ராஜு, கொஞ்ச காலமாகி விட்டது... உன், ஸுஷமாவின் கடிதங்கள் வந்து... எனக்கு வருத்தம் இல்லை. வருத்தப்பட வேண்டியவர்கள் நீங்கள்தான். நான் என்னுடைய ஆயுள் காலம் முழுவதையும் உங்களுக்காக உழைத்திருக்கிறேன் என்று கூறி பிரயோஜனமில்லை.
உழைப்பு ! என்ன உழைப்பு!
அங்கு மழை இருக்கிறதா, ராஜு?
இந்தமுறை இங்கு மழை குறைவு என்று அமைச்சர்களும் பத்திரிகையாளர்களும் கூறுகி றார்கள்.
ஆனால், மகனே... உன் தந்தைக்கு அப்படி தோன்றவில்லை.
இந்த வீட்டில் கடந்த பன்னிரெண்டு வருட காலம் பெய்த அளவில்தான் மழை பெய்கிறது. இந்த வருடமும் சுவர்கள் நனைந்து கசிந்திருக்கின்றன.
இறுதியாக எப்போது இந்தச் சுவர் களுக்குச் சாயம் பூசினோம்? பெயின்டின் நிறம் என்னவாக இருந்தது? ஞாபகமில்லை.
இப்போது சுவர்களில் வரிகளும் கோடுகளும் மிகவும் அதிகமாக படர்ந்திருக்கின்றன. சில வரிகளின் இறுதி, நீரு வந்து வீங்கிய விரல் நுனிகளைப்போல இருக்கிறது.
சர்வே டிபார்ட்மென்டில் பணி செய்த போது, நான் நகரத்தின் வரைபடங்களையும் தெருக்களின் வரைபடங்களையும் வரைந்து பழகியதால் இருக்க வேண்டும்- எனக்கு தோன்றுகிறது...
இந்தச் சுவர்கள் ஏதோ நகரத்தின் "டூரிஸ்ட் கைட் மேப்'பைப் போல இருக்கின்றன என்று.
நான் ஏன் "டூரிஸ்ட் மேப்' என்று
கூறினேன்?
டூரிஸ்ட்கள் வந்து போகின்றவர்கள்
தானே?
நீயும் ஸுஷமாவும் வந்து போகின்றவர்கள் அல்ல.
வந்தால்தானே போக முடியும்?
குற்றம் சுமத்தவில்லை.
குறை கூறவில்லை.
குறைபட்டுக் கொள்வது என் மீதுதான்.
இந்த வீட்டைக் கட்டியபோது, ஓடு வேய்ந்தது தவறாகிப் போனது.
மேற்கூரையில் பயன்படுத்தியது உறுதி யான மரங்கள் என்று முன்பு கான்ட்ராக்டர் கூறினார். இருக்க வாய்ப்பில்லை. ஏதாவது தரமற்ற தடியாக இருக்க வேண்டும். ஓடு நகர்ந்திருக்க வேண்டும்.
மேற்கூரையின் தரமற்ற மரப் பலகைகளில் புழுக்கள் துவாரம் உண்டாக்கியிருக்க வேண்டும். எது எப்படியோ...
ஒழுகுகிறது. என் பழைய கட்டிலைச் சுற்றி நான் நான்கைந்து பாத்திரங்களை வைத்திருக்கிறேன்... ஒழுகும் நீரைச் சேகரிப்பதற்கு. நீர் தரையில் விழுந்தால், துடைப்பதற்கும் நீக்குவதற்கும் யார் இருக்கிறார்கள்?
கடுமையான குளிர்...
குளிரைப் போக்குவதற்கு நான் அணிந்திருப்பது...
முன்பு எப்போதோ நீ எனக்கு வாங்கித் தந்த கம்பளி ஸ்வெட்டரைத்தான்.துளை விழுந்திருக்கிறது.
ஆனால், இப்போதும் துளைகளை விட அதிகமாக இருப்பது கம்பளிதான்.
இந்த துளைகள் விழுந்த ஸ்வெட்டரைப் பார்க்கும் போது, உன் இளம் வயதில் நான் உனக்குத் தந்த கதை புத்தகத்தைப் பற்றிய ஞாபகம் வரும்- ஆலீஸின் அற்புத உலகம். அதில் ஒரு பூனை வரும். ஞாபகம் வருகிறதா? செஷயர் பூனை. அது மறைந்து... மறைந்து போகும். இறுதியில் பூனை இருக்காது.
