உயிர்வாழ மிக முக்கியமான ஒன்று உணவு . ஆரோக்கிய உணவு என்றாலே வீட்டில் அம்மா சமைத்துக் கொடுக்கும் உணவுதான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளைப் போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு. பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் “மடை நூல்” என அழைக்கப்படுகிறது. அதனைப் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை, மணிமேகலை, பெருங்கதை முதலிய நூல்களில் கூறப்படுகின்றன. ஆரோக்கிய உணவு வகைகள், உண்ணும் முறை பற்றி, நமது சங்க கால மக்கள் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் என்பதைத்தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.
சத்துணவு:
சத்துணவு என்பது மனித வளர்ச்சிக்கும், வாழ்க்கை நலத்திற்கும் வேண்டிய சத்துப் பொருள்களைத் தரத்திலும் அளவி லும் போதுமானபடி கொண்டுள்ள உணவாகும். இது சீருணவு அல்லது நலம் தரும் நல்லுணவு எனப் படும். உடலின் பல்வேறு வேலைகள் செவ்வனே நடப்பதற்குத் தேவையான சக்தியை அளிக்கவும் சீருணவு மிகவும் அவசியமாகும்.
உணவே மருந்து:
நம் தமிழகத்தில்தான் 'உணவே மருந்து' என்ற ஓர் ஒப்பற்ற பின்பற்று தல் நம் உணவு பழக்க வழக்கத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இதற்கான ஆதாரம் நம் சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, கலித்தொகை போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது . நம் தமிழ் மண்ணில்தான் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவு பொருட்களுக்கும் அதன் தன்மை அறிந்து, அந்தந்த காலத்திற்கு ஏற்ப அமுது படைத்தது நம் உணவுக் கலாச்சரம்.
சித்தர்கள் வகுத்த உணவு வழக்கம்:
தமிழகத்தில் தோன்றிய, சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால், எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்கவேண்டும், எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உணவாக இருக்கவேண்டும் என்ற கொள்கையாகும்.
சித்தர்கள் “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலை எழுதி அந்த நூலிலே நாம் சாப்பிடக்கூடிய தண்ணீர், பாலின் வகைகள், பருப்பு, அரிசியின் வகைகள், வெள்ளாட்டுப் பால், பசும் பால், காராம்பசு பால், எருமைப் பால் என்று ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி அவற்றின் குணங்களை விளக்கியுள்ளனர் .
அந்த உணவுப் பொருள்களுக்கான குணத்தை வகுத்து, ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூறுக்குத் தகுந்த எந்த உணவை எந்தப் பருவகாலத்தில் சாப்பிடவேண்டும்? என்ற வரைமுறைகளை எல்லாம் தமிழர்களுடைய பழங்கால வாழ்வியல் முறைகளில் எழுதப்பட்டுள்ளது.
பாரம்பரிய சிறுதானிய உணவு:
தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர்.
அதில் பிரதானமானது வரகு, திணை, குதிரைவாலி, சாமை. இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர் கள் எந்த நோய்நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்ததை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம், நம் பாட்டி தாத்தா சொல்லி கேட்டிருக்கிறோம்.
சிறு தானியங்களை உபயோகப்படுத்தும் பழக்கம் எல்லாத் தட்டு மக்களிடையுமே இருந்திருக்கிறது.
அதாவது ஆடி, பொங்கல், தீபாவளி போன்ற தினங் களில் மட்டுமே அரிசிச் சோற்றை சாப்பிட்டு வந்த தமிழ்ச் சமூகம் ஒன்று இருந்தது. அது காலப்போக்கில் அன்னியர் ஆதிக்கத்திற்குப் பிறகு, மேற்கத்தியக் கலாச்சார மோகம் வந்த பிறகு தினமும் அரிசிச் சோறு சாப்பிடக்கூடிய பழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவுமே வேரூன்றக்கூடிய காலகட்டம் வந்தது. ஆக பாரம்பரிய சிறுதானிய உணவுகளைத் தினசரி பயன்படுத்தும்போது நோயின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது.
பண்டைய தமிழர்கள் சாப்பிட்ட உணவு களி ஆகும். ஆக காலை வேளையில் தோட்ட வேலைக்குப் போகக்கூடிய தமிழர்கள் வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி , கம்புக்களி உண்டு வந்தனர். களி என்பது திடப்பொருள் உணவாகும். இந்த மாதிரியான களியை உட்கொண்டு தோட்டத்திற்கு செல்லும்போது அவர்களால் கடுமையான வேலைகளைக் கூட செய்யமுடிந்தது. ஊட்டத்திறன், உண்டாற்றல், உந்துசக்தி எல்லாமே அந்த உணவில் கிடைத்ததால் அவர்கள் செய்த வேலை என்பது மிகச்சிறந்த பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டு உடலோம்பலும், அதன் மூலம் அற்புதமான ஆரோக்கியமும் அவர்களுக்குக் கிடைத்தது.
