பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும்

என்கிற குறளை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியாருக்காகவே மிகத் தீர்க்கமாக எழுதியிருக்கிறான் வள்ளுவன்.

பெரியாரை மதிக்காமல் நடந்து கொண்டால், அதனால் பெரும் துயரைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையைத்தான் வள்ளுவன் தந்திருக்கிறான்.

பெருமைக்குரிய சான்றோரைப் பெரியார் என்று வள்ளுவன் குறிப்பிட்டது, நம் தந்தை பெரியாருக்கு பொருத்தமாக அமைந்ததோடு, நம் தந்தை பெரியாரை மதிக்காதவர்கள் பட்ட பாட்டையும் இந்தக் குறள் குறிப்பிடுவது போல் அமைந்திருக்கிறது.

இந்த மண் திராவிட மண். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இது பெரியாரின் மண். பெரியாரின் சிந்தனையால் செறிவூட்டப்பட்ட மண். அதனால் இந்த மண்ணின் ஒவ்வொரு துகளும் வீரியமிக்கது. தன்மானம் கொண்டது. புறநானூற்றுப் போர்க்குணத்திலிருந்து கொஞ்சமும் மாறாதது.

இந்த மண்ணின் மதிப்பு தெரியாத மதவெறியர்கள் அண்மைக்காலமாக பெரியாரியத்துக்கு எதிராக முண்டா தட்டுகிறார்கள். அவரது புகழை மறைத்துவிடலாம் என்று குதர்க்கவாதிகள் கனவு காண்கிறார்கள்.

இப்படிப்பட்ட குதர்க்கவாதிகள் வரிசையிலே முன்னணியில் இருப்பவர்தான் ஹெச்.ராஜா.

பா.ஜ.க.வின் தேசியப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய கட்சியின் புகழை உயர்த்தவேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிற இந்த ராஜா, அன்றாடம் தனது அடாவடிப் பேச்சாலும் செய்கையாலும் தனது கட்சியைத் தலைகுனிய வைத்து வருகிறார்.

தமிழர்களுக்கு எதிரான, கருத்துக்களைச் சொல்லி அவ்வப்போது குட்டுவாங்குகிறவர் ராஜா. இவர் ஏற்கனவெ பெரியாரை விமர்சித்து நிறைய வாங்கிக் கட்டியிருக்கிறார். கலைஞரைக் கீழ்மையாக விமர்சித்து, பதிலடியை பலமாகவே வாங்கியிருக்கிறார். அண்மையில்கூட ஆண்டாளைப் பற்றிய மேற்கோளைக் காட்டி அவள் புகழ்பாடிய வைரமுத்துவை, மிகவும் தரக்குறைவாக விமர்சித்து தமிழ் உணர்வாளர்களிடம் கடுமையான சாட்டையடி விமர்சனத்தையும் வாங்கினார்.

நாய் வால் நிமிராத கதைதான் அவர் கதை.

அதனால்தான் நாக்கொழுப்பெடுத்து, பெரியார் சிலையை உடைப்போம் என்று தன் டிவிட்டர் மூலம் குப்பைச் சொற்களைக் கொட்டினார். சிலையுடைப்பு என்பது ஒருவித வக்கிர மனோபாவம்.

periyarகால் நூற்றாண்டு காலம் கம்யூனிச ஆட்சியில் தலைநிமிர்ந்திருந்த திரிபுரா மாநிலத்தில், இப்போது பா.ஜ.க. வெற்றி பெற்றது. இது வரலாற்றில் நேர்ந்த பெரும்விபத்து. இந்தத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவதாகச் சொல்லி அங்கிருக்கும் பா.ஜ.க.வினர் அங்கே வக்கிரக் கூத்துக்களை அரங்கேற்றினார்கள். பெலோனியா நகரில் இருந்த புரட்சியாளர் லெனின் சிலையைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் தகர்த்தார்கள்.

இந்தக் கொடுமை கண்டு அறிவுலகமே அதிர்ச்சியில் உறைந்து நின்றபோது... இங்கிருக்கும் ஹெச். ராஜாவின் புத்தி குதர்க்கமாய் வேலைசெய்தது. உடனே, அவர் தனது டிவிட்டரில்... இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈ.வே.ரா. ராமசாமி சிலை’ என்று பதிவிட்டார்.

இந்தக் கடைந்தெடுத்த மதவெறியருக்கு, சமத்துவப் பெரியார் சாதி வெறியராம்.

ராஜாவுக்கு யார் பெரியார் என்று தெரிய வில்லை.

