கவிப்பேரரசு, தன் முதல் தொகுப்பான "வைகறைமேகங்கள்' மூலம் இலக்கிய உலகில் தடம் பதிக்கத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுதுகோல் பிடித்தபோதே தமிழ் மகளின் உடலும் உடையும் புதுமை நிறத்துக்கு மாறத்தொடங்கின. இலக்கிய உலகை அண்ணாந்து பார்க்கவைத்த எழுத்து அது. அதுபோலவே அவர் நிழல்கள் படத்தில் "பூங்கதவே தாழ்திறவாய்' பாடல்மூலம் திரைப்பயணத்தைத் தொடங்கி 43 வருடங்கள் நகர்ந்திருக்கின்றன. அதுவரை கேட்டிராத தமிழை, அவர் பாடல்கள் காற்றில் மிதக்க விட்டுக் கிறங்கடித்தன.
காலம் மூச்சிரைக்க ஓடியதில், தலைநரைத்தும்கூட அவர் தமிழ் நரைக்கவில்லை. திரையிலும் திரைக்கு வெளியிலேயும் தன் பாட்டுத் தமிழால் இப்போதும் தனித்துவமாக தர்பார் நடத்திவருகிறார் கவிப்பேரரசு. அனைத்து வகையிலும் அவர், தமிழின் உயரத்தை உயர்த்திவருவதால், அவருடைய காதலர்களான ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவரைக் கொண்டாடித் திளைக்கிறார்கள்.
இந்தியாவில் ஏழு தேசிய விருதுகளை திரைப்படப் பாடலுக்காகப் பெற்றிருக்கும் ஒரே பாடலாசிரியரும் இவர்தான். தமிழாற்றுப்படை வரை 38 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தி, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளில் வெளிவந்து விட்டன. அதனால்தான் ஒவ்வொரு தமிழனும், அவரையே செம்மொழி பெற்ற செம்மாந்த விருதாகக் கருதுகிறார்கள்.
ஜூலை 13-ல், தன் பிறந்தநாளைக் கொண்டாடும் அவரை, நம் "இனிய உதயம்' இதழுக்காக வாழ்த்துச் சொல்லிச் சந்தித்த போது, நாம் கேட்ட கேள்விகளுக்கு, புத்திக்கு போதை ஏற்றும் வகையில் அதே வேகத்தில் பதில்களைப் பெய்தார்.
உங்கள் முதல் படைப்பான வைகறை மேகங்கள் நாட்களை நினைக்கும்போது எப்படி இருக்கிறது?
வைகறை மேகங்கள் - நினைக்கும் பொழுதெல்லாம் எனக்குப் பரவசம் வரும்;
நெஞ்சில் ஒரு காதல் சுரக்கும். அது என்னுடைய 19 வயதுக் கனவு. 17 வயதி- ருந்து 19 வயது வரை எழுதப்பட்ட கவிதை களின் தொகுப்பு. அது என் வயதுக்கு மீறியது.
ஏனென்று கேட்டால் அதில் காதலிக்காத நான் காதலித்தது போலவும், அதில் ஒரு பெரிய அனுபவசாலி மாதிரியும் எழுதி யிருப்பேன். அதற்குக் காரணம் சக கவிஞர் களின் தாக்கம். கண்ணதாசனுடைய பாதிப்பு என் கவிதைகளில் அப்போது அதிகம். "வாழ்ந்துவிட்டுச் சாகிறேன்' என்ற ஒரு கவிதையில் கம்பனின் சந்தத்தை இழுத்துக் கொண்டு காதல் கவிதை புனைந்திருந்தேன் 19 வயதில். அதற்குக் கண்ணதாசன் அணிந் துரை கொடுத்திருந்தார். அது இன்னும் நினைவில் இருக்கிறது.
ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க, ஐந்து பாரத் திற்கு ஐந்து ரீம் என்பது கணக்கு. அந்த ஐந்து ரீம் தாள்களையும், ஒவ்வொரு ரீமாக பாரி முனையில் ஒரு சந்தில் இருந்து என் தோளில் சுமந்து பிரதான சாலைக்குக் கொண்டுவந்து ரிக்க்ஷாவில் இறக்கினேன், அந்த தோள் வலி இன்னும் இருக்கிறது. ஆனால், அந்த ஆனந்தம் நெஞ்சில் நின்று நிலைக்கிறது.
