ரு முக்கிய டில்லி பத்திரிகையில் பிசுரமாகியிருந்த ஒரு செய்தியின் தலைப்புதான்... 'Delhi's Criminals turn sadists என்பது. நாம் வாசிக்கும் இந்தக் கதையின் தலைப்பும் அதுவாகவே இருக்கட்டும். ஒரு மலையாளக் கதைக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது பொருத்தமாக இல்லையே என்று கேட்கலாம். இல்லை என்பதுதான் பதில். காரணம்...

டில்லியின் குற்றவாளிகள், மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் அப்பாலிருந்து வாழ்பவர்கள்...

டில்லியில் நடைபெற்ற குற்றச் செயல்களைப்பற்றி "டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் வினய் திவாரி எழுதிய ரிப்போர்ட் அது. கடந்த ஆறு மாதங்களுக்குள் முந்நூறு கொலைச்செயல்கள் டில்லியில் நடந்திருக்கின்றன.

இந்த வருடம் முடியும்போது, அறுநூறோ எழுநூறோ டில்லி வாசிகள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

Advertisment

அதாவது... கார்க்கிலில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களைவிட அதிகமான பேர்...

அந்த பத்திரிகையை மடியில் வைத்திருந்தபோது, என் சிந்தனை பத்து... பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் சென்றது. "டில்லி 81' என்றொரு கதையை நான் எழுதியிருக்கிறேனே! சொந்தக் கதையை யாரும் புகழ்ந்து கூறக்கூடாது என்ற விஷயம் தெரியும். ஆனால், மற்றவர்கள் நம்முடைய ஏதாவதொரு கதையைப் பற்றி இரண்டு நல்ல வார்த்தைகளைக் கூறினால், யார்தான் உள்ளுக்குள்ளாவது சந்தோஷப்படாமல் இருப்பார்கள்?

வி. ராஜகிருஷ்ணன் இவ்வாறு கூறுகிறார்:

Advertisment

"முகுந்தனின் கதைகளில் தனியாக நிற்கும் ஒரு கதை...

"டில்லி 81.' பிரசுரமானபிறகு மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட கதை. கதைக் கருவாலும், எழுதப்பட்ட விதத்தாலும் கவனத்தைச் செலுத்தவேண்டிய ஒரு சூழலைக் குறிப்பாக அந்த கதை உணர்த்துகிறது'.

ஆனால், உள்ளுக்குள் சந்தோஷம் உண்டாவதற்காக நான் இங்கு வி. ராஜகிருஷ்ணனைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

"டில்லி'ஸ் கிரிமினல்ஸ் டேர்ன் சேடிஸ்ட்ஸ்' என்ற இந்தக் கதையை வாசிக்கக்கூடிய அனைவரும் "டில்லி 81' வாசித்திருப்பீர்கள் என்று கூறுவதற்கில்லை.

பலருக்கு அப்படியொரு கதை எழுதப் பட்டிருக்கிறது என்பதுகூட தெரியாமலிருக்கலாம். அவர்களுடைய கவனத்தை அந்தக் கதையை நோக்கித் திருப்பிவிடுவதற்காக ஒரு புகழ்பெற்ற விமர்சகரின் வார்த்தைகளை நான் இங்கு திரும்பக் கூறியிருக்கிறேன்.

"டில்லி 81'ம், "டில்லி'ஸ் கிரிமினல்ஸ் டேர்ன் சேடிஸ்ட்ஸ்' கதையும் ஒன்றாகச் சேர்த்துவைத்து வாசிக்கவேண்டிய படைப்புகள் என்பதையும் கூறுகிறேன்.

இந்தக் கதையை வாசிக்கத் தொடங்கும் வாசகர்கள் உடனடியாக "டில்லி 81'-த் தேடி படிப்பகத்திற்கோ புத்தகக் கடைகளுக்கோ ஓடவேண்டுமென்று நான் ஆசைப்படவில்லை. இந்தக் கதைகளை அவர்கள் வாசிக்கிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய ஒரு பெருமைதான். அதைக் காரணமாக வைத்துக்கொண்டு அவர்களைப் புத்தகக் கடைகளைநோக்கி விரட்ட முயற்சிக்கும் செயலை நான் செய்யக்கூடாது.

அதனால், "டில்லி 81' கதையை வாசித்திராதவருக்காக நான் அந்த கதையைச் சற்று சுருக்கமாகக் கூறுகிறேன்.