அவர் 70 கோடி தமிழ் மக்களின் இதயங்களில் வாழுகிற மாபெரும் தலைவர் என்பது புரியவில்லை. பெரியார் என்பது சிலையல்ல சித்தாந்தம் என்பதும், அவரது சிலை என்பது வெறும் குறியீடு என்பதும் அவரது மரமண்டைக்கு உறைக்கவில்லை. பெரியார், கோடிக்கணக்கான தமிழர்களின் எண்ணங்களில் கோட்பாடாய் நிறைந்திருப்பவர் என்பதும் அவரின் மூட மூளைக்கு எட்டவில்லை. அதனால்தான் நாளை பெரியார் சிலையை உடைப்போம் என்று சூசகமாக அறிவித்தார்.

பெரியார் எரிமலை என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவர் மீது ராஜா கையை வைத்தார். அவ்வளவுதான், தமிழகமே கந்தகக் காடானது. அவருக்கு எதிராகக் கொந்தளிக்கத் தொடங்கியது. அதன் ஆரம்பத் தாக்கத்தைக் கண்டே மிரண்டுபோன ராஜா, தனது கேடு கெட்ட கருத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

ஆனால் ராஜாவின் பேச்சால் தைரியம் பெற்று, திருப்பத்தூரில் உள்ள பெரியார் சிலையை ஒருவன் சேதப்படுத்தினான். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டையிலும் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இது மேலும் தமிழகத்தை கொந்தளிக்கவைத்தது.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்தது. திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் என தமிழகத்தில் இருக்கும் இன உணர்வுள்ள அத்தனை கட்சிகளும் ஹெச்.ராஜாவைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. சென்னை அண்ணாசாலை ஸ்தம்பித்தது. இதேபோல் அங்கங்கே நடந்த ஆர்ப்பாட்டங்களால் தமிழகமே கிடுகிடுத்தது. முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் ராஜாவுக்கு எதிரான கண்டனங்கள் எரிமலையாய் வெடிக்கத்தொடங்கின.

இதைக் கண்டதும் தமிழக பா.ஜ.க. தலைவரான தமிழிசையே, எச்.ராஜாவின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்ததோடு, திருப்பத்தூரில் பெரியார் சிலையை உடைத்த அவ்வூர் பா.ஜ.க. செயலாளரான முத்துராமனைக் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்தார்.

இதுபோன்ற விவகாரங்களில் அதிகம் தலையிடாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று எச்.ராஜா கூறியதும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதும், "காட்டு மிராண்டித்தனமானது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்று சீறினார். இப்படி ராஜாவுக்கு எதிராகக் கண்டனங்கள் இங்கே வெடித்துக்கொண்டிருக்க, தமிழகத்தைத் தாண்டியும் பெரியாரின் அலைவீச்சு வேலைசெய்தது. அகில இந்திய காங்கிரஸின் இளம் தலைவரான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "திரிபுராவில் லெனின் சிலை தகர்ப்பை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் ஊக்குவிப்பதன் மூலம், தங்கள் சித்தாந்தத்துக்கு எதிரானவர்களின் சிலைகளை எல்லாம் தகர்க்குமாறு, தங்களது தொண்டர்களுக்கு அவர்கள் சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், தலித்களுக்காகவும் போராடிய மிக உயர்ந்த சமூக சீர்திருத்தவாதியான பெரியாரின் சிலை இன்று தமிழ்நாட்டில் உடைக்கப்பட்டிருக்கிறது' என்று தனது வேதனையைப் பதிவிட்டார்.

ஹெச்.ராஜாவால், தமிழகமே கலவரக் காடாக மாறுவதை அறிந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகம் ’சிலை உடைப்புச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை எந்தவிதமான பாகுபாடும் இன்றி, கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்' என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது.

அதேபோல், தமிழக பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ், "பெரியார் போன்ற பெரிய தலைவர்களை அவமதிப்பு செய்வதையும், சிலைகளை இடிப்போம் என்ற மரியாதை குறைவான கருத்துகளையும் பா.ஜ.க. ஆதரிக்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்' என பகிரங்கமாகவே ஹெச்.ராஜாவைக் கண்டிக்கும்வகையில் அறிவித்தார்.

இப்படி ராஜாவை அவர் சார்ந்திருக்கும் பா.ஜ.க. தரப்பே கடுமையாகக் கண்டித்து, ஒழுங்காய் இருக்கும்படி எச்சரித்தது. இதுதான் பெரியாரின் மகிமை.

பெரியாரின் சிலைகூட, பலமாக எதிர்வினை ஆற்றும் என்பதை மனக்குருடர்களுக்கு தமிழகம் உரிய வகையில் இதன்மூலம் உணர்த்தியிருக்கிறது.

சுற்றிவளைத்த நெருப்பிலிருந்து கூட ஒருவர் தப்பிக்கலாம். ஆனால்... பெரியார் போன்றவர்களைத் தொட்டால் தப்பிக்கவே முடியாது என்றும் கீழ்க்கண்ட குறள் மூலம் வள்ளுவனே எச்சரிக்கிறான்.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

-உணர்வுடன்

நக்கீரன் கோபால்