நீண்டகாலமாக ஆட்கள் வசிக்காத ஒரு பிரம்மாண்ட வீடு. இரு நூற்றாண்டு கால வரலாறாவது அந்த வீட்டிற்கு இருக்கவேண்டும். முற்றிலும் பேரமைதியான சூழல்... நிலத்தில் ஏராளமான பெரிய மரங்கள் வளர்ந்து நின்றிருக்கின்றன. பெரிய மரங்களின் சூழ்ந்து இறங்கிய வேர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக பெரிய அந்த கட்டடத்தின் சுவர்களில் நிறைய விரிசல்கள் விழுந்திருந்தன.

என் மனம் நீண்டகால நினைவுகளுக்குள் கடந்துசென்றது. அந்த பாரம்பரிய வீட்டின் பழைய புகழ்களின் மீதங்களில் பலவும் காலத்தால் அழிக்கமுடியாமல் இப்போதும் இருக்கின்றன. நான் அங்கு எதற்காக சென்றேன்? ஏதோவொரு இனம்புரியாத, ஆழமான உணர்வு என்னை அந்தப் பகுதிக்கு ஈர்த்தது.

தனிமையான அந்தச் சூழல் எனக்கு முன்பே பிடித்தமானதுதான்.

ஓய்வுக் காலங்களில் நான் என் சொந்த ஊருக்குச் செல்லும்போது, அந்த இடத்தைப் போய்ப் பார்ப்பேன். இப்போதும் எனக்கு அந்த இடத்தின்மீது இருக்கக்கூடிய ஆர்வம் குறையவே இல்லை.

Advertisment

எட்டி, தேனீச்சம், போதி, தேக்கு, மலை வாகை, பூவரசு, காட்டுச் செண்பகம் ஆகிய மரங்கள் இரு பக்கங்களிலும் வளர்ந்து நிற்பதற்கு மத்தியில் போய்க்கொண்டிருக்கும் பாதை.... அந்தப் பாதை சென்று முடிவது... பெரும்பாலும் சிதிலமாகிவிட்ட ஒரு கோவிலின் வளாகத்தில்.

கோவிலுக்கு மிகவும் அருகிலேயே பெரிய ஒரு குளம் இருப்பதைப் பார்க்கலாம். கோவில் குளத்தில் நிறைய வெள்ளைத் தாமரைப் பூக்கள்.... குளத்தின் கற்படிகள் இடிந்து தகர்ந்து காணப்படுகின்றன. குளத்தைச் சுற்றி பலவகையான காட்டுக்கொடிகள் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன.

முழுமையான மழைக்காலத்தில் அந்தக் குளத்தைப் பார்க்கும்போது, இனம்புரியாத ஒரு பயம் உண்டாகும்.

Advertisment

குறிப்பாக... தனிமையாக இருக்கும்போது.

பேரமைதியில் மூழ்கிக் கிடக்கும் அந்த குளத்தின் பகுதியில் இரவுப் பொழுதின் இரண்டாவது

ஜாமத்தில் கண்ணாடி வளையல்களின் "கிலுகிலு' சத்தம் கேட்கும். வறண்ட கோடையில் குளம் மிகவும் அழகாகக் காட்சியளிக்கும்.

இளம் நீல வண்ண நீரில் வஞ்சிர மீன்களும் விரால் மீன்களும் நெளிந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

நிலவு வெளிச்சம் இருக்கும் இரவு வேளைகளில், இடிந்த கற்படியில் அமர்ந்து நான் கனவுகள் காண்பதுண்டு. என் நண்பன் எப்போதும் பாடக்கூடிய ஒரு பாடலின் இரண்டு வரிகள் என் உதடுகளின் வழியாக மிதந்து வரும்:

"வெண்ணிலா சோலையில்...

வெண்ணெக் கல் படிகளில்...

மண் குடமேந்தி

ஒரு பெண் வந்தாள்...

ஒரு பெண் வந்தாள்....''

குளிர்கால மாலைப்பொழுதுகளில் மண் குடத்துடன் கற்படிகளில் இறங்கி வரும் பேரழகியான ஒரு இளம்பெண்ணின் வருகையை எதிர்பார்ப்பேன். அது என் மனதின் ஒரு நல்ல கற்பனை என்று தோன்றாது.

சிதிலமடைந்த ஆலயமும் அசைந்து எரிந்துகொண்டிருக்கும் கல் விளக்கும் நறுமணம் கலந்த காற்றும் என் மனதில் வரையக்கூடிய ஓவியம் இப்போதும் அப்படியே தங்கி நிற்கிறது.

