நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவருதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி!- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
புதிதாக அப்பா வாங்கி வந்த விளையாட்டுப் பந்து பல வண்ணத்தில் ஒளிரும் தன்மை கொண்டது. பிடித்து வீச வீச நன்றாகத் துள்ளி எழும். ஒரு பட்டனை அழுத்தினால் மெதுவாக இசைக்கும். இரவில் அதன் பாட்டரியை இயக்கினால் அது ஒளிர்ந்து ஒளிர்ந்து உருளும். பிள்ளைகளை வண்ணப்பந்து எல்லா விதத்திலும் மகிழ்ச்சிப்படுத்தியது.
அந்த வாரம் முழுவதும் அவனுக்கு விளையாட்டுப் பந்து மிகவும் பிடித்துப் போயிற்று.
அதை உருட்டியும், பொத்தான்களை அழுத்தியும் ஒளிர வைத்தும் விளையாடிக் கொண்டே இருந்தான். அதை எங்கெல்லாம் உருட்ட முடியுமோ அங்கெல்லாம் உருட்டி விளையாட அது அழுக்காகி பாட்டரியின் செயல் குறைந்துபோயிற்று. அவ்வளவுதான் அவனுக்கு அந்தப் பந்தின் மீதான ஈர்ப்பு குறைந்து போயிற்று.
அடுத்த வாரமே அந்தப் பந்து தன் சிறப்புகளை இழந்து வீட்டின் மூலையில் ஒதுக்கப்படுகிறது.
அடுத்த பொம்மைதான் இனி அதன் விளையாட்டுக்குத் தேவைப்படும். வரும் வாரம் அப்பா வாங்கி வரும் இன்னொரு பந்து அல்லது பொம்மைக்காக அது ஆவலோடு காத்திருக்கிறது. அடுத்த பந்து அதற்கு கிடைக்கலாம்.
ஆனால் மனிதனுக்கு...!
மனிதர்கள் அனைவரும் ஓய்வின்றி தங்களுக்குக் கிடைத்த பந்தை அப்படியே பாதுகாத்து வைத்துக்கொள்ள விரும்பாமல் அதோடு அசிங்கப்படுத்தும் விதமாக விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள்.
மனிதர்கள் விளையாடட்டும் என்று அது விட்டுக்கொடுக்கிறது. அழகாக அவர்கள் விளையாடி மகிழட்டும் என்று எண்ணுகிறது.
அதனோடு வேகமாக மோதி விளையாடும் போதும்கூட அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.
மனிதர்கள் அதன் அமைதியைத் தங்களது பேராசைக்கும் பெருமைக்கும் பயன்படுத்தும்போதும் கொஞ்சம் உறுமுகிறது. பெருவெள்ளமும் சேதங்களும் கொடுக்கும் சோகத்தையும் மறந்துவிட்டு மீண்டும் கேவலமான விளையாட்டைத் தொடர்கிறான்.
அவனுக்கு தான் பெரிய மேதாவி என்றும் எதையும் சமாளிக்க அறிவு இருப்பதாகவும் எண்ணிக் கொள்கி றான். மேலும் அவன் அந்தப் பந்தில் வாழ்வதையும் மறந்துவிட்டு மூர்க்கமாக விளையாட ஆரம்பிக்கி றான். அதன் பெருங்கோபம் உணராது தன் சுயநல விளையாட்டைத் தொடர்கிறான்.
அந்தப் பந்தில் தனது இடம் ஒரு நுண்புள்ளி என்று அறியாது அந்த பந்து தன் கைக்குள் இருப்பதுபோல எண்ணிக்கொண்டு தனது அழிவு விளையாட்டை தொடர்ந்தபடி இருக்கிறான். அது அவனுக்குமான சேதம் என்று அறியாது பெரும் பிழை நோக்கி தனது பேராசை வாழ்வை நோக்கி நகர்கிறான்.
