றிஞர் ஞானி அவர்கள் வரலாற்றின் பக்கங்களில் தனி முத்திரையைப் பதித்தவர். கட்சிசார்ந்த மார்க்சியர் தங்களைக் குறுக்கிக் கொண்டபோது மார்க்சியத்திற்கு விரிவான பொருளையும் ஆழமான அர்த்தங்களையும் கொண்டுவந்து நிறுத்தியவர். ஞானி மிகச் சிறந்த மார்க்சியத் திறனாய்வாளர். மனிதனின் படைப்பாற்றலையும் அழகியலையும் உள்வாங்கிக் கொண்டவர். மாக்சியத்திற்கு அப்பால் தோன்றிய உயர்வான சிந்தனைகளை ஒதுக்கிவிடாமல் அவற்றின் தேவையை நன்குணர்ந்தமையால் தனது மாக்சியப் பார்வையை செழுமைப்படுத்திக் கொண்டவர்.

கலைகளும் இலக்கியங்களும் மேல்கட்டுமானத்தைச் சேர்ந்தவை என்பதை இவர் ஏற்பதில்லை. எனவே ஞானியால் மண்ணுக்ககேற்ற மார்க்சியம் - மேலை மாக்சியம் என்றெல் லாம் பேசமுடிந்தது. மேற்கத்தியம் மனித மையப் பார்வையால் அவதிப் படுகிறது. கிராமங்களை அழித்து நகர மயமாக்குகிறது. மூலவளங்களைச் சூறையாடுகிற - இயற்கையைச் சுரண்டிக் கொழுக்கிற தத்துவங்களை யும் நடைமுறைகளையும் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார்.

tt

சூழல் சார்ந்தும் இயற்கை சார்ந்தும் மனித வாழ்விற்கு பொருள் கண்டறியப் படாவிட்டால் மனித குலம் அழியும் என்பதைத் தனது திறனாய்வாக முன்வைக்கிறார். பன்னாட்டுப் பெரும் முதலாளியத்தின் பக்கவேர்களும் சல்லிவேர்களும் நம் அன்றாட வாழ்க்கை முழுவதும் ஊடுருவி நம்மை அழிப்பதை இனம் கண்டறிகிறார்.

*

காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை அசலான புரட்சியாளர்கள் என்றும் நடைமுறைச் சார்ந்த கம்யூனிஸ்ட்களென்றும் காண்கிறார். அவர்களின் பங்களிப்பை நேர்மறையாக ஏற்கிறார். தமிழ் இலக்கியத்தை மறுவாசிப்பு செய்கிறார்.

பல் வாசிப்புகளை முன்நிறுத்துகிறார். பாசிசத்தை முறியடிக்கிற பேராற்றல் தமிழ் இலக்கியத்துக்கு உண்டு என்கிறார்.

வரட்டுத்தனமும் இயந்திரத்தனமான பார்வையும் மாக்சியத்திற்கு எதிரிகள் என்று குறிப்பிடுகிறார். ஞானியின் மார்க்சியம் அசலான மார்க்சியம்.

தமிழர் வரலாற்று இயக்கத்தில் தனது மார்க்சியப் பார்வையை செலுத்துகிறார். சங்ககாலம் பொற்காலமல்ல. போர்களும் அரசுகளின் சுரண்டல்களும் மக்களை வறுமையில் வாட்டிய காலமது. பல்வேறு இனங்களுக்கும் தமிழினம் அடிமைப்பட்டுக் கிடந்தது. சமகாலத்தில் நோயுற்ற சமூகமாக உள்ளது. அனைத்து அடிமைத்தனங்களையும் எதிர்த்துப் போராடியவர் பெரியார். ஆனாலும் அவரது பகுத்தறிவு பார்வை நமக்குப் போதுமானதல்ல. சமயங்களை ஆய்விற்குட்படுத்த வேண்டும். பெண்விடுதலையை உலகை காப்பாற்ற வந்த மெய்யியலாகவும் நடைமுறை சார்ந்த வடிவமாகவும் காணகிறார். தமிழோடு வாழ்ந்தவர். தமிழோடு இயங்கியவர். தன் உயிருக்கு மேலாகத் தமிழை நேசித்தவர். தமிழையும் மார்க்சியத்தையும் இணைத்தவர். பிரபஞ்சத்தைக் கண்டு வியந்தவர்.

