ஒரு தலைமுறைக்குத் தேவையான கவிதைகளைப் படைப்பவன் கவிஞன்; சில தலைமுறைகளையே படைப்பவன் மகா கவிஞன். எண்ணற்ற மகா கவிஞர்கள் நம் தமிழ் மண்ணில் தோன்றி மறைந்திருக்கிறார்கள். கம்பனுக்கு நிகர் எந்த கொம்பனும் இல்லை என்று பாராட்டப்பெற்ற கம்பன் வாழ்ந்த காலம் காவிய காலம். அதனால் அவனுடைய வரிகளில் கவித்துவமும் கற்பனை வளமும் கொஞ்சி விளையாடியது. தமிழினத்தின் சுமைகளைத் தன் தோளிலே சுமந்து போராடி ஒரு வேளைக் கஞ்சிக்கு வழியில்லாதபோதும் யாரிடமும் கெஞ்சிக் கவிபாடாத மகாகவி பாரதி வாழ்ந்த காலம் விடுதலைப்போராட்டக் காலம். அதனால் அவருடைய வரிகளில் மண்ணைத் தின்று மனிதனைக் கொன்ற கயவர்களின் மேலுள்ள கோபம் தீயாய் வெளிப்பட்டது. தமிழன் தன் உடலில் பச்சை இரத்தம் பரிமாறச் சொன்ன புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வாழ்ந்த காலம் மொழிப்போர் காலம். அதனால் அவருடைய வரிகளில் மொழி சார்ந்த விழிப்புணர்வும் பெண் விடுதலையும் தாண்டவமாடியது.
இவர்கள் அனைவருமே காலம் என்ற கண்ணாடியில் முகம் பார்த்த கவிஞர்கள். ஆனால், கவியரசு கண்ணதாசனின் காலகட்டம் பக்தி இலக்கியக் காலத்தைக் கடந்து திராவிடச் சிந்தனைகள் வேரூன்றிய காலம். அதனால் சைவக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கவிஞர் கண்ணதாசன் திராவிட இயக்கங்களின்மேல் உள்ள பற்றால் திராவிடச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். அந்த சித்தாந் தங்களை எல்லாம் தன் கவிதையிலே புகுத்தினார்.
காதல் ரசத்தை மதுரசத்தோடு சொட்டச் சொட்டப் பிழிந்து கொடுத்தார். காலத்தின் எல்லா திசைகளிலும் சென்று பயணித்து நிறைவில் சைவ சித்தாந்தக் கொள்கைகளிலேயே தன் மனதை ஈடுபடுத்திக்கொண்டார். முரண்பாடுகளை மூட்டையாக தனக்குள் வைத்துக்கொண்ட இவர் ஒரு மிகச்சிறந்த திறந்தவெளிப் புத்தகம். இந்த வெளிப் படைத் தன்மைதான் அவரை நமக்கு காலத்தை வென்ற கவிஞனாக அடையாளம் காட்டுகிறது.
காலத்தின் எல்லா நதியிலும் பயணித்தவர் மாபெரும் கவிஞர் கண்ணதாசன். "நான் ஒரு காலக் கணிதம்' என்று சுயபிரகடனம் செய்துகொண்டவர். அப்படிக் கவிதைகள் செய்த தவம்தான் கவிஞர் கண்ணதாசன். எல்லாக் கவிஞர்களாலும் தத்துவம் சொல்லமுடியாது. தத்துவம் பேசிய பலரால் கவிதை எழுதமுடியாது. பக்தி பேசுபவரால் புரட்சி பேச முடியாது. புரட்சி பேசுபவரால் பக்திக்குள் பயணிக்கவே முடியாது. கவிஞர்கள் பலரால் திரைப்படப் பாடல் எழுத முடியாது. ஆனால், கதை, கவிதை, கட்டுரை, காப்பியம், நாடகம், திரையிசை மற்றும் அரசியல் என்று எல்லாப் படகிலும் பயணித்தவர் தான் கவியரசு கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் மிகப்பெரிய ஆலமரம்; அதில் காப்பியங்கள் என்பது கிளை; வாழ்க்கைத் தத்துவங்கள் என்பது இலை; பக்தி என்பது பூக்களும் பழங்களும்; அவரின் அர்த்தமுள்ள இந்து மதம் மரத்திற்கான உரம் மட்டுமல்ல; அது மனதிற்கான உரமும்கூட; எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணதாசனின் கவிதைகள் இவை அனைத்தையும் தாங்கி நிற்கிற வேர் என்றுதான் கருத்தில் கொள்ளவேண்டும்.
