ள்ளி நாட்களில் கவிதை எழுதத் தொடங்கிய கவிஞர் ஜீவி, கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்க் கவிதை வெளியில் தீவிரமாக எழுதிவருபவர். பத்து கவிதை நூல்கள், இரண்டு கட்டுரை நூல்களென எழுதுவதோடு மட்டும் நில்லாமல் கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், உரைவீச்சென மேடைகளில் சிறந்த பேச்சாளராகவும் வலம் வருகிறார். தனது நூல்களுக்காகப் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றிருப்பதோடு, தமிழக அரசு வழங்கிய ‘தமிழ்ச் செம்மல்’ விருதினையும் பெற்ற கவிஞரோடு ‘இனிய உதயம்’ இதழுக்காக ஒரு மாலைப் பொழுதில் உரையாடியதிலிருந்து...

பள்ளி நாட்களிலேயே கவிதை எழுதும் ஆர்வம் எதனால் உண்டானது?

சின்ன வயதிலிருந்தே எனக்கு சொற்களின் மீதொரு ஈர்ப்பு உண்டு. பேச்சுப்போட்டிகளுக்காக ஆசிரியர்கள் தயாரித்துத் தந்த உரைகளில் இருந்த பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், ஜீவா, கண்ணதாசன் போன்ற கவிஞர்களின் கவிவரிகளைப் படித்துவிட்டு கிறங்கிக் கிடப்பேன். போட்டிகளுக்குப் பரிசாக கிடைத்த புத்தகங்கள் என் வாசிப்பு ருசியை அதிகரித்தன. ‘வேர், ‘நேர்’, ‘அழும்’, ‘எழும்’ போன்ற அழகான எதுகை மோனைகள் அந்த வயதிலேயே என்னை ஈர்த்தன. போட்டிகளில் பரிசாகக் கிடைத்த புத்தகங்களை வாசிக்க வாசிக்க, வரிகள் இன்னும் பல சேர்ந்து, என் ஜாமென்ட்ரி பாக்சில் அவை கவிதைகளாக வந்துசேர்ந்தன.

1978-இல் புதுக்கோட்டை முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, மரியாதைக்குரிய ஆறுமுகம் தமிழ் ஐயா , அண்ணா குறித்து நடந்த ஒரு விழாவின் கவிதைப் போட்டியில் பங்கேற்க என்னை அனுப்பிவைத்தார். அப்போது படித்த பல வரிகளின் சாயலில் நான் எழுதிய கவிதைக்குப் பரிசு கிடைத்தது. அது என்னுள் ஒரு உற்சாக இரத்தம் ஊற உதவியது. இப்படி பல கவிஞர்களின் வரிகளைப் படித்து, எனது ஒளிரும் வரிகளை நான் உருவாக்க ஆரம்பித்தேன்.

Advertisment

தங்களின் முதல் கவிதை எந்த இதழில், எப்போது பிரசுரமானது?

புதுக்கோட்டை முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு மலரில் 1978-இல் சில குறிப்புகளாக என் கவிதை வரிகள் இடம்பெற்றன. 1980-இல் கோவையிலிருந்து வெளிவந்த ‘துளிகள்’ என்கிற இலக்கிய இதழில் எனது முதல் கவிதை பிரசுரமானது:

இராமன் சிவதனுசை முறித்து,

Advertisment

சீதையை மணம்புரிந்து கொண்டானாமே;

நானும் தனுசு முறிக்கும்

ஒரு ராமனுக்காகத் தான்

முப்பது ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன்.

இந்த வரதட்சணை தனுசை

முறிக்க வரும் ராமன் யார்?’

என்ற எனது முதல் கவிதையே சமூக அக்கறையோடு பேசியது. வாசித்தவர்களை வசீகரித்தது, ஆச்சரியமாகவும் பலருக்கு இருந்தது.

ஜி.வெங்கட்ராமனாக இருந்த நீங்கள், கவிஞர் ஜீவியாகப் பெயர் மாற்றமடைந்தது குறித்து…

1984-இல் அறந்தாங்கியில் தொழுநோய் ஆய்வாளராக பணியில் சேர்ந்தேன். அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் பத்திரிகைகளில் எழுதும்போது புனைபெயர் வைத்துக்கொள்கிற வழக்கம் அப்போது பரவலாக இருந்தது. ‘பி.வி.ஆர்’ என்று ஓர் எழுத்தாளர் இருந்ததால், ‘ஜீ.வி.ஆர்’ என்று குறிப்பிட்டு, நான் ‘தாய்’ இதழுக்கு சில கவிதைகள், ஹைக்கூக்களை அனுப்பிவைத்தேன். பிரசுரமானபோது ‘ஜீ.வி’ என்றிருந்தது. தமிழில் என்றும் ஜீவித்திருக்கும் கவிதைகளை எழுதவேண்டுமென்கிற எண்ணத்தில் இருந்த நான் அன்றிலிருந்தே ‘ஜீவி’யாகிவிட்டேன்.

ஆரம்ப நாட்களிலும், இப்போதும் யாரின் கவிதைகளால் அதிக தாக்கம் பெற்றீர்கள்?

‘கற்பனையின் ஊற்று, கவிதா சாகரம், பனிக்கட்டிகளும் நெருப்புத் துண்டுகளும் பரவிய பாத்திரம்’ என்றெல்லாம் ஒரு கவியரங்கில் மகாகவி பாரதியை நான் வர்ணித்திருப்பேன். பாரதிதானே புலவர்களின் சரிகை பொன்னாடைகளில் பின்னிக்கிடந்த தமிழ்க் கவிதைகளை எடுத்துவந்து பாமரனின் அழுக்கு வேட்டி முனைகளில் முடிந்து வைத்தவன். எழுதத் தொடங்கிய நாட்களில் மட்டுமல்ல, இன்றைக்கும் என்னில் அதிக தாக்கம் செலுத்துபவை மகாகவியின் கவிதை வரிகளே.

jv

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான அறிமுகம் எப்போது ஏற்பட்டது?

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கலை இலக்கிய அமைப்புகளில் கலை இலக்கிய அமைப்பாக இருக்கிற ‘த.மு.எ.க.ச.’ அப்போது, ‘த.மு.எ.ச.’ என்ற பெயரில் இயங்கி வந்தது. நான் 1984-இல் அறந்தாங்கியில் தொழுநோய் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தபோது கந்தர்வன், நா.முத்துநிலவன், எஸ்.இளங்கோ ஆகியோரின் பழக்கம் எனக்கு கிடைத்தது. மு.முருகேஷ், ரமா.ராமநாதன், ஷேக் அப்துல்லா, எஸ்.கவிவர்மன், காசாவயல் கண்ணன், கங்கை மோகன், குமார் போன்ற ஏராளமான இளைஞர்கள் என் கைகளைப் பற்றிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

அறந்தாங்கியில் மிகச்சரியாகத் திட்டமிட்டு மாதக் கூட்டங்களை எல்லாம் வித்தியாசமாக நடத்த ஆரம்பித்தோம். எதையும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அறந்தாங்கியின் கிளைச் செயலாளரான நான், மாவட்டச் செயலாளர் என்று தொடங்கி, பல்வேறு பொறுப்புகளையேற்று, 'த.மு.எ.க.ச.’வில் தமிழகம் முழுக்கச் சென்று, மேடைகளில் பேசியும், மற்ற தோழர்களோடு இணைந்தும் பணியாற்றி வந்தேன். மாநில துணைச் செயலாளர், மாநில துணைப் பொதுச்செயலாளர், செயற்குழு உறுப்பினர், மாநிலக் குழு என்று இன்றுவரை என்னுடைய பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

தங்களின் பல கவிதைகள் ஓசை நயத்துடன் இருக்கின்றன. இது இயல்பாக அமைந்ததா இல்லை நீங்களே திட்டமிட்டு எழுதுகிறீர்களா?

என்னைப் பொறுத்தவரை, கவிதை என்பது அழகுபடுத்தப்பட்ட சிந்தனையே. படிக்கும் பழக்கம் குறைந்துபோய், பார்க்கும் பழக்கத்தில் மூழ்கியிருக்கிற இன்றைய இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வாசிக்கத் தூண்டும் வகையிலான வசீகர வார்த்தைகளும் கவிதைக்குத் தேவைப்படுகின்றன. மயக்கும் மாயக்குழலூதும் மேய்ப்பவர்கள் பின்னா லேயே சிற்றுயிர்களெல்லாம் அணிவகுத்து செல்வதைப்போல், அழகான குரலில் கவிதைகளை வாசிப்பதைக் கேட்கவும் வாசகர்கள் விரும்பி வர வேண்டும் என்கிற முன்திட்டமிடலோடுதான் நான் அப்படியாக எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

கவிதைகளை எழுதுவதோடு மேடைப் பேச்சாளராகவும் தமிழகம் முழுக்க வலம் வருகிறீர்கள். இது எப்படி சாத்தியமானது?

வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் குறைவு; கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகம். பணம் தேடி அலைந்து, அலுத்துச் சலித்து வருகிற மனிதர்கள், ஆறுதலும் உற்சாகமும் பெற, கொஞ்சம் இலக்கியம் கலந்தும், நகைச்சுவை கலந்தும் பேசுகிற மேடைப்பேச்சுகளை விரும்புகிறார்கள். மேடைப்பேச்சை நிகழ்த்துகலையாகத் தான் நான் பார்க்கிறேன். எப்போதோ எல்லோரும் பார்த்த ஒன்றைப் புதிதாக, சுவாரசியமாகச் சொல்லும்போது, கேட்பவர்கள் நம்மீது ஆச்சரியப் பூச்சொரிவார்கள்.

இதழ்களில் பிரசுரமாகிற கவிதைகளுக்கும், மேடைகளில் வாசிக்கிற கவிதைகளுக்குமான ஒற்றுமை, வேற்றுமை என்ன?

இதழ்களில் வெளியாகும் கவிதைகள் கண்களுக்கானவை; மேடைக் கவிதைகள் காதுகளுக்கானவை. மேடையில் கவிதையைக் கேட்கிறபோதே தொடர்ந்து கேட்டு, அதைப் புரிந்துகொண்டு உடன் வரவேண்டுமளவுக்கு மேடைக் கவிதைகள் மிகச் சரியான வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். எழுதிய கவிதைகளில் கொஞ்சம் செறிவான கவிதைகள் இதழ்களில் இடம் பெறுமானால், ஒருமுறை படித்துப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், மீண்டும் அதைப் படித்துப் பார்க்கிற வழக்கம் இதழ்களில் வெளிவரும் கவிதைகளில் இருக்கிறது.

மேடைகளில் வாசிக்கப்படுகிற கவிதைகள் பன்னீர்த் தெளிப்பு; இதழ்களிலே இடம்பெறும் கவிதைகள் அடைமழை என்றும் சொல்லலாம். ஆனால் மேடைக் கவிதைகளாக இருந்தாலும், இதழ்களில் எழுதப்படுகிற கவிதைகளாக இருந்தாலும், அது கவிதையாக இருந்தால்தான் அனைவரையும் கவர்ந்திழுக்கும். என்னுடைய அனுபவத்தில் ஏற்கெனவே மேடையில் கொஞ்சம் நீளமாகச் சொல்லி, வரவேற்புப் பெற்றிருக்கிற வரிகளைக்கூட செதுக்கிச் சுருக்கி, புதிய முறையில் திருத்தி எழுதி, பிறகு அதனை இதழ்களுக்கு அனுப்பியிருக்கிறேன். அப்போதும் எனது கவிதைகள் பரவலான வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன.

கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து கவிதைத் தளத்தில் இயங்கி வருகிறீர்கள். எப்படியான சூழலில் கவிதைகளை எழுதுகிறீர்கள்?

கவிதையால் மாற்றத்தைக்கொண்டுவர முடியும் என்று நம்புகிறவன் நான். ஏனெனில் அது ஒரு வசீகர சக்தி. அதைக்கொண்டு ஒரு சிந்தனைச் சமூகத்தை புதிதாகப் புனரமைக்க முடியும்.

கவிதைகளுக்கும் எனக்குமானது தொப்புள்கொடி உறவாகும். கவியரங்கம், இதழ்களுக்காக எழுதிய கவிதைகள், சிற்றிதழ்கள், வணிக பத்திரிகைகள் என்று எல்லாவற்றிலும் கவிதைகளை நான் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறேன். மேலும், நூல்களைக் குறித்த அணிந்துரை, மதிப்புரை போன்றவைகளை நிறைய எழுதி, தனது கனவுக் கவிதைகளை முதல் புத்தகமாக வடித்துக் கொண்டுவந்து தருகிற இளைஞர்களுக்கு அணிந்துரை தருவதன் மூலம் அவர்களின் கவிதை ஊற்றுச் சுரக்க நான் உதவுவதாக நிறைய நேரங்களில் நினைத்துக்கொண்டு எழுதுகிறேன். நித்தம் ஒரு புத்தகத்தோடு தான் எனது பொழுது புலர்கிறது.

முதன்முதலில் கவிதை எழுதியபோது இருந்த ஆர்வத்தை இப்போதும் நான் தக்க வைத்துக் கொள்கிறேன். ‘எண்ணங்கள் ஒன்றும் ஏப்பங்கள் இல்லை, அப்படியே வெளிப்படுத்திவிடுவதற்கு’ என்கி றார் அறிஞர் அண்ணா. எனக்குள் ஒரு வரி உருவாகி விட்டால், உடனே நான் அதை எழுதிவிடுவதில்லை. மனசுக்குள் ஊறப்போட்டு, தேவையான வரிகளை எல்லாம் மீண்டும் செதுக்கி, தேவையற்ற ஊளைச்சதைபோல் இருக்கும் வார்த்தைகள் எல்லாம் நீக்கிவிட்டு, எனது இணையர், மகன்கள், நண்பர்கள் என பலரிடமும் முதலில் சொல்லிப் பார்ப்பேன். அவர்கள் அந்த வரிகளைக் கேட்கும்போது எந்த வரிகளைக் கொண்டாடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, இன்னமும் நான் அதனை செதுக்கி, மேடைக்கோ அல்லது இதழுக்கோ அனுப்பிவைப்பேன்.

jv

பயணங்கள் போகிறபோதெல்லாம் கவிதைகளை மற்றவற்றை நான் யோசித்துவிட்டு, பிறகு அதனைத் தாள்களில் வடித்துக்கொண்டு போவேன். என்னுடைய சின்ன வயதில் என் அக்காள் ஒவ்வொரு பூவாய்ப் பார்த்துப் பார்த்து பின்னி, பிறகு அதை ஒரு கைதேர்ந்த ஒயர் கூடையாக வடிவமைப்பாள். அதேபோல் தான் நானும் எனது கவிதைகளைக் கட்டமைக்கிறேன். எனது வரிகளும் கிடைக்கிற வரவேற்பும்தான் இன்றுவரை என்னுடைய பேனாவை ஈரம் காயாமல் வைத்திருக்கிறது.

மேடைகளில் பேசும்போது உங்கள் கவிதைகளை மட்டுமில்லாமல் பிறரது கவிதைகளையும் அப்படியே வரிகள் மாறாமல் சொல்கிறீர்கள். இதற்கென ஏதாவது பிரத்யேகப் பயிற்சியேதும் செய்கிறீர்களா..?

நான் பள்ளியில் படிக்கிறபோதே, தமிழ்ப் பாடப் புத்தகத்தின் மனப்பாடப் பகுதிகளை மட்டும் வாசிப்பதில்லை. அப்படியே முழுப் புத்தகத்தையும் வாசித்துவிடுவேன். பத்திரிகைகளில் செய்திகளை ஒருமுறை படித்துவிட்டால், பிறகு வரி மாறாமல் அப்படியே திரும்பச் சொல்லும் ஆற்றல் எனக்குள் வந்தது.

ஆரம்ப காலத்தில் பேச்சுப்போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னால், மற்றவர்கள் எழுதிக்கொடுத்த பேச்சுக்களை எல்லாம் வெட்டவெளிகளிலும் கண்ணாடி முன்நின்றும் அடிக்கடி பேசிப் பார்த்து, ஒரு பயிற்சியாக அதனை எடுத்துக்கொள்வேன். இப்போதும் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம், நான் மனசுக்குள்ளேயே ஒருமுறை கவிதைகளை, குட்டி கதைகளை, கருத்தாடல்களை எல்லாம் சொல்லிப் பார்த்துக்கொள்வேன். மேடைகளுக்கு செல்வதற்கு முன்னர் சொல்லவேண்டிய கவிதைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு செல்வேன். வசீகரமாக சொல்வேன்.

உங்களின் புகழ்பெற்ற கவிதை வரிகள், வேறு பெயர்களில் வலம்வருவதைப் பார்க்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

பலமுறை எனக்கு அந்த அனுபவம் நிகழ்ந்திருக்கிறது. ‘அந்தப் பேச்சாளர் இப்படி ஒரு அருமையான கவிதையைச் சொன்னார்’ என்று என்னிடமே என் கவிதையைச் சிலர் வந்து சொல்லும்போது, மெல்லிய கோபம் எனக்கு வரும். எனினும், இல்லாதவர்கள்தானே எடுத்துக்கொள்கிறார் கள் என்று நான் விட்டுவிடுவேன். அதனால்தான் நான் பேசுகிறபோது முடிந்தவரையில் கவிஞர்களின் பெயரோடு கவிதைகளைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். இன்னொன்று, எந்த வீட்டில் தனது சாயலில் இருக்கின்ற குழந்தை வளர்ந்தாலும், அதனுடைய அழகைப் பார்த்து தாய் ரசிக்கத்தானே செய்வாள்!

1993-இல் ‘வானம் தொலைந்துவிடவில்லை’ முதல் கவிதை நூல் தொடங்கி, 2022-இல் வெளியான ஒன்பதாவது கவிதை நூலான ‘ஊற்றுக்கண்’ வரையிலான உங்கள் கவிதைப் பயணத்தில் கற்றதும், பெற்றதும் என்ன?

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு மகிழ்ச்சியான அனுபவம்தான் வாய்த்திருக்கிறது. ‘கவிதைகளுக்கு இப்போது வரவேற்பு இல்லை; கவிதைத் தொகுப்புகள் போட்டால் விற்காது’ என்றெல்லாம் இப்போதும் பல அழுகுணிச் சித்தர்கள் புலம்பிவருகிறார்கள். ஆனால், எனது முதல் தொகுப்பை அப்போது பிரபலமாக இருந்த தனது அன்னம் பதிப்பகத்தின் மூலம் அன்பிற்கினிய அண்ணன் கவிஞர் மீரா கொண்டுவந்தார். அதற்கு ம.தி.மு.க. இலக்கிய அணியின் முதல் பரிசு கிடைத்தது.

தொடர்ந்து தனது காலம் வெளியிட்டின் மூலமாக எனது நண்பர் ஓவிய கவிஞர் ஸ்ரீரசா எனது தொகுப்புகளை வெளியிட்டு வந்தார். அவை பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றன. பரவலாக என்னுடைய நூல் குறித்து விமர்சனங்களும் எல்லா பத்திரிகைகளிலும் இடம்பெற்றன. கவிஞர் மீராவின் மகன் கதிர் கொண்டு வந்த ‘ஜீவி கவிதைகள்’ தொகுப்புக்கு நொய்யல் இலக்கிய வட்டம், அன்பிற்கினிய கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனின் கவிதை உறவு அறக்கட்டளை பரிசு என பல பரிசுகள் கிடைத்தன.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில், நான் இரண்டாம் இடம்பெற்று மரியாதைக்குரிய முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கையால் பரிசு பெற்றேன். எனது தொடர் இலக்கியப் பணிகளுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோது ‘தமிழ்ச்செம்மல் விருது’ தரப்பட்டது.

இப்படி விருதுகள், பரிசுகள் என பல்வேறு அமைப்புகளினால் தரப்பட்டாலும், கிராமப்புறங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சமூக இலக்கிய அமைப்புகளில் இளைஞர்கள் மிகவும் சிரமப்பட்டு நிதி திரட்டி நடத்துகிற கூட்டங்களில் பேசிவிட்டு இறங்கும்போது, ‘மிகவும் அருமையாகப் பேசினீர்கள்’ என்று என் கைகளைப் பிடித்து குலுக்கி பாராட்டுகிறபோது, ஒரு ஆனந்தக் கும்மி அடிக்கிறது மனசு. என்னைப் பொறுத்தளவில், அழகியலும் சமூக அக்கறையும் கொண்டு நெய்யப்படுகிற கவிதைகளுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கும். ‘அழகானது கவிதை; அறிவானது கவிதை’ என அரிஸ்டாட்டில் சொன்னார். அதோடு சேர்த்து சமூக மாற்றத் திற்கான எழுச்சியை ஊட்டுவதும் கவிதையின் வேலைதான் என்று நான் புரிந்திருக்கிறேன். அதனால்தான், ‘கவிதையைக் கரகமாக மட்டுமல்ல; வாளாகவும் சுழற்றி வருகிறோம்’ என்று என் கவிதையிலும் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அறிவொளி இயக்கத்திற்காக நீங்கள் எழுதிய ‘குறிஞ்சி மலைத்தேனே’ எனும் பாடல் எல்லோராலும் பாராட்டப்பெற்றது. பாடல் எழுதுகிற ஆர்வம் எதனால் வந்தது?

பொதுவாக, தமிழர்களின் வாழ்க்கையில் பாடல்களுக்கு ஒரு பெரும் பயன்பாடு இருக்கிறது. தாலாட்டு, நலுங்கு, ஒப்பாரி என தமிழர்களின் ஒவ்வொரு நொடியும் பாட்டு வரிகளால் நிரம்பிக் கிடக்கிறது. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பில் ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டு ஆயிரக்கணக்கான பேர் கடிதம் எழுதுகிறபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எனவே, எழுதப் படிக்கத் தெரியாத புழுதி மனிதர்களாக இருக்கிறவர்களுக்கு நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பாடலை எழுதினேன்.

‘ஆத்தா கத்துக்கல; அப்பங் கூட படிக்கவில்லே

புத்தம் புது ரோசாவே, பொல்லாங்க தீர்த்திடடா…’

போன்ற வரிகள் மிகவும் நன்றாக இருந்ததாக அண்ணன் நக்கீரன் கோபால் அனுப்பிய கடிதத்தை அப்போது அறிவொளி இயக்கத்திற்காக நாங்கள் நடத்திய ‘ஊர்கூடி’ இதழில் வெளியிட்டோம். பிறகு எனக்கு நெருக்கமான திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிற சில நண்பர்களுக்காகத் திரைப்பட பாடல்களை எழுத முற்பட்டு, அவை ஆரம்பகாலப் பதிவுகள் ஆகியவற்றோடு நின்றுவிட்டது. எனினும், அழகியலும் சமூக அக்கறையும் கொண்ட பாடல்களை இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று அடிமனதில் ஓர் ஆசையை முடிந்து வைத்திருக்கிறேன். காலம் கனியுமென்றும் காத்திருக்கின்றேன்.

நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை ஒன்றைச் சொல்லுங்களேன் ஒவ்வொரு பழமாக எடுத்து, ருசித்து ருசித்துப் பார்த்து மிகவும் பிடித்த பழங்களைத் தன் குஞ்சுகளுக்குத் தருகிற அணில் மாதிரி, நான் பார்த்துப் பார்த்து எழுதித்தான் வாசகர்களுக்குப் பந்தி வைக்கிறேன். என்னுடைய எல்லாக் கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவைதான். எனினும், நிறையப் பேருக்கு பிடித்த கவிதையென்று கேள்வியைப் புரிந்துகொண்டு பதில் சொன்னால், ‘

சுட்ட அப்பளம் / சுற்றிலும் பருக்கைகள் / பட்டினி ராத்திரி’ என்ற ஹைக்கூவையும், ‘ஒரு / ரயில் எஞ்ஜினாய் / எப்போதும் இயங்கு / கூடவே பலரைச் / சேர்த்துக்கொண்டு / உற்சாகமாக கூவிக்கொண்டு’ என்று பலரும் தங்களின் லெட்டர் ஹெட்டில் அடித்து வைத்திருக்கிற கவிதை வரிகளைச் சொல்லலாம்.

இன்றைய இளைய தலைமுறை கவிஞர்களுள் யாரின் கவிதைகள் உங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளன..?

‘நான் தாத்தாவைவிட உயரமாக இருக்கிறேன். ஏனெனில் தாத்தாவின் தோள்களின் மீது நின்றுகொண்டு இந்த உலகத்தைப் பார்க்கிறேன்’ என்று கவிஞர் ஷெல்லி ஒருமுறை சொன்னார். குறிப்பிட்ட சிலரின் கைகளில் மட்டுமே இருந்த தமிழ்க்கவிதை, இன்றைக்கு நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வரவினால் வீட்டிலுள்ள பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், திருநங்கைகள், திருநம்பிகள் என சகலரின் கைகளுக்கும் வசப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறேன்.

இன்றைய இளைய கவிஞர்களின் வரிகள் என்னை ஈர்க்கத்தான் செய்கின்றன. நிறைய பேரின் கவிதைகள் எனக்குப் பிடித்திருக்கிறது. கவிஞர்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் நீளும். எனினும், இப்படிச் சொல்லலாம். யுகபாரதி தொடங்கி மு.முருகேஷ் வரைக்குமான ஒரு பெரும் பட்டியலில் இருக்கிற பிரியத்திற்குரிய கவிஞர்கள் என்னை மிகவும் கவர்ந்து, பல இரவுகளில் திரும்பத் திரும்ப அதுகுறித்து யோசிக்கவும் வைப்பவர்களாக நம்பிக்கை ஒளியூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

‘இனிய உதயம்’ இதழைப் பற்றி

இலக்கிய வானத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறது ‘இனிய உதயம்’ இதழ். அண்ணன் நக்கீரன் கோபாலின் முன்னெடுப்பில், என் பிரியத்துக்குரிய கவிஞர் தமிழ்நாடன் இணையாசிரியராக இயங்குகிற ஒரு இலக்கிய ஆர்வமிக்க குழுவின் வியர்வையில் விளைந்த வெற்றிப்பூவாக ஒவ்வொரு மாத உதயமும் உருவாகிறது. அதன் பக்கங்களைப் புரட்டுகிறபோதெல்லாம், தமிழ்நாட்டின் பல்வேறு விதமான கவிதை வடிவங்களைக் கையாளுகிறவரின் குரல் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பிரபலமானவர் படைப்பு என்றால் விண்ணளவு உயர்த்துவதும், இளையவர் கவிதைகள் என்றால் அதைக் குறைத்து மதிப்பிடுவதுமான ஒரு அழுக்கு மனம் கொண்ட சிலரின் ஆரோக்கியமற்ற இலக்கிய போக்குக்கு நடுவே, எந்த முகாமில் இருந்தாலும் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு, கவிஞர்களின் படங்களோடு கவிதைகளைப் பிரசுரிப்பதும், பக்க அளவு குறித்து கவலைப்படாமல் பேட்டிகள் எடுத்து வெளியிடுவதும் என ‘இனிய உதயத்தின்’ இலக்கியப் பணிகள் முக்கியமானவையாக எனக்குப்படுகிறது. பிற மொழி கதைகளைத் தொடர்ந்து வெளியிடுவதும் வரவேற்புக்குரிய அம்சம். இன்னும் ‘இனிய உதயம்’ எல்லோரின் கைகளிலும் இருக்கவேண்டிய இதழாக மாறவேண்டுமென்பது என் பெருவிருப்பம்.