"திருப்பூர் மத்திய அரிமா சங்கம்' சார்பில் 2017-ஆம் ஆண்டுக்கான "அரிமா சக்தி விருதை' பெற வருமாறு உடுமலை ஸ்ரீ சிவாஜி விசாலாட்சிக் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத தலைவர் தமிழ்ப்பாவை அழைப்பு விடுத்த போது "சக்தி' என்ற அந்தச் சொல் என்னுள் இரண்டு ஞாபப்பறவைகளை தட்டி எழுப்பி சிறகடிக்கச் செய்தது.
முதலாவதாக-
""சிவனில் பாதி சக்தி என்று
ஆணுக்குள் பெண்ணைப் பூட்டிவைக்க
இங்கு ஆண்டவன் கதைகளும்
துணை நிற்கின்றன அல்லவா...
"எங்களில் நாங்களே நிறைந்திருப்போம்' என்று நீ
எதிரடி கொடுக்கும் நாள் எந்த நாள்...?''
என்ற எனது கவிதை வரிகள் (2009)-ல் எழுதியவை என் நினைவில் வந்தன.
இன்று நேற்றல்ல ஆயிரம் ஆண்டுகள் முன்பே, பாடல் எழுத வந்த அறிவார்ந்த ஒரு பெண்ணை அவர் கையாலேயே "தையல் சொல் கேளேல்' என்று எழுத வைத்த ஆணாதிக்க சமூகம் இது. அதன்பிறகு 600 ஆண்டுகள் கழித்து வந்த பாரதி அதை "தையலை உயர்வு செய்' என்று மாற்றியமைத்தார்.
இன்றைய பெண்களோ தம்மை உயர்வு செய்ய யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காமல் அதற்கான முயற்சிகளைத் தாமே கையெடுத்து முழுவீச்சில் நிறைவேற்றி வருகிறார்கள்.
இரட்டைச் சுமை சுமந்தோ, ஒற்றைப் பெற்றோராக மொத்தச் சுமையும் சுமந்தோ குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். அது மட்டுமல்லாது. தாம் காலடி வைக்கும் ஒவ்வொரு துறையிலும் அயராமல் உழைத்துத் தம்மை நிலைநிறுத்துகிறார்கள். சுயமரியாதை மிளிர. சொந்தக்காலில் நிற்கும் அந்தப் பெண்கள் தம் கம்பீர வெளிச்சத்தினால் சக பெண்களுக்கும் பாதை காட்டுகிறார்கள்.
சில ஆண்கள்... (வெகுசிலர்) பெண்கள் பற்றிய எதிர்கால அச்சத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்கள்.
"இனிவரும் காலத்தில் பெண் ஆதிக்கம் செலுத்தி ஆணை அடிமை செய்வார்கள். "ஆணியம்' பேசவேண்டிய நிலை வரும்' என்று! இது வேடிக்கையாகச் சொல்லப்பட்டாலும் அவர்கள் முன்னெடுத்து வைக்க வேண்டிய முக்கியமான கருத்து ஒன்று உள்ளது.
சமீபகாலம் வரையிலும் கூட ஆண் இறந்து போனால் அவன் எரிக்கப்படும் சிதையில் அவன் மனைவியையும், மனைவி என்று சொல்லிக்கொண்டதான பெண்களையும் உடன் எரித்துக்கொன்றார்கள்.
இதுபோன்றதொரு நிகழ்வு எதிர்கால வரலாற்றில் எந்தக் காலத்திலும் பெண்களால் (ஆணை உடன்கட்டை ஏற்றுதல்) நிகழ்த்தப்பட நிச்சயம் வாய்ப்பேயில்லை. ஆணாதிக்கக் கொடூரத்தின் உச்சம் அது.
இதற்காக ஆணை மட்டும் குறைசொல்வது பொருத்தாது. எதையோ காரணம் காட்டி எதற்காகவோ அன்றைய மூடச் சமூகம் இத்தகைய கொடுமையை இழைக்கும்படியாக ஆணைத் தூண்டிவிட்டு துரோகம் இழைத்தது. அதற்குத் துணைபோகவேண்டிய கட்டாயத்திற்கு ஆண் இரையாகிப்போனது நடந்தது.
இவ்வாறான குரூரங்களையும், வலிகளையும் பார்த்தும், சகித்தும், ஜீரணித்தும் வந்த பெண்கள், இன்று தமக்குச் சாதகமான ஒரு சூழ்நிலை கனிந்து வருகின்ற வேளையில் ஆவேசத்துடன் தம்மை முன்நிறுத்துவது நியாயமும், இயல்புமே ஆகும். இந்த நிலை நிகழ்வது தவிர்க்க முடியாதது. எனவே.