இவருடைய கவிதைகள் காதலிலே காலூன்றி கற்பனையில் வேரூன்றி தத்துவத்தில் தலைநிமிர்ந்தவை. எண்ணச் சிறகடித்து எண்ணற்ற கவி படைத்து வண்ணத் தமிழுக்கே வடிவழகு கூட்டி வைத்தவன் கவிஞர் கண்ணதாசன். தாயும் தந்தையும் என்னைக் கைவிட்ட போதிலும் தமிழ் என்னைக் கைவிடவில்லை என்று சொன்னார்.
"தான் பெற்ற பிள்ளையை
ஏன் பெற்றோம் என்றுதான்
தாய் அன்று மாண்டு போனாள்!
தந்தையும் இப்பிள்ளை உருப்படாது என்றுதான்
தணலிலே வெந்து போனார்!
ஊன் பெற்று யானுமோர்
உயிர் கொள்ள வைத்தவன்
உயரத்தில் ஒளிந்து கொண்டான்!
உதிரத்தின் அனுவிலே தமிழன்னை மட்டுமே
உறவாக வந்து நின்றாள்! வான்பெற்ற பேறு போல்
நான் பெற்ற தமிழினால்
வாழ்கிறேன் கன்னி மயிலே!
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல் தாலாட்டிடும்
மதுரை மீனாட்சி உமையே!''
என்று தமிழ் தான் எனக்கு வாழ்வு கொடுத்தது என்று பாடுகிறார்.
அதுமட்டுமின்றி "புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்' என்று தன்னையே தெய்வமென்று அறிமுகப்படுத்திக்கொண்ட கவிஞன் மற்றொரு இடத்தில் "படைப்பதனால் என் பெயர் இறைவன்' என்று அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகிறான்.
சமூகச் சிந்தனைகளையும் தத்துவங் களையும் தன் படைப்பில் அதிகம் வெளிப்படுத்தியிருக்கிறார் கவிஞர். கண்ணதாசன் மனம் போன போக்கில் தன் சிந்தனைகளைச் செலுத்தியவர். கவிஞர் கண்ணதாசன் எல்லா நிலை யிலும் தன் உணர்வுகளைப் படைப்பு களாகக் கொடுத்து தன்னையே அகத் தாய்வு செய்து ஒரு அனுபவக் கவிஞனா கத் தன்னை அவர் வெளிப்படுத்திக் கொண்டார். அவர் கவிதைகளில் வழிந்தோடும் உண்மையும் வாழ்க்கைத் தத்துவங்களும் தான் அவர் எல்லார் மனதிலும் தனி இடம் பிடிக்கக் காரணமாக இருந்தது. வாழ்வின் நிதர் சனங்களையும் சமூக அவலங்களையும் அவரவர் நிலையில் இருந்து பாடி யிருப்பார் கவிஞர். இந்த உலகத்திலேயே மிகக் கொடிய நோய் "பசி'.
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.''
என்று பசியை உறுபசி என்கிறார் திருவள்ளுவர்; பசியில்லாத நாடு தான் நல்ல நாடு என்கிறார்.
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை; எனில் ஜகத்தினை அழித்திடுவோம்''
என்று கொந்தளிக்கிறான் மகாகவி பாரதி.
"அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்லை''
என உணவிடுவதுதான் அறம் என்கிறது மணிமேகலை. "நோய்களிலேயே கொடிது கொடிது பசி' என்றார் புத்தபிரான்.
