எல்லா நதியிலும் மலர்வதில்லை
உன் அன்பை எதிர்பார்த்தேன்
நீ என்றுமே
என்னை இதயம் உள்ளவளாக
நினைத்ததேயில்லை
எனக்குத் தேவை
துக்கத்தில் அழுகையில்
ஆறுதலுக்காக
ஒரு கை!
எப்படியிருக்கிறாய்
என்று ஒரு கேள்வி!
சந்தோஷத்தில்
உடன் சிரிக்க
புன்னகை முகம்!
இன்றுவரையிலும்
நான் உன்னை
ஈர்க்க நினைத்ததில்லை
எல்லாக் குளத்திலும்
தாமரைகள் மலர்வதில்லை
எல்லா நதியிலும்
அலைகள் எழும்புவதில்லை
எல்லா மலைகளும்
குளுமையைக் கொட்டுவதில்லை
எல்லா நாட்களும்
விண்மீன்கள் தோன்றுவதில்லை
எல்லா இதயங்களுக்காகவும்
ஓர் இதயம் துடிப்பதில்லை
என்ன தவறைக் கண்டாய்
மாலையில் அவிழும்
மொட்டான என் மனதை
அதன் வாசத்தை
அதன் உயிர்மையை
அதன் அழகை
அதன் புனிதத்தை
அதன் உயர்வை
நீ புரிந்துகொள்ளவில்லை
உனக்குத் தேவை
ஒரு மலர் என்றால்
எங்கேனும் சென்று தேடிக்கொள்
மயானத்துப் பிணங்களும்
மலர் வாசம்
வீசும்
புனிதம்
வீடுகளை கை கால்களை
இழந்துவிட்டவர்கள்
சிகிச்சைக்கு பிச்சை கேட்கிறார்கள்
சாலைகளில்
அனாதைகளாகிவிட்ட
குழந்தைகள்
முதியோர்
உணவிற்கு கையேந்துகின்றார்கள்
பெண்கள்
மாற்று உடையின்றி
மயான பூமியில் மரித்துக்கிடக்கும் பிணங்களிடமிருந்து
ஆடைகளை அவிழ்க்கின்றனர்
எங்கே எது நடந்தாலும்
நாங்கள்
எதைச் செய்தாலும்
மன்னிக்கப்படுவோம்
நாங்கள் புனிதர்கள்
எங்கள் பூமியில்
புனிதம் புதைந்து கிடக்கிறது
பூனைகள் நிறைந்த உலகம்
நான் அமர்ந்திருக்குமிடத்தில்
என்னைச் சுற்றிலும்
சில அணில்கள் பல புறாக்கள்
சிறு குருவிகள்
சிற்றெறும்புகள்
சில பூனைகள்
நான் சிறிது நேரம்
புறாவாகிறேன்
அணிலாகிறேன்
பூனையாகவில்லை
பூனைகளை வெறுக்கிறேன்
எனக்கான உணவில்
பாதியைப் பங்கிட்டுக்
கொடுத்தாலும்
அவைகளுக்குப்
பசியாறவில்லை
முழுவதையும்
பூனைகள் எடுத்துக்கொள்கிறது
அடுத்தவர் உணவை
எடுத்துக்கொள்ளும்
பூனைகளை என்னால்
ஏதும் செய்ய இயலவில்லை
புறாக்கள் என்னை விட்டு
விலகிச் சென்றுவிடுகின்றன
அணில்கள் என்னையே
பரிதாபமாக பார்க்கின்றன
பூனைகளை நினைத்து
மனம் நொந்து அழுகிறேன்
என்னை சுற்றிலும்
நிறைய பூனைகள்
சுற்றி வருகின்றன
உலகம் பூனைகளால்
நிறைந்துவிட்டது
-லட்சுமி கவிதைகள்