நட்சத்திரங்களை ஜொலிக்க வைத்த நிலாச்சூரியன் ... கருங்கல்லாய்க்கிடந்த -எனக்குள் இருந்த என்னை.... உடைத்துச்செதுக்கி எனக்கே- உணர்த்திய ஒலி-ஒளிச்சிற்பி...
மனிதஉணர்வுகளை வைத்து மகேந்திர ஜாலம் செய்த மாமனிதன்... மௌனமுக அசைவு களை மொழியாக்கிய கலாவித்தகர்... எழுத்தாளர் களுக்கு... திரை மகுடம் சூட்டிய தேவமகன்... இன்று ஒத்திகை இல்லாமல்... காலன் இயக்கிய மரணப்படத்தின் கதைநாயகனாய்... சொற்களால்... இந்தச் சோகத்தை சொல்ல முடியவில்லை... வரிகளாய்... இந்தச் சோகத்தை வார்த்தெடுக்க முடியவில்லை... அவரின் மௌன மொழி... இப்போது இங்கும்...உணர்வால்..பேசுகிறது காற்றில் எந்தன் கீதம்... -என்று கரைவதா? ""ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ'' என்று... இதய ரணத்தை...இசை பூசி ஆற்றுவதா?...
சூறைக்காற்றில் ஆடிய... அணைந்த... தீபத்தின் ஜோதி... பற்றிய... கண்ணீர் அசைபோடல் இது அவருடன் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி...
அவரை இழந்து தவிக்கும் துரதிர்ஷ்டசாலி.
தேவர் ஃபிலிலிம்ஸ் கதை இலாகாவில் அப்போது கலைஞானம், மா.ரா., தூயவன் என எல்லோரும் இருந்த நேரம்... ஒவ்வொருவர் வீடாக "பெரிய கார்' அனுப்பப்பட்டு மொத்தமாக அத்தனை பேரையும் ஒரே ட்ரிப்பில் அழைத்துவருவது அப்போது வழக்கம்.
கதை இலாகாவில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் அந்தக் காரில் ஏற்றக்கூடாது என்பது கண்டிப்பான உத்தரவு.
கலைஞானம் தூயவனை காரில் ஏற்றிக் கொண்டு எல்டாம்ஸ் சாலையில் புறப்பட்டபோது... மகேந்திரன் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து... காரை நிறுத்தி விதியை மீறி அவரையும் ஏற்றிக்கொண்டு தேவர் ஃபிலிலிம்ஸ் வர வழியில் நடந்த காருக்குள்ளான உரையாடலிலில் மகேந்திரன் அவர்களின் பொருளாதார ரீதியிலான சிரமங்கள் தெரியவர... கலைஞானம் அப்போதுதான் மகேந்திரன் அங்கு தேவரைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறி தேவரை வணங்கச் சொல்ல... தேவர் ஃபிலிலிம்ஸில் மாதச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்க்கப்பட்டார் நம் இயக்குநர் மகேந்திரன். தேவரின் மறைவுவரை அந்த ஆஸ்தான வித்தகராக விளங்கினார் நம்மவர்!
சோ, செந்தாமரை, கலைஞானம் என அவரைத் தூக்கி நிறுத்தியவர்களின் பட்டியலிலில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி இருப்பதே ஒரு தனிச்சிறப்பு.
ஒரு படம் வெள்ளிவிழா நூறாவது நாள் கண்டால் உதவி இயக்குநர்களுக்கு "எவர்சில்வர் குடம்', டிஃபன் ஃபாக்ஸ், வாட்ச், வால்கிளாக் இப்படி ஏதாவது ஒன்றைக் கொடுப்பதுதான் அப்போது வழக்கமாயிருந்தது.
நான் பத்திரிகையாளனாய் எழுபதுகளின் நிறைவில்- சென்னையில் பணியாற்றியபோது சில நேர்காணல்கள் செய்ய நேர்ந்தது... எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ், ஜெயசித்ரா போன்றவர்களின் வீடுகளில் திரைப்பட வெற்றிவிழா ஷீல்டுகளைக் கண்டிருக்கிறேன். "தங்கப்பதக்கம்' போன்ற படங்களுக்கான பரிசுக் கேடயங்களை நம் இயக்குநர் வீட்டில்... பல நாட்கள் பார்த்துக்கொண்டே தவம்போல் உட்கார்ந்த காலமும் உண்டு.
