கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.

-என்பது வள்ளுவர் வாக்கு. இதன் மூலம் தீயவற்றைத் தராத சிறந்த செல்வம் என்றால், அது கல்விச் செல்வம் ஒன்றுதான் என்கிறார் அவர். ஆனால் மாணவர்களுக்கு அறிவுச் செல்வமாகத் திகழவேண்டிய கல்வியை, இந்துத்துவாவின் சேறாக்கியும் வர்ணாசிரமச் சகதியாக்கியும் அவர்கள் புத்தியில் பூச நினைக்கிறது மோடி அரசு.

Advertisment

இதற்காகவே புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏறத்தாழ ஒரு குருகுலக் கல்வி முறையைக் கொண்டுவரத் துடிக்கிறது அது.

ஏற்கனவே கல்வித்துறையில் மூக்கை நுழைத்து நீட் தேர்வை அமல்படுத்தி, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைக் கருகிப் புகைய வைத்திருக்கும் பா.ஜ.க.வுக்கு, ஏனைய படிப்புகளையும் விட்டுவைக்க மனமில்லை. அதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த நினைக்கிறது.

அது என்ன புதிய கல்விக்கொள்கை?

Advertisment

இந்தியாவின் பன்முகத் தன்மையைத் தகர்த்துவிட்டு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே ரேசன் கார்டு என இந்தியாவை முழுக்க முழுக்க இந்து நாடாக்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் தாளாத ஆசை. அதேபோல் இந்தியா முழுக்க ஒரே கல்வி என்ற நிலையையும் உருவாக்கத் துடிக்கும் பா.ஜ.க. அரசு, இதுகுறித்து ஆராய, ஏவுகணை விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு, புதிய கல்விக் கொள்கைக்கான 484 பக்க வரைவு அறிக்கையை மோடி அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை ஜூன் 1-ந் தேதி வெளியிட்ட மத்தியஅரசு, இது குறித்து ஜூலை இறுதிவரை பொதுமக்கள் கருத்து சொல்லலாம் என்று அறிவித்திருக்கிறது. இது நாட்டின் நாளைய தூண்களான மாணர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விவகாரம். நிதானமாக அலசி ஆராய்ந்து முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி இருக்க, அதுகுறித்து விவாதிக்கக்கூட அதிக அவகாசம் தராமல், அவசர கதியில் இதை மோடி அரசு, அதிரடியாக நிறைவேற்றத் துடிக்கிறது. காரணம், அந்த அறிக்கையின் பரிந்துரைகள், இந்துத்துவாவின் அடிப்படையில் இயங்கும் பா.ஜ.க.வுக்கு பிடித்தமான பரிந்துரைகளாக இருக்கின்றன. அதனால்தான் இந்த அவசரம்.

கல்விக்கொள்கை குறித்து ஆங்காங்கே மக்கள் கூடி விவாதிக்கிறார்கள். அது குறித்து ஆய்வரங்குகளைச் சமூக ஆர்வலர்கள் நடத்துகிறார்கள். இந்த புதிய கல்வித் திட்டத்திலுள்ள ஆபத்துகளை உணர்ந்து, எதிர்ப்புக்குரலை எழுப்புகிறார்கள். குறிப்பாகக் கல்வியாளர்களும் மாணவர்களும்... ’இது கல்விக் கொள்கை போலவே தெரியவில்லை. கல்வி என்ற பெயரில் வேதகால சிந்தனைகளை விதைக்கப் பார்க்கிறார் கள். மாணவர்களை ஆரியபட்டர் காலத்துக்கு அழைத்துச் செல்லத் துடிக்கிறார்கள்’ என்று ஆவேசக்குரல் எழுப்புகி றார்கள். தி.மு.க., ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும் போர்க்கொடி பிடிக்கின்றன. காரணம்...

*இந்தி உள்ளிட்ட மும்மொழிப் பாடத் திட்டம்.

*மூன்றாம் வகுப்பில் இருந்தே தேசியப் பொதுத் தேர்வு.

* 8 வயதில் இருந்தே மாணவர்களுக்குத் தொழிற்கல்வி.

* 8 ஆம் வகுப்புக்கு மேல் செமஸ்டர் முறைத் தேர்வுகள்.

*சமஸ்கிருதப் பெருமிதம்.

surya

*தான் நினைக்கிற வேதாந்தக் கருத்துக்களை எல்லாம் மாணவர்களின் நெஞ்சுக்குள் திணிப்பதற்கான வல்லாண்மையை மத்திய அரசு கைப்பற்றுதல்.