பண்டைய தமிழரின் உணவு:
வாழ்ந்த நிலத்துக்கேற்பவும் குலத்துக்கேற்பவும் பண்டைய தமிழரிடையே உணவுகள் வேறுபடுகின்றன. எனினும், அனேக தமிழர்கள் சோறும், மரக்கறியும், புலாலுணவும், மதுவும் விரும்பியுண்டனர் என்பது தெரிகின்றது. நெற்சோறு, வரகுச்சோறு, வெண்ணற்சோறு, நண்டுக் கறி, உடும்புக் கறி, வரால்மீன் குழம்பு, கோழியிறைச்சி வற்றல், பன்றியிறைச்சி, முயல், ஈயல், மாங்கனிச் சாறு, மாதுளங்காய், மிளகுப்பொடி, கறிவேப்பிலை பொரியல், ஊறுகாய் என தமிழ்நாட்டில் வாழ்ந்த பலதரப்பட்டோர் உண்ட உணவுகள் ஆகும்.
"கடுகு இட்டுக் காய்கறிகளை தாளிப்பது",
"பசுவெண்ணையில் பொரிப்பது",
"முளிதயிர் பிசைந்து தயிர்க் குழம்பு வைப்பது",
"கூழைத் தட்டுப் பிழாவில் ஊற்றி உலரவைப்பது",
"ஈயலை ஊறப்போட்டு புளிக்கறி சமைப்பது"
போன்ற பழந்தமிழர் சமையல் வழிமுறைகள் ஆகும்.
மேலும், தென்னைக் கள்ளு, பனங்கள்ளு, வீட்டில் சமைத்த "தோப்பி" என்ற ஒருவகைக் கள்ளு ஆகியவற்றைப் பழந்தமிழர்கள் விரும்பி உண்டனர்.
உணவுண்ணும் முறைகள்:
வெளிநாட்டவர் போலின்றி கைகளால் சாப்பிடும் முறையே தமிழரால் பின்பற்றப்பட்டது . நம் தமிழகத்தைப் பொறுத்தவரை கரண்டி, முட்கரண்டி, கத்தி கொண்டு சாப்பிடும் பழக்கம் அறவே இல்லை. இவை எல்லாம் ஆங்கில ஆதிக்கத்தில் நாம் கற்றதாகும்.
தரையில் சப்பளாங்கால் போட்டு வரிசையாக அமர்ந்து உண்ணுவதே நம் தமிழர் பண்பாடு. குடும்பத்தில் முதலில் பெரியவர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உணவு பரிமாறிவிட்டு அடுத்து இளைய தலைமுறை சிறுவர்களுக்கு உணவு பரிமாறி, கடைசியாக வீட்டுப் பெண்டிர் உணவு சாப்பிடுவார்கள்.
பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 முறைகள்:
• அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளுதல்.
• உண்ணல் - பசிதீர உட்கொள்ளுதல்.
•உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளுதல்.
• குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளுதல்.
• தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளுதல்.
• துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
• நக்கல் - நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.
•நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
•பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடித்தல்.
•மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
•மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
•விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.
வாழையிலையில் உணவு:
விருந்துகளில் அல்லது அன்னதானங்களில் வாழையிலையில் உணவுண்பது தமிழர் வழக்கம். இந்தியாவிலும் இலங்கையிலும் வாழையிலை இலகுவாக பெறக்கூடிய மலிவான பொருள். ஆகையால் பலருக்கு உணவளிக்கும் பொழுது வாழையிலையைப் பயன்படுத்தியிருக்கலாம். நடுத்தர உணவகங்களில் பாத்திரங்களின் மேல் அளவாக வெட்டப்பட்ட வாழை இலையை வைத்து உணவு பரிமாறுவது உண்டு. இப்பயன்பாடு, பாத்திரங்களில் தூய்மை காக்கவும், சுத்தப்படுத்துவதற்கான நீரை சேமிக்கவும் உதவுகிறது. சிற்றுண்டிகளைத் தட்டில் பரிமாறும் உணவகங்கள் கூட சோற்றை வாழையிலையில் பரிமாறுவதே வழக்கம். உணவகங்களில் பாத்திரங்களின் தூய்மையைப் பற்றி ஐயமுறுவோர், வாழையிலையில் உண்ண விரும்புவதும் உண்டு. வாழையிலையில் கைகளால் உணவுண்ணுவது உணவுக்கு சுவைகூட்டும் என்பது பலரது எண்ணமாக இருக்கிறது.