பிள்ளைகளுக்காவது இன்னொரு பந்து கிடைக்கும். ஆனால் மனிதர்களுக்கு இன்னொரு உலகம் கிடைக்காது என்பதை எண்ணாமல் மனம்போல செயல்பட்டு அதை அழிக்க முயல்கிறான்.
ஆனால் உலகப் பந்து உணர்வுள்ளது அது அதிக அழிவை ஏற்றுக் கொள்ளாது. அத்து மீறல்களை அது சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. அதன் சீற்றத்தை அவன் அறிந்ததில்லை. அவனையும் அது முழுங்கிவிடும் என்பதை அவன் உணர்தல் அவசியம்.
இந்த உலகம் தீப்பிழம்பாக இருந்து குளிர்ந்து நீராகி, கடலாகிப் பின் கொஞ்சம் நிலமாகி இருக்கிறது. பந்தில் கால் பங்குதான் நிலம். மீதியெல்லாம் நீர் நீர்தான்.
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை’
-என்று உலகம் ஐம்பெரும் பொருளால் தோன்றியதைப் புறநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது.
அந்த நிலம்தான் இவ்வுலகின் மாபெரும் கர்ப்பப் பையாக இருந்து வருகிறது.
என்றும் இளமையுடனும் கன்னித் தன்மையுடனும் இருக்கும் மண்தான் ஒட்டுமொத்த உயிர்களின் உற்பத்திக் கேந்திரம். அது மெல்ல மெல்ல புல்லாகி புழுவாகி பட்சியாகி பிராணியாகி எல்லாவற்றையும் உருவாக்கியது. அதில் கடைசியாக உருவாகிய உயிரினம்தான் மனிதன்.
நல்ல மண் உயிர்ச்சத்து மிக்கது. மேல் மண்ணிற்கு ஐந்து அங்குலம் கீழ் இருக்கும் மண் கன்னித்தன்மை வாய்ந்தது. அப்படியான மண்ணை எடுத்துதான் செடி உருவாக்க பயன்படுத்த வேண்டும். மேல் மண் சத்து குறைந்தது. கழிவுகள் வேறு அதனை காயப்படுத்தி இருக்கும். சரி. அது இருக்கட்டும்.
ஒரு டீ ஸ்பூன் மண்ணில் எவ்வளவு உயிர்கள் இருக்கிறது தெரியுமா?
ஒரு டீ ஸ்பூன் உயிர்ச் சத்துள்ள மண்ணில் 100 கோடி பாக்டீரியாக்களும், ஒரு கோடி அமினோ உயிரிகளும் 2 லட்சம் ஆல்காக்களும் பூஞ்சைகளும் உள்ளன. அத்தனையும் நிலத்தில் உருவாகியும் அழிந்தும் பின் மீண்டும் உருவாகியும் வாழ்கின்றன. தொடர்ந்து பிறப்பு இறப்பும் மண்ணில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
முதலில் நீரில் அமீபாக்கள் தோன்றின.
அதைத் தொடர்ந்து ஓருயிர் முதல் ஆறு உயிரிகள் வரை தோன்றிக்கொண்டே இருந்தன. ஊர்வன பறப்பன நடப்பன பேசுவன என ஒன்றின் மேல் ஒன்று எனத் தோன்றிக் கடைசியில் மனிதன் பிறந் தான். அந்த உயிரிகளின் பிரமிடின் உயர்முனையில் மனிதன் இருக்கிறான். .
மனிதன் உணர்வோடும், மனதோடும் இயங்குவதைப் பார்த்த பிரமிப்பில் இயற்கை தனது படைப்பினைக் கொஞ்சம் நிறுத்தி வைத்தது. தான் படைத்த மனிதன் அவனது அறிவாலும், ஆற்றலாலும் மேம்படுத்துவான் என்ற நம்பிக்கை அதற்கு வந்து இருக்கவேண்டும். ஒருவேளை கடவுளுக்கும் அதே எண்ணம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புண்டு.
