நம் வாழ்நாளில் அவ்வப் போது ஒரு அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்வது என்பது நம் உள்ளத்திற்கும் உணர்வுகளுக்கும் ஒரு அலாதியான இன்பம்தரக் கூடியதுதான்.
அதிலும் இந்தமுறை
அயலகத்தில் வசித்துவரும் நம் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு, செம்மொழியான நம் தமிழ்மொழியைக் கொண்டாட எடுத்திருக்கும் அரும்பெரும் விழாவினைக் காணச் செல்ல நமக்கு அமைந்த வாய்ப்பின் பெருமையையும், அதனால் அடைந்த பேரின்பத்தையும் என்னென்பது!
தமது 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த முயற்சி மேற்கொண்ட உலகத் தமிழாய்வு மன்றம் (ஒஆபத-1964), இந்த ஆண்டை யொட்டி பொன்விழாக் கொண்டாடும் சிக்காகோ தமிழ்ச் சங்கம்(ஈபந-1969) மற்றும் தமது 32 ஆம் ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (எங்பசஆ-1987) ஆகிய மூன்றும் இணைந்து நடத்திய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முப்பெரும் விழா ஜூலை 4 முதல் 7ஆம் தேதிவரை வட அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிக்காகோ நகரத்தில் நடைபெற்றது.
விழாக் கொண்டாடத் தேர்ந் தெடுத்திருந்த கருத்தரங்க மையம் அமைந்திருந்த இடம், சிக்காகோ விமான நிலையத்திலிருந்து சுமார் அரை மணி நேரப் பயண தூரத் திலுள்ள சாம்பர்க் (Schaumburg) நகரம்.
நாம் இதற்கு முன்பு பலமுறை அங்கு சென்றிருந்தாலும், அமெரிக்கா வின் மற்ற நகரங்களைப்போலவே அந்நகரமும் ஒரே பசுமையும், அனைத்து இடங்களிலும் நம் ஊர் உதகையிலுள்ள பூங்காவை நினைவூட்டும் புல்தரைகளும், இடையிடையே கொத்துக் கொத்தான பூக்களைக் கொண்ட ரோஜாச் செடிகளும், வானளாவ உயர்ந்துள்ள பூக்கள் நிரம்பிய விதவிதமான மரங்களும், செடிகொடிகளும், பெரும்பான்மையாகக் கண்ணாடிச் சுவர்கள்கொண்ட மரப்பலகைக் கட்டிடங்களும் அமெரிக்க ஐக்கிய நாடு ஒரு வல்லரசுநாடுதான் என்பதை வழக்கம்போலவே மீண்டும் மீண்டும் ஓயாமல் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
நாம் கலிஃபோர்னியாவிலிருந்து விழாநாளுக்கும் முதல்நாளான ஜூலை 3ஆம் தேதியே 5 மணிநேர விமானப் பயணமாக அங்கு சென்றிருந்ததால் விமான நிலையத்தின் அருகிலுள்ள தனியார் கார் நிறுவனத்திடமிருந்து ஒரு காரினை மொத்தம் 5 நாட்களுக்குமாகச் சேர்த்து வாடகைக்கு நம் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் வசதியைச் செயல்படுத்திக் கொண்டோம். இவ்வசதி அங்கு பெரும்பாலும் அனைத்து மாகாணங்களிலும் இருக்கிறது. காரை நாம் மீண்டும் அங்கு விடும்போது எரிபொருள் நிரப்பி விடவேண்டும்.
நம் நாட்டிலும் இதுபோன்ற வசதியை எட்ட வழிவகை செய்யவேண்டுமென இங்கு ஒவ்வொரு இந்தியரும் சொல்வர். விழாவின் துவக்க நாளான ஜூலை 04ஆம் தேதி காலை 8.30 மணியிலிருந்தே விழா அரங்கம் அமைந்துள்ள அப்பெரிய வளாகத்தில் நம் ஊர்ப் பட்டுப்புடவைகள் சரசரக்க, மல்லிகைச்சரம் கூந்தல்களை அலங்கரிக்க, நம் தமிழ்ப் பெண்களும்,வேட்டி சட்டையிலும், கலவையான நவீன உடைகளிலும், பளீரென நம் ஆண்மகன்களும், தங்கள் குழந்தைகளுடன் தங்களது மகிழுந்துகளை அதற்கான மைதானத்தில் வெள்ளை வண்ணத்தில் கோடுகளிடப்பட்ட வாகனம் நிறுத்தும் இடங்களில் வரிசையில் நிறுத்திவிட்டுக் குடும்பம் குடும்பமாக வந்துகொண்டிருந்தனர்.