*

தமிழ்ச் சமூகம் குறித்த ஆழமான புரிதல் ஞானிக்கு இருந்ததால் திருச்சி பவுல் குருமடத்தில் பெரியார் வெறும் சீர்திருத்தவாதி அல்ல அவர் அசலான புரட்சியாளர் என்று பேச முடிந்தது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தோற்றத்தில் இருக்கும் ஞானி மனதைத் தூய்மையாக வைத்திருப்பதற்கான அவரின் சிந்தனையை ஏற்கிறார். நிதானத்தையும் பொறுமையையும் தேடி அவர் புண்ணியத் தலங்களுக்குப் பயணிக்கவில்லை. தனது காலடியில் தனது வாழ்விற்குள் அவற்றைத் தேடிக் கண்டடைந்தார். சென்னையில் மயிலாப்பூரில் பார்ப்பனர்கள் நடத்திய இலக்கியச் சந்திப்பில் ஞானியும் ஜெயகாந்தனும் உரை நிகழ்த்தினர். தமிழுக்கு இறப்பில்லை. காலந்தோறும் எண்ணற்ற நெருக்கடிகளைச் சந்தித்து மீண்டு வந்துள்ளது என்ற ரீதியில் பேசினார் ஜெயகாந்தன். ஞானி தனது உரையில் பார்ப்பனர்களைக் கடுமையாகச் சாடினார். தன்னை அழைத்து இருக்கிறார்கள் என்பதற்காக எள்ளவும் அவர் சமரசமாகிவிடவில்லை. கடந்த காலங்களில் பார்ப்பனர்கள் தமிழுக்குத்தொண்டாற்றி வந்துள்ளனர். பாரதியார் வரை அவர்களின் சமூகப் பங்களிப்பு தொடர்ந்தது. அந்த மரபை ஏன் கைவிட்டீர்கள்? முன்பு உங்களிடம் இருந்த சமூக உணர்வு இப்போது இல்லை. எந்த சமுதாயத்தால் நீங்கள்; முன்னுக்கு வந்தீர்களோ அந்த சமூகத்திற்கு ஒரு துரும்பையும் கூடக் கிள்ளிப் போடவில்லை என்று சீறினார். அங்கு இருந்தவர்கள் நெளிந்தார்களை ஒழிய எதிர்த்துப் பேசவில்லை.

*

ஞானியும் நானும் ஒரு கிறிஸ்துவ மடத்திற்குச் சென்றோம். அங்கு இருந்த துறவி ஞானியை முதன்முதலாகப் பார்க்கிறார். ஞானி அவரிடம் ஒரு துறவியாக இருந்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். 30 ஆண்டுகளாக இங்குள்ள அறைகளை வாடகைக்கு விடுகிறோம் என்றார். வாடகை வசூலிப்பதற்கும் துறவறத் திற்கும் என்ன தொடர்பு என்றார் ஞானி. இதுபோன்ற வேலைகளில் இயேசு நாதரையும் ஈடுபடுத்துவீர்களா என்றார். சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவதைப் போன்று அவர் கேள்வி எழுப்பும் போது பெரும்பாலும் அவர்களிடம் பதில் இருக்காது. எரிச்சலும் கோபமும் அவர்களிடம் கொப்பளிக்கும். பறவைகளின் சத்தத்தை ரசித்து அதில் ஒன்றித்து விடுகிற ஞானி மோசமான மனிதர்களை சந்திக்கும் போதெல்லாம் கேள்விக் கணைகளால் அவர்களை துளைத்தெடுப்பார்.

