""நல்லவனும் கெட்டவனும் கலந்தவர்கள் தாம் நாம். நானும் அப்படித்தான்... சூழ்நிலையினைப் பொறுத்து கெட்டவனின் கொட்டம் அடக்கப்படும்... அடங்கி இருக்கும். ஒவ்வொருவருக்குள்ளும். வெளியில் சொல்லமுடியாத ரகஸியங்கள் உண்டு. எனக்கும் உண்டு... நேற்றைய என் கவிதைக்கு இன்றைய வாசகனாய் நான் இருப்பதைப் போல... நான் மட்டுமே இருப்பதைப் போல,'' சமீபத்தில், பிரபு சாலமன் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.

மதுக்கூரில்... என் பள்ளி நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் விருந்தை சுவைத்திருக்கிறேன். அப்துல் ஜப்பார் என்கிற அந்த நண்பனோடு சேர்ந்து தாமரை நூலகம் என்ற பெயரில் ஒரு நூலகம் அமைத்திருக்கிறேன். கிறிஸ்துமஸ்... ஆங்கிலப் புத்தாண்டு என்பது பொங்கலுக்கான தோரண வாயிலாகத்தான் அப்போது தோன்றியது. கல்லூரி நாட்களில் என்.எஸ்.எஸ். கேம்ப் நீடாமங்கலத்தில் நடந்தபோது "டிசம்பர்ப்பூக்கள் சிரிக்கின்றன' என்ற ஒரு சிறுகதை எழுதியது நினைவிற்கு வருகிறது.

கிறிஸ்துமஸ் கால காலைப் பனியும் வானிலையும் வண்ணப்பூக்களும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. கனகாம்பரச் செடிகள்... வயலெட் நிறத்திலான டிசம்பர்ப்பூக்கள்... மார்கழி மாத வண்ணக் கோலங்கள், சாண உருண்டையில் பரங்கிப்பூக்கள்... அப்பா தன் வசீகரக்குரலால் கோயிலில் பாடும் திருவெம்பாவை எல்லாமே டிசம்பரின் மறக்கமுடியாத, அடையாளங்கள். பொங்கல் வரை அந்த ஆனந்தம் தொடரும்.

சென்னை வந்த பிறகு இசையமைப்பாளர் ஜெயசேகர் இல்லத்தில் பலமுறை கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்டிருக்கிறேன்.

Advertisment

yaarkannan

இயக்குநர் பிரபு சாலமன் தொகுத்தறித்த கிறிஸ்துமஸ் விழாவில் மேடை ஏறியபோது- ஏசுவை மிகப்பெரிய சித்தராக "அப்பா' சின்னஞ்சிறு வயதில் அடையாளம் காட்டினார் என்றுதான் பேச்சைத் தொடங்கினேன். உலக அளவில் பரந்து விரிந்திருக்கும் ஒரு மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டால் கல்வி, பொருளாதாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மதம் மாறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. உண்மையான ஆன்மிகமும் அல்ல அது. ஆனால் கிறிஸ்தவ மதம், முஸ்லிம் மதம் என்ற பேதமின்றி தமிழ் இலக்கியத்திற்கு பல கவிஞர்கள், அறிஞர்கள் சேவை செய்திருக்கிறார்கள். "கொண்டாட' சாதி மதம் என்பதெல்லாம் எல்லையே இல்லை. சில வருடங்கள் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் வீட்டில் புத்தாண்டு கொண்டாடி இருக்கிறேன். எல்லையில்லாத நட்புக்கு "மொழி' கடந்த உதாரணம் அவர்! "உரத்த சிந்தனை' உதயம் ராம் அழைப்பின் பெயரில் ஹைதராபாத் சென்றபோது - இந்த ஆண்டு டிசம்பரும் கிறிஸ்துமஸ் விழாவும் வேறுபட்ட ஓர் உணர்வை ஏற்படுத்திவிட்டது.

பாரதி விழாவிற்காகத்தான் தெலுங்கானா சென்றேன். ஆனால் பாரதி விழாவிற்கு முதல்நாள் காலையிலேயே ஹைதராபாத் சென்றுவிட்டேன் என்பதால் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி கிறிஸ்துமஸ் கார்னிவல் புத்தாண்டுக்கான விழாவிலே கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

Advertisment

உலகத்திலேயே பெரிய ஸ்டுடியோ என்ற கின்னஸ் ரெக்கார்டுடன் நம்மை எதிர்கொண்டது "ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி'.