பூனையின் சிரிப்பு மட்டும்... அந்தச் சிரிப்பும் நின்று விடும்.
அதேபோல ஸ்வெட்டரின் கம்பளி முழுவதும் துளைகளாக ஆகி, ஸ்வெட்டர் மறைந்து விடுமோ?
பிரச்சினையில்லை.
அவ்வளவு காலம் நான் இருக்கவேண்டாமா?
நான் உன்னைப் பற்றியும் ஸுஷமாவைப் பற்றியும் எப்போதும் நினைப்பதுண்டு.
நீங்கள் இருவரும் இரண்டு இடங்களில் வறுமை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்து நான் சந்தோஷப்படுவேன். நான் கடுமையாக உழைத்தும், நிறைய கஷ்டங்களை அனுபவித்தும், தியாகம் செய்தும், நேர்மையான முறையில் வாழ்ந்து கொண்டும் உங்களை ஒரு இடத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேனே என்பதை நினைத்து பெருமைப் படுவேன்.
சமீப காலம் வரை...
இப்போது எனக்கு தோன்றுவது...
கவலைதான்.
நான் கடுமையாக உழைத்தேன்! என்ன உழைத்தேன்? நான் உங்களுக்கு வீடு கட்டித் தந்தேனா? கார் வாங்கித் தந்தேனா? வங்கியில் சேமிப்பு இருக்கும்படி செய்தேனா?
என் அறிவுரை - எப்போதும் இருக்கக்கூடிய என் அறிவுரை - உங்களையும் உழைப்பவர்களாக ஆக்கியது. வயிற்றை இறுக கட்டிக்கொண்டு நடக்கும்...நடுத்தர வர்க்கத்தின் கீழ்படிகளில் நின்று கொண்டிருக்கும்... நேர்மையான நல்ல பிரஜைகளாக ஆக்கியது.
உங்களால் என்றைக்காவது ஒரு வீட்டைக் கட்ட முடியுமா? ஒழுகக் கூடிய வீடாக இருந்தாலும்....?
இல்லை.
உங்களுடைய பிள்ளைகள் பப்ளிக் பள்ளிக் கூடத்திற்குச் செல்வார்களா? நல்ல பல்கலைக் கழகங்களின் உட்பகுதியைப் பார்ப்பார்களா? இல்லை.
காரணம்- உங்களுடைய தந்தை உங்களை முட்டாள்களாக ஆக்கி விட்டார். உழைக்கக் கூடியவர்களாக ஆக்கிவிட்டார்.
இப்படியெல்லாம் சமீப காலத்தில் எனக்கு தோன்ற ஆரம்பித்தது...
வாஸ்வானியை நான் பார்த்ததால்தான்.
பல வருடங்களுக்கு முன்னால் நானும் வாஸ்வானியும் ஒன்றாக படித்தோம்...ஒரு பம்பாய் புறநகர் பகுதியில்...
சரியாகக் கூறுவதாக இருந்தால்... டோம்பிவில்லியில்.
என் தந்தை (நீங்கள் இறப்பதற்கு முன்பே இறந்துவிட்ட என் தந்தை) அப்போது நகரத்திலிருந்த ஒரு எஞ்சினீயரிங் கம்பெனியில் தொழிலாளியாக இருந்தார்.
வாஸ்வானியின் தந்தையும் அதே கம்பெனியில் தொழிலாளியாக இருந்தார்.ஒரே பகுதியில்தான் நாங்கள் வாழ்ந்தோம்.
வாஸ்வானி அறிவாளியாக இல்லை...
அப்போது.
பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற இயலாதவன்.
சமீபத்தில்- ஹோ! வருடங்கள் எவ்வளவு கடந்தோடிவிட்டன! நான் வாஸ்வானியின் படத்தைப் பார்த்தேன்.
மாத்ருபூமியில்...
வாஸ்வானி என்ற தலைவருக்கு இங்கு வரவேற்பு... பெரிய மாலைகளை அணிந்து கொண்டு தலைவர் வாஸ்வானி சிரித்தவாறு நின்று கொண்டிருக்கி றான். அந்த படத்தைத்தான் நான் மாத்ருபூமியில் பார்த்தேன்.
நான் அந்த மனிதனை அடையாளம் தெரிந்து கொண்டேன்.
