பிரிட்டிஷ் இந்தியா சுதந்திர இந்தியாவாக உருவெடுத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. உண்மையில், சுதந்திரத்தைப் பெற முந்தைய தலைமுறை போராடியதற்குச் சற்றும் சளைக்காதது, சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவைக் கட்டியெழுப் பவும் வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் இன்றைய தலைமுறை எடுத்த முயற்சிகள். அதன் காரணமாகவே இன்றைக்கு உலக அரங்கில் தனக்கான உயர்ந்த இடத்தைப் பல துறைகளிலும் இந்தியா சாதித்திருக்கிறது.

சுதந்திர இந்தியாவின் இந்த சாதனைப் பயணம் ஒரே இரவில் நடந்ததும் இல்லை, ஓரிருசம்பவங்களால் நிகழ்ந்ததும் இல்லை. கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்ந்த பல சம்பவங்களும் பல முடிவுகளுமே இந்த வெற்றிப் பயணத்தைச் சாத்தியமாக்கி இருக்கின்றன. உதாரணங்களைச் சொன்னால் துலக்கமாகப் புரியும்.

தேர்தலும் அரசமைப்பும் இந்தியாவை வெறும் சுதந்திர தேசமாக மட்டுமே வைத்திருக்க நேரு விரும்பவில்லை. மாறாக, ஒரு ஜனநாயக தேசமாகவே கட்டமைக்க விரும்பினார். அதன் நீட்சியாகவே முதல் பொதுத்தேர்தல் நடந்தது.

சுதந்திரம் அடைந்த பல நாடுகள் தேர்தலைத் தவிர்த்தபோது, வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்துத் தேர்தலை நடத்தினார் நேரு. அன்று அவர் வகுத்த தேர்தல்வழி ஜனநாயகப் பாதையில்தான் இன்றளவும் இந்தியா இயங்கிக்கொண்டிருக்கிறது.

Advertisment

மக்களுக்கான ஆட்சியாளர்களை மக்களேதேர்ந்தெடுப்பதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படும் இந்தத் தேர்தல்தான் பல நல்ல ஆட்சியாளர்களை உருவாக்கியது. தவறுசெய்த ஆட்சியாளர்களுக்குத் தண்டனை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது. அதனால்தான் தேர்தலை விரும்பாத ஆட்சியாளர்கள்கூடத் தேர்தல்களை நடத்தத் தவறுவதில்லை.

எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா காந்தியே பிறகு தேர்தலை நடத்தினார் என்பது அதற்கான உதாரணம். அந்த வகையில், நேரு முதல் மோடி வரையிலான சுதந்திர இந்தியாவின் இருப்பில் தேர்தல்களின் பங்களிப்பு முக்கியமானது. அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தது, சுதந்திர இந்தியாவின் பெருமிதத் தருணங்களுள் முக்கியமானது.

அதுதான் இந்தியர்களுக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட எல்லாவற்றையும் கொடுத்தது. ஆட்சி நிர்வாகத்துக்குள்ளும், இந்திய சமூகத்தின் இயல்பு வாழ்க்கைக்குள்ளும் தீர்க்கமான நெறிமுறைகளைக் கொண்டுவந்ததில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பங்கு காத்திரமானது.

Advertisment

dd

அதேவேளை, காலத்துக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் அமைப்பாகவே நமது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு பலமுறை திருத்தப்பட்டதே, அதன் நெகிழ்வுத்தன்மைக்கான சாட்சியம்.

அதேவேளை, நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதைப் பயன்படுத்திச் சட்டத்தைத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்தவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கதைகளும் இருக்கின்றன.

மொழிவாரி ஏற்படுத்திய ஒற்றுமை

மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பது சுதந்திர இந்தியாவின் ஆகப்பெரிய திருப்புமுனைகளுள் ஒன்று. மாநிலங்களின் ஒன்றியமாகச் சுதந்திர இந்தியா உருவெடுத்தபோதும், ஆங்காங்கே பிரிவினைக் குரல்களும் உரிமை முழக்கங்களும் கேட்டுக் கொண்டே இருந்தன. அந்தக் குரல்களை எல்லாம் அமைதிப்படுத்தக் கையாளப்பட்ட உத்தி, மொழிவாரி மாநிலப் பிரிவினை.