கை, கால் ஊனமான மனிதன் உண்டு; வயிறு ஊனமான மனிதன் உண்டா. எச்சில் இலையை எந்தப் பக்கம் போடுவது இந்தப் பக்கம் நாய் அந்தப் பக்கம் மனிதன். சில இடங்களில் வயிறு பட்டினி கிடக்கிறது. சில இடங்களில் சோறு பட்டினி கிடக்கிறது. காலங்காலமாக பசி தன் நீண்ட நெடிய வரலாற்றை சிவப்பு மையினால் எழுதிக்கொண்டே இருக்கிறது. பசி எத்தனையோ பேரை சமூகத்தில் துரத்தியிருக்கிறது. அதில் கண்ணதாசனும் விதிவிலக்கல்ல. தன்னைத் துரத்திய பசியைத் தன் பேனாவினால் விரட்டினார் கவிஞர் கண்ணதாசன். கையில் காசு இல்லாமல் வறுமை வருத்தும்போது நெருங்கிய உறவு கள்கூட தூரமாகும். கையில் கொஞ்சம் காசிருந்தால் தூரத்து உறவுகளும் நெருக்கமாகும். மோசமான சமூகச் சூழ-ல் பசிக்கு விருந்தாகவும் நோய்க்கு மருந்தாகவும் உள்ள உறவு களைத் தெய்வமாக்கி தன் கவிதை வரிகளில் தேடுகிறார் கண்ணதாசன்.
"வாழ்வு வரும்போது சொந்த முறை பேசி
வருபவர் கோடியடி-நிலை
தாழ்ந்து வரும்போது பெற்ற மகன்கூட
தாங்குவதில்லையடி!
பசிக்கு விருந்ததாக நோய்க்கு மருந்தாக
இருப்பவர் தெய்வமடி- தன்
பசியைக் கருதாமல் பிறர்க்கு கொடுப்போர்கள்
தெய்வத்தின் தெய்வமடி!''
பசிக்கு விருந்தளிப்பவனையும் நோய்க்கு மருந்தளிப்ப வனையும் தெய்வத்தைவிட உயர்வாகக் காட்டுகிறார் கவிஞர். அதனால் தான் பசியில் இருப்பவருக்கு உணவு தருபவரின் பெருமையைப் பற்றி பதிவிடும்போது
"பசி என்று வந்தவர்க்கு புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடாலி கனிந்து பக்கத்தில் வருவானடா!'
' என்று கொடுப்பதில் இன்பம் மட்டுமல்ல இறைவனும் இருக்கிறார் என உணர்த்துகிறார் கண்ணதாசன். நம் சமூகத்தில் வேண்டியது எல்லாம் இருக்கிறது. ஆனால் எல்லாருக்கும் இருக்கிறதா என்பதுதான் இங்கு கேள்வி. இந்த கேள்வியில் ஒரு வேள்வி நடத்துகிறார். கண்ணதாசன் பொருள் இல்லாத ஏழைக்கு இல்லையே என்பது பிரச்சினை; பொருள் இருக்கும் சீமானுக்கு எல்லாம் இருப்பதுதான் பிரச்சினை.
"ஆண்டியின் கையில் திருவோடு- தினம்
அவனுக்கு வேலை தெருவோடு.
இருப்பவன் சண்டை பொருளோடு-
இந்த ஏழையின் சண்டை வயிறோடு''
என்று இன்றைய எதார்த்தமான சூழலைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர். இந்த உலகில் மனிதன் பல முகமூடிகளைப் போட்டுக்கொண்டு வாழ்கிறான். இதில் எது உண்மை. எது போலி என்பதை மனிதனின் நாக்கிலிருந்து வரும் வாக்கினால் மட்டுமே அறிய முடியும் என்கிறார் கவிஞர்.
"காக்காய் உண்டு. நரி உண்டு,- வரிக்
கழுதைகள் உண்டு, புலியுண்டு
மனிதரில் எத்தனை வகை உண்டு-
அவர் வாக்கினில் தெரியும் யாரென்று''.
எவன் "நான்' மறைய கற்கிறானோ அவனே அறிஞன் என்றார் கவிஞர். நாக்கை ஏன் ஈரத்தில் படைத்திருக்கிறான் இறைவன் என்று கேட்டபோது, "அடிக்கடி அசிங்கமாய்ப் பேசி விடுகிறோம்; அலம்பிக் கொள்வதற்காகத் தான்' என்றா ராம் கவிஞர். "நாவு மூன்றங் குலம் தான்; ஆனால், அது ஆறடி உயரமுள்ள மனிதனைக் கொன்று விடும்'' என்பது ஒரு ஜப்பானியப் பழமொழி.
