சென்னையில் பாவேந்தர் புரட்சிக்கவிஞரின் நெருங்கிய நண்பரான வேணுகோபால்சர்மா, சிறந்த புகைப்பட நிபுணரும் ஆவார்; சிவப்புச்சால்வையும் புன்னகையுமாக இன்றும் நாம் காணும் பாவேந்தர் படம் அவர் எடுத்ததுதான்.
அவர் அப்போது சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள வசந்தவிகாரில்தான் தங்கியிருந்தார். பாவேந்தர் பெரும்பாலும் சென்னைக்கு வந்தால், அங்குபோய் அவரோடு தங்குவதுதான் வழக்கம்.
தலைசிறந்த ஓவியரான வேணுகோபால் சர்மா, கையில் ஓர் ஒற்றை ரோஜாவோடு உட்கார்ந்திருக்கும் மன்னர் ஒருவரி ஓவியம் வரைய பென்சிலால் கோட்டோவியம் போட்டு வைத்திருந்தார்.
""என்ன சர்மா, இது யாரோட படம்?'' என்று கேட்டார். பாவேந்தர். சர்மா பதில் சொன்னார். ""அடஏம்பா நீ வேற!... நான் ஒண்ணு சொல்றேன் செய்றியா?'' என்றபடியே, ஒரு மேஜை அளவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் படத்தின் முன் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார் பாவேந்தர். வேணுகோபாலசர்மா, மிகக் கவனத்தோடு அவரைப் பார்த்தார்.
""இதபார் சர்மா, வலது கையில் இருக்கிற ரோஜாவை எடுத்துடு; அதுக்குப் பதிலா ஒரு எழுத்தாணியைக் கொடு. இடது கையில் ஓலைச்சுவடி போடு. மேல உடுப்பெல்லாம் வேணாம். வெறும் உடம்பு, இடது தோள்ல அங்கவஸ்திரம், அதாவது பாதி உடம்பை, மறைச்சாப்ல இருக்கணும்; தலைல பெரிசா ஒரு முண்டாசு எழுதிருக்கியே? அதை அப்படியே சுருட்டி முடிஞ்சி ஜடாமுடி ஆக்கீடு.. அப்புறம்... ஒரு நிமிஷம்'' அந்தப் படத்தைப் பரவலாகப் பார்த்தார் பாவேந்தர்.
""ஊம்.. முக்கியமான விஷயம். கால்ல விரலெல்லாம் சேர்ந்தாப்ல இருக்கக் கூடாதுப்பா; கட்டைவிரலை மட்டும் கொஞ்சம் விலக்கி நிமிர்த்திவிடு. அறிவாளிங் களுக்கு அப்படித்தான் இருக்கும்!'' என்று கூறிவிட்டு எழுந்தார்.
சர்மா வியப்புடன் பர்த்தவாறே ""சரி, அதுமாதிரி யெல்லாம் செய்தா என்ன ஆகும்?'' என்றார் வேணுகோபால் சர்மா. ""புரியலே? நீதான் ஓவியனாச்சே!
நான் சொன்னதையெல்லாம் வெச்சி கற்பனை பண்ணிப்பாரேன்?... இதுவே திருவள்ளுவர் படம் ஆயிடும்!'' என்றார் பாவேந்தர். மீண்டும் வியப்போடு பார்த்தார் சர்மா.
அடுத்த தடவை பாவேந்தர் சென்னைக்குச் சென்றபோது, அந்த மன்னரின் 'கோட்டோவியம்' கண்கூடாகத் திருவள்ளுவராகவே ஆகிவிட்டிருந்தது! ""வேற என்ன செய்யணும் சொல்லுங்க?'' என்றார் வேணுகோபால் சர்மா.
""நீ எங்கிட்ட விட்டுடு. காமராஜர்கிட்டே சொல்லி, அரசாங்கம் மூலமா எதுனா இதுக்கு உதவி செய்ய முடியுமான்னு நானே பார்க்கிறேன்!'' என்று சொன்னார் புரட்சிப்பாவேந்தர்.
புதுவைத் தமிழ்ப் பேராசிரியர் சு. குமாரசாமி என்பாருக்குப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடாகியது. அப்போதைய தமிழக முதல்வரான கு.காமராசரையே அவ்விழாவிற்கு வரச் செய்யலாம் என்று கூறி, அவரைப் புதுவைக்கு அழைத்துவந்தார் பாவேந்தர். புதுவைக்கு வேணுகோபால சர்மாவையும் திருவள்ளுவர் ஓவியத்துடன் வரச்செய்தார்.
5.2.1959 வியாழக்கிழமையன்று மாலையில் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் பேராசிரியர் சு. குமாரசாமிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
அவ்விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் காமராசர், அப்பேராசிரியருக்குப் பொன்னாடை போர்த்தினார். விழா முடிந்ததும், புரட்சிக் கவிஞர் வீட்டில் திருவள்ளுவர் படத் திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருமாள் கோவில் தெரு, 95-ஆம் எண்ணுள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற அவ்விழாவிற்கும் புரட்சிக் கவிஞரே தலைமை தாங்கினார். அப்போது அவர், ஓவியர் வேணுகோபால் சர்மாவையும் அவரால் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவப் படத்தையும் பற்றி மனம்திறந்து பாராட்டிப் பேசினார்.
