மனைவி. புரியுதா? நானும் பெரிய நிலையிலதான் இருந்தேன். என்னை ஹாஜிக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா... இப்போ...''
இவ்வாறு கூறிவிட்டு, அவள் திடீரென்று நிறுத்தினாள்.
மீண்டும் சிறிதுநேர மவுனத்திற்குப் பிறகு அவள் தொடர்ந்தாள்:
""இப்போ நான் வேண்டாம போயிட்டேன். நான் மனைவியுமில்ல.''
அந்தப் பெண் ஒரு அழுகையின் எல்லையை அடைந்துவிட்டிருக்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. ஆனால், எனக்குத் தவறு நேர்ந்துவிட்டது. அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். உரத்து... உரத்து... ஆட்கள் அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பைத்தியம் பிடித்தைப் போன்ற சிரிப்பிற்கு மத்தியில் அவள் கூறினாள்:
""எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. என் தங்கமான பிள்ளைங்க... நான் அவங்ககிட்ட போறேன்.''
பிறகு... அவள் என்னவெல்லாமோ கூறிக்கொண்டிருந்தாள் என்றாலும், எனக்கு எதுவுமே புரியவில்லை.
அனைத்தும் ஒரு அழுகையில் மூழ்கி விட்டன.
சமாதானப்படுத்துவதற்கு வயதான பெண் என்னவோ கூறிக்கொண்டிருந்தாள்.
""இருந்தாலும் மகளே... நீ இப்பவும் சின்ன பொண்ணுதானே? பார்க்கறதுக்கும் அழகா இருக்கே. அப்படி இருக்குற நீ இப்படியெல்லாம்... இப்படி குடிச்சு சுய உணர்வில்லாம... கஷ்டங்களும் பிரச்சினைகளும் எல்லாம் இருக்கும். அதுக்காக...
இப்படி... உன் பிள்ளைங்களை நினைச்சாவது...''
இளம்பெண்ணின் பதில் தெளிவாகக் கேட்கவில்லை.
அவளுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதில் என்ன காரணத்தாலோ பிறகு... எனக்கு மனம் வரவில்லை. பலவற்றையும் சிந்தித்தவாறு நான் எனக்குள்ளேயே மூழ்கிப் போயிருந்தேன். இருட்டிற்கு மத்தியில் பாய்ந்து சென்றுகொண்டிருக்கும் வண்டியின் அதிகமான அசைவு என் மனதிற்கும் இருந்தது. ஆட்கள், சம்பவங்கள், விதியின் கொடூரமான விளையாட்டுகள், வஞ்சனை, சதி, சதிச்செயலால் பாதிக்கப் படும்போது உண்டாகக்கூடிய கையற்ற நிலை...
ஆட்கள் அனைவருக்குப் பின்னாலும் பெரிய பனைமரத்தைப்போல ஹஸ்ஸன் ஹாஜி இருந்தார். ஹாஜிக்கு முன்னால் என்னவோ வேண்டிக்கொண்டு ஒரு பெண்... பெண் அழுதுகொண்டிருந்தாள்.
அப்போது ஹாஜி... ""போ... எனக்கு இனிமேல நீ வேணாம். உன்னைப் பார்க்கவே வேணாம்...'' என்று கூறிக்கொண்டிருந்தார்.
ஸ்டேஷன்கள் வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருந்தன.
நான் எனக்குள் மூழ்கிவிட்டேன்...
எப்போதோ... வண்டியின் வேகம் குறைந்து கொண்டிருந்த ஒருவேளையில் வயதான பெண்ணின் சற்று மெதுவான- கிட்டத்தட்ட ஒரு அழுகையைப் போல இருந்த வார்த்தைகள் கேட்டன.
""இது என்ன ஒரு கிடப்பு மகளே? எழுந்திரு... எழுந்திரு... உன் ஸ்டேஷன்தான் வரப்போகுது. நீ இங்கதானே இறங் கணும்? நீ உன் பிள்ளைகளைப் பார்க்க வேணாமா? அப்படித்தானே நீ சொன்னே? இருந்தாலும்... இப்போ... இப்படி..
சுய உணர்வில்லாம...''
ஆட்கள் அந்த காட்சியைப் பார்ப்பதற்குக் கூடினார்கள்.