சூரியன் மறையும் வேளையில் இந்த புனித ஆலயத்தில் வழிபடுவதற்காக வரும் கிராமத்தைச் சேர்ந்த அழகான பெண்களின் முகத்தில் மலர்ந்திருக்கும் பெண்மைத் தன்மை என் மனதில் பிரகாசமான பல அருமையான கலை வடிவங்களைச் செதுக்குகிறது.

அழகும் கள்ளங்கபடமற்ற தன்மையும் கொண்ட இந்த முகங்களின் சாயல்களைப் பார்க்கும்போது, இந்த குளத்தில் மலர்ந்து நின்று கொண்டிருக்கும் வெள்ளைத் தாமரை என் மனதில் தோன்றும்.

இந்தச் சிறிய கோவிலில் தீபாராதனை நடைபெறும் வேளையில் என் மனதில் அமைதியின் நிழல் பரவும். சாயங்காலம் தாண்டி, நள்ளிரவு வரும்போது, இந்தப் பகுதி பூமியிலிருந்து தனிமைப்பட்டு நிற்கும் ஒரு புலிக்குகை கொண்ட மலையைப்போல தோன்றியிருக்கிறது.

கோவிலின் சுற்றுவட்டாரத்தில் யாருமே வசிக்கவில்லை.

வழிபடுவதற்காக வருபவர்கள் சாயங் காலத்திற்கு முன்பே தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுவார்கள். கிராமப் பெண்களின் புண்ணிய தரிசனத்தைப் பார்க்கவேண்டுமென ஆசைப்படுபவர்கள் மாலை நேரத்திற்கு முன்பே இங்கு வந்துவிடவேண்டும்.

சாயங்காலம் கடந்துவிட்டால், இந்தப் பகுதியை அனைவரும் மறந்து விடுவார்களோ?

ஆலயத்திற்கு நேராக கிழக்கு திசையில் செல்லும் ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்தால், ஆற்றின் கரையை அடையலாம். நீர் மருத மரமும் ஏராளமான கடம்ப மரங்களும் நிறைந்திருக்கும் இந்த நதிக் கரையைத்தான் நான் என்னுடைய யமுனையாக நினைக் கிறேன். இந்த யமுனையின் கரையில் பூத்து நின்றுகொண்டிருக்கும் ஆற்று வஞ்சி, நதியின் நீரில் மலர் அர்ச்சனை செய்யும் காட்சி என்னை சிலிர்ப் படையச் செய்கிறது. இங்கு நிறைய நீல மலர்களைக் கொண்ட ஒரு வகை யான பாசி வளர்ந்திருக்கிறது. பெயர் என்னவென்று கூறமுடியாத காட்டுப் பூக்கள் இந்த நதியின் கரையில் செழிப்பாக வளர்ந்திருக் கின்றன. இந்தப் பூக்களின் பல வகையான நறுமணம் காற்றில் கரைந்து சேர்கிறது.

இங்கு பல மணி நேரங்கள் நான் தனிமையில் இருந்திருக்கிறேன். இயற்கையின் இந்த அழகை ரசிப்பதுடன் சேர்ந்து என் மனதின் கரைகளில் மெல்லிய துக்கமும் போர்வையென மூடிக்கொள்கிறது. மனரீதியான ஒரு வகையான பலவீனம் காரணமாக இருக்கலாம்.

மிகவும் பழமையான கோவில் கோபுரங்களின் வாசல்களைக் கடக்கும்போதும், மிகுதியான சந்தோஷம் வழிந்தொழுகும் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும் தருணங்களிலும், இயற்கைக் காட்சிகளை ரசிக்கும்போதும் என் மனதில் காரணமே இல்லாமல் துக்கம் தோன்றுகிறது.

நட்சத்திரக் குமாரிகள் உறங்கிக் கொண்டிருக்கும் பௌர்ணமி இரவுகளில் ஒன்றில் எனக்குப் பிடித்த ஒரு இளம்பெண்ணுடன் இந்த நதியின் கரையில், இரவுப் பொழுதில் வந்து இருக்கவேண்டுமென நான் தினமும் மனதில் நினைப்பதுண்டு. இது எதுவுமே நடைமுறை வாழ்க்கையில் நடக்காதென்ற விஷயம் தெரிந்திருந் தாலும், என் கற்பனை அப்படிப்பட்ட கனவுகளை இப்போதும் இறுக அணைத்துக் கொண்டிருக்கும்.