ஆனால் மனிதன் அந்த எண்ணத்தை எல்லாம் தகர்த்து ஏறிந்து விட்டான். இப்போது இயற்கையும் கடவுளும் ஏன் படைத்தோம் என்றுகூட எண்ணிக்கொண்டு இருக்கலாம்.
மனிதன் சாதாரணமாக குகைகளிலும் மலைகளிலும் வாழ்ந்தபோதும் தனித் தீவுகளில் வாழ்ந்த காலத்திலும் அவன் எந்தப் பேராசையும் இன்றி வாழ்ந்தான். ஆனால் நிலப் பரப்பிற்கு வந்த பிறகு நிலத்தைத் தனது உடைமைப் பொருள் என்று ஆக்கிக் கொள்ளவும், பூமியைத் துண்டாடவும், பங்கு போட்டுக் கொள்ளவும் கற்றுக் கொண்டான். போகப் போக அழிவின் விளிம்பில் நின்று விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனது தீரா விளையாட்டில் இறைவன் திருவிளையாடல்களே தோற்றுப் போயின.
எல்லா நதிகளையும் குளங்களையும் கிணறுகளையும் தின்று தீர்த்து விட்டான். இப்போது மீந்திருக்கும் மானுடக் குலத்தையும் தின்று தீர்க்க ஆசைப்படுகிறான். இயற்கை விழித்துப் பார்க்கும் முன்னே மனிதன் விழித்துக்கொள்ள வேண்டும்.
விழித்துக் கொள்வானா? இல்லை அழிம்பைத் தொடர்வானா? என்பது பதிலற்ற கேள்வியாகவே இருக்கிறது.
மனிதன் தன்னைக் குறித்து பெரிய கற்பனைகளில் இருக்கிறான். தன்னிடம் உலகை ஆட்டிப் படைக்கும் ஆயுதம் இருக்கிறது. இந்த உலகத்தை மட்டுமல்ல இன்னும் பல உலகங்களையும் தன்னால் அழிக்க முடியும் என்னும் பூரிப்பில் இருக்கிறான்.
அய்யோ? அது எத்தனை மடமைத்தனமானது அவன் அறியவில்லை.
உண்மையில் மனிதன் ஒரு பறவையைவிட வலிமையும், ஆரோக்கியமும் குறைந்தவன். பறவைகள் எல்லா வெயிலையும் குளிரையும் தாங்க வல்லமை பெற்றவை. எந்த அசைவ உணவையும் எளிதில் செரித்துவிடும் திறமை கொண்டவை. உலகத்தையே வலம் வரும் திறமை கொண்டவை.
ஆர்ட்டிக் பிரதேசத்தில் பிறந்த டேர்ன் எனும் பறவை ஆறு மாதத்தில் தன் தாயை விட்டுப் பிரிந்துவிடும். ஆறு மாதமானவுடன் வழியும் திசையும் கூட அறியாத அந்தச் சின்னஞ்சிறு பறவைகள் தானாகப் பறந்து தென் துருவத்தை வந்தடையும். அந்த வருடமே மீண்டும் பறந்து வட துருவத்தை வந்தடையும்.
பிறந்த ஒரு வருடத்தில் அது 22,000 மைல்கள் பறக்கின்றன அதையே வாழ்வு முழுவதும் தொடர்கின்றன.
எல்லாப் பறவைகளும் எப்போதும் எந்த மருத்துவரையும் பார்ப்பதில்லை. அவை எப்போதும் முழு உடல் தகுதியோடு இருக்கின்றன. இளவேனிற் காலத்தில் குயில் கூவிக்கொண்டே இருக்கும். வருடம் ஒரு முறை புதிய சிறகுகளோடு இளமையாகி விடுகின்றன. மழை வருவது அறிந்த மயில் மனம் மருக தன் பேடைகளின் முன் நின்று ஆடுகிறது.