நிலப்பரப்பின் அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதைவிட, மொழி அடிப்படையில் பிரிப்பதன் மூலம் மக்களின் அதிருப்தியை அகற்றி, நம்பிக்கையைப் புகட்டி, இந்திய ஒன்றியத்துடன் உணர்வுபூர்வமாக ஒன்றியிருக்கச் செய்ய முடியும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ஐம்பதுகளின் மத்தியில் நிகழ்ந்த மொழிவாரி மாநிலப் பிரிவினை.

உண்மையில், ஆந்திரம் பிரிக்கப்பட்ட போது தேன்கூட்டில் கைவைக் கிறோமோ என்று சந்தேகப்பட்டார் நேரு. ஆனால், அப்படியான ஆபத்து எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. சொல்லப்போனால் நிர்வாக வசதி, மக்களின் கோரிக்கை, அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், அவை எதுவும் இறையாண்மைக்குச் சவால் விட்டதில்லை. பிரிவினையாக மடைமாறவில்லை.

அந்த வகையில், சுதந்திர இந்தியா பவள விழாவை அமைதியுடன் கொண்டாடுவதன் பின்னணியில் மொழிவாரி மாநிலப் பிரிவினையின் பங்கு முக்கியமானது. சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய அம்சங்களுள் சமூகநீதி முக்கியமானது. இந்திய அரசியலமைப்பு முதன்முறையாகத் திருத்தப்பட்டபோதே, அது சமூகநீதிக் கண்ணோட்டத்தையும் உள்ளடக்கியதாக அமைந்தது.

நேரு காலத்தில் தொடங்கிய சமூகநீதி சாதிப்பு முயற்சிகள், மொரார்ஜி தேசாய் காலத்தில் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டதன் மூலமாகவும், வி.பி.சிங் காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் முக்கியமானவை செயல்வடிவம் பெற்றதன் வழியாகவும் தொடர்ந்தன.

இன்றைக்கு இந்தியா முழுக்க சமூகம், கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டங் களில் தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டுக்கு அப்பாலும் இருக்கின்ற அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டுவதும் சட்டப் போராட்டங்களை நடத்துவதும் களத்தில் இறங்கிப் போராடுவதும் வெற்றிகளை ஈட்டுவதும் வெற்றியைப் பெறுவதற்கான போராட்டங்களைத் தொய்வின்றித் தொடர்வதும் சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய தருணங்கள். எல்லோருக்கும் எல்லாமும் என்பதைச் சாத்தியப்படுத்த அப்படியான தருணங்கள் அதிமுக்கியம்.

சாதனை நகர்வுகள்

அகிம்சை நாயகன் காந்தி வழிவந்த தேசம்தான் சுதந்திர இந்தியா. என்றபோதும், சூழலுக்கு ஏற்ப எதிரிகளை நோக்கி ஆயுதங்களை ஏந்தத் தயங்கியதில்லை. சுதந்திரம் பெற்ற கையோடு பாகிஸ்தான் சீண்டியபோது, தீரத்துடன் போரிட்டு ஊடுருவல்காரர்களை விரட்டியடித்தது இந்தியா.

அதன் பிறகு 1965, 1971, 1999 என எப்போதெல்லாம் பாகிஸ்தான் இந்தியாவை ராணுவரீதியாகச் சீண்டியதோ அப்போதெல்லாம் தகுந்த பதிலடியைக் கொடுத்திருக்கிறது இந்தியா. 1962-இல் நடந்த இந்திய-சீன யுத்தத்தைத் தவிர்த்து, ஏனைய எல்லா யுத்தங்களிலும் இந்தியா வெற்றிக் கொடியே நாட்டியிருக்கிறது.

அதன் பின்னணியில் இருந்தது இந்தியாவின் ராணுவ பலம். ஆரம்பகாலம் தொடங்கி, தனது ராணுவ வலிமையைக் கூட்டிக்கொள்வதில் இந்தியா எந்தவொரு தருணத்திலும் சமரசம் செய்துகொண்டதில்லை.

அதற்கான உதாரணம்தான் இந்திரா, வாஜ்பாய் காலங்களில் நிகழ்த்தப்பட்ட அணுகுண்டுப் பரிசோதனைகள்.

இந்தியா அணு ஆயுதத்தைத் தயாரிக்க ஆயத்தமானால், தங்களது உறவைத் துண்டித்துக்கொள்ள நேரிடும் என்று சில நாடுகள் விடுத்த எச்சரிக்கைக்கு அப்பால் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தினார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அந்தத் திட்டத்துக்கு அகிம்சையின் முழுவடிவான புத்தரின் பெயரையே வைத்தார். அது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இந்திரா எடுத்த துணிகர முயற்சி.