"திருவள்ளுவர் இப்படித்தான் இருந்திருக்க முடியும்; இதை எவனாலும் மறுக்க முடியாது' என்று அழுத்தந் திருத்தமாகக் குறிப்பிட்டு, அதைத் திறந்து வைக்குமாறு தமிழக முதல்வர் காமராசரைக் கேட்டுக்கொண்டு அவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.
காமராசர், திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து ஓவியர் வேணுகோபால் சர்மாவுக்குச் சால்வை அணிவித்தார். அன்றைய அவர் சொற்பொழிவு ரத்தினச் சுருக்கமாக அமைந்தது.
""நான் ஒண்ணும் பெரிய தமிழ்வித்வான் கிடையாது;
தமிழ்ல என்னென்னமோ ஏராளமான இலக்கியமெல்லாம் இருக்குங்கிறாங்களே அதையெல்லாம் படிச்சதும் கிடையாது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்னாட்டம் இல்லே; நிறைய படிச்சவர் - புலவர்.
அப்படியாப்பட்டவரே திருவள்ளுவர் இப்படித் தான் இருந்திருப்பார்னு அடிச்சி சொல்றார். அதனால திருவள்ளுவர் இதாட்டம்தான் இருந்திருக்கணும்கிறேன். இந்தப் படத்தைத் திறந்து வைப்பதில் நான் உள்ளபடியே ரொம்பவும் சந்தோஷப்படறேன்!'' - இதுதான் காமராசரின் அன்றைய பேச்சு.
விழாவில், புரட்சிக்கவிஞரின் மாப்பிள்ளையும் "குயில்' வார ஏட்டின் அமைச்சருமான (மேனேஜர்)
மா. தண்டபாணி நன்றி கூறிப் பேசினார்.
அன்றைக்குத் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல; விழாவிற்கு வந்திருந்த அனைவருக்குமே புரட்சிப் பாவேந்தர் வீட்டில்தான் சாப்பாடு. என்ன சாப்பாடு தெரியுமோ? வான்கோழி பிரியாணி! அதுதான் காமராசருக்குப் பிடிக்குமாம். பாவேந்தரே சொன்னது இது!
அதன்பிறகு அந்தத் திருவள்ளுவர் படம் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பொருட்காட்சித்திடலில் காட்சிக்கு வைக்கப் பட்டது. பேரறிஞர்அண்ணா, நாவலர், கலைஞர் முதலான அரசியல் தலைவர் களெல்லாம் பார்த்துப் பாராட்டினார்கள்.
இதற்கெல்லாம் பிறகுதான் 15-2-1960-ல் காமராசர் ஆட்சிக்காலத்திலேயே திருவள்ளுவர் திருவுருவம் 15 காசு அஞ்சல்தலையாக வெளிவந்தது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது (9-6-1967) தலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் திருவுருவப் படம் சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட்டது.
1975-ல் சென்னை -அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில், அரசு ஏடான தமிழரசு பத்திரிகையின் 5-ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி ஒரு சிறப்பான காரியம் செய்தார். அதுவரை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளையாட்சிக் கால ஆளுநர்கள் படத்தையெல்லாம் எடுத்துவிட்டுத் தமிழறிஞர்கள் பன்னிருவரின் திருவுருவப் படங்களை அம்மண்டபத்தில் வைக்க ஏற்பாடு செய்தார், அவர் ஆலோசனைப்படியே, வேணு கோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியம் - எழுந்து நிற்பதுபோல வேறொரு ஓவியரால் சித்திரிக்கப்பட்டு ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது எளிமையான அந்த விழாவில் சர்மா உட்பட அந்த ஓவியங்களை வரைந்த அத்தனை ஓவியர்களுக்கும் முதலமைச்சரான கலைஞராலேயே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நின்ற நிலையில் தமிழ்த்தாய் ஓவியம் ஒன்றும் வேணுகோபால சர்மாவினல் வரையப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் ஓவியமும் சர்மாவால் வரையப்பட்டுள்ளது அதே கலைஞர் அவர்கள் மீண்டும் முதலமைச்சரானபோது திருவள்ளுவர் திருவுருவத்தை நமக்களித்த அந்த மாபெரும் ஓவியர்.வேணுகோபால் சர்மா முதுமை காரணமாக உடல் நலிவுற்றிருந்தார்.
மருத்துவச் சிகிச்சைக்கென முதல்வராக இருந்த கலைஞர், அரசு மூலம் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங் கினார் ஆயினும் அவர் நலம்பெறவில்லை.
-இத்தகு போற்றுதலுக்குரிய ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால சர்மா அவர்கள் பிறந்தநாள் 1908 டிசம்பர் 17 ஆகும். வாழ்க வளர்க அன்னார் புகழ் (குயில் - 2015 மற்றும் பல்வேறு தரவுகளின் தொகுப்பு).