"ஏதேனும் காரணம் கண்டுபிடித்து கூண்டிலிருந்து வெளியே வந்து பறக்கும் அவர்களின் சிறகை மீண்டும் முறித்துவிடாதீர்கள்' என்பது எனது எளிய வேண்டுகோள்.
இவ்வாறு பெண் ஆணிலிருந்து வெளியேறி பாதியாக அல்ல ஜோதியாக ஒளிவிடும் இன்றைய காலகட்டத்தில் எனது அந்தக் கவிதை வரிகள் அவற்றிற்கான தேவை நிறைவேறிய திருப்தியில் பூரிக்கின்றன.
"சக்தி' என்ற சொல் நினைவூட்டிய மற்றொன்று ""எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே'' என்ற பாரதியின் வரிகள்.
இங்கு எல்லாருமே தந்தையர்க்கானவைதாம். குடும்பம், மொழி, அரசியல், இலக்கியம், திரைப்படம்... அனைத்துமே ஆண்களுக்கென்றே ஆகிவந்த "தந்தையர் நாடு'தான் இது.
ஆனால் அப்படி. உச்சரிக்கும்போது, இன்று மூச்சில் சக்தி பிறக்கிறதா...? நிச்சயமாக இல்லை. எல்லாமும் பழுதுற்று... பட்டுப்போய்... பலவீனமாகிக் கிடக்கிறது தேசம். குறிப்பாக இன்றைய அரசியல்.
இனிவரும் காலத்தில் பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வந்தால் மட்டுமே நாடு பிழைக்கும் என்று என்போன்றோர் நினைக்க வைக்கிறது இன்றைய நிலை.
அரசியலுக்கு வந்த "பெண்கள்' என்ன செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. நியாயம்தான்.
அவர்கள் அசல் பெண்களாக அரசியலுக்கு வரவில்லை. ஆண் முகமூடியுடன் வந்தார்கள், ஆணாக நடிக்கத் தொடங்கினார்கள், அல்லது ஆணாகவே மாறிப்போனார்கள். அரசியலில் ஆண்களின் பல அராஜகங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அதைவிடப் பெரிய அராஜகம் செய்யவேண்டிய கட்டாயம் நேர்கிறது பெண்ணுக்கு. அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.
நமக்கு வேண்டியது "அத்தகைய பெண்' அரசியல் அல்ல. இரக்கம், தாய்மை, பாசம், பொறுமை, பெருங்கருணை, பெருமன்னிப்பு என்ற பெண்ணின் இயல்பே ஆன நல்ல தன்மைகள் மாறாமல் வந்து இன்றைய அடாவடி அரசியலின் போக்கை மாற்றி அமைக்கும் திராணியுள்ள பெண் அரசியல்.
பெண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பொதுவெளிக்கு வரும்போது வெவ்வேறு வழிகளில் அவர்களைத் தேய்த்து, நசுக்கி அழித்துவிடும் பணிகள் எளிதாக நடக்கின்றன. அங்கிங்கெனாதபடி ஆண்கள் போலவே பெண்களால் நிறைய வேண்டும் பொதுவாழ்வின் தளங்கள். அப்போதுதான் புத்தம் புதிதாய் எதுவும் மலர்வது சாத்தியம்.
அதன்பிறகான அந்த அழகிய தேசத்தையும் "தந்தையர் நாடு' என்று அழைத்தாலும் பெண்ணுக்கு வருத்தமோ, கோபமோ வராது. நல்ல கனி குலுங்கும் (குடும்ப) விருட்சத்தின் வேராக மறைந்திருந்து பெயரற்று வாழ்ந்து மடியும் பெருந்தன்மையும் பெண்ணின் இன்னோர் அழகிய இயல்பல்லவா...!
பெண் மீதான அடக்குமுறை பிரகடனப்படுத்தப்பட்டதாக இருந்தது. இன்றோ அது அருவமாக அவளுக்கான அச்சுறுத்தலாகத் தொடர்கிறது. "அப்படியே இருந்தாயானால் உனக்கு நல்லது. இப்படி நீ மாற நினைத்தால்... இப்படியான பல பிரச்சினைகளை நீ சந்திக்க நேரிடும்' என்பதாக.
பிறப்பில் கற்பிக்கப்பட்ட சாதி இழிவு போலவே இங்கு ஆண்- பெண் பேதமும் பிறப்பிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆணாகப் பிறந்ததனாலேயே அவன் கொண்டாடப்பட வேண்டியவன் பல சலுகைகள் அவனுக்கானவை. பெண் என்பதாலேயே இவள் இரண்டாம் பட்சமானவள் அடங்கிக்கிடக்க வேண்டியவன் என்பதாக.