அதனால்தான் மனித நாக்கு களுடன் கவனமாகப் பழக வேண்டும் என்று எச்சரிக்கிறார் கவிஞர் கண்ணதாசன். பணம் கையில் இருக்கும் நாளில் கனிவோடு ஓடி வந்தவர்கள் கைப்பொருள் போனபின் கல்லையும் புல்லையும்விட கீழாக நடத்துவார்கள். நம்மைக் கொல்லும் பாம்பும் வேங்கையும் உள்ள கூட்டத்தில் மனிதனையும் மனித நேயத்தையும் எப்படி இனம்காண முடியும். வாழ்நாளில் பாதி முடிந்து உடல் பாதி உயிர் பாதி தேய்ந்த பிறகு உறவிலும் பாதி மரணமாகிவிட்டது என்று குமுறும் கவிஞர்.
"மயிர் பாதி வீழ்ந்ததே
மதி பாதி சாய்ந்ததே
மனிதனுக்கு என்ன விலை''
என்று மனிதம் செத்துப்போய்க் கிடப்பதை கவிஞரின் வரிகள் ஆழமாக உணர்த்துகின்றது.
வாழ்வியல் சித்தாந்தங்களைத் தன் கவிதைகளில் அள்ளி வைத்திருப்பார் கவிஞர் கண்ணதாசன்.
"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்- அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்''
என்று சித்தாந்தத்திற்கும் வேதாந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தியிருப்பார் கண்ண தாசன். சித்தரின் வாக்கு கண்ணதாசனின் பாடல்களில் பல இடங்களில் எதிரொலிப்பதைக் காணலாம். கல்லை இரண்டாக உடைத்து ஒன்றைக் கோவில் சிலையாகவும் மற்றொன்றை கோவில் படிக்கட்டாகவும் அமைத்திருக்கிறீர்களே இதில் எது ஈசனுக்கு பிடிக்கும் என்று சிவவாக்கியர் என்ற சித்தர் தன் பாடலிலே கேட்டிருப்பார்.
"ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய்ச் செய்துமே,
வாசல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில், பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல் சொல்லுமே...''
என்பது சிவவாக்கியர் பாடல். இந்தச் செய்தியைக் கவிஞர் கண்ணதாசன் திரைப்படப் பாடல் வரிகளில் சொல்லும்போது "வாசல் படியும் கல் தானே- நாம் வணங்கும் சிலையும் கல் தானே கல்லினில் பேதம் இல்லையடா- அது கண்களில் மாறும் காட்சியடா'' என்று சித்தர் பாடலை தன் சித்தத்திலே வைத்துக் கவிதை எழுதினான் கண்ணதாசன்.
மனித உடல் என்ற பலூன் காற்றால் நிரப்பப் பட்டிருக்கிறது. ஒன்பது துவாரங்கள் உள்ள இந்த உடலில் மூச்சுக்காற்று உள்ளே இழுக்கும் வரைதான் மனிதனின் இயக்கம் இருக்கும் உள்ளே போன காற்று மொத்தமாய் வெளியே வந்துவிட்டால் மனிதனின் இயக்கம் உறக்கம் பெற்றுவிடும்.
"ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன்- அவன்
தடந்தெரிந்தால் அவன்தான் இறைவன்''
என்று இறைவன் யார் என்பதைத் தெளிவாக விளக்கும் கண்ணதாசன் தன் இன்னொரு முகத்தைக் காட்டுகிறார்.
தத்துவத்தில் கடவுளைச் சித்தரித்த கண்ணதாசன் எதார்த்தத்தில் கொடுமைகளைச் சாடுகிறான்.
ஒருமுறை பாகிஸ்தானை ஆண்ட யாயாகான் என்ற தளபதி வங்கதேச மக்களை கொடுமைப்படுத்துகிறான். அதுகண்டு கவிஞருக்கு கோபம் வருகிறது. பாஞ்சாலி கூப்பிட்டபோது வந்த கோபாலன் வங்கதேசத்து மங்கையின் கண்ணீருக்கு ஏன் பதில் சொல்ல வரவில்லை என்று சாடுகிறார்.
