சரிக்கையையும் விடுக்காமல், திடீரென்று அவர்களைச் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டார் டயர். தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு இடைவிடாமல் துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்துகொண்டே இருந்தன. தலை, முகம், மார்பு, வயிறு என்று அப்பாவி மக்களின் சகல பாகங்களையும் துளைத்தன துப்பாக்கிக் குண்டுகள். நான்கு புறங்களும் உயர்ந்த கல்சுவர்களைக் கொண்ட அந்தத் திடலில், வந்துசெல்ல ஒரே ஒரு வழிதான் இருந்தது.

தப்பிக்க முயன்றவர்கள் வேறு வழியின்றி திடலிலிருந்த கிணற்றுக்குள் குதித்தனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் 379 பேர் உயிரிழந்ததாகவும், 1,100 பேர் காயமடைந்த தாகவும் பிரிட்டிஷ் அரசு தெரிவித்தது. ஆனால் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்ட விசாரணையில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டும் என்று தெரியவந்தது. கிணற்றில் குதித்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தார்கள்.

இரக்கமே இல்லாமல் இந்தியர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட ஜெனரல் டயர், பிரிட்டிஷ்காரராக இருந்தாலும் இந்தியா விலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதுதான் கொடுமை. இந்தச் சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையின்போது, அவர் சொன்ன வார்த்தைகள் அவர் எத்தனை கொடூரமானவர் என்பதை உணர்த்தும். அங்கு சென்றதும், கூடியிருந்த மக்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று 30 வினாடி களில் முடிவுசெய்தேன். அவர்களைச் சுட வேண்டும் என்று நானே சுயமாக முடிவெடுத்தேன். அப்படிச் செய்யவில்லை என்றால் கடமையிலிருந்து தவறிய வனாவேன் என்று நினைத்தேன் என்றார்.

இந்தச் சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் உறையவைத்தது. அதுவரை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்துவந்த போராட்டங்கள் மேலும் அதிகரித்தன. பிரிட்டிஷ் அரசு தனக்கு வழங்கிய "நைட்' பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார் ரவீந்திர நாத் தாகூர். பிரிட்டிஷ் அரசு வழங்கிய "கைசர் இ ஹிந்து' பதக்கத்தைத் திருப்பிக் கொடுத்தார் காந்தி. ஆங்கிலேய பாணி ஆடைகள், மரச்சாமான்களைத் தீயிலிட்டுக் கொளுத்திய மோதிலால் நேரு, அன்றிலிருந்து இந்திய உடைகளை மட்டுமே அணியத் தொடங்கினார்.

பிரிட்டிஷ் அரசைப் பெரிய அளவில் எதிர்க்காதவர்களும் இந்தச் சம்பவத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடூரத் தன்மையை உணர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்குபெறத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாகத்தான், 1920-இல் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி தொடங்கினார்.

அதுமட்டுமல்ல, பகத் சிங் என்ற புரட்சியாளர் உருவாவதற்கு விதையைப் போட்டதும் இந்தக் கொடூரச் சம்பவம்தான். ஆக, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பல வகையிலும் திருப்புமுனையாக அமைந்தது இந்தப் படுகொலைச் சம்பவம்.