உங்கள் குடும்பம் வாழ்க்கைச் சூழல் குறித்து?

நான் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருக்கும் கஸ்பா பகுதியில் பிறந்தவன். என் தாய் தந்தை இருவரும் ஆசிரியர்கள். அம்மாவின் வாழ்க்கை பின்புலம் இலக்கியம் சார்ந்தது. வடாற்காடு மாவட்ட காலகட்டங்களில் 50,60 களில் மிகுபுகழ்பெற்ற பங்காரு பாவலர் வாலாஜா சாத்தப்பாக்கத்தில் வாழ்ந்தார். பல பாடல்கள் புனைந்துள்ளார். அவரின் பேத்திதான் என் அம்மா. ஆரம்பக் கல்வி முதல் மேனிலைக் கல்விவரை ஆம்பூர் கன்கார்டியா மேனிலைப் பள்ளியில்தான் முடித்தேன். இயற்பியல் பட்டம் வேலூர் ஊரிசுக் கல்லூரியில்.

நான் பிறந்து வளர்ந்த கஸ்பா பகுதி, கல்வி விழிப்புணர்வு மிகுந்த பகுதி. அங்கு நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது படித்துக் கொண்டிருந்த அக்காக்கள், அண்ணன்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஆகவே படிப்பது என்பது கட்டாயமாக ஆக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. என் அம்மாவும் மிகவும் கண்டிப்பானவர். ஒருநாளும் படிக்காமல் எங்களுக்கு நகராது. அதேபோல்தான் அரசியலும். நாங்கள் ஆரம்பக்கல்வி காலங்களிலேயே அரசியல்படுத்தப்பட்டோம் என்றுதான் நினைக்கிறேன். அண்ணல் அம்பேத்கர் குறித்த விழிப்புணர்வும் அவர் குறித்த செய்திகளும்தான் எங்களுக்கு ஊட்டப்பட்ட அரசியல் உணர்வு. அவர் எப்படி படித்தார், படிக்கும்போது எப்படி கஷ்டப்பட்டார் என்பதெல்லாம் சொல்லி நீங்களும் படிக்கவேண்டும் என்று எல்லோரும் அறிவுறுத்துவார்கள்.

இப்படி கல்வியும் அரசியலும் இணைந்த ஒரு பண்பாட்டு வாழ்வுமுறைதான் எங்கள் சூழல். அதிலிருந்துதான் இப்படி முளைத்துவந்திருக்கிறோம்.

Advertisment

இன்றைய இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் எதை நோக்கி இயங்குகிறார்கள் என நினைக்கிறீர்கள்?

அது அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட இலக்கிய வகைமையைப் பொறுத்தது. கலை கலைக்காகவே என்பவர்கள் அவர்களுடைய சொந்த அகவுணர்வுகளை வெளிப்படுத்த அவர்களின் மகிழ்ச்சியை, துயரத்தை, கொண்டாட்டம் மிகுந்த உணவினை, மதிப்பிற்குரிய அவர்களின் சாதிய மேலாதிக்கத்தை, அவர்களின் அகன்ற வீடுகளை, சுத்தமானத் தெருக்களை அவர்களின் மதங்களை அவற்றின் புராணங்களை எழுதுகிறார்கள். இவை எதற்காக அச்சாகி வருகின்றன? வாசிப்பிற்காக. வாசிப்பை ஒரு பொழுதுபோக்காக அல்லது லாகிரித்தன்மை உடைய ஒரு பொருளாக நினைப்பவர்களுக்கு அது சிறந்ததாகத் தெரியும். கலை மக்களுக்காக என்று கூறி தங்கள் கலைகளை வெளிப்படுத்துபவர்கள், சமூக அவலங்களை எழுதுகிறார்கள். அவர்களின் புனைவுகள், அலிபுனைவுகள் எதுவாயினும் அவர்கள் இந்த மக்களின் வாழ்வு குறித்து எழுதுவார்கள். இவற்றை யார் வாசிப்பார்கள்? சமுகத்தில் வேரூன்றிக் கிடக்கும் பழமைகளை நவீனத்திற்கு எதிரானவைகளைத் தகர்க்க நினைப்பவர்கள் வாசிக்கிறார்கள்.