அவை காலத்தை கூவி அழைத்தபடியே இருக்கின்றன. நீர்க்குளத்தில் ஒரு ஓரத்தில் முழுகி மறு ஓரத்தில் எழுகின்றன.
எல்லாப் பறவைகளும் சூரியன் எழும் முன்னே விழித்து அது அடையும் முன்னே கூடி குழுமி பாடி மகிழ்ந்து அன்றைய கதையை எல்லாம் சொல்லிவிட்டுத் தூங்க ஆரம்பிக்கின்றன. அப்படி ஒரு கால வரைமுறையான வாழ்வு பறவைகளுடையது.
மனிதன் மட்டும் வரைமுறை தாண்டியும் வேலி தாண்டிக் குதித்தும் வாழ விரும்புகிறான்.
அதனால்தான் அவனுக்கு வீட்டை விட பலமடங்கு பெரிய மருத்துவமனை தேவைப்படுகிறது. அவன் காடு, கழனி, குளம், மாடு, மண் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு தான் மட்டும் வாழ விரும்புகிறான். அந்தப் பேராசையில் கண்டதையும் சாப்பிடுகிறான். குடிக்கிறான். அந்த தீரா ஆசைக்கு பலிகடா ஆகாமல் எப்படி இருக்க முடியும்.
அதனால், எல்லா உணவு, உரம், உயிர்ச்சத்து என எல்லாவற்றையும் கலப்படமாக்கி தானும் கலப்படம் ஆகிவிட்டான். அனைத்தையும் தனக்கென ஆக்கிக் கொண்டு அதற்கு அப்பால் ஒரு பாலைவனத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறான்.
என்ன உங்களிடம் எதையோ பேசி போரடிக்கிறேனா!
சரிதான். அதற்காக இதோ ஒரு சிறந்த நாவலின் கதையை சொல்லப் போகிறேன். 1963-ல் எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் கதைதான் அது.
அதுவும் ஒரு காணாமல் போன பறவையின் கதை.
அதுவும் ஒரு சின்ன கருப்பு நிற ராபின் பறவை.
திடீர் திடீரென வாலை ஆட்டும் பட்சி. நம் வீட்டின் புழக்கடையில் பார்க்கும் பறவை வகையைச் சேர்ந்தது.
அமெரிக்காவின் நீண்ட நெடுஞ்சாலைகளின் நடுவிலும் ஓரத்திலும் வரிசையாக மரங்களை வைத்து வளர்த்திருப்பார்கள். அதில் அதிகம் எல்மு எனப் படும் மரமும் இருக்கும். வசந்த காலத்தில் நீண்ட நெடுஞ்சாலைகளில் நிற்கும் மரங்களில் பறவைகளின் கெக்கெலிப்பும் கீச்சு சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கதை.
ஒரு பிரபல இயற்கை ஆய்வாளர் ரேச்சல் கார்சன் என்பாருக்கு ஒருநாள் ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் அப்போதைய வசந்த காலத்தில் எழுதப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை வாசித்த ஆராய்ச்சியாளருக்கு அதிர்ச்சி.
அவர் ஒரு இயற்கை குறித்த ஆராய்ச்சியாளர். தினமும் அந்த நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர். ஆயினும் அவர் அதை நேரடியாக உணரவில்லை. அந்தக் கடிதம்தான் அதை முதலில் சொல்லியது.
அது வேறு ஒன்றுமில்லை. அதில் சொல்லியிருந்தது இதுதான். நீங்கள் நெடுஞ்சாலை மரங்களின் மௌனத்தைப் பார்த்தீர்களா? எப்போதும் பறவை களின் கீச்சொலிகளால் நிறைந்து இருக்கும் மரங்கள் இப்போது ஏன் மௌனமாகி விட்டன என்பதே அந்தச் செய்தி. கடிதத்தை வாசித்து முடிக்கையில் அவர் மனம் கனத்தது.