ஆணின் பார்வையில் பெண் உடல் ஒரு போகப் பொருள். அவளின் உறுப்புகள் நுகர்பொருட்கள். அவள் அவனின் உடைமை. இது பெரும்பாலான ஆண்களுக்கான எண்ணம். லீனா மணிமகேலை, சல்பா, வெண்ணிலா, சுகிர்தராணி போன்ற இன்றைய இளம் கவிதைப் பெண்கள் இதற்கான தமது கோபங்களை தம் கவிதைகளில் அழுத்தமாகப் பதிகிறார்கள். தமது உடல் வேட்கையை பட்டவர்த்தனமாக- பகிரங்கமாக முன்வைக்கிறார்கள். மாலதி மைத்ரி "கொக்கலிக்கும் முலைகள்' என்று கவிதை எழுதியிருப்பதும், குட்டிரேவதி தன் கவிதை நூலுக்கு "முலைகள்' என்று பெயர் வைத்திருப்பதும் ஏதோ தற்செயலானவை அல்ல. ஆணாதிக்க சமூகத்துக்கான அதிர்ச்சி வைத்தியம். "நாற்குணமும் நாற்படையா(க)' என்று தமயந்தியைப் பாராட்டும் சேக்கிழாரின் பெரிய புராண செய்யுள் வரி... பெண்ணின் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்கள்- அரசனின் யானை, குதிரை, தேர், காலாட்படை போன்று அவளுக்கு பெருமையும், பாதுகாப்பும் தருவன என்கிறது.
பிறகு வந்த பாரதி "நானும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்' என்றார்.
இன்றைய பெண்கள் அந்த நான்கு குணங்களைத் தம்மைப் பீடித்திருந்த படை போன்ற நோயாகக் கருதி தூக்கி தூர வீசி விட்டு சுதந்திரமாக நடக்கிறார்கள்.
நம் குடும்ப அமைப்பில், ஆண்- ஆதிக்கம் செய்பவன்; பெண்- அடங்கி நடப்பவள் என்பதை பெரும்பாலான குடும்பங்கள் உறுதியாக கடைப்பிடிக்கின்றன.
அந்தச் சூழலில் வளர்ந்து வரும் மனிதர்கள் வாழும் நம் சமூகம் மட்டும் வேறெப்படி...? அடிமைப் பெண்ணும் ஆதீக்க ஆணும் சேர்ந்து ஆண்டான் அடிமை முறையை கட்டிக்காப்பாற்றுகிறார்கள்.
கேட்டால்... "பெண் பலவீனமான பிறப்பு' என்கிறார்கள் யோசித்துப்பாருங்கள்... மாதவிடாய், கருத்தரிப்பு, பிள்ளைப்பேறு, பாலூட்டல், மெனோபாஸ் என்று உடல்ரீதியான பல்வேறு பிரச்சினைகளோடு வாழ்ந்து ஆண்கள் சந்திக்கும் அதே பிரச்சினைகளையும் எதிர்கொண்டு கடும் உழைப்புத் தேவைப்படும் பல்வேறு வகையான குடும்பப் பொறுப்பு குழந்தை வளர்ப்பு போன்றவற்றையும் குறையின்றிச் செய்யும் பெண் பலவீனமான பாலினமாம்.
வன்முறை ஆளுகின்ற ஒரு சமூகத்தில் இவை பலவீனங்களாகத்தான் கருதப்படும். அறம் ஆட்சி செய்யும் சமூகத்தில் பெண்ணே வலிமையானவள் என்று உணரப்படக்கூடும்.
நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் நாம் கண்டெடுத்த ஓர் அழகிய அமைப்புதான் குடும்பம் என்றே ஏற்றுக்கொள்வோம். ஆனால் அதுதான் பெண்ணைப் பொறுத்தமட்டில் அவளை முற்றிலும் முடக்கிப் போடுகின்ற நச்சுசூழ் இடமாக இருக்கிறது. அவளின் உழைப்பைச் சுரண்டுவதாக, கனவுகளைச் சிதைப்பதாக, கற்ற கல்வியைக் கொல்வதாக... இன்னும் இப்படி நிறைய...!
அதற்காக இன்றைய சூழலில் குடும்ப அமைப்பைத் தகர்த்துவிட முடியாது. அதற்கு அறிவில் மிகவும் மேம்பட்ட ஓர் உன்னத நிலையில் மனித மனம் இருக்கவேண்டும். அதற்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கும்.