"ஏணிப்படிகள்' தொடங்கி நான் நம் இயக்குநரோடு பணி செய்யத் தொடங்கியதும் "உதிரிப்பூக்கள்' படம்தான் உதவி இயக்குநர் என்கிற அந்தஸ்தை முறைப்படி... கொடுத்த முதல்படம். அதிலும் வெள்ளிவிழா கண்ட படம்.
"உதிரிப்பூக்கள்' வெளியாகி வெற்றி பெற்றதும் வெள்ளிவிழா மியூசிக் அகடமி அருகில் உள்ள சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல் ஹாலிலில் வீணை. எஸ். பாலசந்தர் பங்கேற்க... நடைபெறத் தொடங்கியது.
பெரிய பெரிய கேடயங்களை பணியாற்றிய நடிகர் நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த நேரம். வரவேற்று உபசரித்து அமரவைக்கும் பணியில் நாங்கள் இருந்தோம்... ஷீல்டுகளை வாங்கும்போது ஸ்டில்ஸ் ரவி உட்பட இன்னும் பல புகைப்படக் கலைஞர்கள் விதம் விதமான கோணங்களில் படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
வந்தவர்களை உதவி இயக்குநர்கள் நாங்கள் உபசரித்துக்கொண்டிருந்தாலும்... என் கண்கள் "ஷீல்டு'களின் அழகில் அவ்வப்போது கவனம் செலுத்தவும் தவறவில்லை. குடமோ... டிஃபன் பாக்ஸோ... வாட்ச்சோ வரப்போகிறது... என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியபடி மேடையில் ஒரு பக்கம் எவர்சில்வர் பாத்திரங்கள்! கதா"பாத்திரங்களுக்கு' எல்லாம் ஷீல்டு கொடுத்து முடிந்ததும்... என் பெயர் அழைக்கப்பட்டது. மேடை ஏறினேன்... "பாத்திரங்கள்' என்னை வரவேற்க...
வீணை எஸ்.பாலசந்தர் என்னுடன் கைகுலுக்கியபடி இருக்க... நான் குடமா, டிஃபன் பாக்ஸா என்று ஆவலுடன் நோக்க... தயாரிப்பு நிர்வாகியின் இரண்டு கைகளையே பல்லக்காக்கி ராஜவம்சத்துத் தாமரைகளின் தேவசுகந்தம் வீசி ரஜபுத்ரி ஒருத்தி உட்கார்ந்து உலா வருவதைப்போல்... என் பெயர் பொறித்த ஷீல்டு... ஒய்யாரமாய் வந்து என் இரு கரங்களில் கதகதப்பை ஏற்படுத்தியது. கனவா... நனவா...
என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.
அதற்குள் அடுத்த உதவி இயக்குநரின் பெயரும் அழைக்கப்பட்டு அவர் கையிலும் ஷீல்டு. நான்கு உதவி இயக்குநர்களும்... நன்றி சொல்ல இயலாமல் இயக்குநரைப் பார்த்தோம். கண்கள் கசிந்தன.
உதவி இயக்குநர்களுக்கு அப்படி ஒரு கௌரவத்தை உதிரிப்பூக்களில் தொடங்கிவைத்த பெருந்தன்மை யாளர் நம் இயக்குநர்.
நாகரா இல்லாமல் உதிரிப்பூக்கள் படப்பிடிப்பின் ஒவ்வொருநாள் உரையாடல்களையும் "பியானோ' டைப் டேப்ரெக்காரிடரில் தோளில் மாட்டியபடியே... பதிவுசெய்துகொண்டு வந்து... பேக்கப் ஆகி தங்குமிடம் வந்ததும், முதல்வேலையாக பதிவுசெய்த வசனங் களை பேப்பரில் தெளிவாக காட்சி எண் பக்க எண் போட்டு ஸ்கெட்ச் பேனாக்களால் அலங்கரித்து வண்ணங்களோடு எழுதி டப்பிங் பேசும்வரை... பாதுகாப்பதும் என் வேலையாகத்தான் இருந்தது. நான் இப்படித்தான் வளர்ந்தேன்.