கடந்த மாதத்தில் அம்மிணி அக்காவின் ஆண்டு நினைவிற்காக நான் ஊருக்குப் போயிருந்தேன். அகாலத்தில் விதி, மரணத்தின் போர்வையைக் கொண்டு மூடிப் போர்த்திய அம்மிணி அக்காவை நினைக்கும்போது, என் கண்கள் ஈரமாகி விடும். எப்போதும் என்னை துக்கத்தில் மூழ்கச் செய்யும் சில நினைவுகளை என் மனதில் நட்டு வளர்த்துவிட்டு அவள் கடந்து சென்றுவிட்டாள். தகர்ந்துபோன என் காதலின் இடுப்பெலும்புகளில், ஆறுதல் படுத்தும் தேன்துளிகளைத் தெளிப்பதற்கு அவள் மட்டுமே இருந்தாள். இழப்பால் உண்டான துக்கத்தை நான் மறந்துகொண்டிருந்தேன்.

இன்று அறிவுரை கூறுவதற்கு அம்மிணி அக்கா இல்லை. அம்மிணி அக்காவின் சிரார்த்தத்தை நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு என்றாகிவிட்டது.

அவளைவிட நான்கு வயது இளையவன் நான். நானும் மணியும் சேர்ந்து காரியங்களைச் செய்தோம். மூன்று வயதான மணிதான் அம்மிணி அக்காவின் முதலாவதும் இறுதியானதுமான வாரிசு.

வேதனையுடன் நான் அந்த கர்மத்தைச் செய்தேன். அம்மிணி அக்காவின் அம்மா நின்று அழுது கொண்டிருந்தாள்.

வழக்கம்போல பெரியம்மாவின் அனுமதியை வாங்கிக்கொண்டு நான் வெளியே நடப்பதற்காகச் சென்றேன். நல்ல நிலவு வெளிச்சம் இருந்தது. வெளுத்த புழுதி நிறைந்த ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்தேன். சிறிது நடந்ததும், கோவில் குளத்திற்கு அருகில் போய் சேர்ந்தேன். பொழுது இருட்டிவிட்டது. மனிதனின் எந்தவொரு அசைவுகளுமில்லை. ஆற்று வஞ்சியின் பூக்கள் மலர் அர்ச்சனை நடத்தும் நதிக்கரையில் போய் அமர்ந்து காற்று வாங்கவேண்டும். நான் நதிக்கரையை இலக்கு வைத்து ஒரு ஃபர்லாங் தூரம் நடந்திருப்பேன்.

திடீரென எனக்குப் பின்னால் யாரோ நடந்து வருவதைப்போல தோன்றியது. திரும்பிப் பார்த்த போது, மண் குடத்துடன் வரும் ஒரு பெண்தான் அது என்று எனக்குத் தோன்றியது. நான் நடையின் வேகத்தைக் குறைத்தேன். அந்த இளம்பெண் அங்கு நின்றிருப்பதைப்போல தோன்றியது. வெறும் தோணலாக இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு ஓவியத்தைப் பற்றி நினைப்பது காரணமாக இருக்கலாம்... ஒருவேளை அவ்வாறு தோன்றுவதற்கு. நான் மீண்டும் நடந்தேன். எனக்குப் பின்னால் அவள் வந்துகொண்டிருந்தாள்.

நடையின் வேகத்தைக் குறைத்தேன். அந்த இளம்பெண்ணின் முகத்தைச் சற்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்திருக்குமோ? திடீரென அந்த மண் குடத்தை ஏந்தியிருந்த பெண்கொடி மிகவும் அருகிலிருந்த ஒரு கட்டடத்திற்குள் நுழைந்து செல்வதைப் பார்த்தேன். எனக்கே தெரியாமல் என் காலடிகள் அவளைப் பின்தொடர்ந்தன.

இடிந்து தகர்ந்துவிழும் நிலையிலிருந்த அந்தப் பெரிய வீடு நிலவு வெளிச்சத்தில் மூழ்கிக்கிடந்தது. இந்த வீடு யாருடையது? இந்தத் தனிமைச் சூழலில் யார் வசிப்பது? தெரிந்துகொள்ள வேண்டுமென்ற வேட்கை காரணமாகவா... அல்லது... அவளைப் பார்க்கவேண்டுமென்ற உள்துடிப்பு காரணமாகவா என்று தெரியவில்லை....

நான் அந்த கட்டடத்தில் கால்களை வைத்தேன். அங்கு நுழைந்தபோது, ஏதோவொரு வித்தியாசமான உணர்வு என்னை ஆக்கிரமித்தது.