"பாஞ்சாலி பூந்துகிலைப்
பற்றி இழுக்கையிலே
ஆண் ஜாதி நாமென்றே
அங்கு வந்த கோபாலன்
மான் ஜாதி வங்காள
மங்கையர்கள் கண்ணீரை
ஏன் காணவில்லை அது
எனக்கும் புரியவில்லை! எல்லையில்லாத் துயர் தீர
இறைவன் வரவில்லையெனில்
இல்லை அவன்' என்பாரை இறைவனென நாம் துதிப்போம்!''
என்று அநியாயங்கள் நடக்கும்போது தட்டிக்கேட்க யாரும் வரவில்லை எனில் இறைவனே இல்லை என்று சொல்லி இறைவனே இல்லை என்போரை இறைவனாய் நினைப்போம் என்று தன் வீரியமிக்க திராவிடச் சிந்தனைகளைப் பாட்டிலே விதைத்தார் கவிஞர் கண்ணதாசன். கடவுளை மறுத்த கண்ணதாசன் தன் பயணத்தின் நிறைவில் கடவுளைக் கொண்டாடி மகிழ்ந்தார். எதையெல்லாம் முதலில் பாராட்டினானோ அதையெல்லாம் பழித்தான்; இருக்கு என்றதை இல்லை என்றான்; இல்லை என்றதை இருக்கு என்றான். "மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற கவிஞரின் வரிகளுக்கு அவரே இலக்கணமானார். என் எழுத்துக்கள் அத்தனையும் சரி என்று நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் எனத் தன்னையே இறக்கி மதிப்பிட்டுக்கொண்டார் கவிஞர்.
"நடைபாதை வணிகனென
நான்கூறி விற்றபொருள்
நல்ல பொருள் இல்லை அதிகம்
ஊர் நெடுக என் பாட்டை
உளமுருகப் பாடுகையில்
ஓர் துயரம் என்னுள் வருமே''
என்று கண்ணதாசனைத் தவிர வேறு எந்தக் கவிஞனா லும் இவ்வளவு தைரியமாகத் தன் மனதைத் திறந்து காட்டமுடியாது.
கவிஞர் கண்ணதாசனின் கடைசிப் பயணத்தின்போது கவிஞர் வாலி எழுதினார்.
"சிறுகூடல் பட்டியிலே பிறந்து சிகாகோவில் சங்கமித்த ஜீவநதி இது!
கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மது அருந்தியது!
இது தெரிந்து மது வருந்தியது! எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்!
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்து எறிந்துவிட்டான்!''
என்று நெஞ்சுருகிப் பாடினார்.
ஒரு சமயம் பத்திரிகையில் வெளிவந்த செய்தி இது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அப்பா மதுரைக்கு அருகிலுள்ள அவர் சொந்த ஊரில் இறந்து விட்டார். மதுரைப் பக்கம் இறந்தவர் வீட்டில் பாடல் போடும் வழக்கம் உண்டு. அங்கு கவிப்பேரரசு அமர்ந்திருக்கிறார். அப்போது அவர் வீட்டில் எல்லாம் கண்ணதாசன் பாடலாக ஒலித்துக்கொண்டிருந்தது. உடனே கவிப்பேரரசு வைரமுத்து.
"எட்டாயிரம் பாடல்கள்
எழுதிவிட்டேன் என்ற இறுமாப்பில் அமர்ந்துகொண்டேன்! அப்பன் சாவுக்கு
ஒரு பாட்டு எழுதலையே!
கன்னத்தில் அறைந்து சொன்னான் காலத்தின் கவிஞன் கண்ணதாசன் நான்தான் என்று!''
என கண்ணதாசனின் புலமையில் புளகாங்கிதம்
அடைந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
பன்முகத் திறன்கொண்ட கவிஞர் கண்ணதாசன் காலம் கடந்து நின்றவன். மனம் என்ற கண்ணாடியில் தன் நிஜமுகத்தைக் காட்டிய ஒரு மகத்தான கவிஞர். அதனால்தான் காலத்தின் கணக்குகளில் பின்னுக்குத் தள்ளப்படாமல் இன்றும் நம் முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கவிஞனும் காற்றும் மரித்ததாய் சரித்திரம் இல்லை என்பார்கள். உண்மை என்ற யாக சாலையை நோக்கி கவிஞரின் கவிகள் தவம் செய்கின்றன... மீண்டும் நல்ல கவிஞனுக்காக...