*

கீழை மார்க்சிய ஆசான் தோழர் எஸ். என். நாகராஜனைத் தனது குருவாக ஞானி ஏற்றுக்கொண்டார். ஆனால் அவரே ஞானி இல்லாவிட்டால் தமிழர்களுக்கு என்னை அடையாளம் தெரியாமலே போயிருக்கும். என் சிந்தனையைத் தமிழ் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர் ஞானி என்றார்.

அவரின் மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம் என்பதை மிகவும் உறுதியாக ஏற்றுக்கொண்டு தமிழ் மார்க்சியத்துக்கு ஞானி வித்திட்டார் மார்க்சியமும் தமிழும் என்னை காப்பாற்றியது என்றார்.

தமிழுக்கும் மார்க்சியத்துக் கும் மிகப் பெரிய நெருக் கடி உருவாகி இருக்கிறது. அரசு தமிழர்களை உற்பத்தி செய்வதில்லை. ஆங்கிலேயர்களை உற்பத்தி செய்கிறது. தமிழ் இல்லாவிட்டால் நமக்கு வாழ்வு இல்லை என்று உணர வேண்டும். தமிழனை தமிழனாக்கியது. தமிழ் இலக்கியங்களே என்பதைப் புரிந்துக்கொள்ளாமல் தமிழின் ஆணி வேரை வெட்டி எறியும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது. தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல. அது அன்பையும் காதலையும் வீரத்தையும் அழகு உணர்வுகளையும் தனக்குள் பொதிந்து வைத்துள்ளது. இந்த வகையில் தமிழ் நமது வாழ்வு. நமது எதிர்காலம். நமக்கான புரட்சி.

*

ஞானி என்ற ஞானக் களஞ்சியம் நமக்கான வாழ்வியல் வழிகாட்டி. மார்க்சியப் பாடநூல். தமிழ் எழுத்து சார்ந்த போராட்டத்தின் நவீன வடிவம். இருளும் இந்தியாவை, தள்ளாடும் தமிழகத்தை வெளிச்சத்தில் நிறுத்தி விசாரிக்கும் உண்மைச் சொற்களின் நேர்மை உலா ஞானி. இந்தியாவை, தமிழகத்தை ஒரு மார்க்சிய நாடாக்குவதில் நாம் எப்படித் தவறினோம், தடுமாறி னோம், தோற்றுப் போனோம் என்பதைத் தெளிவுறுத்தும் மார்க்சிய அறிவியலை, மார்க்சிய மறுகல்வியை, மார்க்சிய மெய்யியலை அரசியலோடும் அறிவியலோடும் வழங்கியவர். ஞானி தான் பெற்ற மார்க்சி யத் தெளிவுகளையும் தேடல் களையும் தேனடையைப் போலத் தமிழ் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளார். உலகளாவிய இடதுசாரி இலக்கியப் பார்வைகளின் உதவியோடு தமிழ் இலக்கியங்களை மறுவாசிப்புச் செய்துள்ளார். திறனாய்வு மனநிலையோடு மனதையும் அறிவையும் வாழ்வையும் அணுகும் கலையைக் கவனமாகப் பயின்றவர் ஞானி.

*

நோவா என்ற சான்றோர் உலக உயிர்களையெல்லாம் தனது படகில் ஏற்றி வெள்ளத்திலிருந்து தப்பிக்க வைத்த கருணை உள்ளம் கொண்டவராக விவிலியத்தில் சித்தரிக்கப்படுகிறார். ஞானி அத்தகைய உயர்வான மனிதநேயர். மனிதப் பண்புடன் திகழ்ந்தவர். இயேசுவைப் போன்று இந்த உலகை வென்று விட்டேன் என்பவர். அமைதியாகவும் எளிமையாகவும் வாழ்தலே இனிமை என்றவர். கேள்விகள் எழுப்பி விடைகளைக் தேடியவர். உலகைத் தனது குடும்பமாக்கியவர். மானுடம் ஒன்றென்பதை உணர்ந்தவர். சிந்திப்பதை இறுதிவரைத் தொடர்ந்தவர். காலந்தோறும் தமிழ் நம்மை வளர்ப்பதை உணர்ந்தவர். தமிழைக் காப்பாற்றாமல் தமிழரைக் காப்பாற்ற முடியாது என்பவர்.