ராஜீந்தர் பாண்டே சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தான். தெருவின் எதிர்ப்பக்கத்தில் வரிசை வரிசையாகக் கடைகள்... கடைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய மைதானம் தெரிந்தது.

அவனுடைய அறை இரண்டாவது தளத்தில் தெருவைப் பார்த்தவாறு இருக்கிறது. அதனால் சாளரத்திற்கருகில் சென்று நின்றால், கீழே தெருவையும் வரிசையாக அமைந்திருக்கும் கடைகளையும் அந்தப் பக்கத்திலிருக்கும் மைதானத்தையும் தெளிவாகப் பார்க்கலாம்.

"டில்லி 81' இவ்வாறு தொடங்குகிறது...

ராஜீந்தர் பாண்டே அவ்வாறு பார்த்தவாறு நின்று கொண்டிருக்கும்போது...

கீழே தெருவின் வழியாக ரகுவீரும் நானக்சந்தும் நடந்துவருவதை அவன் பார்த்தான். அவர்கள் அந்தப் பகுதியின் பெயர்பெற்ற போக்கிரிகள்... ரகுவீர் சமீபத்தில் இரண்டு நாட்கள் சிறைக்குள் கிடந்தான். நானக்சந்த் இதுவரை ஐந்துமுறை சிறைக் குள் போயிருக்கிறான்.

ரகுவீரும் நானக்சந்தும் அமீர்சிங்கின் சலவைக் கடைக்குப் பின்னாலிருக்கும் வழியாக மைதானத் திற்குள் இறங்கிச் செல்வதை பாண்டே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

தூரத்தில் மைதானத்தின் எதிர்ப்பக்கத்தில் ஒரு மஞ்சள்நிற நிழல் நெளிந்து வருவதை பாண்டே கவனித்தான். அத்துடன் ஒரு நீண்ட நிழலும்... சில நிமிடங்கள் கடந்தபிறகு அவர்கள் மஞ்சள்நிறப் புடவையணிந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் என்பதை அவன் புரிந்துகொண்டான். மேலும் சிறிதுநேரம் கடந்தபிறகு அவனுடைய கையில் ஒரு குழந்தை இருக்கிறது என்பதை பாண்டே புரிந்துகொண்டான்.

ராஜீந்தர் பாண்டே தன்னுடன் வசிக்கக்கூடிய கிஷோர் லாலை சாளரத்திற்கு அருகில் வருமாறு அழைத்தான். அந்தப் பெண்ணும் ஆணும் மைதானத் தின் மத்தியில் வந்து சேர்ந்திருந்தார்கள்.

அவள் அழகி என்று அவன் மனதில் நினைத்தான்.

அவளுடன் சேர்ந்து நடந்துவரும் இளைஞன் உயர்ந்து, மெலிந்து காணப்பட்டான். அது மனைவியும் கணவனும் குழந்தையும் அடங்கிய ஒரு சந்தோஷமான குடும்பம்...

நானக்சந்த் இளம்பெண்ணின் முகத்திலிருந்து புடவையின் தலைப்பை இழுத்து நீக்கினான்.

சதைப்பிடிப்பான கன்னங்களையும் மலர்ந்த கண்களையும் கொண்ட மிகவும் அழகான ஒரு முகம்... தலைமுடியின் நடு உச்சியில் குங்குமம் வைக்கப்பட்டிருக்கிறது.

இளைஞன் கையை வீசி ரகுவீரின் முகத்தைப் பார்த்து ஒரு அடி கொடுத்தான். அவனுடைய கையிலிருந்த குழந்தை உரத்த குரலில் அழ ஆரம்பித்தது.

நானக்சந்த் பேன்டிற்குள்ளிருந்து ஒரு கத்தியை உருவி எடுத்தான். இளம்பெண்ணின் மனம் ஒரு புறாவின் சங்குப் பகுதியைப்போல துடித்தது. இளைஞனும் நானக்சந்தும் பிடித்துக்கொண்டும் இழுத்துக்கொண்டும் நின்று கொண்டிருக்க, ரகுவீர் ஒரு பெரிய கல்லை எடுத்துக்கொண்டு வந்தான். ரகுவீர் அந்த கல்லை உயர்த்தி இளைஞனின் முன்தலையில் இடித்தான்.

குருதி வழியக்கிடந்த அந்த இளைஞனின் கண்களுக்கு முன்னால் ரகுவீரும் நானக்சந்தும், அவனுடைய மனைவியை அமைதியாகக் கிடந்த ஒரு கல்லறையை நோக்கிப் பிடித்து இழுத்துச் சென்றார்கள்.