-என்ற வகையிலான கஸ்தூரிரங்கன் குழுவின் அதிரடிப் பரிந்துரைகள் எல்லோரையும் திகைக்கவைத்திருக்கிறது. ராஜாஜி காலத்தில் கொண்டுவரப்பட்டு, தமிழக மக்களால் துரத்தியடிக்கப்பட்ட ’குலக்கல்வி’ முறையை, தொழிற்கல்வி என்ற பெயரில் கொஞ்சம் மாறுதல்களோடு மீண்டும் கொண்டுவரலாம் என்று பரிந்துரைக்கிறது இந்த அதிமேதாவிக் குழுவான கஸ்தூரிரங்கன் குழு. ராக்கெட் விஞ்ஞானி தயாரித்த பரிந்துரை, மாணவர்களின் வாழ்க்கையை புஸ்வாணமாக்கப் பார்க்கிறது.

இதனால்தான் ஏகப்பட்ட எதிர்ப்புகளைச் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறது புதிய கல்விக் கொள்கை. தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர்கட்சி போன்ற அனைத்துக் கட்சிகளும், புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்கமாட்டோம் என்று போர்க்கொடி பிடிக்கின்றன.

இதையெல்லாம் காது குடைந்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதிகார பீடங்கள், நடிகர் சூர்யா அது குறித்துக் குரல் கொடுத்ததைக் கண்டதும் பதட்டமாகிவிட்டன.

காரணம், அரசியல் கடந்த நிலையில் இருக்கும் சூர்யா சொன்னால், அது மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றுவிடும் என்று பா.ஜ.க. பயப்படுகிறது. "அகரம்' அறக்கட்டளை மூலம் மாணவர்களோடு நெருங்கியிருக்கும் சூர்யாவின் குரலை, ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் எதிரொலித்தால் என்ன ஆவது என்று அது அஞ்சுகிறது. அதனால் பா.ஜ.க.வும் அதன் அடிமைகளான அ.தி.மு.க.வினரும் சூர்யாவைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பொதுமக்கள் அந்த புதிய கல்விக் கொள்கை பற்றிய வரைவு குறித்து கருத்து சொல்லலாம் என்று அறிவித்துவிட்டு, பொதுமக்களில் ஒருவராகக் குரல்கொடுத்த சூர்யாவை ஏன் இவர்கள் தாக்கவேண்டும்? சூரியாவுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையா?

சூர்யா அப்படி என்ன சொன்னார்?

சூர்யா சொன்னதைப் பார்க்கும் முன், கஸ்தூரிரங்கன் குழு கொடுத் திருக்கும் இந்த அறிக்கை எப்படி காவி நிறத்தில் இருக்கிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அந்த அறிக்கையின் அடிநாதம் எப்படி இருக்கிறது?

இந்திக்கும் சமஸ்கிருதத்திற் கும் இந்த அறிக்கை ஆரத்தி எடுக்கிறது. வடமொழி அறிஞர்களையே இந்திய அறிஞர்களாக அது துதிபாடுகிறது. மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை உயர்த்திப்பிடிக்கிறது.

நம் நாடு சமயச்சார்பற்ற நாடு என்ற போதும், நம் கல்வித்திட்டத் தில் ஆன்மீகத்தைக் குழைத்துப் பூசுகிறது. இதை ஆய்வாளர்கள் பலரும் எடுத்துச்சொல்லி எச்சரிக் கிறார்கள்.

daf

புதிய கல்விக் கொள்கையைத் தீர ஆராய்ந்த சமூக செயற்பாட்டளரான அ.மார்க்ஸ் சொல்கிறார்...

* ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை முதலான அரசியல் சட்ட மதிப்பீடுகள் கஸ்தூரிரங்கன் அறிக்கையில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ள என்பது இதன்மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம்.

* இந்தியக் கல்விமுறையின் விளைச்சலாக, சரகர், சுஸ்ருதர், ஆர்யபட்டர், பாஸ்கராச்சாரியர், சாணக்கியர், பதஞ்சலி, பாணினி மற்றும் எண்ணற்றோர் உள்ளனர் என இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெருமக்கள் எல்லோரும் வடமொழிப் பாரம்பரியத்திலேயே வந்தவர்கள், திராவிடப் பாரம்பரியத்தில் சுட்டிக்காட்ட யாருமே கஸ்தூரிரங்கனின் கண்களில் படவில்லையா? பாணினியைச் சொல்லும் வாய் தொல்காப்பியரைச் சொல்லாதா? அவர்களுக்கு வள்ளுவரும் திருக்குறளும்கூட தெரியவில்லை.

* இங்கே குறைந்தபட்சம் இரு பாரம்பரியங்கள் இருந்துவந்துள்ளன. வடமொழிப் பாரம்பரியங்களுக்கு எவ்விதத்திலும் சளைத்ததல்ல தென்மொழிப் பாரம்பரியங்கள். ஆனால் இந்த உண்மையைக் கஸ்தூரிரங்கன் அறிக்கை புறக்கணித்துள்ளது.

* கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை உயர்சாதி மேட்டிமைத்தனத் துடன் இருப்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கடைப்பிடிப்பது பற்றிய இவ்வறிக்கையின் பரிந்துரை.

mm

எந்தப் புதிய இட ஒதுக்கீடு தொடர்பான வழிமுறைகளையும் ஏற்று நடத்தவேண்டும் என தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆணையிட முடியாது என்கிறது கஸ்தூரிரங்கன் குழு.

இட ஒதுக்கீடு தொடர்பாக அடித்தள சாதியினருக்கு சலுகைகள் அளிக்க தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்பதை கஸ்தூரிரங்கன் குழு மிக மெலிதாகத் திணிப்பது கவனத் துக்குரியது -என்கிறார்.

வருணாசிரமத்தின் அடக்குமுறையால் ஒரு காலத்தில் அக்ர ஹாரத்தினர் மட்டுமே கல்வி படிக்கும் உரிமையைப் பெற்றிருந் ததுபோல், மீண்டும் அப்படியொரு இருட்டு நிலையை இங்கே உருவாக்கத் துடிக்கிறது மோடி அரசு.

பழையபடி மனுதர்மமும் வர்ணாசிரமமும் கோலோச்ச வேண்டும் என்று நினைக் கிறது பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போதே இந்த தேசத் துக்கு காவி வண்ணத்தைப் பூசிவிட்டுப்போகவேண்டும் என்று மோடி அரசு பரபரக்கிறது.

இதை எல்லாம் புரிந்துகொண்டதால்தான் இந்தப் புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்ச்சமூகம் எதிர்க்கிறது. நம் சூர்யாவைப் போன்றவர்களும் எச்சரிக்கை மணி அடிக்கி றார்கள்.

அகரம் பவுண்டேசனின் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய சூர்யா, "பா.ஜ.க. கொண்டுவர நினைக்கும் புதிய கல்விக் கொள்கை, தன்னைப் போன்றவர்களுக்கு அச்சத்தையும் பதட்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துவதாகவும், அதனால் இதிலுள்ள விசயங்கள் மக்களிடம் உடனடியாகப் போய்ச் சேரவேண்டும்'- என்று நிலைமையின் தீவிரத்தை உணர்த்திவிட்டு, ’புதிய கல்விக்கொள்கை என்ற பெயரால்,

dadf

"தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு என்று தேர்வுகளே மாணவர்கள் முன் நிற்கப்போகிறது. நகரப்புற மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல், அவர்களை எப்படி நுழைவுத் தேர்வுக்கும் தேசியப் பொதுத் தேர்வுக்கும் தயார் செய்வீர்கள்? இந்த புதிய தேசியக் கல்வித் திட்டம், குழந்தைகளின் தலையெழுத்தை மோசமாக மாற்றப்போகிறது. அவர்கள் நம் கண்ணெதிரிலேயே சிரமப்படப் போகிறார்கள். அதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கப்போகிறோமா?

மூன்று வயதிலே மூன்று மொழி களை எப்படி மாணவர்களிடம் திணிப்பீர்கள்? இதைக் கல்விமுறையாக ஆக்கினால் எப்படி மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள்? எப்படிப் படிப்பார்கள்? அவர்களுக்கு யார் இதையெல்லாம் கற்பிப்பார்கள்? மூன்றாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு, ஐந்தாம் வகுப்பில் ஒரு பொதுத் தேர்வு, எட்டாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு என்றால் மாணவர்கள் பள்ளியை விட்டே ஓடிவிடமாட்டார்களா?' என்ற ரீதியில் தன் கவலைகளையே கேள்விகளாக்கினார்.

கடைசியாக, "இது நம் குழந்தைகளின் எதிர்காலம். நம் தலைமுறையின் எதிர்காலம். இதில் அச்சம் தரக்கூடிய அம்சங்களும் நிறையவே உள்ளன' ’என்றும் அடித்துச் சொன்னார். சூர்யா இப்படிப் பேசியதில் என்ன தவறு?

உடனே பா.ஜ.க.வைச் சேர்ந்த தமிழிசையும், ராஜாவும் சூர்யாவை ஒருமையில் வறுத்தெடுக்கிறார்கள். சூர்யா வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசினார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, பா.ஜ.க.வினருக்கு அடிவருடிகளாக இருக்கும் அ.தி.மு.க.வினரும் சூர்யா மேல் பாய்க்கிறார்கள். குறிப்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு, "புதிய கல்விக் கொள்கை பற்றிப் பேச சூர்யாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?' என்றதோடு, சூர்யாவை அரைவேக்காடு என்கிறார். அது மட்டுமா?

rr

அமைச்சர்கள் தரப்பு, இனி தமிழக அரசின் ஒத்துழைப்பு அகரம் பவுண்டேசனுக்குக் கிடைக்காது. எங்களைப் பகைத்துக்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்றெல்லாம் மிரட்டிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆனால் மக்கள் சூர்யாவைப் பாராட்டுகிறார்கள். தங்கள் குரலை சூர்யா எதிரொலித்ததாக மகிழ்கி றார்கள்.