இளம்பெண் இடைவெளியில் சுயவுணர் வில்லாமல் கிடந்தாள். அவளுடைய அழகான முகம் ஒரு பக்கமாக சாய்ந்திருந்தது. அவள் அணிந்திருந்த புடவை விலகி, கால்கள் சிறிது வெளியே தெரிந்தன. தேய்ந்துபோன ஹவாய் செருப்புகள் கழன்று போயிருந்தன.
சாராயத்தின் போதையில் அவளுடைய சுயவுணர்வு முழுமையாக இல்லாமற் போயிந்தது.
வயதான பெண் அப்போதும் இளம்பெண்ணை எழச்செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த ஸ்டேஷனை அடைந்தபோது, வயதான பெண்ணிடம் சந்தேகத்துடன் கேட்டேன்:
""இவங்ககூட ஒரு இளைஞன் இருந்தானே?''
வயதான பெண் வெறுப்புடன் கூறினாள்:
""அவன் முன்னவே இறங்கிப் போய்ட்டான்.''
வயதான பெண் இளைஞனைப் பற்றி கோபத்துடன்... அதற்குப் பிறகும்... என்னவெல்லாமோ கூறினாலும், அது முழுவதையும் கவனித்துக் கேட்பதற்கு என்னால் முடியவில்லை.
அமைதியற்ற என் மனம் எங்கோ அலைந்து கொண்டிருந்தது.
_______________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்!
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று அருமையான மலையாள சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். மூன்றும் வெவ்வேறு கதைக் களங்களைக் கொண்டவை.
"ஆட்டோ ரிக்ஷாக்காரனின் மனைவி' கதையை எழுதியவர் நவீன மலையாள இலக்கியத்தின் முடிசூடா மன்னரும், சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான எம். முகுந்தன். மனதில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் வேகமாக ஆட்டோ ஓட்டிச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஜீவனுக்கு மனைவியாக வந்திருப்பவள் ராதிகா.
அவனுடைய வாழ்க்கைக்குள்காலடி எடுத்து வைத்தபிறகு, ராதிகாவிடம்தான் எத்தனைமாற்றங்கள்! அதனால்உண்டாகும்.
எத்தனை நன்மைகள்!உண்மையிலேயே ராதிகா, அருமையான கதாபாத்திரம்! இந்தகதையை வாசிக்கும் அனைவரின் உள்ளங்களிலும் ராதிகா நிச்சயம் உயிர்ப்புடன் வாழ்வாள். இப்படிப்பட்ட ஒரு பெண் ஒரு ஆணின் வாழ்க்கையில் நுழைந்தால், கட்டாயம் எவ்வளவோ மாறுதல்களும், திருப்பங்களும் உண்டாகும். கதையின் இறுதிவரை உயிரோட்டத்துடன் உலாவும் ராதிகா என்ற ஆட்டோ ரிக்ஷாக்காரனின் மனைவியை நம்மால் மறக்கவே முடியாது. கதையின் இறுதிப்பகுதி நம்மைக் கைத்தட்ட வைக்கிறது.
"யாரோ ஒருவரின் மனைவி' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நட்சத்திர எழுத்தாளரான டி. பத்மநாபன். ஒரு ரயில் வண்டியில் நடைபெறும் சம்பவங்களைக்கொண்ட கதை. ரயில் வண்டியை மையமாகக்கொண்ட பல கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அவற்றில் இந்தக் கதையும் நினைவில் நிற்கக்கூடியது. போதையில் சுயவுணர்வில்லாமல் வண்டியில் கிடக்கும் இளம்பெண், அவருக்கு அருகில் அமர்ந் திருக்கும் அன்பே வடிவமான வயதான பெண்- இருவரையும் நம்மால் மறக்க முடியுமா? சம்பவங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் டி. பத்மநாபனையும்தான்.
"கனவுகள் என்ற பிறவிகள்' கதையை எழுதியவர் மலையாள பெண் எழுத்தாளர்களின் தலைமகளும், சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி. ஒரு சிறிய கதையில் எவ்வளவு ஆழமான விஷயங்களை ஆராய்ந்து பார்க்கிறார் என்பதை நினைக் கும்போது, அவர்மீது உண்மையிலேயே நமக்கு ஆச்சரியமும், அளவற்ற மதிப்பும் உண்டாகிறது. எனக்குப் பிடித்த இந்த மூன்று கதைகளும் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு நன்றி!
அன்புடன்,
சுரா