இதுதான் "டில்லி 81'....

இதை வாசித்துவிட்டு, என்னால் எப்படி இந்த அளவுக்கு குரூரமான ஒரு கதையை எழுத முடிந்தது என்று பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் நானும் இந்தக் கேள்வியை எனக்குள் கேட்டிருக்கிறேன்.

டில்லியின் குரூரம் எனக்கே தெரியாமல் என் பேனாவிற்குள் நுழைந்துவிட்டதோ? சிலர் இந்தக் கதையை மிகவும் ஆச்சரியப்பட வைக்கக்கூடியது என்றும் கூறியிருக்கிறார்கள். அபார கற்பனையின் வெளிப்பாடு என்று குற்றம் சாட்டியவர்களும் இருக்கிறார்கள்.

இனி நாம் வினய் திவாரி எழுதிய செய்தியை சற்று அலசுவோம். அவர் முதலில் கூறுவது மேற்கு டில்லியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை... இதற்கு முன்பு பத்திரிகைகள் வெளியிட்டிருந்த இந்த சம்பவம் டில்லிவாசிகள் அனைவருக்கும் இப்போது மனப்பாடம்.

நானக்சந்தின் இடத்தில் இருபது வயது ஆகியிராத ஒரு இளைஞனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அவனுக்கு மிகவும் நன்கு பழக்கமான ஒரு குடும்பம் இருக்கிறது. முப்பது வயதுகொண்ட கணவனும் இருபத்தேழு வயதுள்ள மனைவியும் இரண்டு சிறிய பெண் குழந்தைகளும் இருக்கக்கூடிய ஒரு வசதிபடைத்த குடும்பமது. இருபது வயதுக்காரனான அக்ஷய மல்ஹோத்ராவிற்கு (உண்மையான பெயரல்ல) ஒருநாள் சிறிது பணத்திற்கான தேவை உண்டானது.

தனக்கு நன்கு பழக்கமான- வசதிபடைத்த வீட்டிற்குச்சென்று திருடுவதற்குத் தீர்மானித்த அவன், ஒரு மாமிசம் வெட்டும் கத்தியுடன் அங்கு சென்றான். அந்த வீட்டிற்கு எப்போதும் வரக்கூடிய அக்ஷய மல்ஹோத்ராவை தம்பதிகள் வரவேற்று அமரச் செய்தார்கள். அக்ஷய மல்ஹோத்ரா மாமிசம் வெட்டும் கத்தியை எடுத்து அந்த இளம் தம்பதிகளின் கழுத்தை அறுத்தான். அதற்குப்பிறகு குருதியில் கிடந்து துடித்து இறக்கும் தந்தையையும் தாயையும் பார்த்து அழுதுகொண்டிருந்த பிஞ்சுக் குழந்தைகளைக் கழுத்தை நெறித்துக் கொன்றான்.

அலமாரியிலிருந்து அவனுக்கு 15,000 ரூபாய் கிடைத்தது. அந்த பணத்துடன் அவன் உடனடியாக அந்த இடத்தைவிட்டு சென்றிருக்கலாம்.

ஆனால் அவன் போகவில்லை. இறந்து கிடக்கும் இளம்பெண்ணை அவன் கற்பழித்தான். அதற்குப் பிறகும் அவன் போகவில்லை.

தம்பதிகளின்...

குழந்தைகளின் இறந்த உடல்களை வலிய இழுத்து ஒன்றாகச் சேர்த்து சமையலறைக்குள் சென்று, சமையல் எரிவாயுவைத் தள்ளிக்கொண்டு வந்து அவர்களின் உடல்களின்மீது எரிவாயுவைத் திறந்து விட்டான்.

இனி... ஒரு சிறிய சம்பவத்தையும் கூறுகிறேன்.

இந்தச் சம்பவம் நடைபெற்றது...

எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டிற்கு அருகிலிருக்கும் சுக்தேவ் விஹாரில். புகழ்பெற்ற சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஆனந்த் அங்குதான் வசிக்கிறார். பகல் வேளையில் வேறொரு அக்ஷய மல்ஹோத்ரா கொள்ளையடிப்பதற்கு ஒரு ஃப்ளாட்டிற்குள் நுழைந்து செல்கிறான். தந்தை அலுவலகத்திற்குப் போய்விட்டதால் தாயும் குழந்தையும் மட்டுமே அங்கிருக்கிறார்கள். உள்ளே வேகமாக நுழைந்துசென்ற அவன் இல்லத்தரசியின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டுவிட்டு, வாயில் துணியைத் திணித்து வைத்தான். அலமாரியைத் திறந்து பணத்தைத் தேடும்போது, குழந்தை அழுதது. குழந்தையை அக்ஷய மல்ஹோத்ரா தூக்கியெடுத்து நீர் நிறைத்துவைக்கப்பட்டிருந்த பக்கெட்டிற்குள் போட்டான். கைகளையும் கால்களையும் அசைப்பதற்கோ குரல் எழுப்பவோ முடியாமல் தாய் பார்த்துக்கொண்டு கிடக்க, குழந்தை பக்கெட்டிற்குள் கிடந்து மூச்சுவிட முடியாமல் இறந்தது.

ss

சுக்தேவ் விஹாரிற்குச் செல்லும்போதெல்லாம் பக்கெட்டிற்குள் கிடந்து இறந்த அந்த குழந்தையை நான் நினைக்க ஆரம்பித்துவிடுவேன்.

"டில்லி'ஸ் கிரிமினல்ஸ் டேர்ன் சேடிஸ்ட்ஸ்' என்ற இந்த கதையை நான் எழுதுவது 1999, ஆகஸ்ட் முதல் வாரத்தில்... இந்த நகரம் ஒவ்வொரு நாளும் மாறிமாறி முகமே இல்லாமலாகிவிட்டது. அதன் கண்களில் வெறியும் காமமும் மட்டுமே உள்ளன. அந்தக் கண்கள் பெண்கள் செல்லக்கூடிய எல்லா பாதைகளிலும் விரித்து வைக்கப்பட்ட படுக்கைகளைக் காண்கின்றன.

பண்டைக்காலத்தில் வம்சநாசம் நடந்த ஏதோவொரு மிருகத்தினுடையது என்பதைப்போல அதன் சுவாசத்தில் நெருப்பு ஜுவாலைகளைப் பார்க்கலாம்.

1981--ருந்து 1999-ற்கு வந்து சேரும்போது, டில்லியின் வன்முறையும் குரூரமும் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். ஒரு மகாநகரத்தின் ஆயுளில் பதினெட்டு வருடங்கள் ஒரு நீண்ட காலகட்டமல்ல. ஒன்று கண்ணைச் சிமிட்டி திறப்பதைப்போல மிகவும் சிறியது அது. இன்னுமொரு பதினெட்டு வருடகாலம் கடக்கும்போது, டில்லிக்கு என்ன நடக்கும்?

ஒரு நகரத்தின் வாழ்வில் பதினெட்டு வருடங்கள் என்பது சாதாரணமானது. ஆனால், ஒரு கதாசிரியரின் வாழ்வில் அது ஒரு நீண்ட காலகட்டம். டில்லியைப் பற்றி மூன்றாவதாக ஒரு கதையை எழுதுவதற்கு அந்த அளவுக்கு நீண்ட ஒரு காலம் காத்திருக்க முடியாது. காரணம்- ஐம்பத்தாறு வயது கடந்துவிட்ட இந்த கதாசிரியருக்கு இன்னும் பதினெட்டு வருடங்கள் வாழ்வோம் என்னும் எதிர்பார்ப்பில்லை. அதனால், இப்போதே அந்த மூன்றாவது கதையைப் படைப்பதைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பிக் கிறேன்.

அந்தக் கதையின் பெயர் "டில்லி 2000' என்று இருக்கும். இந்த தலைப்பிற்கு புதுமையில்லை என்று தோன்றினாலும், அது மிகவும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான ஒரு தலைப்பென்று நான் நம்புகிறேன்.

சில எழுத்தாளர்கள் கதை எழுத அமரும்போது, முதலில் அதன் தலைப்பைத்தான் எழுதுவார்கள். நான் பல நேரங்களில் கதை எழுதி முடித்து, பல நாட்கள் கடந்தபிறகுதான் அதற்கு ஒரு தலைப்பைக் கண்டுபிடிப்பேன். ஒருமுறை பொருத்தமான ஒரு பெயரைக் கண்டுபிடிக்கமுடியாமல் நான் தவித்தேன். கதையை அனுப்பவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இறுதியில் பெயர் வைக்காமலே நான் அந்தக் கதையை பத்திரிகையின் ஆசிரியருக்கு அஞ்சல் செய்தேன். அத்துடன் ஒரு கடிதத்தையும் வைத்தேன்: "தலைப்பு பின்னால் வருகிறது.'