முன்சொன்னவர்கள் வாசித்து தங்களுக்குள் மகிழ்ந்து அல்லது குமைந்துவிட்டு விடுவார்கள். பின் சொன்னவர்கள் வாசித்து தங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி பொதுவெளியில் இயங்குவார்கள்.

Advertisment

ஏற்கெனவே தெரிந்த ஒரு புராணத்தின் கதையை ஜெயமோகன் எழுதுகிறார். அது எத்தனை ஆயிரம் பக்கங்களாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதனால் என்ன பயன் என்கிறீர்கள்? அவரைக் கேட்டால் அதுதான் இந்தியாவின் மெய்யியல். ஆன்மீகம். நடுமுதுகு என்பார். ஆனால் ஒருவன் பசிக்காக அழும் குழந்தை குறித்தோ, ஒடுக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்வு குறித்தோ எழுதினால் அதை அவர்கள் பிரச்சாரம் என்பார்கள்.

படைப்பாளர்கள் இந்த இரண்டு அணிகளாகத்தான் இருக்கிறார்கள். இவர்களில் யார் சரியென அடையாளம் காணுதல் அவரவரின் தேவையைப் பொறுத்தது. முன் சொன்னவர்கள் சமூகத்தை எழுதமாட்டார்களா? என்றால் எழுதுவார்கள். அப்படியே எழுதுவார்கள். பொதுவாக இருப்பார்கள். ஆனால் பின்சொன்னவர்களோ பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பார்கள்.

இன்றைய எழுத்தாளர்களில் பலரும் பாசிசம் குறித்து விமர்சனம் வைப்பதில்லையே?

மக்களுக்காக எழுதுபவர்கள் கண்டிப்பாக அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பார்கள். அதற்கு எதிராக அணியமாகி நிற்பார்கள். அப்படி நிற்காதவர்கள் மக்களுக்காக எழுதுபவர்கள் இல்லை. அவர்கள் போலிகள்.

இலக்கியம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது தானே? அதில் சாதி வண்ணங்கள் படிந்தது ஏன்?

சங்க இலக்கியம், அதற்குப் பிறகான நன்னெறி இலக்கியம், பக்தி இலக்கியம் இவற்றிற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சியால் ஆங்கியல் கற்றுக்கொண்டவர்கள் எழுத ஆரம்பித்தனர். ஆங்கிலத்தை யார் கற்றார்கள்? அவர்கள் எதை எழுதினார்கள்? 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தொடங்கப்பட்ட இலக்கியத்தினைத்தான் நாம் தற்கால இலக்கியம் என்கிறோம்.

பார்ப்பனர்கள்தான் பாரதிக்குப் பின்னான இலக்கிய உலகத்தினை கட்டிமேய்த்தவர்கள். திராவிட இயக்கத் தோற்றத்திற்குப் பிறகு அவ்வியக்கத்தின் கோட்பாடுகளால் உந்தப்பட்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ஜாதிய ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த கவிஞர் தமிழ் ஒளி போன்ற ஒருசிலர் தான் மாற்றுக்குரல்களாக இருந்தார்களே ஒழிய பார்ப்பன ஆதிக்கம்தான் எழுத்துலகில் இருந்துவந்தது. அது பிறகு அப்படியே இடை ஜாதிக்காரர்களின் கைகளில் வந்தது. அவர்களும் அவர்களின் ஜாதிகளையும் ஜாதிப்பெருமைகளையும்தான் எழுதினார்களே ஒழிய மாற்றங்களை அவர்கள் முன்மொழியவில்லை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் 1907-1914 ஆம் ஆண்டுகளில் தமிழில் பண்டிதர் அயோத்திதாசரால் ‘ஒரு பைசா தமிழன்’என்ற இதழ் நடத்தப்பட்டு முக்கியமான தளங்களில் அது செயல்பட்டிருக்கிறது. ஆனால் அவ்விதழ் குறித்த எந்தப் பதிவாவது பாரதியோ அல்லது அவருக்குப் பின் வந்த பார்ப்பன, இடைஜாதி எழுத்தாளர்களோ ஒரு வாயையும் திறக்கவில்லை.