தமிழாற்றுப்படை என்ற சிந்தனை உங்களுக்கு எப்படித் தோன்றியது?
தமிழாற்றுப்படை என்ற சிந்தனையைத் தூண்டியது தினமணி என்று சொல்லலாம். 125ஆவது பிறந்தநாள் வந்தது பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு. பாரதிதாசனை பற்றி ஒரு முழுக் கட்டுரை வேண்டும
கவிப்பேரரசு, தன் முதல் தொகுப்பான "வைகறைமேகங்கள்' மூலம் இலக்கிய உலகில் தடம் பதிக்கத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுதுகோல் பிடித்தபோதே தமிழ் மகளின் உடலும் உடையும் புதுமை நிறத்துக்கு மாறத்தொடங்கின. இலக்கிய உலகை அண்ணாந்து பார்க்கவைத்த எழுத்து அது. அதுபோலவே அவர் நிழல்கள் படத்தில் "பூங்கதவே தாழ்திறவாய்' பாடல்மூலம் திரைப்பயணத்தைத் தொடங்கி 43 வருடங்கள் நகர்ந்திருக்கின்றன. அதுவரை கேட்டிராத தமிழை, அவர் பாடல்கள் காற்றில் மிதக்க விட்டுக் கிறங்கடித்தன.
காலம் மூச்சிரைக்க ஓடியதில், தலைநரைத்தும்கூட அவர் தமிழ் நரைக்கவில்லை. திரையிலும் திரைக்கு வெளியிலேயும் தன் பாட்டுத் தமிழால் இப்போதும் தனித்துவமாக தர்பார் நடத்திவருகிறார் கவிப்பேரரசு. அனைத்து வகையிலும் அவர், தமிழின் உயரத்தை உயர்த்திவருவதால், அவருடைய காதலர்களான ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவரைக் கொண்டாடித் திளைக்கிறார்கள்.
இந்தியாவில் ஏழு தேசிய விருதுகளை திரைப்படப் பாடலுக்காகப் பெற்றிருக்கும் ஒரே பாடலாசிரியரும் இவர்தான். தமிழாற்றுப்படை வரை 38 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தி, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளில் வெளிவந்து விட்டன. அதனால்தான் ஒவ்வொரு தமிழனும், அவரையே செம்மொழி பெற்ற செம்மாந்த விருதாகக் கருதுகிறார்கள்.
ஜூலை 13-ல், தன் பிறந்தநாளைக் கொண்டாடும் அவரை, நம் "இனிய உதயம்' இதழுக்காக வாழ்த்துச் சொல்லிச் சந்தித்த போது, நாம் கேட்ட கேள்விகளுக்கு, புத்திக்கு போதை ஏற்றும் வகையில் அதே வேகத்தில் பதில்களைப் பெய்தார்.
உங்கள் முதல் படைப்பான வைகறை மேகங்கள் நாட்களை நினைக்கும்போது எப்படி இருக்கிறது?
வைகறை மேகங்கள் - நினைக்கும் பொழுதெல்லாம் எனக்குப் பரவசம் வரும்;
நெஞ்சில் ஒரு காதல் சுரக்கும். அது என்னுடைய 19 வயதுக் கனவு. 17 வயதி- ருந்து 19 வயது வரை எழுதப்பட்ட கவிதை களின் தொகுப்பு. அது என் வயதுக்கு மீறியது.
ஏனென்று கேட்டால் அதில் காதலிக்காத நான் காதலித்தது போலவும், அதில் ஒரு பெரிய அனுபவசாலி மாதிரியும் எழுதி யிருப்பேன். அதற்குக் காரணம் சக கவிஞர் களின் தாக்கம். கண்ணதாசனுடைய பாதிப்பு என் கவிதைகளில் அப்போது அதிகம். "வாழ்ந்துவிட்டுச் சாகிறேன்' என்ற ஒரு கவிதையில் கம்பனின் சந்தத்தை இழுத்துக் கொண்டு காதல் கவிதை புனைந்திருந்தேன் 19 வயதில். அதற்குக் கண்ணதாசன் அணிந் துரை கொடுத்திருந்தார். அது இன்னும் நினைவில் இருக்கிறது.
ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க, ஐந்து பாரத் திற்கு ஐந்து ரீம் என்பது கணக்கு. அந்த ஐந்து ரீம் தாள்களையும், ஒவ்வொரு ரீமாக பாரி முனையில் ஒரு சந்தில் இருந்து என் தோளில் சுமந்து பிரதான சாலைக்குக் கொண்டுவந்து ரிக்க்ஷாவில் இறக்கினேன், அந்த தோள் வலி இன்னும் இருக்கிறது. ஆனால், அந்த ஆனந்தம் நெஞ்சில் நின்று நிலைக்கிறது.
தமிழாற்றுப்படை என்ற சிந்தனை உங்களுக்கு எப்படித் தோன்றியது?
தமிழாற்றுப்படை என்ற சிந்தனையைத் தூண்டியது தினமணி என்று சொல்லலாம். 125ஆவது பிறந்தநாள் வந்தது பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு. பாரதிதாசனை பற்றி ஒரு முழுக் கட்டுரை வேண்டும் என்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் என்னைக் கேட்டார். நான் எழுதிக்கொடுத்தேன். அதில் எனக்கு நேர்ந்த அனுபவம் அலாதியானது. தலையங் கத்தைத் தவிர்த்து எனக்கு முழுப் பக்கத்தையும் ஒதுக்கியிருந்தார்.
அந்த நடுப்பக்கக் கட்டுரைக்கு வேறு யாருக்கும் ஒதுக்காத வெளி அது. அதைப் படித்துவிட்டுத் தமிழ் உலகம் என்னை அழைத்துப் பாராட்டியபோது, "அடடே தமிழ்க் கட்டுரைக்கு இவ்வளவு வீச்சும் வீரியமும் இருக்கிறதா?' தமிழ் உலகம் இதை இவ்வளவு கொண்டாடு வதற்குக் காத்திருக்கிறதா? என்று நான் நெகிழ்ந்து போனேன். அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து இன்னும் தமிழ் ஆளுமைகளைப் பற்றி எழுதி னால் என்ன? என்ற சிந்தனை விளைந் தது. பாரதிதாசன் கட்டுரையைப் படித்து விட்டு ஒரு பேராசிரியர் சொன்னார், நாங்கள் 20, 30 புத்தகங்கள் பாரதி தாசனை பற்றிப் படித்திருந்தாலும் அந்த சாரத்தை இப்படி இறக்கி இருக்க முடியாது. 30 புத்தகங்களின் சாரத்தை ஒரு கட்டுரையில் கொடுத்து இருக்கிறீர்கள் என்று அவர் சொன்னபோது, "எனக்குப் பளிச்சென்று மூளையில் ஒரு மின்னல் வெட்டியது' நிகழ்காலத் தமிழர்கள் படிப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். தேடிச் சென்று குறிப்பு எடுக்கக்கூடிய வசதியை இழந்திருக்கிறார்கள். வாழ்வு அவ்வளவு விரைவாக நகர்கிறது. எதிர்காலத் தமிழன் எல்லா நூல்களையும் தேடிப் படித்தால் தான், ஒரு மறைமலை அடிகளைப் பற்றி, உ.வே.சாவைப் பற்றி, தொல் காப்பியரைப் பற்றி, கபிலர் பற்றி, ஔவையாரைப் பற்றி, கலைஞர் பற்றி, கண்ணதாசன் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். அதை நான் ஏன் ஒரு தொண்டாகச் செய்யக் கூடாது. 30 நூல்களையும் நானே படித்து, அதன் சாரம் பிழிந்து தமிழர்களுக்குக் கொடுத்தால் அது ஒரு கொடையல்லவா என்று கருதினேன். அந்தச் சிந்தனைதான் "தொல்காப்பியர் முதல் அப்துல் ரகுமான் வரை ஒரு பருந்துப் பார்வை, பரந்த பார்வை, பார்ப்பதற்குக் காரணமாக அமைந்தது' எனவே இன்று தினமணி என்னோடு முரண்பட்டு இருந்தாலும் தினமணிக்கு நன்றி சொல்கிறேன்.