மிகப் பெரிய மரங்கள் இடைவெளியின்றி நின்று கொண்டிருப்பதற்கு மத்தியில் ஒரு வன தேவதையைப்போல அவள் அந்த பிரம்மாண்ட கட்டடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

"கொஞ்சம் அங்கேயே நில்லு...'' நான் அழைத்துக் கூறினேனோ? என் குரல் வெளியே கேட்டதா? எதிர் பதில் இல்லை. மண் குடமேந்திய பெண்கொடி பெரிய கட்டடத்திற்குள் நுழைந்து சென்றாள்.

இல்லாவிட்டால்... உள்ளேயிருந்து தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்டிருக்காதே! எது வந்தாலும் வரட்டும்... அந்த வீட்டிற்குள் நுழைந்து அருகிலிருக்கும் ஏதாவது இடத்திற்குச் செல்லும் வழியைக் கேட்கும் சாக்கில் நெருங்கவேண்டுமென நான் முடிவு செய்தேன்.

பூட்டப்பட்டுக் கிடக்கும் வெளிவாசலைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. யானைச் சங்கிலியைக்கொண்டு வெளிவாசலின் தாழ்ப்பாள் பூட்டப்பட்டிருந்தது.

ss

நிறைய கலை வேலைப்பாடுகள் கொண்ட அந்தக் கதவின்மீது செதுக்கி வைக்கப்பட்டிருந்த யாளியின் முகம் இருட்டில் அச்சத்தை ஏற்படுத்துவதைப்போல இருந்தது.

"இங்கு யாரும் இல்லையா?'' நான் அழைத்து கேட்டேன். எதிர் பதிலுக்காக சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, மீண்டும் கூறினேன்:

"ஒரு வழிப்போக்கன்... குளத்தை அடைவதற்கான வழி தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறேன். இங்கு யாராவது இருந்து, கொஞ்சம் வெளியே வந்தால்... சிரமப்பட வேண்டியதில்லை.'' என் குரல் அந்த பேரமைதியைக் கலைத்தது என்பதைத் தவிர, எந்தவொரு அசைவுமில்லை. என் மனதிற்குள் அச்சத்தை உண்டாக்கும் சிந்தனைகள் ஊர்ந்து வர ஆரம்பித்தன.

நின்றிருந்த இடத்திலிருந்து ஒரு அடிகூட நகர்வதற்கு இயலாத அளவிற்கு நான் தளர்ந்துபோயிருந்தேன்.

எனினும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இன்னொரு கோணத்தில் சிந்தித்தேன். என் சத்தம் அந்தப் பெரிய வீட்டிற்குள் போய் சேர்ந்திருப்பதற்கு வழியில்லை. உள்ளே இருப்பவர்கள் கேட்காத காரணத்தால்தான், வெளியே வராமல் இருந்திருக்க வேண்டும்.

சில நிமிடங்களுக்கு நான் அந்த பிரம்மாண்ட கட்டடத்தைச் சுற்றி ஆராய்ந்தவாறு நடந்தேன். இறுதியில் வடக்கு மூலையில் திறந்துகிடந்த ஒரு சாளரத்தின் இடைவெளி வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன்.

அடர்த்தியாக இருந்த இருட்டில் ஒரு வெளிச்சத்தின் ஜுவாலை பரவியிருக்குமோ என்ற சந்தேகம் உண்டானது. மேலும் சற்று கவனம் செலுத்தி கூர்ந்து பார்த்தபோது, அறையில் அரை நிர்வாண கோலத்தில் ஒரு பெண் தலைமுடியை அவிழ்த்துப் போட்டுவிட்டு நிற்பதைப்போல தோன்றியது.

அந்த பெண்ணின் மார்புப் பகுதி நிர்வாணமாக இருந்தது. மண் குடத்துடன் நான் வெளியே பார்த்த பெண்கொடிதான் அவள் என்பது தெளிவாகத் தெரிந்தது. சற்று நிம்மதி கிடைத்திருப்பதைப்போல தோன்றியது. நான் சத்தம் உண்டாக்கினேன்.

மிகவும் மெதுவாக அழைத்தேன். என் குரல் உயர்ந்தது. திடீரென உள்ளேயிருந்து ஒரு தேம்பியழும் சத்தம் கேட்டது. உள்ளே பார்த்துக்கொண்டிருந்த வெளிச்சத்தின் கீற்று காணாமல் போனது.