அதேபோன்ற துணிகர முயற்சியைப் பின்னாளில் பிரதமராக இருந்த வாஜ்பாயும் எடுத்தார். இந்த இரண்டும் இந்தியாவின் சாகச முயற்சிகளல்ல, சாதனை நகர்வுகள்.

சாதித்த போராட்டங்கள்

தொலைத்தொடர்பிலும் தகவல் தொழில்நுட்பத்திலும் இன்றைய இந்தியா சர்வதேசப் பந்தயத்தில் தவிர்க்க முடியாத சக்தி. இப்படியான உயரத்துக்கு இந்தியா செல்லும் என்று அரை நூற்றாண்டுக்கு முன்னால் எத்தனை பேர் கணித்திருப்பார்கள் என்று தெரியாது.

ஆனால், எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் ஏற்பட்ட தொலைத்தொடர்புப் புரட்சிதான் பி.சி.ஓ., எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி என்பன போன்ற அம்சங்களைக் கொண்டுவந்தது. வி.எஸ்.என்.எல்., பி.எஸ்.என்.எல். போன்ற அமைப்புகளை உருவாக்கியது. அதுதான் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து இன்றைக்கு 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்று மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந் திருக்கிறது.

அந்த வகையில், தொலைத்தொடர்புப் புரட்சி நிகழ்ந்த எண்பதுகளும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டமும் நவீன இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் அதிமுக்கிய அத்தியாயங்கள். இந்த எல்லா அம்சங்களையும் தாண்டி, இந்தியாவின் ஆகப்பெரிய பெருமிதங்களாகவும் வலிமை தரக்கூடிய அம்சங்களாகவும் கருதப்படுபவை போராட்டங்கள்.

எப்படிப் போராட்டத்தின் வழியே அடிமை இந்தியா, சுதந்திர இந்தியாவாக உருவெடுத்ததோ அதுபோலவே மாநில உரிமை, இடஒதுக்கீட்டு உரிமை, மொழி உரிமை, தகவல் பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை என்று சுதந்திர இந்தியா தனக்கான முக்கியத் தேவைகளைப் போராட்டங்கள் வழியாகவே சாதித்திருக்கிறது. அந்த வகையில், சுதந்திர இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கைச் செலுத்தும் போராட்டங்கள் சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய அம்சங்கள்.

இந்திய பொருளாதாரம் 75

இந்தியா இந்த 75 ஆண்டு காலத்தில் மக்கள்தொகையில் இருந்து தனிநபர் வருமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சி வரை இந்தியா நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளது. சுதந்திரத்தின் போது, இந்தியா உலகின் ஏழை நாடாக இருந்தது. ஆனால் இன்று இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறியுள்ளது. உலகின் முதல் 3 பொருளாதாரப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. இது மட்டுமின்றி, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் தனிநபர் வருமானத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 75 ஆண்டுகளில் பொருளாதாரத் தில் நாடு எந்தளவுக்கு மாறியுள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.2.7 லட்சம் கோடியாக இருந்தது. அப்போது இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் ஜிடிபி தற்போது சுமார் 150 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த 75 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 55 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மட்டும் 9 சதவீதம். இந்த மதிப்பு அடுத்த 2 ஆண்டுகளில் 10 சதவீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 75 ஆண்டு பயணத்தில், பொருளாதாரத்தின் வளர்ச்சி பூஜ்ஜியத்திற்கு கீழே மூன்று முறை சென்றுள்ளது. 1965-ஆம் ஆண்டில் முதல் முறையாகவும், 1979-ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும், 2020-ஆம் ஆண்டில் கொரோனா பிரச்சினை வந்தபோது மூன்றாவது முறையாகவும் பூஜ்ஜியத்துக்குக் கீழே சென்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, அப்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.90 மட்டுமே. ஆனால், இன்று 52000 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சமயத்தில் 56,000 ரூபாயைத் தாண்டி பெரும் உச்சத்தை எட்டியிருந்தது. தங்கத்தின் மதிப்பும் இந்தியாவில் இந்த 75 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய முன்னேற்றம் காணப்படுகிறது. தனிநபர் வருமானம் என்பது ஒரு நாட்டின் செழுமையும் வளர்ச்சியும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மதிப்பிட உதவுகிறது. அதன்படிப் பார்த்தால், சுதந்திரத்திற்குப் பிறகு, 1950-51ஆம் ஆண்டில், இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ.274 ஆக இருந்தது. அது இன்று ஆண்டுக்கு சுமார் ரூ.1.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பது, அதனுடன் இருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது ரூ.46 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது உலகின் ஐந்தாவது பெரிய ரிசர்வ் ஆகும். 1950-51ஆம் ஆண்டில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ. 1029 கோடியாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அறிவியல் வளர்ச்சி

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு முகலாயர் ஆட்சிக் காலத்தில் 24% ஆக இருந்தது. ஆனால், காலனிய ஆட்சியில் இந்தியாவின் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளைச் சென்றடைந்தது. காலனியச் சுரண்டலின் காரணமாகப் பொதுமக்களின் வாழ்வு பெரும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டது.