நடிகர் சூர்யா ஒரு முன்மாதிரி இளைஞராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தபோதும், தனது பரபரப்பான திரைப்பணிகளுக்கு நடுவில் ஏழை எளிய மாணவர்களுக்காக தன் நேரத்தை ஒதுக்குகி றார். நாட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவர்கள், எந்தக் காரணத்தினாலும் சோர்ந்து சுருண்டுவிடக்கூடாது என்று எண்ணுகிறார்.

pp

படிப்பில் கெட்டிக்கார மாணவர்களும் தனித்திறன் கொண்ட மாணவர்களும் வறுமை காரணமாகத் தோற்றுவிடக் கூடாது என்று எண்ணுகிறார். அதனால் திறமையான ஏழை- எளிய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே "அகரம்' அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கி நல்லுள்ளம் கொண்ட இளைஞர்களின் துணையோடு வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

தன் அமைப்பு மூலம் ஆண்டுதோறும் திறமை யான மாணவர்களுக்குத் தகுதியான கல்வி நிறுவனங்களில் இடம் வாங்கிக்கொடுக்கிறார்.

அவர்களுக்கான கல்விக்கட்டணத்தையும் தேவையான உதவிகளையும் செய்கிறார். எண்ணெய் இன்றித் திரிகருகி, அணையத் துடிக்கும் சுடர்களைப் போன்ற மாணவர்களைக் கையில் எடுத்து அணைந்து போகவிடாமல் காக்கும் கரங்களாக மாணவர் உலகின் கனவு நாயகனாகவும் திகழ்கிறார்.

மாணவர்களுக்காகவே சிந்தித்து, அவர்களுக் காகவே வியர்வை சிந்தி, அவர்களின் கனவுகளை நனவாக்கித்தருகிற சூர்யாவை சில சில்லறைகள் சீற்றத்தோடு விமர்சிக்கின்றன. அவர்களைப் புல்புண்டு கூட பொருட்படுத்தாது என்பதுதான் நிதர்சனம்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களை, உரிய உதவிகளோடு உரிய இடங்களில் உட்காரவைத்து, எண்ணற்ற திறமையாளர்களை நாட்டுக்குத் தகுதிப் படுத்தித்தருகிற சூர்யாவை நாம் வாழ்த்துகிறோம். தமிழ் மக்கள் வாழ்த்துகிறார்கள். இந்த வாழ்த்துக்களே அவரை வாழவைக்கும்.

அவர் மட்டும் அல்லாது அவர் தந்தை நடிகர் சிவகுமாரும் தன் பெயரில் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கி 79-ஆம் ஆண்டு முதல் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியும் தன் பங்குக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். இப்படி கல்விப் புரவலர்களாகத் திகழும் இந்தக் கலைக்குடும்பத்தின் மீது, மக்கள் அன்பு பெய்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் கடந்த 21-ஆம் தேதி நடந்த "காப்பான்' படவிழாவில் ரஜினி கலந்துகொண்டபோது, அதில் பேசிய பலரும், ரஜினியைப் பார்த்து, புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா சொன்ன கருத்தை, நீங்கள் சொல்லியிருந்தால் அது உடனடியாக பிரதமர் மோடியை எட்டியிருக்குமே என்று குறிப்பிட்டார்கள். அப்போது, "சூர்யா சொன்னதும் மோடியை எட்டியிருக்கிறது. புதிய கல்விக்கொள்கை குறித்த சூர்யாவின் கேள்வி களை வரவேற்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. மக்களின் எண்ணங்களை எதிரொலித்த சூர்யாவைப் போன்றோரின் குரல், அதிகார பீடங்களை எட்டியிருக்கிறது. அவர்களை அதிரவும் வைத்திருக்கிறது. அதன் எதிரொலிதான் சூர்யாவிற்கு வரும் மிரட்டல்களும் விமர்சனத் தாக்குதல்களும்.

பா.ஜ.க. கொண்டுவர நினைக்கும் புதிய கல்விக் கொள்கையைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

"புத்தகங்களே சமர்த்தாயிருங்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்' என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான். அவர் பாணியில் சொல்வதானால் ..

மத்திய மாநில அரசுகளே! புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால், மாணவர்களைக் கல்வி நிலையங்களில் இருந்தே துரத்தி விடாதீர்கள். வருத்தப்படுவீர்கள்...!

-கவலையோடு

நக்கீரன்கோபால்