பாருங்கள்... இப்படி எப்படிப்பட்ட சாத்தியங்களெல்லாம் ஒரு கதாசிரியருக்கு முன்னால் இருக்கிறது! தலைப்பே இல்லாத கதை... கதையே இல்லாமல் தலைப்பு... இனிமேல் தலைப்பும் கதையும் இல்லாத, கதாசிரியர் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு காலம் வருமோ?

"டில்லி 2000' கதையை நான் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. அதனால், அந்தக் கதை முழுவதையும் வாசகர்களுக்குக் கூறுவதற்கு இப்போது என்னால் முடியாது. அந்தக் கதையைப்பற்றி சில குறிப்புகள் மட்டும் தரலாம். இந்த நிமிடம் அதற்காகத்தான் நான் இங்கு முயற்சிக்கிறேன்.

புதுடில்லியில் பிருத்விராஜ் சாலையில் ஒரு பழைய கல்லறைத் தோட்டம் இருக்கிறது. இந்தியா கேட்டிலிருந்து ஷாஜஹான் சாலைவழியாக நேராக நடந்தால், பத்து நிமிடங்களுக்குள் அங்கு போய்ச் சேரலாம். அமிர்தா ஷேர்கில் மார்க் வழியாக வந்து இடதுபக்கம் திரும்பி தாஜ் மான்ஸிங் ஹோட்டலுக்கு நேராக நடந்துவந்தாலும் அங்கு வந்துசேரலாம். அவுரங்கஸீப் சாலையும் மான்ஸிங் சாலையும் ஷாஜஹான் சாலையும் கல்லறைத் தோட்டத்திற்கு முன்னால் சந்திக்கின்றன. அந்த வழியாக வரக்கூடிய பயணிகளை முதலில் ஈர்ப்பது... கல்லறைத் தோட்டப் பகுதியில் நடக்கும் பூ வியாபாரம்தான்.

கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும்... எல்லா காலத்திலும் அங்கு பலவகையான மலர்களும் பூங்கொத்துகளும் மலர் வளையங்களும் கிடைக்கும். மிகவும் அருகிலிருக்கும் கல்லறைத் தோட்டத்தில் இறந்து கிடப்பவர்களுக்காக மட்டுமல்ல இந்த பூக்கள்... வரவேற்புகளில் பங்குபெறச் செல்பவர்களும் காதலிகளைப் பார்ப்பதற்காகச் செல்பவர்களும்... அனைவருமே அங்கு பூக்கள் வாங்குவதற்காக வருவார்கள்.

கல்லறைத் தோட்டத்தைச்சுற்றி காவிநிறம் பூசப்பட்ட ஒரு சுவர் இருக்கிறது. சாலையின் வழியாக நடந்து செல்பவர்களுக்கு அந்த சுவரைத்தாண்டிப் பார்க்கமுடியாது. காரிலும் ஆட்டோவிலும் பயணிப்பவர்களுக்கும் முடியாது. ஆனால், நீங்கள் பேருந்தில் பயணிக்கக்கூடியவராக இருந்தால், பேருந்தின் உயரம் காரணமாக கல்லறைத் தோட்டத் தில் நாட்டப்பட்டிருக்கும் ஏராளமான சிலுவைகளை நீங்கள் பார்க்க நேரலாம்.

கல்லறைத் தோட்டத்திற்கான வாசலில் ஓடு வேய்ந்த ஒரு மேற்கூரை இருக்கிறது. ஜூலை மாதத்தில் மழை வந்து விழும்போது, கால்நடையாக வந்தவர்கள் அதற்குக்கீழே பாதுகாப்பு தேடுவார்கள். நானும் பலமுறை மழை நிற்கப் போவதை எதிர்பார்த்தவாறு அங்கு அவ்வாறு நின்றிருக்கிறேன். எல்லா நேரங்களிலும் மேலே போடப்பட்டிருக்கும் ஓடுகளின்மீது ஒடுங்கியவாறு அமர்ந்துகொண்டிருக்கும் புறாக்கள் கீழே இறங்கிவந்து நனைந்த சிறகுகளைக் குடையும். நனைந்த பூக்களின் அடர்த்தியான வாசனையை முகர்ந்தவாறு மழையைப் பார்த்துக்கொண்டு நின்றிருப்பது ஒரு சுவாரசியமான அனுபவம்தான். கைவிரல்களுக்கிடையே ஒரு சிகரெட் இருந்தால், அதை விட சுகம்...