நாடு விடுதலை அடைந்தபோது, இந்தியரின் சராசரி ஆயுள் வெறும் 31 ஆண்டுகள்தான். இன்று அது 70 ஆக உயர்ந்திருக்கிறது. காலரா போன்ற பெரும் கொள்ளைநோய்கள் பெரும் சேதத்தை விளைவித்திருந்தன.

1,000 குழந்தைகளில் ஊட்டச்சத்து இன்மை, நோய்கள் ஆகியவற்றால் பிறந்த ஒரே ஆண்டுக்குள் 145 குழந்தைகள் மடிந்தன. ஒரு லட்சம் கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 2,000 தாய்மார்கள் பிரசவத்தில் மடிந்தனர்.

இன்று, குழந்தை இறப்பு விகிதம் வெறும் 28; பிரசவ மரணம் வெறும் 99. இந்திய அறிவியல் தொழில்நுட்பம் தோள் கொடுக்கக் காலனிய காலப் பின்னடைவுகளை எதிர்கொண்டு முன்னேற முடிந்துள்ளது.

நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தில் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடு மிகப்பெரும் சவாலாக இருந்தது. புரதம் நிறைந்த அசைவ உணவு, பருப்பு ஆகியவற்றின் உற்பத்தி பற்றாக்குறையாக இருக்கவே, அனைவருக்கும் எளிதாகப் புரதம் அளிக்கப் பால் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது.

பால்பொடி தயாரித்தால் குழந்தை களுக்கு ஊட்டம் அளிக்க முடியும் எனக் கண்டனர். ஊட்டம்மிக்க குழந்தை உணவு மூலம் குழந்தை இறப்பைத் தடுக்க முடியும்.

உலகில் அதிக கால்நடைகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்கியது. ஆனால், 1950-களில் நாளொன்றுக்குத் தலைக்கு 50 கிராம் என்ற அளவிலேயே பால் உற்பத்தி இருந்தது. பருவ காலம் சார்ந்து பால் சுரக்கும் அளவு வேறுபடும். பால் எளிதில் கெட்டுப்போகும் என்பதால், உற்பத்தியாகும் இடத் திலிருந்து சேகரித்து நீண்ட தொலைவு எடுத்துச்செல்லவும் முடியாது.

பசும்பாலிலிருந்து நீரை நீக்கிப் பதனம் செய்து, உலர் பால்பொடி தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தது. ஆனால், இந்தியாவில் எருமை மாடுகளே மிகுந்திருந்தன.

எருமை மாட்டுப் பாலைப் பதனம் செய்து உலர் பொடி செய்ய முடியாது என மேலை நாட்டு அறிஞர்கள் பலரும் கூறிவந்தனர். மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன (ஈஎபதஒ) ஆய்வாளர்கள் இந்தச் சவாலை வெற்றிகொண்டனர். அதன் விளைவாக, இன்று நாளொன்றுக்கு தலைக்கு 100 கிராம் என்ற அளவில் பால் உற்பத்தி உயர்ந்திருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை பால்பவுடருக்கு மாற்றாக இந்தியத் தயாரிப்புகளும் உருவாகின. 1960-களில் வெளிநாடு களிலிருந்து கப்பலில் தானியம் வந்திறங்கத் தாமதமானால் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை இருந்தது.

விடுதலை அடைந்தபோது தலைக்கு ஆண்டொன்றுக்கு 144 கிலோ தானியம்தான் கிடைத்துவந்தது. பசுமைப் புரட்சியின் விளைவாக இன்று 178 கிலோ வரை அது உயர்ந்திருக்கிறது.

மலேரியாவுக்கு மருந்துகள், அம்மைக்குத் தடுப்பூசிகள் ஆகியவற்றின் விளைவாகவே இந்தியர்களின் சராசரி ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட் களைக் கொண்டு அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகளைத் தயாரிக்கும் மாற்று முறைகளை ஹைதராபாத்தில் உள்ள ஆய்வு நிறுவனங்கள் முன்னெடுக்க, மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. மேலை நாடுகளைவிட மருந்துகளின் விலை இந்தியாவில் பல மடங்கு குறைவாக இருப்பதால், சுமார் 100 நாடுகள் இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்துகொள்கின்றன.