அப்படியானால் ஒருவகை மௌனம் இலக்கிய உலகில் இருந்துவந்திருக்கிறது. அது ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களைப் பற்றிய மௌனம். கவிதைகளில் அதைப்பற்றி மற்ற கவிஞர்களால் எழுதப்படவில்லை. கதைகளில் புதுமைப்பித்தன் சில கதைகளில் தலித்துகளைப் பாத்திரங்களாக வடித்திருப்பார். பொன்னகரம் கதையில் ஒரு தலித்பெண் தன் கணவனுக்காக சோரம் போவதைத்தான் எழுதியிருப்பார். இன்னொரு கதையில் தேயிலைத் தோட்டத்திற்கு இலங்கைக்கு வேலைக்குப் போன தலித் பெண் ஒருத்தி பாலியல் ஒழுங்கீனமாக இருந்தாள் என்று எழுதியிருப்பார். ஏன் நம்ம சுந்தர ராமசாமி, பிள்ளை கெடுத்தாள் விளை என்னும் கதையில் தலித் ஆசிரியை தன்னிடம் நான்காம் வகுப்புப் படிக்கும் மாணவனை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கதை விட்டிருப்பார்.

ஆக நீங்கள் சொல்கிறமாதிரி, சாதிக்கொரு இலக்கியம் என்றெல்லாம் இல்லைதான். அவை ஒட்டுமொத்தமாக ‘ஊர்’என்னும் நிலவியல் அமைப்புப் போன்ற இலக்கியமாக இருந்தன.

இந்நிலையில் அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பிறகான எழுச்சியில் தலித் சமூகங்கள் இலக்கியங்களில் கால்பதிக்கத் தொடங்கின.

அவர்கள் பெற்ற கல்வியும் சமூக விழிப்புணர்வும் அதற்குக் காரணமாக இருந்தன. அதனால் அவர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்வை, முன்னோர்கள் பட்ட துயரங்களை, இன்றும் அனுபவித்து வரும் ஜாதிய ஒடுக்குதலை, வாழ்வின்மீதான் அவர்களின் காத்திரமான கேள்விகளைப் படைப்புகளாக்கினர். இது முன்னர் எழுதிக்கொண்டிருந்த ஜாதி இலக்கியவாதிகளுக்குப் புளியைக் கரைத்தது.அதனால் இலக்கியத்திலும் ஓரங்கட்டலை நிகழ்த்தும் நோக்கத்தோடு,தலித்துகள் படைக்கிற இலக்கியத்தை தலித் இலக்கியம் என்று பிரிக்க ஆரம்பித்தார்கள்.இவற்றை பெரும்பாலான இதழ்கள் ஒதுக்கியிருக்குமானால் இந்த வகைமை காலூன்றி இருக்காது. தி,ஜானகிராமனின் பாபுவும் யமுனாவும் காதலித்தால் அது பொதுவான கதை என்றும் என்னுடைய கதையில் இரண்டுபேர் காதலித்தால் அது தலித் கதை என்றும் சொல்லப்படுகிறது. இரண்டும் வாழ்க்கைதான். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது நியாயத்தை, சமத்தைக் கோரும் வாழ்க்கை. இன்றைக்கு ஒட்டுமொத்த இலக்கியத்தையும் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஆக்கிரமித்திருக்கிறது. இனி அப்படித்தான் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியத்திற்கான நோக்கம் தான் என்ன?