யாருக்காவது டப்பிங் பேசவரவில்லை என்றால்... அங்கேயே என்னைத் தனியாக பயிற்சி கொடுக்கச் சொல்வார். ஓர் உதவி இயக்குநர் வசம் பொறுப்பை ஒப்படைத்தால்... அவர் நூறுசதவீதம் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.
"கை கொடுக்கும் கை' -சமயத்தில் டப்பிங்- குரல் பதிவு செய்யும் வேலையையும் நம்பி ஒப்படைத்தார்...
அதனால் என்னால் எல்லா வேலைகளையும் ஈடுபாட்டுடன் பிராக்டிகலாக எளிதில் கற்றுக்கொள்ளமுடிந்தது. எல்லாரோடும் பழக முடிந்தது. "கை கொடுக்கும் கை' படத்தில் டப்பிங் வேலைகள் நடக்கிறபோது... டி.டி., என்.எஸ்.சி ஏரியா வாங்கியிருந்த விநியோகஸ்தர்களான கலைப்புலி எஸ். தாணு அவர்களும் சேகரன் அவர்களும் அடிக்கடி வருவார்கள். உதவி இயக்குநர்கள் "திறமைசாலிலிகள்' என்கிற "இமேஜை' உருவாக்கும் விதத்தில் அந்தச் சூழலை இயக்குநர் எங்களுக்கு அமைத்துக்கொடுத்ததால்...
அதுவரை விநியோகஸ்தர்களாய் இருந்த அவர்களுக்கு "படம்' தயாரிக்கலாம் என்கிற எண்ணம் உருவானது. "யார்?' படம் "கைகொடுக்கும் கை' படத்திற்குப்பிறகு 85-ல் தொடங்கப்பட்டது.
காளி, ஜானி, கைகொடுக்கும் கை என ரஜினி சாரோடு நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பும் நம் இயக்குநர் படங்களால்தான் எனக்குக் கிடைத்தது. தாணுசார் ரஜினி சாரின் வீட்டிற்கு எங்களுடன் வந்தபோது- இவர்தான் தாணுசார் என்று அறிமுகப்படுத்திய நான்... "யார்' தொடக்க விழாவிற்கும் அவரை உரிமையுடன் அழைத்தேன்.
"யார்' படத்தின் இறுதிக்காட்சிகளில் ரஜினி சார் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் தன் வீட்டு பூஜையறை வரை படப்பிடிப்பிற்கு தந்து நடித்துக்கொடுத்தார்.
78-ல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நான் பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபடி- ஒவ்வொரு நாளும் அவர் வீடு சென்று- காத்திருந்து அவரிடம் வேலை கேட்பேன்.
பிளாட்பாரம் டிக்கெட் கூடக் கிடைக்காதா என்று ஏங்கி ஏங்கி அலைந்த ஓர் ஏழை எழுத்தாளனை... கவிஞனை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏஸி கோச்சிலேயே தன்னுடன் பயணம் செய்ய அழைத்துச்சென்று உதவி இயக்குநராய், பாடலாசிரியராய் ஆக்கி மௌனமாய் ரசித்தவர் மகேந்திரன். "உதிரிப்பூக்கள்' கம்போஸிங் பாம்குரோவ் ஹோட்டலில் நடந்தபோதுகூட, கையில் பேனா பேடுடன் நான் உதவி இயக்குநராய் நின்றபோது இளையராஜாவிடம் என்னைக்காட்டி "கண்ணன் நல்ல கவிஞர்... நல்லா பாட்டெழுதுவார்'' என்று பெருமையோடு அறிமுகப்படுத்தி அருகில் அமரவைத்து... இளையராஜா அவர்களுக்கும் எனக்குமான ஒரு நீண்ட நெடிய பயணத்தை முதல் புள்ளி வைத்து பெருங்கோலமாய் வரைந்தவர் நம் இயக்குநர்.