இன்னொருபுறம் பல்வேறு நாடுகளின் தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ்மொழி ஆய்வாளர்கள், பல்துறைத் தமிழ் எழுத் தாளர்கள், தத்தம் நாடுகளில் தமிழ்ச்சங்கம் உருவாக்கித் தமிழ்ப்பணி ஆற்றி வருபவர்கள், அமைப்புக் குழுவில் பல்வேறு பொறுப்பு வகிப்பவர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள், கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள், குறிப்பாகப் புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள், ஓவியர்கள், பல்வேறு வகையான கலைசார்ந்த இலக்கியப் படைப்பாளிகள் என அந்த பிரம்மாண்டமான வளாகத்தையே வானில் ஒளிரும் நட்சத்திரங்களைப் போல் அலங் கரித்தனர்.
விழா அரங்கின் அலங்காரத்தையும் அதன் உட்கட்டமைப்புச் செழிப்பையும் சொல்லவே வேண்டிய தில்லை. அவற்றிற்கெல் லாம் சிகரம் வைத்தது போல் முதல்வளாகத் தின் மையத்திலேயே முதன்மையாக அழகிய பூக்களாலான "கீழடி' எனும் எழுத்துகள டங்கிய ஒரு பெரும் பதாகை புத்தொளி வீசிக் கொண்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மேசைகளில் அகழ்வாய்வில் கிடைத்த நம் தொல்தமிழரின் அடையாளங்களான தொல்பொருள்களும் சில படிமங்களும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இன்னொரு புறம், விழாமேடையில் நமது பரதம் முதலான ஆடற்கலை புரிய சலங்கையொலியுடனும், பாடல் பாடவும் , பறையொலி முழக்கவும், சிறார்கள் உள்ளிட்ட பற்பல கலைஞர்களும் அதற்கான உடையலங்காரத்துடன் கலவையான கிசுகிசு குரல்கள் ஒலிக்க பட்டாம்பூச்சிகளாக வந்து கொண்டிருந்தனர்.
அமெரிக்க நாட்டில் எங்கு நோக்கினும் அவர்கள் பாரம்பரியப்படி நவீன நாகரிக, குறைந்தளவேயான உடைகள் அணிந்த பளீரெனும் வெண்மைநிற மக்களையும், அதேநேரம் தமது நிறத்தைப் பற்றிக் கவலைப்படாத நம்மைவிட அடர்நிறம் கொண்டிருந்த, ஆப்பிரிக்க நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இன்னொரு சாராரும் தமக்குரிய உடை அலங்காரத்தையும் ஒப்பனையையும் முன்னவர்களுக்குச் சிறிதும் குறைவில்லாமல் செய்திருந்த மக்களையுமே கூட்டம் கூட்டமாகவும், ஜோடிஜோடி யாகவும் பார்த்திருந்த நம் கண்களுக்கு, நம் தமிழர்களின் இந்தப் பாரம்பரிய உடையலங்காரம் 100 ஆங்கிலப் படங்களுக்கு இடையில் ஒரு தமிழ் சரித்திரப் படம் பார்த்த உணர்வையும், இன்பத்தையும் உள்ளத்தில் அள்ளித் தெளித்தன என்றால் மிகையாகாது.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் 32-வது ஆண்டின் கருப்பொருளான "கீழடி எங்களின் தாய்மடி' என்னும் சொற்றொடரே விழாவின் முதற்கட்டச் சிறப்பாக இருந்தது.
அது தமிழர்களின் தொன்மங்களையும் ஆதிகால அடையாளங்களையும் மீட்பதற்கான முயற்சியாகக் கடல்கடந்தும் ஒலித்ததைக் கேட்கக் கேட்க பிறவிப் பயனை எட்டுவதைப் போன்ற உணர்வு மேலோங்கியது.
அப்போது திடீரென ஒரு சின்ன சலசலப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து
வேறொரு பக்கமிருந்து நமக்கு மிகவும் தெரிந்த பிரபல முகங்களான பட்டிமன்றப் புகழ் ஐயா சாலமன் பாப்பையா அவர்களும், ஐயா ராஜா அவர்களும், அம்மா பாரதி பாஸ்கர் அவர்களும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக வந்து கொண்டிருந்தார்கள்..
தொடரும்...