அந்த மௌனத்திற்கு காரணம் எது? மண்டையைக் குடைந்தது அந்தக் கேள்வி.
அது நெடுஞ்சாலை மரங்கள் அனைத்தும் மௌனமாக நின்றன.. ஆம். மரங்கள் அனைத்திலும் முட்டையிட்டு குஞ்சு பொறித்து சத்தம் போட்டுக் கொண்டே பறக்கும் ராபின் குருவிகள் ஒன்றையும் காணோம். மரங்கள் அமைதியாக நின்றன. பறவை களும் குஞ்சுகளைப் பொறிக்கும் திறன் அற்றுப் போயிருந்தன. ராபின் குருவிகளும் காணாமல் போய்விட்டன.
ரேச்சல் மரங்கள் ஊடே நடந்தார். ஏன் ராபின் குருவிகளைக் காணவில்லை என்று தேடினார். அதன் காரணம் தேடி அலைந்தார்.
எல்மு மரங்கள் மிகவும் அழகானவை. அதன் விரிந்த இலைகளைத் தின்ன வண்டுகள் வரும். எல்மு மரத்தின் இலைகளைத் தின்றுவிட்டு அதில் எச்சம் போடுவதால் அம்மரங்கள் அழகற்றதாகி விடுகின்றன.. எல்மு மரங்களின் அழகற்ற தன்மைக்கு முடிவு கட்ட அரசு அந்த மரத்தின் மீது பூச்சிக்கொல்லிக் கரைசலைத் தெளித்தது.
சாதாரண காலத்தில் அதன் இலைகள் தரையில் உதிர்ந்து மக்கி உரமாகும். அதில் மண்புழுக்கள் உற்பத்தியாகும். அந்த மண் புழுக்களைத் தின்ன ராபின் பறவைகள் வரும். அதற்கு மண்புழு மிகவும் பிடித்த உணவு. இப்போது பூச்சிக்கொல்லி அடித்ததால் அதன் இலைகள் விசமாகி மண்புழுக்கள் உற்பத்தி இல்லாமல் போய்விட்டது. ஆகவே ராபின் பறவைகள் இரையற்று செத்துப் போயின. எந்தப் பறவையும் வராத நிலைமையில் மரங்கள் சோகத்தோடு மௌனமாகிப் போயின.
இயற்கை ஆய்வாளர் ரேச்சல் கார்சனை இந்த சோகம் மிகவும் தாக்கி விட்டது. இது குறித்து அவர் ள்ண்ப்ங்ய்ற் ள்ல்ழ்ண்ய்ஞ் "மௌன வசந்தம்" என்ற நாவலை எழுதினார். அது மிகுந்த பரபரப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது.
இந்தக் கதை இந்தியாவிற்கு வந்தபோதுதான் நாம் சிட்டுக் குருவிகளைத் தேட ஆரம்பித்தோம். எதனால் அது நம் வீடுகளை விட்டு நீங்கிப் போனது என்று தேடினோம்.
சிட்டுக் குருவி என்பது குருவி மட்டுமல்ல. நமது மண்ணும் மரமும் மட்டையும்தான் காணாமல் போயிருக்கிறது. அவற்றை நாம் காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம்?
இந்தக் கேள்வி நம் முன் நிற்கிறது. நாம் அதற்கு பதில் சொல்வதற்கு பதிலாக என்ன வினை ஆற்றப் போகிறோம் என்பதுதான் நம் முன் நிற்கிறது.
நல்ல பதில் அல்லது செயல் ஒவ்வொன்றும் இந்தப் பூமிப் பந்தைக் காப்பாற்றும். அதற்கு மாறாக செயல்பட்டால் நமக்கு முன்னே இருப்பது அணுகுண்டு என்பதை நாம் உணரவேண்டும்.
அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.