திரைப்படத் துறைக்கு வந்திருக்காவிட்டால் நீங்கள் என்னவாக இருக்க விரும்பி இருப்பீர்கள்?
உண்மையைச் சொல்லப்போனால் பழமொழிபாலன்! என்னுடைய கனவெல்லாம் ஒரு கல்லூரிக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்து தமிழ்ப் பாடம் நடத்தவேண்டும் என்பதுதான். என் தமிழைக் கேட்க எப்போதும் 30, 40 மாணவர்கள் என் முன்னே இருப்பதை நான் ஒரு கனவாகவே கருதினேன். அவர்களுக்குத் தமிழ் கற்பித்துக் கொடுத்தல், தமிழை விரித்துச் சொல்லுதல், தமிழ்த் தொண்டு செய்தல் என்பதை என் குறிக்கோளாகவே வரித்து இருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு இல்லை. திரைத்துறைக்கு நான் செல்லாமல் இருந்திருந்தால் எப்படியும் முயன்று ஒரு கல்லூரிக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்திருப்பேன். தமிழ்ப் பேராசிரியராக இருந்துகொண்டே தமிழ் படைத்திருப்பேன். (நீங்கள் ஒரு கல்லூரிக்குப் பேராசிரியராக சென்றிருந்தால் மாணவர்களுக்கு மட்டும்தான் ஐயா பாடம் எடுத்திருப்பீர்கள். இப்போது உங்களுடைய கவிதையும், படைப்பும் உலகத்திற்கே பாடம் சொல்லிகொண்டு இருக்கிறதே ஐயா) சரி இது காலம் கொடுத்த கொடை என்று கருதிக் கொள்ள வேண்டியதுதான்.
நாட்படு தேறல் என்ற சாதனை வடிவம் எப்படிப் பிறந்தது?
எனக்கு ஒரு கனவு இருந்தது. திரைப்படப் பாடல்கள் இவ்வளவு எழுதி இருக்கிறோம். ஆயிரக்கணக்கான இந்தப் பாடல்களில் ஒரு 10 அல்லது 12 பாடல்கள் தவிர அத்தனையும் மெட்டுக்கு எழுதப்பட்டவை. எல்லா இசை அமைப்பாளர்களும் மெட்டுக் கொடுப்பார்கள். அந்த மெட்ட்டில் கிழித்துப் போட்ட சப்தங்களை நான் தமிழால் தைத்துக் கொடுப்பதுதான் மெட்டுக்குப் பாட்டு எழுதுவது. அதை நான் செய்துகொண்டிருந்தேன். எனக்கு ஒரு விருப்பம் இருந்தது. நான் எழுதிக் கொடுத்து இந்த இசை யமைப்பாளர்கள் இசையமைத்தால் இன்னும் தமிழுக்கு விரிவு கிடைக்குமே, செறிவு கிடைக்குமே, சுதந்திரம் கிடைக்குமே, அழகழகான பல்லவிகளை அள்ளிக் கொடுக்கலாமே, நம் சிந்தனைக்கு விலங்குகள் பூட்டப்பட மாட்டாதே என்றெல்லாம் நினைத்த பொழுது, நானே பாடல்களைத் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்தேன். திரைப்படத்தைத் தாண்டித் தனிப்பாடல்களின் பெருவெளிகளுக்குத் தமிழைக் கொண்டு செல்லவேண்டும் என்று துடித்தேன். முக்கியமான செய்தி என்னவென்றால், முதலீடு வேண்டும். சில கோடி ரூபாய்கள் முதலீடு இல்லாமல் இந்தச் செயலைச் செய்ய முடியாது. அந்த சில கோடி ரூபாய் முதலீடுதான் எனக்கு மிகப் பெரிய அறைகூவலாக இருந்தது. அதையும் நான் ஏற்படுத்திக் கொண்டு இந்த வெளிகளுக்கு வந்தேன். இப்போது நாட்படு தேறலுக்குக் கிடைத்திருக்கிற வரவேற்பைப் பார்த்தால், நூறு பாடல்களோடுகூட நிறுத்த முடியாது போலிருக்கிறது. வாழ் நாளெல்லாம் இந்தப் பணியைச் செய்துகொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது. உடல் நலம், மனநலம், சூழ்நிலை, வாழ்நிலை எல்லாம் ஒன்றுகூடி வந்தால் வாழ்நாளெல்லாம் இந்த நாட்படு தேறலை நான் படைத்துக் கொண்டே இருக்கலாம் என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்கிறது. அந்தக் குரலைக் காலம் கேட்கும் என்று நம்புகிறேன்.