பழைய வாஸ்வானியேதான். அப்படி கூற முடியுமா? இது புதிய வாஸ்வானி அல்லவா? பழைய வாஸ்வானியின் புதிய அவதாரம்.
எனினும், அந்த கண்களில் மாற்றங்கள் இல்லை.... சிறிய கண்கள்.
அதே தலைமுடி...
நெற்றியில் கட்டுப்பாடே இல்லாமல் விழுந்து கிடக்கும் தலைமுடி...நரைத்து விட்டிருக்கிறது.
எனினும், பழைய முடிதான்.
முகம் அதிகமாகத் தடித்திருக்கிறது.
தாடையிலும் கழுத்திலும் மடிப்புகள் இருக்கின்றன.
எனக்கு வாஸ்வானியைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டானதற்குக் காரணம்- அதே நாளில் இன்னொரு பத்திரிகையில் பார்த்த ஒரு செய்தி.
வாஸ்வானிக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு சிறிய கட்டுரை...
டில்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டியின் சட்டதிட்டங்களை முழுமையாக மீறி, அரசாங்கத் திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வாஸ்வானி ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலைக் கட்டியிருக்கிறானாம்.
இந்தியா முழுவதும் நடக்கக்கூடிய கேபரே நடனங்களையும் பெரிய முதலீட்டு வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தும் "பாரதமேஃபியா'வின் தலைவனாம் வாஸ்வானி.
இருபது கொலை வழக்குகளில் குற்றவாளியாக இருந்தாலும், ஒரு ரோமத்திற்குக் கூட கெடுதல் உண்டாகாமல், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டவனாம் வாஸ்வானி.
இந்த புண்ணிய பூமியில் எங்கெங்கெல்லாம் மதுபானம் மூலம் மனிதர்களின் கண்கள் பார்வையை இழக்கின்றனவோ, மனிதர்கள் இறக்கிறார்களோ... அங்கெல்லாம்... அந்த சம்பவங்களுக்குப் பின்னாலெல்லாம்... வாஸ்வானியின் சாராய "பாட்லிங் யூனிட்'கள் இருக்குமாம்.
பல லட்சம் கால் ஊனமுற்றவர்களின் நிரந்தர துக்கத்திற்குப் பின்னாலுள்ள கேசரி பருப்பின் விற்பனை கிளைகளைக் கட்டுப்படுத்துவது வாஸ்வானியின் குடையின் கீழிருக்கும் வர்த்தகக் கூட்டமைப்பாம்.
சஞ்சய் காந்தியின் சிலையை அமைப்பதற்கும், சிலையை எடுத்து மாற்றுவதற்கும் முடிந்தவனாம் வாஸ்வானி.
இப்போது ராஜீவ் காந்தியின் உள்வட்டத்திலுள்ள ஜகத்சிங் என்ற காங்கிரஸ் தலைவரின் அந்தரங்க நண்பனாம். முன்பு டோம்பிவில்லி பகுதியில் நான் நெருக்கமாக அறிந்திருந்த வாஸ்வானி.
இந்தச் சிறிய கட்டுரையை வாசித்தபோதுதான் என் வாழ்க்கையை நான் ஆராய்ந்து பார்த்ததும், வாஸ்வானியை நேரில் பார்க்கவேண்டும் என்று நினைத்ததும்...
மறுநாள் பத்திரிகையில் "இன்றைய நிகழ்வு' பகுதியில் ஒரு நிகழ்வு இருந்தது...மஸ்கட் ஹோட்டலில் மாலை ஐந்தரை மணிக்கு பொருளாதார வீழ்ச்சியைப் பற்றியும் தர்ம பாதையைப் பற்றியும் ஸ்ரீ வாஸ்வானிஜி உரையாற்றுகிறார்.
நான் சென்றேன்.
உரையைக் கேட்டேன்.
மகாத்மாஜியைப் பற்றியும் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும் உழைப்பின் அவசியத்தைப் பற்றியும் எளிய வாழ்க்கையைப் பற்றியும் வேத உபநிஷத்துக்களைப் பற்றியும் வாஸ்வானி பேசினான்.
அவன் ஹோட்டலில்தான் தங்கியிருந்தான்.
நான் ரிஸப்ஷனிஸ்டின் உதவியை நாடினேன்.