என்னுடன்... விஞ்ஞானி ராஜு, உதயம் ராம், உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளை தலைவி ராமதிலகம் என நால்வராகத்தான் உள்ளே நுழைந்தோம்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அலங்கார வேலைப்பாடுகள் வரவேற்றன. 2000 ஏக்கர் நிலப்பரப்பில்... பல கிராமங்களை உள்ளடக்கி வெற்றிடங்களை எல்லாம் வெற்றி இடங்களாக்கி... காட்சி அளித்தது ஃபிலிம் சிட்டி... என்கிற அந்த திரைப்பட நகர்! காரில் செல்கிறவர்கள். காரை நிறுத்துவிட்டு ஃபிலிம் சிட்டிக்கான தனி பேருந்தில் தான் உள்ளே பார்வையாளர்களாகச் செல்லமுடியும்.

1250 ரூபாய் ஒருவருக்கான நுழைவுக்கட்டணம். உள்ளே செல்லும்போது தின்பண்டங்களோ தண்ணீரோகூட கொண்டுசெல்ல முடியாது. இந்த நுழைவுக் கட்டணத்தில் வேறுவேறு பேக்கேஜ்களும் விருப்ப இடங்களுக்கான சிறப்புக்கட்டண மாற்றங்களும் உண்டு. தெலுங்கு மொழியின் ஆதிக்கத்தோடு அலுவலர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். "தெலுங்கானா'வில்!

உண்மையை சொல்லப்போனால்... இந்த சிறப்பு, பெருமை எல்லாம் சென்னையில் சென்ற நூற்றாண்டின் இறுதியிலேயே நமக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என எல்லா மொழிகளுக்குமான திரைப்பட வேலைகள் படப்பிடிப்புகள் அனைத்தும் கடந்த காலத்தில் நம் சென்னையில்தான் நடந்துகொண்டிருந்தன. திரைப்பட வர்த்தக சபை, தொழிலாளர் சம்மேளனம் எல்லாம் "தென்னிந்திய' என்ற பெயர்த் தொடக்கத்துடன் சென்னையில்தான் இயங்கிக்கொண்டிருந்தன. மொழிவாரியாகப் பிரிவினை இல்லை... தெலுங்கு பேசிய நாகிரெட்டி, எஸ்.வி.பிரசாத் போன்றவர்களின் பிரம்மாண்டமான ஸ்டுடியோக்கள் சென்னையில்தான் இயங்கின.

மறைந்த ஜெயலலிதா அவர்கள் திரைப்பட நகருக்காக... 85 ஏக்கரில்- தரமணி ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டை உள்ளடக்கி, மாபெரும் விழா நடத்த அரங்கம், தோட்டம், ஒப்பனைக்கூடம், கிராமம், கோயில், வீடு என அத்தனையும் அமைத்துக்கொடுத்தார்.

மிகப்பெரிய அடையாளமாக சுற்றுலாத் தலமாக உருவாகி இருக்கவேண்டிய அந்தத் திரைப்பட நகர்... தவறான நிர்வாகிகளின் கையில் சிக்கியது. ஆட்சி மாறினாலும் பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகியும் அதிகாரிகளும் கொஞ்சங்கூட சரியாகப் பராமரிக்காமல் நஷ்டக்கணக்கு காட்டினார்கள். எல்லா இடங்களையும் காடாக்கினார்கள். காதலர்களுக்கான மறைவிடமாகவும் போனது... இறுதியில் துண்டு துண்டாக 85 ஏக்கரும்... மற்ற மற்ற நிறுவனங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு "கோவணம்' போன்ற இன்ஸ்ட்யூட் நடக்கும் இடம் மட்டுமே அதில் இன்னும் சூறையாடப்படாமல் இருக்கிறது.

தெற்கின் தலைமையிடமாக இருந்த சென்னையின் ஸ்டுடியோக்கள் வணிக வளாகமாக, அடுக்குமாகக் குடியிருப்புகளாக இன்று அடியோடு மாறிவிட்டன. சென்னையிலிருந்து குடிபெயர்ந்து வருமாறு... ஆந்திர அமைப்புகள் அரசு வசதிகள் கலைஞர்களை அழைக்க அழைக்க பஞ்சாரா ஹில்ஸ் ஃபிலிம் நகரானது... பாறைகளை உடைத்துக் குடைந்து வீதிகளும் வீடும் சமைத்தனர்.