கலைஞரின் பாதிப்பு இப்போதும் இருக்கிறதா?
என் தந்தையின் இழப்பைக்கூட நான் சில நேரங்களில் மறந்திருக்க முடிகிறது. ஆனால் கலைஞரின் இழப்பை என்னால் மறக்க முடிய வில்லை. அவர் நினைவுகள் வந்து செல்லாத நாட்கள் இல்லை. ஒரு அரங்கத்தை பார்க்கிறேன்; காமராசர் அரங்கத்தை கடக்கிறேன்; மியூசிக் அகாடமியைக் கடக்கிறேன்; அண்ணா சாலையில் பயணிக்கிறேன்; சில மேம்பாலங்களில் ஏறி இறங்குகிறேன்; எல்லா வற்றிலும் கலைஞரோடு பயணித்திருக்கிறேன்.
முரசொலியைப் பார்க்கிறேன், முரசொலிக்கும் கலைஞருக்கும் உள்ள உறவு, எனக்கும் முரசொலிக் கும் உள்ள உறவு, முரசொலிக்கும் கலைஞருக்கும் எனக்கும் உள்ள உறவு, மறக்க முடியவில்லை. திரைப் படம் பார்க்கிறேன், அங்கேயும் கலைஞர் இருக்கிறார்.
அவரின் நினைவுகள் தப்பிச் செல்லக்கூடிய இடங்களே இல்லை. நான் என் அதிகாலையை இழந்திருக்கிறேன். தொலைபேசியை இழந்திருக்கி றேன். அதிகாலைச் சிரிப்பை இழந்து இருக்கிறேன். என்னைச் சுற்றிப் பறவைகள் மட்டும் பாடுகின்றன. அந்த பறவைகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்த தலைவன் இல்லை. அதனால் கலைஞரை என்னால் மறக்க முடியவில்லை. வாழும் காலம் வரைக்கும் கலைஞருடைய புகழ் சொல்லும். ஒரு அன்பனா கவே நான் வாழ்ந்து விட வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.
பேரன் பேத்தியோடு நேரம் செலவழிக்கிறீர் களா?
மிக ஆசையாகச் செலவழிக்கிறேன். ஆனால், அரிதாகச் செலவழிக்கிறேன். நான் தனித்திருக்கும் பொழுதுகளில் அவர்கள் தனித்திருக்க முடியவில்லை. அவர்கள் தனித்திருக்கும் பொழுதுகளில் நான் தனித்திருக்க முடிவதில்லை. ஆனாலும் அடிக்கடி எல்லோரும் கூடி, கொண்டாடி, தமிழ் பேசி, பாட்டுப் பாடிக் களிக்கிறோம்.
கடந்த வாரம் என்னுடைய பேத்தி "மெட்டூரி' எனக்கு ஒரு நகைச்சுவை சொன்னாள். என்னிடம் கேட்டாள்; தாத்தா நீங்கள் சொல்லுங்கள். "இந்தியாவில் அதிகமாகச் சம்பாதிக்கிறவர்கள் யார்?' நான் அம்பானியா என்று கேட்டேன்; இல்லை.அதானியா என்று கேட்டேன்; இல்லை. வேறு பில்கேட்ஸா என்றேன்; இல்லை. என் பேத்தி எனக்குத் திரும்பச் சொன்னாள் :
"பல் டாக்டர்கள்தான் அதிகமாக சம்பாதிக்கிறார்கள்'
என்று. "எப்படி' என்றேன். அதற்கு மெட்டூரி சொன்னாள் :
"அவர்கள் தானே நம் "சொத்தை' எல்லாம் பிடுங்குகிறார்
கள்' கேட்டுச் சிரித்தேன். இந்த நகைச்சுவைக்கும், இந்தச் சிரிப்புக்கும், இந்தக் குலுங்கலுக்கும் பிள்ளைகள் பெரும் காரணமாக இருக்கிறார்கள். இப்படி நேரத்தைச் செலவழித்தால் அவர்களிடம் பெறுவதற்கு நிறைய இருக்கிறது. நம்மிடம் கொடுப்பதற்குப் பொருள் இருக்கிறது; அவர்களிடம் கொடுப்பதற்கு மகிழ்ச்சி இருக்கிறது.
