முப்பெரும் தமிழ்விழாவின் முதல்நாளில் முதல் சொற்பொழிவாக, சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அவர், "தமிழ் தமிழர்' எனும் தலைப்பில், எவ்வாறெல்லாம் தமிழ் மொழியின் வரலாறு உலகளவில் விரிந்துள்ளது என்பதை ஒரு கணினியின் செயல்பாடுபோல அடுக்கடுக்காகப் பல புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தது அங்கு பெரும் பாராட்டினைப் பெற்றது.

தொடர்ந்து, தமிழர் வரலாற்று ஆய்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றுகூறி, மொத்தத் தமிழர்களின் எண்ணிக்கையில் 20% பேர் தமிழகம் கடந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்வதையும், உலகில் சுமார் 6000 மொழிகள் இருப்பதாக ஐ.நா. சபையின் புள்ளிவிவரம் கூறுவதையும், அதில் உலகளவில் அதிக மக்கள் தொகை பேசக்கூடிய மொழிகள் பட்டியலில் தமிழ் 17 ஆவது இடத்தில் உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

trr

Advertisment

மேலும், தமிழர்களைக் குவலயக் குடும்பத்தினர் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவதையும், தமிழ் செம்மொழி, செவ்வியல் மொழி என்று உலகளவில் அங்கீகாரமடைந்ததற்குப் பல வலுவான காரணங்கள் உள்ளதாகவும், இயல்பாகவே தமிழ்மொழி செம்மொழித் தன்மை கொண்டிருந்தாலும் அதனை அறிவியல்பூர்வமாக உலக அரங்கில் நிறுவியவர்கள், உ.வே. சாமிநாத ஐயர், சி.வை. தாமோதரம் பிள்ளை போன்ற எண்ணற்ற தமிழ் ஆய்வாளர்கள் என்றும், தங்களின் தொல்லியலாய்வுகள் மூலம் தொல்காப்பியம், திருக்குறள் உள்ளடங்கிய சங்க இலக்கியங்கள் போன்ற பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களுக்காகத் தங்கள் வாழ்நாளையே முழுமையாக அர்ப்பணித்துப் பதிப்பித்துள்ளனர் என்றும், பேராசிரியர் கே.ராஜன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட "தமிழகத் தொல்லாய்வு அட்டவணை' என்ற நூல் தமிழ்நாட்டில் 2000 இடங்கள் தொல்லாய்விற்குகந்த இடங்களென்று மாவட்ட வாரியாகத் துல்லியமான விவரங்களைக் குறிப்பதையும், அந்நூல் வெளியான பிறகு கடந்த பத்தாண்டுகளில் மேலும் 500 தொல்லியல் ஆய்வுக்கான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், தமிழகத்திலுள்ள 2500 தொல்லியல் ஆய்விற்கான இடங்களில் இதுவரை 100 இடங்களில் மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் மடமடவென்று பட்டியலிட்டுக் கூறினார்.

மேலும், இதுவரை தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்ட மொத்த இடங்களில் 4% மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அதிலும் இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் மிகக் குறைவான அளவிற்கே முழுமையான ஆய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன என்றும், இந்தியாவில் இதுவரை சுமார் 1,50,000 கல்வெட்டுகள் கண்டறியப் பட்டுள்ளதில் தமிழ்நாட்டில் மட்டுமே 60,000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதையும், அவற்றுள் 30,000 கல்வெட்டுகள் மட்டுமே படிக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளனவென்றும், மீதமுள்ள கல்வெட்டு கள் இதுவரை ஆய்விற்கே எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதையும், தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ள 800 செப்பேடுகளில் பாதிக்கும் மேல் பதிப்பிக்கப்படாமல் உள்ளதையும் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு முதல்நாளிலேயே தமிழ்சார்ந்த அவரது புள்ளிவிவரச் சொற்பொழிவு முப்பெரும் விழாவுக்கே ஒரு மகுடம் வைத்ததுபோல மிகவும் சிறப்பாக அமைந்தது.

Advertisment

தொடர்ந்து சிகாகோ தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த ராஜேஷ் ஜெயராமன் திரைப்படப் பாடலுக்கு நடனமாடியது மிகவும் சிறப்பாக இருந்தது. பின்னர் அயோவா தமிழ்ச்சங்கத்தினர் நமது பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவற்றை ஆடி மக்களை மகிழ்வித் ததும், மத்திய இலினாய்சு தமிழ்ச்சங்கம் நமது கிராமிய நடனங்களை ஆடி அசத்தியது.

நியூயார்க் தமிழ்ச்சங்கம் "தமிழும் நாமும்' எனும் தலைப்பில் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர்.