வேறொன்றுமில்லை எல்லோரும் மனிதர்கள்தான் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான். மகத் குளத்தின் தண்ணீரைக் குடித்துவிட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னதுதான் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் நோக்கம். நாங்களும் மனிதர்கள் என்பதை நிரூபிக்க முயல்வதுதான் அது. நீங்கள் மனசாட்சியைக் கொஞ்சம் திறந்து கொள்ளுங்கள். எங்காவது மனிதர்கள் குடிக்கும் தண்ணீரில் மனித மலத்தைக் கலப்பார்களா? அது தெரிந்தபின் ஒரு வாரமாக அதைக் குடித்த மக்களின் மனநிலை என்ன? தாகம் எடுத்த தன் குழந்தைக்கு தாய் மொண்டு கொடுத்த தண்ணீரில் யாருடைய மலமோ இருந்தது என்பதை அறிந்த அந்தத் தாய் அடுத்த முறை தன் குழந்தையின் முகத்தைப் பார்க்கையில் அவள் என்ன மனநிலை கொண்டிருப்பாள்? ஒடுக்கப்பட்டோருக்கான இலக்கியம்,மக்களைக் கேள்வி மட்டும் கேட்பதில்லை. அவர்களின் மனச்சாட்சியைக் கிளறுவது.

இவ்வளவு எழுதிய பிறகும் நீங்கள் நினைத்ததை, விரும்பியதை எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறீர்களா?

இல்லை. காலங்கள் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. என்னுடைய பல்வேறு பணிகள் என் எழுத்தைப் பாதிக்கின்றன என நான் உணர்கிறேன். இன்னும் வேகமாகவும் நிறையவும் எழுத வேண்டி இருக்கிறது. எழுதுவதற்கான வாழ்வு இருக்கிறது.

படைப்பிலக்கியவாதியான நீங்கள் அரசியல் உலகில் வலம் வருவது எப்படி இருக்கிறது?

dd

எல்லா படைப்பாளிகளுக்கும் அரசியல் இருக்கிறது. அரசியல் இல்லாமல் இங்கு எதுவுமில்லை. யாம் பங்கேற்கிற அரசியல் என்பது வெறும் தேர்தல் அரசியல் இல்லை. அது மாற்றை முன்மொழிகிற அரசியல். சாதி ஒழிப்புதான் சமூக விடுதலைக்கான அடையாளம் என்னும் விடுதலை அரசியல். ஓர் அடிமையாக நான் விடுதலை பெறவேண்டும் என்று நான் களமாடுகிற அரசியல். அது நுண்ணரசியல் தன்மையிலிருந்து பேரரசியலை நோக்கி நடப்பது. பகை முரண்களை நட்பு முரண்களாக மாற்றும் உரையாடல்களைக் கொண்டது. நட்பின் மூலமாக சமநிலை என்னும் அம்பேத்கரிய இயங்கியலை உள்வைத்தது. இலக்கியமும் வாழ்வும் வேறாகாது. வாழ்வும் அரசியலும் வேறாகாது.

ஆசிரியராக இருக்கிறீர்கள், படைப்பிலக்கிய வாதியாக வலம் வருகிறீர்கள், அரசியல் அமைப்பு களில் கலந்துகொள்கிறீர்கள். இதில் உங்கள் மனத்திற்கு நெருக்கமானது எது?

மூன்றிலும். ஏனென்றால் மூன்றிலும் நான் மனிதத்தைத்தான் முன்னிருத்துகிறேன். அறிவியல் கற்றுக்கொடுக்கும் போது என் குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊட்டுகிறேன். வாழ்விற்கான அடிப்படைக் கேள்விகள் அங்கு இருக்கின்றன. என் குழந்தைகள் அவற்றைக் கேட்பார்கள். இலக்கியக்காரனாக என் சகமனிதனின் தோள்மீது கைபோட்டுக்கொள்ளவே விழைகிறேன். அதற்காகத்தான் எழுதுகிறேன். அரசியலாளனாக நற்சிந்தனை, நற்செயல், நற்சமூகம் இவற்றை அடைய முயற்சி செய்கிறேன்.