உதவி இயக்குநர்களையும் உடன் வேலை செய்தவர் களையும் மரியாதையோடு "ங்க' போட்டு மட்டுமே அழைப்பார். கெட்ட வார்த்தைகளோ சென்னைத் தமிழோ ஒருநாளும் அவர் சொல்ல நான் கேட்டதில்லை. நாடக நடிகர்களை தகுதியானவர்களை மிகவும் கஷ்டப்படுகிற கலைஞர்களை தொடர்ந்து படங்களில் பயன்படுத்துவார். குமரிமுத்து, சாமிக்கண்ணு, சாந்தாராம், வெண்ணிறஆடைமூர்த்தி போன்ற நட்பு முகங்களை அவர் ஒருநாளும் விட்டுக்கொடுத்ததே இல்லை.
படத்தொகுப்பாளர் லெனின் சாருக்கும் ஒளிப்பதி வாளர் அசோக்குமார் அவர்களுக்கும் சர்வ சுதந்தரமும் சகலமரியாதையும் கொடுத்தவர். அடுத்தவர் கதைகளை உரிமை கொண்டாடும் உலகத்தில்... பிற எழுத்தாளர்கள் உமாசந்திரன், புதுமைப்பித்தன், பொன்னீலன், சிவசங்கரி போன்றவர்களை பெருமைப்படுத்தியவர்.
"ஜானி' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி... ஸ்ரீதேவி "காற்றில் எந்தன் கீதம்... காணாத ஒன்றைத் தேடுதே' என்ற பாடலை ஒய்.எம்.சி.ஏ. மைதான மேடையில் பாடும்போது- எதிரே ஆயிரக்கணக்கான துணை நடிகர்- நடிகைகள் குடை பிடித்துக்கொண்டே மழை என்று கூட பாராமல் ரசிப்பதுபோல்தான் காட்சி முதலில் திட்டமிடப்பட்டு தயாரிப்பாளரிடம் கூறப்பட்டது.
இன்கம்டாக்ஸ் ரெய்டு மற்றும் ஏகப்பட்ட மற்ற பிரச்சினைகளால் அந்த "நல்ல தயாரிப்பாளர்' துணை நடிகர்கள், ஆயிரக்கணக்கான குடைகள் போன்ற எதையும் கடைசி நேரத்தில் செய்ய இயலாமல் போனது.
இயக்குநர் அதற்காக படப்பிடிப்பை நிறுத்தவில்லை. தயாரிப்பாளரின் கஷ்டம், சிரமம் என எல்லாம் உணர்ந்து... அந்த இடத்திலேயே ஒரு சிறு மாற்றத்தை காட்சியமைப்பில் செய்தார்.
பெரும்புயல் பற்றிய வானிலை அறிவிப்பு ரேடியோ வில் வரும். யாரும்... வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு! சூறாவளிக் காற்று... காட்சிகள்... "அர்சசனா' என்கிற பாடகி "ஜானி வருவான் என்ற நம்பிக்கையில் யாருமற்ற, வெற்று மைதான மேடையில் பாடத்தொடங்குவாள்... "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே'.
"மெட்டி' திரைப்படம் தொடங்கி உதவி இயக்குநராகப் பணியாற்றிய நடிகர் (ராஜேஷின் சகோதரர்) சாம்ஸன் ராஜசேகரனின் மனைவி ஆசிரியையாகப் பணிசெய்பவர். மாற்றுத்திறனாளி!
சாம்ஸன் குடும்பம் சற்றும் எதிர்பாராத பணிஇடமாற்றம்... அவர் மாற்றுத்திறனாளி மனைவிக்கு ஏற்பட்டது அவர். நீண்ட நெடுந்தொலைவு பயணிக்க முடியாது என்பதால்- நம் இயக்குநரிடம் சாம்ஸன் முறையிட்டு "என்ன செய்வதென்றே தெரியவில்லை... கலங்கி நிற்கிறேன்' என நிலைமையை விளக்கி இருக்கிறார்.
மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நம் இயக்குநர் ஆறுதல் எதுவுமே சொல்லாமல் "வாருங்கள் என்னுடன்' என்று கூறி உடை மாற்றி உடனே அவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். தன் சொந்த வேலைக்காக அதுவரை எந்த அமைச்சரையும் பார்க்காதவர் சாம்ஸனுக்காக கல்வி அமைச்சர் இல்லத்தில் காத்திருந்து உடனடியாக அமைச்சரைச் சந்தித்து- பணிஇடமாற்றத்தை ரத்து செய்ய வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார். சொல்லிச்சொல்லி நெகிழ்கிறார் சாம்ஸன்.
அமரர் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய படங்கள்:
முள்ளும் மலரும்- உமாசந்திரன்
உதிரிப்பூக்கள்- புதுமைப்பித்தன்
பூட்டாத பூட்டுகள்- பொன்னீலன்
மெட்டி- "சாவி'யில் வெளிவந்த தொடர்கதை
நண்டு- சிவசங்கரி
ஜானி
நெஞ்சத்தைக் கிள்ளாதே
அழகிய கண்ணே
கைகொடுக்கும் கை
கண்ணுக்கு மை எழுது
சாசனம்
ஊர்ப்பஞ்சாயத்து
ஆணிவேர்
(ஜான்மகேந்திரன் இயக்க... மகேந்திரன் அவர்கள் மேற்பார்வை இயக்கத்தில் இலங்கையில் தயாரான திரைப்படம்)
ஞாபக நதிக்கரையில் நாமும் நடக்கிறோம்... உதிரிப்பூக்களின் கடைசி ஷாட். அப்பா மீண்டும் நதியிலிருந்து எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் நடக்கும் குழந்தைகளைப் போலவே எழுத்தாளர்களின்/படைப்பாளிகளின் இதயங்களில் அவர் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் உதயமாவார்.
________________
வியாபாரமாக்க விரும்பாதவர்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். சங்கத்தின் துணைத்தலைவரான டைரக்டர் "யார்' கண்ணன். கடந்த 15-ஆம் தேதி, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில் டைரக்டர்கள் கே. பாக்யராஜ், வீ.சேகர், மனோஜ்குமார், ஆர்.வி.உதயகுமார், எடிட்டர் மோகன், நடிகர்கள் ராதாராவி, நாசர், "மைக்' மோகன், உட்பட ஏராளமான திரைப்பிரபலங்களும் பத்திரிகை உலக பிரபலமான நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களும் கலந்து கொண்டனர்.
"காற்றில் எந்தன் கீதம்... காணாத ஒன்றைத் தேடுது'என்ற பாடல் வரிகளை, கேந்திரன் போட்டோவுடன் கூடிய ஃப்ளக்ஸ் பேனரில் எழுதியிருந்தது பொருத்தமாக இருந்தது. வந்திருந்த அனைவரும் மகேந்திரன் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியபின், ஒவ்வொருவராக மகேந்திரனின் டைரக்ஷன் சாதனைகளையும் அவருடனான நட்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசினர்.
நக்கீரன் ஆசிரியர் பேசும்போது, "அண்ணன் மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே' படமும் மணிரத்தினத்தின் "மௌன ராகம்' படமும் ரஷ்ய பட விழாவில் கலந்துகொள்ள போட்டி போட்டன. "நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம்தான் ரஷ்யாவுக்கு போயிருக்கணும். ஆனால் இங்கே நடந்த சதியால் "மௌன ராகம்' போனது.
அப்போது ரொம்பவும் மனசு உடைஞ்சு போனார் அண்ணன் மகேந்திரன். தமிழ் ஈழத்தில் தம்பி பிரபாகரனுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தவர் மகேந்திரன் "அதைப்பத்தி பதிவு பண்ணுங்கண்ணே'ன்னு அடிக்கடி சொல்வேன். "மத்தவங்க மாதிரி அதை வியாபாரம் ஆக்க விரும்பல கோபால்'னு சொல்லிட்டார்.
இப்ப என்னடான்னா பிரபாகரனுடன் இருப்பது மாதிரி மார்ஃபிங் போட்டோவை வச்சுக்கிட்டு எத்தனையோ பேர் அலப்பரை பண்ணிக்கிட்டிருக்கான்' என டச்சிங்காகவும் டைமிங்காகவும் பேசினார்.
-பரமு
படம்: எஸ்.பி.சுந்தர்