இவையெல்லாம் தற்போது இங்கு முன்புபோலப் பரவலாகக் காணக் கிடைப்பதில்லை. அதன் சுவையை தற்போதைய இளைய தலைமுறையினர் உள்வாங்கி, அதில் ஒன்றி மேடையில் செயல்படுத்தியது உண்மையில் மக்களைப் பரவசப்படுத்தியது என்றுதான் கூறவேண்டும்.

ttt

அந்த பிரம்மாண்டமான மேடையில், கலிபோர்னி யாவின் தமிழ்ப் பள்ளிகள் பற்றிய ஒரு காணொலிமூலம் தமிழ்மொழியின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, "தமிழர் வாழ்வில் பெருமை' எனும் நாடகத்தை சிகாகோ தமிழ்ச் சங்கத்தினர் அரங்கேற்றினர். தமிழரது மரபுக்கலையான, "சிலம்பம்' ஆடப்பட்டது.

மேலும் நாம் ஏற்கெனவே மொத்தமுள்ள நான்கு நாட்கள் நிகழ்ச்சிக்குமாக முன்பதிவு செய்திருந்தபடியால் அதற்கான ஊதா நிறத்தில் நமது கையில் அணிய ஒரு காகிதப் பட்டையும், கழுத்தில் அணிந்து கொள்ளும் அடையாள அட்டையும் கொடுத்திருந்தனர். மேலும் 1 நாள், 2 நாள்கள், 3 நாள்கள் மட்டுமே என்பவர்களுக்கு முறையே வெவ்வேறு நிறங்களில் கைப்பட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.

மதிய உணவு இடைவேளையாக, பக்கத்து அரங்கில் தமிழரது பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது. அதற்காக அனைவருக்கும் காலையிலேயே அரங்கிற்கு வந்ததுமே பல வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன.

மதிய உணவு இடைவேளை முடிந்ததும், மேடையில் அருவி வெளியீடும், விழா மலரும் வெளியிடப்பட்டன. தொடர்ந்து கவிஞர் சல்மா அவர்களது தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது மிகவும் பொருள்பொதிந்ததாக இருந்தது.

அதனைத்தொடர்ந்து, கனடா டொரோண்டோ தமிழ் இருக்கையின் நடனம் கண்களைக் கவர, மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் "குரலற்றவர்களின் குரல்' எனும் சமூக நாடகமோ நமது தஞ்சை டெல்டா விவசாயிகளின் கையறுநிலை பற்றியும், அவர்களது இயற்கைவளம் களவாடப்படுவது பற்றியும் எடுத்துரைத்தது.

அந்நாடகத்தைப்பற்றியும், தமிழரது நிலைபற்றியும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளரு மான ஐயா.சி.மகேந்திரன் மிகவும் பாராட்டியும், விவசாயி களுக்காகப் பரிந்து, மிகவும் மனநெகிழ்ச்சியுடனும் உணர்ச்சி மேலோங்கப் பேசினார்.

பின்னர் தமிழர்களின் வரலாற்றுக் காலவரிசை நிகழ்ச்சியும், நம் பாரதி இல்லாமல் தமிழ் விழாவா என்ன என்பதுபோல, மீண்டும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தினரின் பாரதியார் பாடலுக்கான நடனமும் அரங்கேறியது.

அதற்கடுத்து, நமது திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஐயா.திரு.ஜி.யு.போப் பாராட்டும்விதமாக, அவரது கொள்ளுப்பேத்தி கரோல் பரோஸ் மற்றும் அவரது கொள்ளுப் பேத்தியின் மகன் மால்கம் போன்றோரை (ஈஹழ்ர்ப் இன்ழ்ழ்ர்ஜ்ள், ஙஹப்ஸ்ரீர்ப்ம்) விழாவிற்கு அழைத்துச் சிறப்பித்தனர். அவர்களை மேடையில் பார்த்ததுமே நமக்கு, கடந்த 2016இல் திருமதி கரோல் தமது மூன்று வாரிசுகளுடன் ஊட்டிக்கு வந்திருப்பதாகவும், அவரது கொள்ளுத்தாத்தா ஜி.யு.போப் தமிழ்மொழியின்பால் ஈர்ப்புக் கொண்டு கனடாவிலிருந்து இந்தியா வந்து தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் வாழ்ந்தார், தமிழுக்காக என்னென்ன பணிகள் செய்திருந்தார் என்பதையெல்லாம் தேடிக் கண்டுபிடித்துக் கண்கூடாகக் காண இருப்பதாகவும், அவர் வாழ்ந்திருந்த தமிழ்நிலத் தையும் அதன் மக்களையும் காணவேண்டியுமே தாங்கள் தற்போது தமிழ்நாடு வந்திருப்பதாகக் கொடுத்திருந்த பத்திரிகைச் செய்தி நினைவுக்கு வந்தது.

tttr

மேலும் ஆதியில் ஊட்டியில் அவர்களது கொள்ளுத்தாத்தா போப் ஒரு இலக்கணப் பள்ளி நடத்திய கற்கட்டடத்தில்தான் தற்போதைய ஊட்டி அரசினர் கலைக் கல்லூரி இருப்பதாகவும், அதனைக் கண்டு அவர்கள் மிகவும் மகிழ்ந்ததாகவும், பின்னர் அவர் வாழ்ந்த வேறுபல இடங்களுக்கும் சென்றதாகவும் முன்பு படித்திருந்த செய்திகள் கண்முன் நிழலாடின.

