காலையில் விளக்கைப் பற்றவைத்து பிரார்த்தனை செய்யும்போது, மலர்களைக்கொண்டு உங்களை வழிபடும்போது, நிறைய நெருப்பு நாளங்களைக்கொண்ட ஆரத்தி தீபத்தால் உங்களுடைய உருவங்களை ஒளிரச் செய்யும்போது... என் தெய்வங்களே... நீங்கள் என்ஆணவத்தைச் சுட்டெரிக்கிறீர்கள்.

சரீரமுள்ள நான்..

சரீரமற்ற தெய்வங்கள்...

பொன்னில் பதித்த ரத்தினத்தைப்போல அவர்களின் மௌனத்தில் ஞானம், என் ஸ்ரீகிருஷ்ணன்... எல்லா இந்துப் பெண்களின் கணவரான கிருஷ்ணன், ராதா... உன் வாழ்க்கை துயரமானதல்ல.

Advertisment

st

யமுனையின் கரையில் நீ அவனுடன் இரண்டறக் கலந்தாய். உன் கணவனை வஞ்சித்து, நீ அவனுடன் சேர்ந்து நடந்தாய்.

ஒருநாள் அவன் மதுரா நகரத்திற்குச் சென்றான். உன்னிடம் விடைபெறுவதற்காக வந்தபோது, அவன் கூறினான்: "நான் விரைவில் திரும்ப வருவேன்."

"என்றும் என்னைக் காதலிப்பீர்கள் அல்லவா?" நீ கேட்டாய்.

"என்றும் நான் உன்னைக் காதலிப்பேன்."

அவன் சிரித்துக் கொண்டே கூறினான்.

ஆனால்,அவனுடைய கண்கள் அந்த நிமிடத்தில் உன் முகத்தில் அல்லாமல் வேறெங்கோ பதிந்து விளையாடிக் கொண்டிருந்தன. அவன் கம்சனை வதம்செய்து மதுராவின் மன்னனானான்.

பிறகு... நாட்டுக் காரியங்களிலும் பலவகையான போகங்களிலும் மூழ்கி, அவன் உன்னை மறந்துவிட்டான். யமுனையின் கரையில் சென்று நின்றுகொண்டு நீ அவனைப் பற்றி நினைத்தாய்.

காலப்போக்கில் உன் அழகு, வேனிலில் மஞ்சள் இலைகளைப்போல உதிர்ந்துவிழுந்தன. உன் காத்திருப்பு, மரணத்தில் முடிந்தது.

உன் முழங்காலில் அமர்ந்துகொண்டு கறுத்து மினுமினுத்த ஒரு குழந்தை உன்னைநோக்கி புன்சிரிப்பைத் தவழவிடவில்லை.

எனினும்,ராதா... நீ அதிர்ஷ்டசாலியாக இருந்தாய். கிருஷ்ணனின் சரீரத்தை அறியும் அதிர்ஷ்டம் உனக்குக் கிடைத்தது.

எங்களுக்கோ?

வேறு சரீரங்களின் வழியாக v அவன் எங்களுக்குள் நுழைந்தான். நாட்டுக் காரியங்களில் மூழ்கியிருக்கும் என் காதலரின் அலுவலக அறையின் வாசலில் சென்று நான் நின்றபோது, அவர் வாசித்துக்கொண்டிருந்த காகிதத்தை மேஜையின்மீது வைத்துவிட்டு, கண்ணாடியைக் கழற்றி நெற்றியைச் சுருக்கி என்னையே பார்த்தார்.

மதுரா மன்னனின் முகத்தை அப்போது நான் பார்த்தேன்.

அவரைத் தொல்லைப்படுத்திய விஷயத்தில் எனக்கு அந்த நிமிடத்தில் நாணம் உண்டானது.

நான் தலைகுனிந்து அங்கிருந்து விலகி நடந்தேன்.

Advertisment

எனக்குப் பின்னால் கதவு மீண்டும் திறந் ததோ? அவர் 'ராதா...' என்று மெதுவாக, மிகவும் மெதுவாக... ஒருமுறை என்னை அழைத்தாரோ?

நான் திரும்பிப் பார்க்கவில்லை.

என் ஸ்ரீகிருஷ்ணா....

அஸ்தமனமாகும் ஆகாயத்தில் ஒரு நீலநிறப் பறவையைப்போல என் கண்களுக்கு முன்னால் உன் முகம் தோன்றிக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் நான் உன்னைக் காண்கிறேன்.v நிறைய நெருப்பு நாளங்களைக் கொண்ட என் கைவிளக்கால் நான் உன் உருவத்தைச் சுற்றி 'ஆரத்தி' காட்டுகிறேன்.

ராதா... உன் வாழ்க்கை துயரமான ஒன்றல்ல.

உனக்கு அவனுடைய சரீரம் ஒருமுறை கிடைத்தது.

சரீரமற்றவனாக மட்டுமே நாங்கள் அவனை அறிகிறோம்.