ஞானி சிறுகச் கட்டி பெருக வாழ்ந்தவர். முதிர்ந்தவர் ஆயினும் சிறு குழந்தையைப் போன்று நம் மீது அன்பு மழை பொழிந்தவர். பொதுமை வாழ்விற்கு அன்பை அடிப்படை ஆக்கியவர்.

அவருடன் 35 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். அவர் எனக்கு ஆசான். நான் அவரின் மாணவன்.

எனக்கு மார்க்சியம் இவரின் மூலமாக அறிமுகம் ஆனது. ஞானியையும் தோழர்கள் எஸ்.என். நாகராஜனையும் எஸ்.வி.ஆரையும் நான் சந்தித்திராவிட்டால் என் சிந்தனை வறண்டிருக்கும். தமிழ்நேயத்தில் ஞானி எப்போதெல்லாம் என்னிடம் கட்டுரை கேட்டாரோ அப்போதெல்லாம் உடனுக்குடன் எழுதித் தருவேன். என்னை அதிகம் எழுதத் தூண்டியவர் ஞானி. என்னுடைய முதல் நூலுக்குப் பெயர் சூட்டியவரும் அவர்தான்.

திண்டுக்கல் மலைக்கோட்டையின் படிகளில் ஏறி உச்சியில் அமர்ந்து தலைப்பை இப்படி வைக்கலாம் சுதாகர். திசைகளற்ற உலகம். தேடலில் மானுடம் என்றார். எனக்கும் பிடித்திருந்தது.

எனது இரண்டாம் நூல் மதம் இலக்கியம் மானுடம். மூன்றாம் நூல் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள். மூன்றுக்கும் ஞானி அணிந்துரை வழங்கி னார். பெரிதும் என்னை ஊக்கப்படுத்தினார்.

எனது முனைவர் பட்ட ஆய்வு மறுவாசிப்பில் தமிழ்ப் பெண்ணியத் தொன்மங்கள். அந்த ஆய்வின் ஒரு பகுதி எனது மூன்றாம் நூலில் இடம் பெற்றுள்ளது. நான் வெளிநாடு சென்று திரும்பிய பின் சிந்தனையில் என்னிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூறுவார். புதிய விடயங்களைக் கவனமாகவும் ஆர்வமாகவும் கேட்பார். அவருடன் பழகிய அவருக்குப் பிடித்தமான நபர்களைப் பற்றி ஒரு சிறிய நூலை வெளியிட்டுள்ளார். அவருக்கு நான் என்னவாக இருந்தேன் என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஒரு மார்க்சியன் எவ்வளவு ஈரமுள்ள இதயத்தவனாகவும் பண்பினனாகவும் நாகரிகனாகவும் விளங்க வேண்டும் என்பதற்கு ஞானி ஆகச் சிறந்த முன்னெடுத்துக்காட்டு.

கோவையில் ஒருமுறை எங்களுடன் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்தார். அது ஓர் ஆங்கிலப் படத்தின் தமிழாக்கம். பிறகு கூறினார்.