சாகித்திய அகாதமி விருது உட்பட எந்த விருது வழங்கும்போதும் அரசியல் நடந்துள்ளது எனக் குற்றச்சாட்டு எழுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

விருதுகள் குறித்த எந்த அவதானிப்பும் எனக்கில்லை. அரசு சார்ந்த விருதுகளுக்கு குழு மனப்பான்மைக் காரணமாக இருக்கலாம். சில பேர் விருதுகளை வாங்குவதற்காக செய்யும் லாபிகள் எல்லாம் அதற்குக் காரணமாக இருக்கலாம். விருதுகள் வெளிப்படையாகத் தேர்வுசெய்யப்படாத வரையில் இதுபோன்ற விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். தலித் எழுத்தாளர் ஒருவர் சாகித்ய அகாதெமி விருது வாங்கும்போது விருதிலும் இடஒதுக்கீடா என்று கேலிகூட செய்திருக்கிறார்கள். எனவே விருதுக்கான தேர்வு முறையில் வெளிப்படைத் தன்மை தேவை. அந்தப் படைப்புக்கு ஏன் விருது தரப்பட்டது என்னும் காரணங்களை விருது அறிவிப்பின்போது தேர்வுக்குழுவினர் அறிக்கையாகத் தரவேண்டும்.

திரைப்படத்துறைதான் சாதியை உயர்த்திப் பிடிக்கிறது. இப்போது வெளிவரும் படங்கள்தான் சாதியை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உயர்த்திப் பிடிக்கிறது. சாதிய மோதலுக்குத் திரைப்படங்களே காரணமாக இருக்கின்றன என்கிற குரல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இப்போது வெளிவரும் படங்கள் என்னும் உங்கள் வார்த்தைகளிலிருந்து நான் புரிந்துகொள்கிறேன். ஜாதிப் பெயர்களே தலைப்பாக வந்தபோதும், எஜமானின் காலடி மண்ணை பொட்டாக எடுத்து வைத்துக்கொண்ட போதும் சொல்லப்படாத இத்தகைய வார்த்தைகள் இப்போது சொல்லப்படுவது ஏன்? இப்போது திரைப்படத்தில் ஒன்றிரண்டு இயக்குநர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தருகிறார்கள். அவை வெற்றியும் காண்கின்றன. இந்தக் கதைகளையும் படங்களையும் காட்சிகளையும் தரும் இயக்குநர்கள் யார் என பார்க்கிறார்கள். அவர்கள் எந்த ஜாதி என்று பார்க்கிறார்கள் இத்தகைய விமர்சனத்தை வைக்கிறார்கள்.

ss

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஜாதி உணர்வைத் தூண்டுவது ஜாதி அமைப்புகள்தான். என்னுடைய மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது மாணவர்களாக இருக்கிறார்கள் வீட்டிற்குச் சென்றபின் அவர்கள் ஜாதிக்காரர்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் டி சர்ட், திருவிழாக் காலங்களில் அவர்கள் வைக்கும் பிளக்ஸ் பேனர்களில் அக்குழந்தைகளின் படங்கள் ஜாதி அடையாளத்தை முன்னிருத்தும் வண்ணக் கயிறுகள், என ஜாதி சங்கங்கள்தான் ஜாதியை வளர்க்கின்றன. படித்தால் முன்னேறலாம் என்று ஒரு இரவுப் பாடசாலையை கதைத்தலைவனும் தலைவியும் நடத்துவது போல ஒரு படம் முடியும். இது எப்படி ஜாதி உணர்வைத் தூண்டும். சட்டக்கல்லூரியில் படிக்கும் ஒருவன்மேல் சிறுநீர் கழிக்க வைத்தது ஜாதிய சமூகம். அப்படத்தில் படிப்பது முக்கியம் என்பது முடிவு. உட்கார ஜனநாயகம் கேட்கும் கதைத்தலைவன், அதைத் தர மறுக்கும் வில்லன், வழக்கமாய் வில்லன் தோற்கிறான். ஆனால் இங்கே ஜாதிய சமூகங்களால் வில்லன் கொண்டாடப்படுகிறான். ஜாதி சங்கங்களின் பின்புலம்தான் பள்ளி, கல்லூரிகளின் ஜாதிய வன்மத்திற்குக் காரணம் அதைத் திரைப்படத்தின்மேல் பழியைப் போட்டு மறைந்துகொள்வது என்ன நியாயம்?