தேம்பியழுவது உயர்ந்துகொண்டிருந்தது.

நான் எப்படி அங்கிருந்து ஓடினேன் என்று தெரியாது.

கோவிலையும் குளத்தையும் கடந்து, நான் ஒற்றையடிப் பாதையின் வழியாக ஓடிக் கொண்டி ருந்தேன்.

"ஓடுறது யாரு?'' எனக்கு எதிரே நெருப்பு பந்தத்துடன் வந்துகொண்டிருந்த ஒரு வழிப்போக்கர் அழைத்துக் கேட்டார். அப்போது பார்த்த நெருப்பு பந்தமும் வழிப்போக்கரும் என் மனதில் தோன்றும் மாயைகளாக இருக்கலாமென நினைத்தேன்.

மீண்டும் அந்த நெருப்பு பந்தம் வைத்திருந்த மனிதரிடமிருந்து சில கேள்விகளைக் கேட்டேன். நான் ஒருவகையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறினேன்:

"நானும் ஒரு வழிப்போக்கன்தான்.''

"இந்த போதாத வேளையில் எங்கிருந்து ஓடி வர்றீங்க? ஏன் இப்படி வெறிச்சுப் பார்க்குறீங்க?''

நான் மேலும் கீழும் மூச்சு விட்டவாறு...ஒரு வகையில் பதில் கூறினேன்:

"கோவில்ல இருந்து...''

"இந்த பொருந்தாத வேளையில் கோவிலில் என்ன வேலை?''

நடைபெற்ற சம்பவங்களை நான் அந்த மனிதரிடம் முழுமையாகக் கூறினேன்.

"தப்பிச்சது நல்ல விஷயம். கடவுள் துணையாக இருந்திருக்கிறார். மண் குடத்துடன் பார்த்த அந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட ஒரு ஆன்மா. பலரும் இந்த மண்குடம் வைத்திருக்கும் பெண்ணுக்கு பயந்து சாயங்காலம் வந்துவிட்டால், இந்த வழியில் வரமாட்டார்கள்.'' பெரியவர் இவ்வளவையும் கூறியவுடன், என் நாக்கு தொண்டைக் குழிக்குள் இறங்கிவிட்டதைப்போல உணர்ந்தேன்.

"எனக்கு தனியாக வீட்டுக்குப் போவதற்கு பயமாக இருக்கு. நீங்கள் கொஞ்சம் துணைக்கு வந்தால், பயம் இருக்காது. வசதிப்படாது என்றால், பெரியவரே... நான் உங்களுடனே இந்த ராத்திரியைக் கழிச்சிடுறேன்.''

என்னை வீட்டில் கொண்டு வந்து விடுவதற்கு பெரியவர் ஒப்புக் கொண்டார். வழியில் நடக்கும்போது, பெரியவர் அந்தக் கதையை விவரித்துக் கூறினார்.

கனகக்குன்று தலைவரின் பிரம்மாண்ட கட்டடத்தில் வைத்து வேற்று ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனிடமிருந்து கர்ப்பம் தரித்த ஒரு இளம்பெண்ணின் பரிதாபத்திற்குரிய முடிவை விளக்கிக் கூறினார்.

இடிந்து தகர்ந்த ஓரங்களையும் சிதிலமடைந்த கற்படிகளையும் கொண்டிருந்த அந்த கோவில் குளத்தில்தான் அவளை உயிருடன் கட்டி இறக்கிய செயல் நடந்திருக்கிறது.

வெள்ளைத் தாமரை மலர்ந்து நின்றுகொண்டிருந்த அந்தக் குளமும், அங்கு நடைபெற்றிருக்கும் சம்பவங்களும் என்னை நடுங்கச் செய்தன. அதுவொரு கற்பனைக் கதை என்று நம்புவதற்கு முடிந்தவரையில் நான் முயற்சி செய்தாலும், மேலும்.. மேலும் திரும்பிப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்... மண் குடத்துடன் அந்த இளம்பெண் எனக்குப் பின்னால் வருகிறாளோ என்று நினைத்ததுதான் காரணம். நான் திரும்பிப் பார்ப்பதை கவனித்த பெரியவர் எனக்கு இறுதியாக ஒரு அறிவுரையைக் கூறினார்: "இரவு வேளையில்... பொருந்தாத சமயத்தில்.. பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாது.''

நான் பணிவான ஒரு வளர்ப்பு மிருகத்தைப்போல அந்த மனிதருக்குப் பின்னால் தடுமாறும் கால் வைப்புகளுடன் நடந்தேன்....