சங்ககால தமிழர் சமையல்:
சங்க காலத்தில் அருகாமையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு உணவு சமைத்து உண்டனர்.
"ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக: ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் போதையும் புனைக,
அன்னைவை பலவும் செய்க, என்னதூஉம்"
பெரும்பாலும் பண்டமாற்று முறையின் மூலம் ஐவகை நிலங்களில் விளைந்த (கிடைத்த )பொருட்களை விற்று மாற்றுப்பொருளைப் பெற்று வாழ்ந்துள்ளனர். புலவர் வடமவண்ணக்கன் தாமோதரனாரால் பாடப்பெற்ற 172 வது புறநானூற்றுப் பாடலில் 1-4 வரிகளில் உள்ளது.
பிட்டனின் வெற்றி வேலும், அவன் அரசன் கோதையும், இவர்களோடு மாறுபாடு கொண்டி ருக்கும் மன்னர்களும் நீண்ட காலம் வாழ்வார்களாக. எதற்காக,சேர அரசன் கோதை குதிரைகளைக் கொடையாக வழங்குபவன்.
அவன் படைத்தலைவனாகிய பிட்டனும் கொடை வள்ளல்.
ஐவன நெல்லுக்கு இரவில் காவல் புரிவோர் ஏந்தும் தீப்பந்தம் இரவில் ஒளிரும் மணி ஒளியை மங்கச் செய்யும் மலைநாட்டை உடையவன் பிட்டன்.
ஒளிரும் அணிகலன் பூண்ட விறலியரே! உலை ஏற்றுங்கள். சோறு ஆக்குங்கள்.
எல்லாருக்கும் கள்ளை ஊற்றித் தாருங்கள். நீங்களும் மாலை சூட்டிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சிக்காக எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். உங்களுக்குக் கொடுப்பதற்குப் பிட்டன் இருக்கிறான்.
வருத்தப்படவே வேண்டாம் என்பதே அதன் பொருள் .
நற்றிணையில் சமையல் முறை:
சங்க கால மக்களின் உணவுமுறை மற்றும் சமையல் முறைகள் நற்றிணையில் உள்ளன.
அவை அவர்களின் உணவு வகை மக்களின் பருவச் சூழ்நிலை, வாழும் நிலத்தின் தன்மை, விளையும் பொருள்கள், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.
சங்க கால மக்களின் உணவு வகைகள் உடல் நலத்திற்கு ஏற்றவையாக இருந்தன. மேலும் உணவைச் சுவையுறச் சமைப்பதிலும், உண்பதிலும் அம்மக்கள் சிறந்து விளங்கினர்.
பெரும்பாலும் அக்காலத்தில் உணவினை நீரிட்டு, அவித்தல், வறுத்தல், சுடுதல் வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், ஊறவைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றினர். நற்றிணைப் பாடல் ஒன்றில் தலைவி இரவில் வந்த விருந்தினருக்கு நெய் விட்டுக் கொழுப்பு உடைய ஊனைச் சமைக்கின்றாள் என்று குறிப்பு உள்ளது.
“எல்லி வந்த நல் இசை விருந்திற்கு
கிளர் கிழை அரிவை நெய் துழந்து
அட்ட விளர் ஊன் அம் புகை எறிந்த
நெற்றி சிறுநுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரெ
நற்றிணை 41(5,10)
ஆரோக்கிய உணவு :
ஐவகை நிலத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் மன்னர் கள் அனைவரும் சுவையான உணவைச் சமைத்து, உபசரித்து, பரிமாறியதைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. உணவு பரிமாறும் முறையை முதலில் தமிழர்கள்தான் கண்டறிந்த்துள்ளனர். இனிப்பை முதலிலும் பிறகு சாதம், குழம்பு, ரசம், இறுதியாக தயிரைப் பரிமாறுவதுதான் சரியான முறை என்பதைக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக உணவு பரிமாறும் முறையைப் பற்றிய செய்திகளைக் குறுந்தொகையில் காண முடிகிறது.
சங்க காலத்தில் தூய்மையாக உணவு தயார் செய்தல், உணவை முறையாகப் பரிமாறுதல் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்கி உள்ளனர். இன்றளவும் கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காக்க உதவியது சங்க காலத்தில் பின்பற்றிய சத்தான உணவுப் பழக்கங்களே என்றால் அது மிகை அன்று. எனவே நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நம் பாரம்பரியம், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் ஆகியவற்றை இழந்துவிட வேண்டாம்.
(ஆவடியில் நடந்த உலக முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை!)