மதன் கார்க்கி - கபிலன் இருவருக்கும் என்ன கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்?
நான் கற்றுக் கொடுத்தது கொஞ்சம். நான் கற்றுக் கொடுத்தது தமிழ், பண்பாடு, ஒழுக்கம், நேர்மை, நேரக் கட்டுப்பாடு, யாரையும் சார்ந்திராத வாழ்க்கை, சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற வேட்கை, இவைகளை எல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறேன். நான் கற்றுக் கொடுத்தது முடிந்துவிட்டது. இப்போது அவர்கள் கற்றுக் கொடுப்பது ஆரம்பித்திருக்கிறது.
அவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள். நான் அறியாத விஞ்ஞானம், நான் அறியாத தொழில்நுட்பம், நான் அறியாத உலகச் செய்திகள், உலகத்தில் நேர்ந்து கொண்டிருக்கும் அடிப்படை மாறுதல்கள், மாறிக்கொண்டிருக்கும் விழுமியங்கள், அவர்கள் கற்றது, பெற்றது, கண்டது, உணர்ந்தது எல்லாவற்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் கற்றுக் கொண்டிருக்கும்போது அவர்களின் வயதையும் நான் சேர்த்து வாங்கிக் கொள்கிறேன்.
இன்றைய இலக்கியப் போக்கு எப்படி இருக்கிறது?
இன்றைய இலக்கியப் போக்கு குறித்து நான் வெளிப் படையாகச் சொல்ல வேண்டுமென்றால், நான் மகிழ்கிற இடத்தில் இலக்கியப் போக்கு இல்லை. இலக்கியம் கொஞ்சம் தேக்கம் கண்டு இருக்கிறது.
அதற்கு ஊக்கம் தர வேண்டும். காரணம் எழுத்தாளர் களுக்கு ஊடகங்கள் குறைந்துவிட்டன என்று நான் நினைக்கிறேன். எழுத்தாளர்களுக்கு சமூக ஊடகங்கள் கிட்டியிருக்கலாம், சமூக ஊடகங்களை விட, அச்சு ஊடகங்களைத்தான் ஒரு எழுத்தாளன் நேசிப் பான். அந்த அச்சு ஊடகங்களை அவன் இழந்து இருக்கிறான். இது ஒரு கால மாற்றம். அச்சு ஊடகத்தைச் சமூக ஊடகத்தால் ஈடுகட்ட முடியாது என்று நினைக்கிறேன். இந்த இரண்டையும் தாண்டி மூன்றாம் ஊடகம் ஒன்று வந்தால் எழுத்து மிளிரும் என்று நான் கருதுகிறேன். எனக்கு இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஆனால், ஒன்றே ஒன்று மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் நிறைய முன்னேறிக் கொண்டிருப்பது ஆறுதலாக இருக்கிறது. மற்ற மொழி இலக்கியங்கள் தமிழுக்குள் வருவதுபோல, தமிழ் மொழியின் நல்லிலக்கியங்கள் பிற மொழிகளுக்குச் சென்றாக வேண்டும். அப்படி செல்லக்கூடிய இலக்கியங்களை படைக்கக்கூடிய இடத்தில் தமிழ் எழுத்தாளர்கள் மேலும் மேலும் பரிமளிக்க வேண்டும் என்பது என் விருப்பம். பார்ப்போம் நான் நினைக் கிற உயரத்திற்குத் தமிழ் இலக்கியம் இன்னும் சில ஆண்டுகளில் வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு நான் இருக்கிறேன்.
இலக்கியத்தில் 50 ஆண்டுகள். இன்னும் ஓடிக் கொண்டே இருக்கிறீர்களே! சலிக்க வில்லையா?
