நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவர்கள், முஸ்லிலிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் ஆகியோர் சிறுபான்மையினராகவும் உள்ளனர்.

திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிர்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிலிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன. அவ்வாறு சட்டங்கள் தனித்தனியாக இருப்பது நிர்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக மத்திய அரசு கூறி வருகிறது. மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு வலியுறுத்துகிறது.

அதன் அடிப்படையில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது. கோவா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. எனினும், பொது சிவில் சட்டமானது சிறுபான்மை யினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

அதை பாஜக நிராகரித்து வருகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொது சிவில் சட்ட விவகாரத்தை பா.ஜ.க. முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பொது சிவில் சட்டம் அவசியமானது என பிரதமர் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisment

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே தேர்தல் வரிசையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாக முன் வைக்கும் ஒன்று பொது சிவில் சட்டம். 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க தலைமையில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் குறித்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. அதன் விளைவாக, 21-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்தது. 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி பொது சிவில் சட்டம் குறித்த கேள்விகளை முன்வைத்து, அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கருத்துகளையும் அது கோரியிருந்தது.

அதேபோன்ற பொதுக் கருத்து கோரும் அறிவிக்கைகள் 2018-ஆம் ஆண்டு மார்ச் 19, மார்ச் 27, ஏப்ரல் 10 ஆகிய தேதிகளிலும் வெளியிடப்பட்டன.

dd

Advertisment

அவ்வாறு பெறப்பட்ட பதில்கள் அடிப்படையில் 21-ஆம் சட்ட ஆணையம் "குடும்ப சட்டங்களின் சீர்திருத்தம்” என்ற தலைப்பில் அதே ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி ஆலோசனைக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டுரை வெளியாகி 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பொது சிவில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதியும், அதன் பின்னர் வெளிவந்த பல நீதிமன்ற உத்தரவுகளை கருத்தில் கொண்டும் 22-வது இந்திய சட்ட ஆணையம் அந்த விஷயத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்க முடிவு செய்து, ஜூன் 14-ஆம் தேதியன்று அறிவிப்பு ஒன்றை 22-வது இந்திய சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது. பொது மக்களும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளும் பொது சிவில் சட்டம் தொடர்பான தங்களது கருத்துகள், ஆலோசனைகளை 30 நாட்களுக்குள் இமெயில் மூலம் இந்திய சட்ட ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.

இந்த பின்னணியில், இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள மத்திய பிரதேசத்தில் பிரதமர் பேச்சு பொது சிவில் சட்டத்தை தேசிய அரசியலில் மீண்டும் பேச்சு பொருளாக மாற்றியுள்ளது. போபாலில் பேசிய பிரதமர், "பொது சிவில் சட்டத்தின் பெயரால் மக்கள் தூண்டி விடப்படுகிறார்கள். ஒரு நாடு இரண்டு சட்டங்கள் மூலம் எவ்வாறு இயங்க முடியும்? இந்திய அரசியல் சாசனம் சம உரிமை பற்றிப் பேசுகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள்” என்று கூறினார்.

பிரதமர் பேச்சு பொது சிவில் சட்டத்தை இந்திய அரசியலின் மையப்புள்ளிக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை முன்னிறுத்தி அரசியல் களத்தில் வாத, பிரதிவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், இந்திய சட்ட ஆணையத்தின் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக அதன் தலைவர் நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி கூறியுள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்துள்ள நேர்காணலில், "இதுவரை 8.5 லட்சம் பதில்கள் கிடைத்துள்ளன. பொது சிவில் சட்டம் என்பது புதிது அல்ல. 2016-ஆம் ஆண்டு பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் 2018-ஆம் ஆண்டு ஆலோசனைக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் 2022-ஆம் ஆண்டு நவம்பர் வரை சட்ட ஆணையம் செயல்படாமல் இருந்தது. 2022-ஆம் ஆண்டு நவம்பரில் நியமனங்கள் நடந்த பிறகு, பொது சிவில் சட்டம் குறித்த பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன” என்று கூறியுள்ளார்.

பொது சிவில் சட்டம் முக்கிய விவரம்

இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும். இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள், தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் திருமணம், விவகாரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் வெவ்வேறு சட்டங்களை பின்பற்றி வருகின்றன.

பொது சிவில் சட்டம் என்றாலே நம்மில் பெரும்பாலானோரின் கவனம் இயல்பாகவே முஸ்லிம்களின் மீது குவிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சீக்கியர்கள், ஜெயின்கள் என்று ஒருவர் சார்ந்துள்ள மதத்திற்கேற்ப சிவில் சட்டங்கள் மாறுபடுகின்றன. உதாரணமாக, சீக்கியர்கள் அவர்கள் மதச்சட்டப்படி, சுய பாதுகாப்பிற்காக எந்நேரமும் குறுவாள் வைத்திருக்கலாம். காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்தாலும் கூட அங்குள்ள விதிகளுக்கு மாறாக சீக்கியர்கள் தாடி வைக்கலாம், துறைசார் தொப்பிக்கு மாற்றாக தலையில் டர்பன் வைத்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்கான தனி நபர் சட்டம் கூறுகிறது.