சாரல் மழையில் ஒரு ஆட்டோ கல்லறைத் தோட்டத்திற்கு முன்னால் வந்து நின்றது. பூ வியாபாரம் செய்பவர்கள் ஆர்வத்துடன் அதைப் பார்த்தார்கள். மழையில் நனைந்து பூக்கள் கெட்டுப் போகாமலிருப்பதற்காக அவர்கள் பூங்கூடைகளுக்கு மேலே மெல்லிய பிளாஸ்டிக் ஷீட்டை விரித்திருந்தார்கள். ஆட்டோவி-ருந்து கீழே இறங்கிய பின்ஸி செரியானின் கையில் நீளமான தண்டைக் கொண்ட ஒரு வெள்ளை ரோஜா இருந்தது. தன் சொந்த வீட்டின் முற்றத்தில் அவள் பறித்தது அது. அவளுடன் சுமார் ஐந்து வயது இருக்கக்கூடிய ஒரு சிறுவனும் ஆட்டோவிலிருந்து கீழே இறங்கினான். தோள் பையிலிருந்து பணத்தை எடுத்து ஆட்டோரிக்ஷாக்காரனுக்குக் கொடுத்துவிட்டு, மகனின் கையைப் பிடித்தவாறு அவள் கல்லறைத் தோட்டத்திற்குள் நடந்தாள். அவர் களைப் பார்த்து புறாக்கள் முணகுவதை நிறுத்தின.

அதிகாலை வேளையில் பெய்த மழை கேப்டன் ஜேம்ஸ் செரியானின் கல்லறையைக் கழுவிச் சுத்தமாக்கி வைத்திருந்தது. நனைந்த சிமென்ட் சிலுவையின் கால்பகுதியில் பூ வைத்துவிட்டு, பின்ஸி செரியான் மண்ணில் முழங்காலிட்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தாள்.

கல்லறைத் தோட்டத்தின் தெற்குப்பக்க சுவருக்கருகில் ஒடிந்துவிழுந்த ஒரு சிலுவைக்குப் பின்னால் அமர்ந்திருந்த நானக்சந்தும் அக்ஷய மல்ஹோத்ராவும் எழுந்து மெதுவாக நடந்துவந்தார் கள். தேம்பி அழுதுகொண்டிருந்த பின்ஸிக்குப் பின்னால் அவர்கள் சென்று நின்றார்கள்.

"ஏன் தங்கச்சி அழறே?"

நானக்சந்த் மெதுவாகக் கேட்டான். பின்ஸி அதைக் கேட்டதாகத் தெரியவில்லை.

"இது உனக்கு யார்?''

அவன் மீண்டும் பின்ஸியிடம் கேட்டான். இந்தமுறை குரல் சற்று சத்தமாக இருந்தது. அவனு டைய கேள்விக்கு சிறுவன்தான் பதில் கூறினான்...

"என் அப்பா... அப்பா கார்கிலில் இறந்துட்டார்.''

"கார்கிலா? அது எங்க இருக்கு?''

நானக்சந்தும் அக்ஷய மல்ஷோத்ராவும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"டைகர் ஹில்லுக்கு அப்பாவைக் கொண்டுவந்தாங்க. அப்போ அம்மாவும் சித்தியும் பெரியம்மாக்களும் கொஞ்சம் அழுதாங்க.''

பின்ஸி செரியான் உதடுகளைக் கடித்து அழுகையை அடக்குவதற்கு முயற்சித்தாள்.

நானக்சந்தும் அக்ஷய மல்ஹோத்ராவும் சற்று தூரத்தில் விலகிநின்று என்னவோ விவாதித்தார்கள். நானக்சந்த் திரும்பிவந்து பின்ஸிக்குப் பின்னால் அவளை நெருங்கி நின்றான்.

"தங்கச்சி... நீ இந்த டைகர் ஹில்லில் ஏறி கொஞ்சம் படு...'' அவன் கேப்டன் ஜேம்ஸ் செரியானின் கல்லறையை நோக்கி கையால் சுட்டிக்காட்டியவாறு தொடர்ந்தான்: "நாங்க சில ரகசிய செயல்களை மறைவா செய்ய வேண்டியதிருக்கு.''

கல்லறைத் தோட்டத்தின் நனைந்த சுற்றுச்சுவரில் அமர்ந்து முனகிக்கொண்டிருக்கும் புறாக்களைப் பார்க்கலாம். ஆனால், ஒரு புறா பறந்துவந்து மேலு மொரு முறை நானக்சந்தின் நெற்றியில் கொத்தும் என்ற வீணான ஆசை இந்த கதாசிரியருக்கு இல்லை...