காலனிய அரசு சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் பல்கலைக்கழகங்களை உருவாக்கியது. ஆனால், அறிவியல் ஆய்வில் ஈடுபட இந்தியர்களுக்கு எளிதில் இடம்கொடுக்கப்படவில்லை.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள வசதி இல்லை என்பதால், காலனிய அரசுக்கு வெளியே இயங்கிய ‘இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்’ என்ற நிறுவனத்தில்தான், நோபல் பரிசுபெற்ற தன் கண்டுபிடிப்பை சி.வி.ராமன் நிகழ்த்திக்காட்டினர். பெரும் போராட்டங்களுக்குப் பிறகே இந்தியர்கள் நவீன அறிவியல் ஆய்வில் ஈடுபட முடிந்தது.

விடுதலைக்குப் பின்னர், நவீன இந்தியாவின் சிற்பிகள் காட்டிய முனைப்பின் காரணமாக 1,000 பல்கலைக்கழகங்கள், சுமார் 400 ஆய்வு நிறுவனங்கள் என இந்திய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது.

நவீன அறிவியல் திறன் படைத்த சில நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியது. உலகில் உள்ள நாடுகளில் செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபடும் 14 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

செயற்கைக்கோள் ஏவுகலத் தொழில்நுட்பம் அறிந்த ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்று; அணு உலைகள் கொண்ட நாடுகள் உலகில் வெறும் 16 தான். அதிலும் அணுத் தொழில்நுட்பம் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் அடக்கம். மருத்துவம், கணினி, மின்னணு எனப் பல நவீன அறிவியல் துறைகளில் இந்தியா நிபுணத்துவம் பெற்றிருக்கிறது.

பசிக்கு வயிறார உணவு வேண்டும். எனவே, அந்தக் காலத்தில் பசுமைப் புரட்சி தேவையாக இருந்திருக்கலாம். ஆனால், பசுமைப் புரட்சியின் தீங்கான தொழில்நுட்பங்களை அகற்றி, பசுமை விவசாயத்துக்கான ஆய்வை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

காலனியச் சுரண்டல் ஏற்படுத்திய வடு, சில மேலை நாடுகளின் முட்டுக்கட்டை ஆகியவற்றோடு இந்திய அறிவியல் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருப்பது சமூகநீதியற்ற இறுக்கமான சமூக அமைப்பு. பெண் கல்வி மறுப்பு, சாதிய ஒடுக்குமுறை, உயர்கல்வியில் குறிப்பிட்ட சமூகங்களின் ஏகபோக செல்வாக்கு போன்ற சமூகச் சூழலும் இந்திய அறிவியல் வளர்ச்சிக்குச் சவாலாக விளங்குகிறது. ஆய்வும் மனிதவளமும் இன்னமும் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் இல்லை.

பிரிக்ஸ் (இதஒஈந) எனப்படும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் அறிவியலுக்கான நிதி ஒதுக்கீடு இந்தியாவில்தான் ஆகக் குறைவு. 1990-களில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஏஉட) சுமார் 0.6% அறிவியலுக்கு ஒதுக்கப்பட்டுவந்தது. மெல்லமெல்ல அதிகரித்துவந்த நிதி ஒதுக்கீடு 2010-ல் 0.8% என உயர்ந்தது.

ஆனால், அதிலிருந்து குறைந்து தற்போது வெறும் 0.69% என்ற நிலையில் உள்ளது. தென்கொரியா போன்ற நாடுகள் தங்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.29%-ஐ அறிவியலுக்கு ஒதுக்குகின்றன; தென்னாப்பிரிக்கா 0.73%, சீனா 2.05%, ஜெர்மனி 2.87%, பிரேசில் 1.24% ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது நம்முடைய ஒதுக்கீடு மிகவும் குறைவு.

அறிவார்ந்த நுட்பத் திறன்மிக்க மனிதவளமே அறிவியல் வளர்ச்சிக்கு அச்சாணி. இந்தியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ற விகிதத்தில் அறிவியல் ஆய்வில் மனிதவளம் இல்லை.

ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு சதவிகித மக்கள் அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது அந்த நாட்டினுடைய அறிவியலின் நிலையைத் தெரிவிக்கும். உயர்கல்வி கற்றவர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருகிறது.