ஸ்.பி.பி.யால் மிகவும் மதிக்கப்பட்டவர் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ். ரஜினி நடித்த தளபதி படத்தில் இருவரும் சேர்ந்து ’காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுகொன்னும் பஞ்சமில்லை பாடத்தான்’ என்பது போன்ற பாடல்களையும் பாடி கலக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலை இருவரும் சேர்ந்து மேடைகளில் பாடும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு கைத்தட்டலால் எல்லாமே அதிரும்.

Advertisment

எஸ்.பி.பி. அவரை எந்த இடத்தில் பார்த்தாலும், எவரைப் பற்றியும் கவலைப்படாமல் அப்படியே தரையில் விழுந்து கும்பிடுவார். ஜேசுதாஸுக்கும் எஸ்.பி.பி. என்றால் உயிர்.

d

அவர், எஸ்.பி.பி.யோடு மேடை ஏறும்போதெல்லாம், அப்படியே நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “எனக்கு மூன்று தம்பிகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரை விடவும் எனக்குப் பிடித்த ஒரே தம்பி, பாலுதான்’’ என்று வாஞ்சையோடு கூறுவார். அண்மையில் அவரது பிறந்த நாள் விழாவில் தன் குடும்பத்தோடு கலந்துகொண்டு ஜேசுதாஸுக்கு பாத பூசை செய்து மகிழ்ந்திருக்கிறார் எஸ்.பி.பி.

Advertisment

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜேசுதாஸ், ’’நான் ஒருமுறையாவது தியாகராஜர் கீர்த்தனை விழாவில் பாலுவைப் பாடவைத்துக் கேட்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

அவரது சங்கீத வித்வம் பற்றி எனக்குத் தெரியும். சரஸ்வதியின் கடாட்சம் பெற்றவர் தம்பி பாலு. இருந்தாலும் எனது அந்த ஆசையை அவர் இன்னும் நிறைவேற்றவில்லை. அடுத்தமுறை எனக்கு முன்னோ, அல்லது எனக்குப் பின்னோ அவர் தியாகராஜர் உற்சவத்தில் பங்கேற்றுப் பாடவேண்டும்’’என்று கேட்டுக்கொண்டார்.

அவரது அந்த ஆசை நிறைவேறுவதற்கு முன்பே, எஸ்.பி.பி.யை காலதேவதை அழைத்துக்கொண்டாள்.

எஸ்.பி.பி. மறைந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்தார் ஜேசுதாஸ்.

அந்தச் செய்தியைக் கேட்டு தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தாராம் அவர்.

Advertisment

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து ஜேசுதாஸ் இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில்...

’’என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய உடன்பிறப்பு போன்றவர். பாலு என்னை அண்ணா என்று கூப்பிடும்போது, ஒரு அம்மா வயிற்றில் பிறந்தவர்கள் போல நான் உணர்வேன். நாங்கள் இருவரும் கூடப்பிறந்தவர்கள் போல பழகினோம். முன் ஜென்மத்தில் இருவரும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், அவருடைய சங்கீத ஞானம் பெரியளவில் இருக்கும். பாட்டுப்பாடவும் செய்வார், உருவாக்கமும் செய்வார்.

dd

சங்கராபரணம் படத்தில் முறையாக சங்கீதம் கற்றவர்களுக்கு இணையாக பாடியிருப்பார். அதை கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை என்று கூறமாட்டார்கள். 2 பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

சிகரம் படத்தில் ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு...’, என்ற பாடலை பாடியபோது எனக்குப் பரிசாக பாடினேன் என்று கூறினார். எனக்கு மிக பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. யாரையும் அவர் புண்படுத்த மாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும், ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார். கடைசியாக நாங்கள் இருவரும் பாடியது ஒரு சிங்கப்பூர் நிகழ்ச்சியில் தான். பாலு நோய் குணமாகி எப்போது வீடு திரும்புவார்? என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி கிடைக்கவில்லை.

என்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒருபக்கம் வருத்தம் இருந்தது. அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்’’-என்று சொற்களால் துயரத்தை இசைத்திருக்கிறார்.