அத்தகு சிறப்புமிக்க பின்னணிகொண்ட அவர் களைப் பாராட்டி, நமது பேராசிரியர், முனைவர்.

கு. ஞானசம்பந்தம் வழக்கம்போல் தமது நகைச்சுவை யுடன் உரையாற்றி, அரங்கைச் சிரிப்பொலியில் ஆழ்த்தினார்.

அங்கு அவ்விழாவில் மேடையில் உரையாற்றுபவர்கள் அனைவரும் அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட மணித்துளி களுக்குள் பேசிமுடித்துவிட வேண்டும் என்பது ஒரு கட்டாய விதி. அவ்வாறு உரையின் வீச்சு குறித்த நேரத்தில் முடியவில்லையெனில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தரப்பிலிருந்து ஒருவர் மேடைக்குவந்து நினைவூட்டுவார். அவ்வாறு நமது பேராசிரியர் பேசும்போதும் அரங்கில் குபீர் சிரிப்பொலி எழுப்பப்பட்டு, உரையை முடிக்காது நேரம் கடந்துவிட்டதால் அவ்வப்போது மேடைக்கு ஒருவர் வந்துபோய்க் கொண்டிருந்தார். அதற்கு ஐயா தனது பேச்சினூடாக, தம்மை பேச்சை முடிக்கச்சொல்லி மேடைக்கு வந்துவந்து எச்சரிக்கின்றனர், இன்னும் தான் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் தன்னை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு போய் எங்கேனும் வீசிவிடுவர் போலிருக்கிறது என்று கூறியதும், மக்கள் கூட்டத்தினிடையில் இடைவிடாத சிரிப்பொலியும், ஆரவாரமும் எழுந்தன.

அதற்கடுத்து ஈழத்துப் பாரம்பரிய நடனமாக, குமரிக்கண்டம் தொடங்கி, சோழர், வன்னி பற்றிய கூத்தும், விபுலானந்த அடிகள், தனிநாயகம் அடிகள், மக்கள் போராட்டம் பற்றியும், தமிழைப் போற்றவேண்டி இளைய தலைமுறையினருக்கான நற்செய்திகளையும் கொண்டதாக, ஆறு நாடுகளின் நடனக்கலைஞர்களும்,இலங்கை நடனப்பள்ளிக் கலைஞர்களும் ஒன்றிணைந்து அரங்கேற்றினர்.

பின்னர் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அவர்களது பொன்பறை என்ற பறையாட்டம் அரங்கையே அதிரவைத்தது. ஹூஸ்டன் தமிழ் இருக்கை பற்றியும் ஒரு சிற்றுரை ஆற்றினர்.

அன்று மாலை நம் தமிழ் இளவல், இளம் சாதனையாளர் லிதியன் நாதஸ்வரம் அவர்களின் சாதனையைப் பாராட்டிச் சிறப்பித்தனர். அதுமுடிந்ததும், "வேள்பாரி' ஆசிரியரும், நமது மதுரைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் கீழடி ஆய்வு பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், அதற்கான தமது போராட்டம் பற்றியும் தமக்குக் கொடுக்கப்பட்டிருந்த மணித்துளிகளுக்குள் உரையாற்றி முடித்தார்.

அவ்வுரை முடிந்ததும் "முரசு' சேர்ந்திசையாக டாக்டர்.கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் அவர்களது இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அவரது ஒருங்கிணைப்பில் இந்திய வீணை இசைக்கலைஞர்கள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களும், 15க்கும் மேற்பட்ட பாடகர்களும் பங்கேற்ற சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இசை நிகழ்ச்சியை வழங்கியது. அவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டவர். பாடலைப் பாடியவர்களில் பாதி தமிழர்கள், மீதி அமெரிக்கர்களாவர்.

தொல்காப்பியம் தொடங்கி, நமது சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம், திருக்குறள் எனச் சென்று பின்னர் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் சேர்த்து இசைத்து, விழாமண்டபத்தையே அசத்தினர்.

அது முடிந்ததும், நமது பட்டிமன்றப் புகழ் பேராசிரியர். சாலமன் பாப்பையா தலைமையில் ராஜா மற்றும் திருமதி.பாரதி பாஸ்கர் உள்ளிட்ட அணிகள் பட்டிமன்றத்தைச் சிறப்பாக அரங்கேற்றின.

இப்படியாக, இடைவிடாத தமிழ்ச் சுவையுடன் முப்பெரும் தமிழ்விழாவின் முதல்நாள் கடந்தது.

-தொடரும்...