இப்போதைக்கு குடும்பத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக மாற்றி அமைக்கவேண்டும். ஆண், பெண், குழந்தைகள் என்னும் இவர்கள், யாரும் யாரையும் எதற்காகவும் கட்டுப்படுத்தாமல் பூரண சுதந்திரத்துடன் சேர்ந்து வாழும் ஓர் அழகிய ஜனநாயக அமைப்பாக குடும்பம் உருவாக வேண்டும். அதுவே ஆண், பெண் சமத்துவத்துக்கான ஒரு சிறந்த வழி.
ஆதித்தாயாக தாய்வழிச் சமூகத்தின் தலைவியாக இருந்தவள்... பெண். காலத்தின் ஏதோ ஒரு கெட்ட நிகழ்வாக அவள் தள்ளிவிடப்பட்டாள். தலைகுப்புற கீழே வீழ்ந்தும் விட்டாள். இப்போது அவள் முன் நிமிர்ந்து நிற்கும். நீங்கள்- ஆண் என்ன செய்யவேண்டும்? அவர்களைக் கைப்பிடித்து தூக்கி எடுத்து நிறுத்தவேண்டும்- அது, உங்கள் கடமை, ஏன்...?
"கல்யாணம் என்றபோது கழுத்தில் கயிறு கட்டச் சொன்னார்கள்ஆடுமாடா நாங்கள்...? என்று கேட்கத் தவறிவிட்டோம்.
கணவன் இறந்து போனால் "கைம்பெண்' என்றார்கள் உடன்கட்டை ஏறும்படி
உத்தரவு பிறப்பித்தார்கள்.
பிறகு
தலைமயிரை மழித்துவிட்டு
தனித்திருக்கச் செய்தார்கள்
வெள்ளை உடைகொடுத்து
வித்தியாசப்படுத்தினார்கள்
அடுத்து
பூ பொட்டு வளையல் மட்டும்
புருஷனோடு போகட்டும்
கலர்ப்புடவை கட்டுங்கள்- என்று
கருணை கொஞ்சம் காட்டினார்கள்
இன்று-
மறுமணமும் புரிந்து கொள்ள
மனம் கொஞ்சம் இறங்கினார்கள்
மெல்ல மெல்ல இவர்கள்
சீர்திருத்தம் செய்வதற்குள்
சொல்லவொண்ணாத் துயரில்
சுக்கல் சுக்கலாகிப் போனோம்
நாங்கள்...''
எனவேதான் பட்டென்று சொன்ன பாரதியை
பெண்களுக்குப் பிடித்திருக்கிறது.
"கற்பு நிலையென்று சொல்ல வந்தால்
இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்
என்று கறாராகச் சொன்ன பாரதியைப்
பெண்களுக்குப் பிடிக்கிறது.
அப்படி என்றால் இனி-
ஆண்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பாரதியாக மாறவேண்டும். காதல் ஒருத்தியைக் கைப்பிடித்து
அவள் காரியம் யாவிலும் கைகொடுக்க வேண்டும். கற்பு, பண்பாடு என்றெல்லாம் காலம் காலமாக
அவர்கள் தூக்கிச் சுமக்கும் சுமைகளின் பெயரால்
அவர்களின் ஆளுமையை சிதைக்கின்ற காரியங்களுக்குத் துணைநிற்கக் கூடாது.
இருபெரும் சக்திகளாக ஆண், பெண் விஸ்வரூபம் எடுக்கும்போதுதான் நாம் எதிர்பார்க்கின்ற பயமற்ற, அறம் சார்ந்த, அன்பு நிறைந்த சமூகம் உருவாகும் நிலை எதிர்காலத்திலேனும் சாத்தியமாகும்.
பெண் வீழ்ந்து கிடந்தவள். இப்போதும் ஆறாத ரணங்களின் வலிகளைக் கொண்டிருப்பவள். தற்போது தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ளும் எத்தனிப்பில் போராடிக் கொண்டிருக்கிறாள். சில நேரம் அவளின் செயல்கள்- திகைப்பை, சலிப்பைத் தரக்கூடும். ஆனாலும் காலம் மாறும்வரை ஆண் காத்திருக்கவேண்டும். அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ பெண்ணின் இன்றைய சூழ்நிலை உருவாகக் காரணமாகிவிட்ட ஆண்கள் அதற்கான பிராயசித்தம் செய்வதற்கென்று வாய்த்திருக்கும் அழகிய தருணம் இது. ஒரு தாயாக அவளைத் தாங்கிப் பிடித்து உயர்த்துங்கள்.
அவளுக்காக... உங்களுக்காக... நமக்கான நல்ல சமூகத்துக்காக..