தமிழ்ப் படங்களில் தமிழைக் கொலை செய்கிறார் கள். ஆனால் இந்த மொழியாக்கப் படத்தில் தமிழை எவ்வளவு அழகாகவும் ஆங்கிலக் கலப்பின்றியும் உச்சரிக்கிறார்கள் பார்த்தீர்களா என்று வியந்தார். திண்டுக்கல்லில் அருள் சகோதரிகள் பவுலின் மற்றும் குழந்தை இருவரும் தங்களின் தமிழ்ப் பண்ணையில் ஞானியுடன் பல கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தார்கள். கோவைக்கு அடுத்து திண்டுக்கல் அவருக்கு நல்லதொரு தளமாக அமைந்தது. ஏராளமான நண்பர்களைக் சந்தித்து உரையாடினார். கோத்தகிரியில் தோழர் எஸ் வி ஆரின் இல்லத்திற்குச் சென்றபோது அங்கு இருவரும் மனம் திறந்து உரையாடி மகிழ்ந்தனர். தோழரைப் போல என்னால் இணையவழியில் உலகளாவிய சிந்தனைகளைப் பெறமுடியவில்லையே என்று ஞானி ஆதங்கப்பட்டார். வேறு எங்கும் அவர் தனது கண் பார்வைக் குறைபாட்டினைக் குறையாகக் கூறுவதில்லை. அவரின் இல்லத்தில் தயக்கமின்றி நிதானமாக நடந்து அறைகளுக்குள் செல்வார். வெளியிலும் மாடிப்படிகளிலும் அவர் ஒரு போதும் தடுமாறியதில்லை. வாழ்க்கையை அவர் எந்த அளவிற்கு கவனமோடு கையாள்கிறார் என்பதை அவரின் ஒவ்வொரு அசைவும் வெளிப்படுத்தும்.

எந்த நூல் எந்த இடத்தில் இருக்கிறது என்று துல்லியமாகக் கூறுவார். நூலையோ பத்திரிக்கையையோ கவனமின்றி எவரேனும் கையாண்டால் கோபித்துக் கொள்வார். ஆழமான சிந்தனைகளின்றி மேம்போக்காக எழுதுவோரைக் கடிந்து கொள்வார். நல்ல தமிழ்ச் சொற்களைக் கேட்கும்போது மகிழ்வார். ஒரு நூலை வாசிக்கக் கொடுப்பார். அது குறித்து உடனே எழுதப் பணிப்பார்.

வெளியில் பெண்ணியம் பேசிவிட்டு வீட்டிற்குள் பெண்களை வதைக்கும் போலித் தனம் அவரிடம் கிடையாது. அவர்களின் நிலையிலிருந்து பார்க்கவும் நாம் பழக வேண்டும் என்பார். யார் யாருக்கோ புத்தகத்தை அர்ப்பணிக்கிறீர்கள். என்னைப் பற்றி எழுதக்கூடாதா என்று அவரின் துணைவியார் கேட்டவுடன் அவருக்காகவும் ஒரு நூல் எழுதினார். அச்சிற்கு அனுப்பும்போது அன்றைய நாளைக் குறிப்பிடாமல் தவறுதலாக வேறு ஒரு தேதியைக் குறிப்பிட்டு எழுதி அனுப்பிவிட்டார். அடுத்த மாதத்தில் அதே நாளில் அவரின் துணைவியார் இந்திரா இறந்து விடுகிறார். ஞானி வியப்போடு இதைப் பிறகு நண்பர்களிடம் பகிர்ந்தார்.

ஞானி உடல் நலிவுற்ற போது நண்பர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் எப்படியாவது அவரை சென்னைக்குக் கொண்டுவந்து சிறப்பு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்வோமா என்றார். காலம் முந்திக் கொண்டது. அவர் மிகவும் நேசித்த தீவிர வாசிப்பும் எழுதுவதும் நண்பர்களுடன் உரையாடலும் தொடர்ந்திட காலம் அவரை அனுமதிக்காமல் கதவடைத்துவிட்டது.

அவரின் நூல்கள் என்னும் திறவுகோல் களை தந்துவிட்டு நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார். மானுடம் பாடிய அந்த செம்மாந்த சிவப்புப் பறவை, சிறகடித்துப் பறந்து விட்டது.