திருநெல்வேலியில் ஒரு பள்ளியில் காலை உணவை ஒரு தலித் பெண் சமைப்பதைத் தங்கள் குழந்தைகளுக்குத் தரக்கூடாது என்று ஜாதியவாதிகள் போராடுகிறார்கள். அரசும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறது. அவர்கள்மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இக்காட்சியை ஒரு தலித் இயக்குநர் தன் படத்தில் காட்சியாக வைத்தால் அது ஜாதிப்படமா?

ரஞ்சித் தயாரிக்கிற படங்களைக் கூட தியேட்டரில் சென்று பார்க்கமாட்டேன் என்று சொல்கிறவர்கள்தான் இங்கே அதிகம்.

படைப்பிலக்கியவாதிகள் பெரும்பாலும் தங்களது அரசியல் குறித்து வெளிப்படையாகப் பேசுவது இல்லை. நீங்கள் வெளிப்படையாக அரசியல் பேசுகிறீர்கள். இயங்குகிறீர்கள் அது எப்படி?

நான் அடிப்படையில் ஓர் இயற்பியல் மாணவன் கோட்பாடுகளை நம்புபவன். நியூட்டனின் இயக்கக் கோட்பாடுகளும் அவை இயக்கவியலிலும் இயக்க விசையியலிலும் பெறப்படும் பரிமாணங்களை நான் உணர்ந்திருக்கிறேன். விசை என்பதன் செயல்பாடுகளால்தான் பொருள்களில் நிலைமைத் தன்மையும் இயக்கத்தன்மையும் உருவாகிறது.

இதை நான் மானுடவியலுக்குப் பொருத்திப் பார்க்கிறேன். நான் ஏன் அடிமையானேன்? என்னும் கேள்வி என்னுள் எப்போதும் ஒரு உந்துவிசையை செலுத்திக்கொண்டே இருக்கிறது. என் துயரிலிருந்து நான் சமூகத் துயரைப் பார்க்கிறேன். நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என் ஜாதித் துயரை அல்ல. பல்வேறு ஜாதிகளை உள்ளடக்கிய சமூகத் துயரை நான் பார்க்கிறேன். அதனால் என்னால் இயங்காமல் இருக்கமுடியாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இயக்கவாதியாக இருந்திருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்ல முடியும். அதனால்தான் வெளிப்படையாக நான் அரசியல் பேசுகிறேன்.

இதனால் பல இழப்புகள் இருக்கின்றன. பொதுவாக இயங்குவதாகச் சொல்லப்படும் இலக்கிய அமைப்புகள் என்னை பேச அழைக்கமாட்டார்கள், சில இதழ்களைத் தவிர பல இதழ்கள் என்னுடைய படைப்புகளை வெளியிட மாட்டார்கள், சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை நான் பேசக்கூடியவனாக இருந்தாலும் என்னை கல்லூரிகள் அழைக்கமாட்டார்கள். அரசு நடத்தும் இலக்கிய விழாக்களில் என்னை அழைப்பதானால் பெரும் விவாதத்திற்குப் பிறகுதான் அது முடிவாகும். அங்கு என்னைத் தெரிந்த யாராவது ஒருவரால்தான் அது சாத்தியம் ஆகிறது. அதனால் என்ன மக்களிடம் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.

சில படைப்பிலக்கியவாதிகள் முற்போக்கு இயக்கங்களில் இயங்குகிறார்கள், அவர்கள் பாசிச அரசியல் இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கும் பிற்போகு இலக்கியவாதிகளுடன் நட்பில் இருக்கி றார்கள். அவரது கொள்கை பிடிக்காது ஆனால் அவரது எழுத்துகள் பிடிக்கும் என அதற்கு விளக்கம் சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

துண்டு போட்டு வைக்கிறார்கள் என்று பொருள். என்றைக்காவது நான் அங்கே வருவேன் என்று அர்த்தம். மோடியைப் பிடிக்காது ஆனால் அவரின் ஆட்சியைப் பிடிக்கும் என்று சில பேர் சொல்வார்கள், அதைப் போலத்தான் இதுவும். நெஞ்சில் உறுதியும் நேர்மைத் திறமும் இல்லாதவர்கள்.