பறப்பது சலிக்குமா பறவைக்கு! நீந்துவது சலிக்குமா மீனுக்கு! வீசுவது சலிக்குமா காற்றுக்கு! உதிப்பது சலிக்குமா சூரியனுக்கு! ஒளிர்வது சலிக்குமா நிலவுக்கு! அதிகமாகப் பேசப்பட்டு விட்டோம் என்பதற்காகச் சலிக்குமா மொழிக்கு! நான் இவை களாக இருக்க விரும்புகிறேன். ஒன்று சலிக்க ஆரம்பித்து விட்டால் வாழ்வு பூரணம் ஆகிவிட்டது என்று வெறுப்பு வந்துவிடும். அந்த வெறுப்பு வராமல் இருப் பதற்குச் சலிப்பு ஏற்படக்கூடாது. இன்னொன்று எழுதாவிட்டால் என் இயக்கம் நின்றுபோகும். எழுதுகிற வரை, பேசுகிற வரை, சிந்திக்கிற வரை, ஓடிக் கொண்டிருக்கிற வரைதான் நம்முடைய வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. ஓடிக்கொண்டே இருப்பது நதி! உலவிக்கொண்டே இருப்பது காற்று! உழைத்துக் கொண்டே இருப்பவன் மனிதன். என் புலன்கள் எனக் குச் சம்மதிக்கும் காலம் வரை, என் கல்லீரலும், என் இருதயமும், என் சிறுநீரகமும், என் மூளையும், என்னுடைய கணையமும், எனக்கு ஒத்துழைக்கிற காலம் வரை நான் ஓடிக்கொண்டே இருப்பேன். நான் ஓடிக்கொண்டே இருப்பது முக்கியமல்ல, என் இரு பக்கங்களிலும் தமிழர்களை இழுத்துக் கொண்டே ஓடிக்கொண்டே இருப்பேன்.
இனிய உதயம் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வாசகர்களே நீங்கள் எப்போதும் அன்னப்பறவையாக இருங்கள். பாலில் இருந்து தண்ணீரைக் கழித்து விடுங்கள். பாலை மட்டும் பருகுங்கள். நல் இலக்கியம் எது? நல் எழுத்து எது? நல் ஒழுக்கம் எது? நல்ல விழுமியம் எது? என்பதைக் கண்டறிந்து வாசிக்கப் பழகுங்கள்; வாசிப்பதிலிருந்து வாழப்பழகுங்கள்.
ஒரே ஒரு செய்தி நான் "இனிய உதயம்' வாசகர் களுக்குச் சொல்கிறேன். பாராட்டப் பழகுங்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளாவிட்டால் சமுதாயத்தில் பண்பாடு இருக்காது. பிறகு கலை வளர்ச்சி இருக்காது, ஒரு நல்ல கலைஞன் எதிர்பார்ப்பது பணமல்ல, பொன்னாடை அல்ல, பூமாலை அல்ல, தங்கச் சங்கிலிகள் அல்ல, "உன் படைப்பு அற்புதம்' என்று சக மனிதன் ஒருவன் அங்கீகரிப்பதைத் தான் ஒரு படைப்பாளன் முற்றிலும் எதிர்பார்க் கிறான்.
சின்னச் சின்னத் திறமைகளைக்கூட மேம்படுத்துங் கள். உங்கள் பையனை எழுதச் சொல்லுங்கள், அவன் எழுதிய கவிதைக்கு ஆகா சொல்லுங்கள். உங்கள் பெண் பிள்ளைகளைப் பாடச்சொல்லுங்கள், அவள் பாடும்போது அற்புதம் என்று அவளைத் தட்டிக் கொடுங்கள். குறைந்த மதிப்பெண்கள் பெற்று வந்த பிள்ளைகளைக்கூட இதைவிட அதிக மதிப்பெண் அடுத்த தேர்வில் நீ அடைவாய் என்று வாழ்த்துங்கள். ஏன் குறைந்தது என்று குட்டாதீர்கள்; குட்டினால் மூளை சுருங்கிப் போகும். சக மனிதனை, படைப்பாளி களை கலைஞர்களைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங் கள். உங்கள் பாராட்டுதான் உங்களையும் சேர்த்து ஒரு கலைஞனாக்கும்.
- சந்திப்பு முனைவர் பழமொழிபாலன்