மொழி உணர்வால் ஆந்திராவில் தனித்தனியே திரைப்பட அமைப்புகள் சென்னையின் தலைமையை மீறி கட்டுடைத்து... பிரிந்து உருவாகி வலுப்பெற்றன. குடியிருப்பு மனைகளும் சலுகைகளும் வசதிகளும் தொழில் நுட்பக்கலைஞர்களை காந்தமாகக் கவர்ந்திழுக்க இன்று ஒரு தனி நபரின் "ஸ்டுடியோ' 2000 ஏக்கர் பரப்பளவில்... கின்னஸ் சாதனையோடு உலகிலேயே பெரிய "ஃபிலிம் சிட்டி' என்ற அடையாளத்தோடு தினசரி பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்துக்கொண்டிருக்கிறது... பிரமிக்க வைக்கிறது.

கேரளாவில் கூட கே. எஃப்.டி.சி. என்ற அமைப்போடு திருவனந்தபுரத்தில் "சித்ராஞ்சலி ஸ்டிடியோ' சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் பல வசதிகள் உண்டு. கர்நாடகாவில் அங்கேயே பூஜைபோட்டு படமாக்கப்படும் படங்களுக்கு வரிச்சலுகை, மான்யம், அரசு உதவிகள் என அத்தனையும் உண்டு.

சென்னை இப்போது வெற்றிடமாக வெறிச்சோடிக் கிடக்கிறது. திரைப்படத் தயாரிப்பின் தலைமையிடமாக இருந்த தமிழ்நாட்டின் பல திரைப்படங்கள் இன்றைய தெலுங்கானாவின் ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் நடக்கின்றன. சென்னை வெறும் கான்க்ரீட் காடாக காட்சியளிக்கிறது. காரணம் என்ன? அசை போட்டவாறே ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியுள் நடந்தேன்.

கடலூர் கடற்கரையும் இல்லாத "ஹைதராபாத்தில் ஓர் அழகான ஏரியை சுற்றுலா இடமாக்கி ஏரியின் நடுவில் சிலை அமைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து வருபவர்களை வசீகரிக்கிறார்கள் அவர்கள்...

ஆனால்... தமிழ்நாட்டில் தலைநகரில் எல்லா வளமும் வசதியும் இருந்தும்... பாதுகாக்கத் தவறிவிட்டோம். ஏரிகளை எல்லாம்... புறம்போக்கு மனைகளாய் மாற்றிவிட்டார்கள்.. கிழக்குக் கடற்கரைச் சாலையில் நினைத்திருந்தால் கடலோடு, கடற்கரையோடு ஒரு பெரும் திரைப்பட நகரத்தை உலகத் தரத்திற்கு உருவாக்கி இருக்கலாம். அரசும் அதிகாரிகளும் தலைமைப் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளும் காட்டிய மெத்தனம், புறக்கணிப்பு பொறுப்பின்மை- ஒன்றுசேர்ந்து ஒன்றுமில்லாமல் செய்துவிட்ட கொடுமையை, வெறுமையை யாரும் உணர்த்தாகத் தெரியவில்லை.

இழந்த சொர்க்கங்களை இனி எப்படி மீட்டு எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்குறியோடு, ஆச்சரியக் குறியான தெலுங்கானா ஃபிலிம் சிட்டி அரங்கங்களை வலம் வந்தேன்...

புத்தாண்டு கிறிஸ்துமஸ் அலங்காரங்களோடு ஜொலித்த அந்த விசாலமான நிலப்பரப்பில்- பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒரு மாநாட்டுக்கு வருவதைப்போல் ஆசிரியர்கள் புடை சூழ அணிவகுத்து வந்துகொண்டே இருந்தார்கள்.

சினிமாவைப் பற்றி தெரியாதவர்களுக்கு, எப்படி கிரீன்மேட் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள், இசை எப்படி ""ரீரிக்கார்டிங்' செய்யப்படுகிறது, துல்லியமான எஃபக்ட் சவுண்டை எப்படி பதிவுசெய்து இணைக்கிறார்கள் என்றெல்லாம்? டெமோ காட்டப்படுகிற விதம் சாதாரண மக்களை வியக்கவைக்கும்.