நீங்கள் வாசித்த நூல்களில் எது உங்களை அதிகம் பாதித்தது?

நிறைய நூல்களைச் சொல்ல வேண்டும். அது வாசிக்கிற காலத்தையும் வாசிக்கப்படுகிற சூழலையும் பொருத்தது. நான் பெரிதும் துன்பப்படும் நேரங்களில் நான் வாசிப்பது அண்ணல் அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவர் தம்மமும். தனிமையில் இருக்கும்போது கவிதைகளை வாசிப்பேன். சத்தம்போட்டு வாசிப்பேன். நாவல்களில் ஓரான் பாமுக் எழுதிய பனி, ஸ்ரீதர கணேசன் எழுதிய சடையன்குளம், சந்தி, கவிதைகளில் பாப்லோ நெருதா எழுதிய கேள்விகளின் புத்தகம், சமகால கவிஞர்கள் அனைவரையும் நான் வாசிக்கிறேன். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தால் சிறுகதைகள் படிப்பேன், ஜி.முருகன், அழகியபெரியவன் கதைகளில் ஊறிவிடுவேன். இப்போது ஸ்ரீநேசனின் கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார் என்னும் கவிதைத் தொகுப்பு என்னை முழுமையாக ஆக்கிரமித்த ஒன்று. கதைகளில் கவிப்பித்தன் எழுதிய சேங்கை நாவல் என்னை பாதித்தது. லாரிகளின் மனிதர்கள் பற்றிய அவரின் நாவல் அருமையானது.

திரைத்துறையில் இயங்குவதற்கான வாய்ப்புகள் வந்தநிலையில் நீங்கள் அதனை ஒதுக்கி வைத்தது ஏன்?

ஒதுக்கி வைக்கவில்லை. அதில் முழுமையாக ஒன்றினால்தான் பணியாற்ற முடியும். என்னுடைய சூழலும் பணிகளும் அதற்கு பொருந்தி வரவில்லை. ஓர் இலக்கியவாதியின் கடைசிப் புகலிடம் சினிமா வாகத்தான் இருக்கிறது. சினிமாவில் பாட்டெழுதாத கவிஞர்களை கவிஞர்களாகவே பெரும்பான்மை தமிழர்களுக்குத் தெரியாது. திரைப்பட விழாக்களில் பங்கேற்கிறேன். சில இயக்குநர் நண்பர்களுடனும் பேசுகிறேன்.

சிறார் இலக்கியங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

மிகவும் அவசியமானது, குழந்தைகள் வாசிக்கும் மனநிலைப் பெற்றுவிட்டால் அவர்களை வெல்ல யாராலும் முடியாது. சிறார் இலக்கியம் இன்று தமிழில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அழ. வள்ளியப்பாதான் நமக்கு தெரியும். ஆனால் நிலா நிலா ஓடிவா பாடலை எழுதிய எம்.சி. ராஜாவை நமக்குத் தெரியாது. இன்று புதிய இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். தமிழ் சிறார் இலக்கியம் கொஞ்சம் கொஞ்சமாகப் பால்பிடித்து வளர்கிறது. தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அதற்கு பெரும்பங்காற்றுகிறது. நிறைய நூல்களை அவர்கள் குழந்தைகளிடம் சேர்த்திருக்கிறார்கள். நூலகம் என்னும் வார்த்தை இப்போது பள்ளிகளில் புழங்க ஆரம்பித்திருக்கிறது. குழந்தைகளின் பையில் நூலகத்தின் நூல் ஒன்று எப்போதும் இருக்கிறது.

குழந்தைகள் வாசித்து பண்பட்டுவிட்டால் நறசமூகம் தானாய் அமைந்துவிடும். அதற்கு சிறார் இலக்கியங்கள் பயன்படுகின்றன.

நேர்காணல்: து. ராஜா