இந்து மதத்திலும் சில வகையான தனி சிவில் சட்டங்கள் உள்ளன. இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு.

இதை இந்து தத்து மற்றும் ஜீவனாம்சம் சட்டம்-1956 உறுதி செய்கின்றது. அதாவது, சொத்துரிமை, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்றவற்றை தீர்மானிக்கும் தனிநபர் சட்டங்கள் மாறுபட்ட கலாசார வளம் கொண்ட இந்தியாவில் சாதி, மதம், இனம்ரீதியாக மாறுபடும். இந்த வேறுபாடு கூடாது என்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க.. குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைப் போல உரிமையியல் சட்டங்களும் அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும் என்று அக்கட்சி வாதிடுகிறது.

பொது சிவில் சட்டம் கோரிக்கை பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்து, முஸ்லிம்களுக்கென தனித்தனியே தனிநபர் சட்டங்கள் இயற்றப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்ணுரிமை ஆர்வலர்களால் முதன் முதலில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பெண்ணுரிமை, பாலின சமத்துவம், மத சார்பின்மை போன்றவற்றை அவர்கள் முன்வைத்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியில் பெண்களுக்கு, குறிப்பாக இந்து விதவைகள் நிலையை மேம்படுத்த சில சட்டங்கள் இயற்றப்பட்டன.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு விரும்பியும் கூட, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. பலவாறான சமரசங்களுக்குப் பிறகு இந்து வாரிசுமைச் சட்டம் 1956-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1985-ஆம் ஆண்டு ஷா பானோ வழக்கில், முஸ்லிம் பெண்ணான பானோ தனது முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில்தான், நீதிபதிகள் 'மய்ண்ச்ர்ழ்ம்' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தனர். அதன் பின்னரே பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் அரங்கில் வலுப்பெற்றது.

பாரதிய ஜனதாக் கட்சி அதனை வலுவாக முன்னெடுத்தது.

இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவில் உள்ள அரசுக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாட்டில், "இந்தியா முழுவதும் உள்ள குடிமக்கள் ஒரே மாதிரியான சிவில் உரிமைகளைப் பெற அரசு முயற்சி செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44-வது பிரிவு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்துகிறது. இது அரசியல் சாசனத்தின் 4-வது பிரிவில் அரசு கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் (உடநட) மற்றும் நாட்டை ஆளும் போது மனதில் கொள்ள வேண்டிய அரசுக்கு அறிவுரைகளாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

பல வழக்குகளில் அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு பற்றியும், பொது சிவில் சட்டம் பற்றியும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளாக பல்வேறு தீர்ப்புகள் மூலமாக பொது சிவில் சட்டத்தை நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக கொண்டு வரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

2018-ஆம் ஆண்டு பொது சிவில் சட்டம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த இந்திய சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் இந்த நேரத்தில் தேவையானதாகவோ விரும்பத்தக்கதாகவோ இல்லை என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள பாரபட்சமான நடைமுறைகள், மற்றும் தனிப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை செய்யலாம் என்றும் பரிந்துரைத்தது.

பொது சிவில் சட்டத்தை ஆதரிப்போர், அது உண்மையான மத சார்பின்மையை ஊக்குவிக்கும் என்று கூறுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுமே சட்டத்தின் முன் சமமாக ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்கள் என்பது அவர்கள் வாதம்.

குடும்ப வாழ்க்கையில் ஆணாதிக்கத்தை உறுதிப்படுத்தும் மத ரீதியான பழைய விதிகளை உடைத்தெறிந்து, பொது சிவில் சட்டம் பெண்களுக்கு சம அதிகாரத்தை தரும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்தியாவில் நிலவும் கலாச்சார பன்மை பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பெரும் தடைக்கல்லாக முன்நிற்கிறது. மாநிலத்திற்கு மாநிலம், சமூகத்திற்கு சமூகம், மதத்திற்கு மதம் மாறுபட்டு நிற்பதால் பொது சிவில் சட்டத்தை வரைவதே சிக்கலாக இருக்கிறது.

அரசியல் சாசனம், இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் விரும்பும் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் வழங்குகிறது.

ஆனால், பொது சிவில் சட்டம் அந்த உரிமைகளைப் பறித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

ஒவ்வொரு சமூகத்தின் தனிப்பட்ட கலாச்சாரத்திற்கு ஏற்ப உள்ள தனிநபர் சட்டங்களை அதன் சாரம் குறையாமல், பொது சிவில் சட்டத்தில் இடம் பெறச் செய்வது என்பது சிக்கலானது.