"கவ்-பாய்' சண்டைக்காட்சிகள், அதற்கான உடைகள், ப்

ராப்பர்ட்டீஸ், துப்பாக்கி, பீரங்கி, வீர தீரச்செயல் செய்யும் நடிகர் நடிகைகள் என பிரம்மாண்டமான அரங்கம் அப்படியே கண் இமைக்காமல் அதிரவைத்தது. ஆயிரமாயிரம் பேர் ஒரே சமயத்தில் உள்ளிருந்து பார்க்க இரண்டடுக்கு மேடை அமைப்புடன் ஆடல் அரங்கம், ஸ்புட்னிக் உலகம்- உட்கார்ந்தவர்கள் வானவெளியில் அரங்கத்தில் அமர்ந்தபடியே வான்வெளிப் பிரயாணமாய் பிளானெட்டுகளைத் தாண்டும் புரஜக்ஷன் சவுண்ட் மற்றும் இருக்கை அசையும் எஃபக்ட் ஸிஸ்டம் என அத்தனையும் கடந்தால் "பாகுபலி' படப்பிடிப்பு நடத்தப்பட்ட அரங்குகள் அதன் ஒளி, ஒலி அமைப்புகளோடு... என பயணம் நீண்டுகொண்டே இருந்தது.

பறவைகள் தோட்டம், வணணத்துப்பூச்சிகள் மலர், செடி, கொடிகள் சூழ்ந்த வனாந்திரம்.. லண்டன் தெருக்கள், அக்ரஹாரம், பௌத்த குகைக்கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன்- ரயில் பெட்டிகள் எஞ்சினுடன், புராண இதிகாச சரித்திர அரண்மனைகள், வெளிப்புற உட்புற அரங்குகள் என அத்தனையும் உண்டு. பாடல் காட்சிகளுக்கான நீர் ஊற்றுக்கள் கிரேக்கச் சிற்பங்கள்... எதுவும் இங்கே இல்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறார்கள் ஹெலிகாப்டர் இறங்குதளம்... விமான நிலையத்தின் உட்புற வெளிப்புற வடிவமைப்புகள்... என எல்லாவற்றையும் பார்ப்பதற்குள் மாலை மணி ஐந்தை நெருங்க மின்விளக்கு அலங்காரங்கள் ஒரு நாடு முழுவதும் செய்ததைப்போல் வர்ண ஜாலம். கொடிகள், தோரணங்கள்... அலங்கார வளைவுகள்... விளையாட்டு சாதனங்கள்... பூதாகரமான ஜெயண்ட் வீல்ஸ் என எந்தப்பக்கம் திரும்பினாலும் கண்களைக் கவர்ந்து இழுத்தன.

நல்ல பாரம்பரிய உணவு வகைகள் உள்ளே இல்லாததும் சுவையான தேநீர் கிடைக்காததும் குறையாய்த் தோன்றினாலும். இன்னிசை நடன நிகழ்ச்சிகள், அரங்க அமைப்புகள், ஒளி- ஒலிப் பிரவாகம்- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கோலாகலத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டது.

பாரதிவிழா அடுத்தநாள் முடித்து சென்னையை மூன்றாம் நாள் விடிகாலை நெருங்குகிறபோதே- சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்பாக- சாக்கடை நைல்களும் எருப்பிரமிடுகளும் எதிர்கொண்டன. குப்பை மலைபோல் குவிந்து அழுக்கும்... புகையுமாய். பாலிதீன் கவர்களும் "வேஸ்ட்' களும் நம் தமிழ்நாட்டு அரசியல்போலவே கரிபூசிக் கொண்டிருந்தன.

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத ஒரு சூன்யத்தை நம் மண்ணில் விதைத்தது யார்? உருவாக்கியது யார்? எத்தனை புத்தாண்டுகள் வந்தாலும் தற்காலி கொண்டாட்டங்களுக்கு மட்டும் தலை வணங்கிக்கிடக்கிறோம்... சுவர்க்க பூமியாய்க் காட்சியளிக்க வேண்டிய நாடு- சுடுகாடு என மாறிக்கிடக்கிற மாயத்தை மர்மத்தை கட்டவிழ்க்கப் போவது யார்? செய்திச் சேனல்கள் பெருகிவிட்டன. செய்திகள் குப்பைக் கூளங்களாகவே குடி இருக்கின்றன. யாரோ எக்கேடு கெட்டால் என்ன என்று, தான் மட்டும் ஒவ்வொரு நாளும் உடைமாற்றி உண்டுகளித்து உறங்கிக் கிடக்கிறான் தமிழன்.

-இன்னும் இருக்கிறது கதை