ரிஸப்ஷன் டெஸ்கிலிருந்து வாஸ்வானியின் அறைக்கு நான் ஃபோன் செய்தேன். என்னிடம் பேசியது வாஸ்வானியின் பி.ஏ.வாக இருக்கலாம்.
வாஸ்வானியாகவேகூட இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், ஐந்து நிமிட நேரம் எனக்கு ஒரு நேர்காணலுக்கான அனுமதி கிடைத்தது.
சென்று நுழைந்த என்னை வாஸ்வானி
அடையாளம் காணவில்லை.
அவன் பழைய வாஸ்வானியேதான் என்பதை உறுதியாக அறிந்திருந்ததால், நான் செயல்பட ஆரம்பித்தேன். நான் கூறினேன்: "மிஸ்டர் வாஸ்வானி, உங்களுடைய வலது கைத்தண்டில் ஒரு மயில் உருவம் பச்சை குத்தப்பட்டிருக்குமே!'' சென்றவுடன் நான் இவ்வாறு கூறியவுடன், அவன் அதிர்ந்துவிட்டான்.உடனிருந்த பி.ஏ.வும் அதிர்ச்சியடைந்தான்.
நான் வாஸ்வானியின் கதர் ஜிப்பாவின் வலது கை பகுதியைச் சுருட்டி மேல் நோக்கி உயர்த்திய போது, அவன் எந்தவித அசைவுமில்லாமல் நின்றிருந்தான்.
அதோ... மயில் உருவம்!
"உங்களுக்கு இது எப்படி தெரியும்?''- ஒரு டில்லி துறவியிடம் கேட்பதைப்போல, ஆர்வத்துடன் வாஸ்வானி கேட்டான்.
நான் என்னுடைய முழுக்கை சட்டையின் வலது கை பகுதியைச் சுருட்டி உயர்த்தினேன். என் வலது கையின் தண்டைக் காட்டினேன்.
அதன்மீது இருந்த மயில் உருவத்தையும்...
"வாஸ்வானி... டோம்பிவில்லியில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் நாம் பச்சை குத்தியது ஞாபகத்தில் இருக்கிறதா?''
அவன் அந்தத் தருணத்தில் என்னை
அடையாளம் தெரிந்துகொண்டான் :
"ராமன்... நீங்கள்... என் பழைய ராமனான நீங்கள் மிகவும் மாறி தெரிகிறீர்கள்.''
"நீங்கள் பெரிய அளவில் மாறி விடவில்லை.''
"ஆனால், நான் மிகவும் நரைத்துவிட்டேனே, ராமன்? கடுமையான உழைப்பு! கடுமையான உழைப்பிற்குக் கொடுக்க வேண்டி வந்த விலை. உழைப்பவர்கள் எவ்வளவு சீக்கிரம் கிழவர்களாக ஆகிவிடுகிறார்கள்!''
கைக் கடிகாரத்தைப் பார்த்த பி.ஏ., வாஸ்வானி யிடம் கூறினான்:
"சார், முதலமைச்சரின் இல்லத்தில் டின்னர்...''
வாஸ்வானி என் கரத்தைப் பற்றினான்.
"ராமன், எனக்கு உங்களுடன் மேலும் நேரத்தைச் செலவிடவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால்...''
"பரவாயில்லை. எனக்குத் தெரியும்... நீங்கள் ஒரு பிஸி பெர்ஸன் என்ற விஷயம்...''
ராஜு... உழைப்பைப் பற்றி நான் முன்பு கூறியதையெல்லாம் நீயும் ஸுஷமாவும் மறந்து விட வேண்டும்.
நான் ஸுஷமாவிற்கும் இதே கடிதத்தை எழுதுகிறேன்.
ஒழுகுகிறது.
சுவர்கள் நனைந்து கசிந்திருக்கின்றன.
குளிரடிக்கிறது.
முன்பு நீ வாங்கித் தந்த கம்பளி ஸ்வெட்டரைத் தான் நான் அணிந்திருக்கிறேன்.
துளை விழுந்திருக்கிறது.
ஆனால், இப்போதும் துளைகளைவிட அதிகமாக இருப்பது கம்பளிதான்.
உன் அப்பா.
பி.கு.: அம்மா என் அருகில் இருக்கிறாள்.
இருமுகிறாள். பாவம்... அவளுக்குச் சிறிதும் முடியவில்லை.''