திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பு மாறாமல் எழுதிக் கொண்டிருக்கிற படைப்பாளிகளைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் முன்னணியில் நிற்கிறவர் புலவர். புலமைப்பித்தன்.

கோவை மாவட்டம் சூலூருக்கருகில் உள்ள பள்ளப்பாளையத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1935ஆம் ஆண்டு அக்டோபர் ஆறாம்நாள் பிறந்து, பஞ்சாலை ஒன்றில் தொழிலாளியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, முயன்று படித்த தமிழால் முன்னேறி மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆட்சியில் அரசவைக் கவிஞராக அமர்த்தப்பட்டு, ஆயிரமாயிரம் திரைப்பாடல்களால் மக்களின் உள்ளங்களை அள்ளிக் கொண்டவர் இவர்.

பெருமிதமிக்க தன் தமிழோடு, பாடல் எழுது வதற்காகச் சென்னைக்கு 1964-ல் புறப்பட்ட புலவர், இடையில் சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

ஆரம்பக்காலத்தில் பொதுவுடைமைக் கருத்துகளில் ஈர்ப்பு கொண்ட புலவருக்குள் திராவிட இயக்கக் கருத்துகள் 1948ல் நிலைகொண்டன. அரசியல் களத்தில் இறங்கிப் பின்னாளில் மேலவைத் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். அ.தி.மு.க.வின் அவைத் தலைவராகவும் இருந்தவர் புலவர்.

Advertisment

13 ஆம் வயதிலேயே பாட்டெழுத ஆர்வம் கொண்ட புலவரின் கவிதை, திருக்குறள் முனுசாமி நடத்திய குறள்மலர் இதழில் 1950ஆம் ஆண்டு முன்பக்கத்தில் வெளியிடப்பட்டது.

ராமசாமி என்கிற பெயரைப் ’’புலமைப் பித்தன்’’ என்று செல்லமாக அழைத்து மகிழ்ந்தவர் இவருடைய தமிழாசிரியர் வே.ந. சிவசம்பு. அப்பெயரே புலவருக்கு நிலைத்துவிட்டது. பெரியாரியக் கொள்கைகளில் தன் மனத்தைப் பறிகொடுத்த புலவர், மொழிநலத்தையும் இனநலத்தையும் முன்னெடுத்துவருகிறார். மக்கள் திலகத்தின் மனங் கவர்ந்த புலவர், கலைஞரின் படத்திற்கும் பாடல்கள் எழுதியவர்.

“ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்

Advertisment

சாராய கங்கை காயாதடா

ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்

காசுள்ள பக்கம் பாயாதடா’’

என்று திரைப்பாடல் ஒன்றில் அவர் எழுதிய வரிகள் இன்றைக்கும் சாட்டையடியாக விழுகிறது. இப்படி எண்ணற்ற பாடல்களை எழுதிய புலவரின் திரைப் பாடல்களை மட்டுமே நம் ஆய்வாளர்கள் மேலோட்ட மாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார்களே தவிர, அவர் எழுதிய கவிதைகளைக் கண்திறந்து கூடப் பார்ப்பதில்லை. “தமிழுக்கோ, தமிழ் இனத்துக்கோ சோதனையும் வேதனையும் ஏற்படுகிற வேளையில், நான் என்னை அறியாமலே ஓர் உணர்ச்சிப் போர்க்களமாக மாறிப்போகிறேன். அந்த இயல்புதான் என்னை எழுத வைத்திருக்கிறது“ என்று முழங்கும் புலவரின் கவிதைகள் தனித்துவமிக்கவை. படிக்கப் படிக்க நெஞ்சத் துடிப்பை அதிகரிக்க வைப்பவை. அவரது கொப்பளிக்கும் கோபம் வெப்பச் சொற்களில் விழுந்து கிடப்பதைக் கண்டால் வியக்காமல் இருக்க முடியாது. அவர் எழுதிய காலச் சூழலையும், அரசியல் சூழலையும் கணக்கில் கொண்டே அவர் கவிதைகளைக் காண வேண்டும்.

பொத்தாம் பொதுவாக, மரபுக் கவிதைகளை எழுதுகிறவர்களே இல்லை என்று மனம்போனபடி கிறுக்கிக் கொண்டிருப்பவர்கள், புலவரின் கவிதை களைப் படித்துப் பார்த்தால், புரட்சிக் கவிஞரின் தொடர்ச்சி துவண்டுவிட வில்லை என்பதைத் துலக்கமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

pp

1981ஆம் ஆண்டு பிஜித் தீவின் தலைநகரான சுவாவில் நடைபெற்ற காமன்வெல்த் பாராளுமன்றக் கழக மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற புலவர், “பிள்ளைத் தமிழுக்கு உள்ளம் கொள்ளை தந்தோன்’’ என்ற தலைப்பில் பேராசிரியர் ந. இராமநாதன் அய்யா அவர்களுக்கு எழுதிய

கவிமடலில் எழுதிய வரிகள் அவரை நமக்கு நன்றா கவே அடையாளம் காட்டுகின்றன.

“பாரதி, பாரதி தாசனைப் போல என்

பாட்டால் வையம் பாலிக்க வந்தவன்.

கேட்டில் விழுந்து கிடக்கும் தமிழரைக்

கவிதைப் படகால் கரைசேர்க்க வந்தவன்!

செவிசாய்த் தின்று சிலசொல் கேட்பீர்!

செந்தமிழ்த் தேனீ! சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயிலென அந்நாள்

பாரதி யாரைப் பாடிய வரிகள்

பாரதி தாசன்என் பாட்டுக் காசான்

தனக்கும் பொருந்தும்.. தாசனின் பிள்ளை

எனக்கும் பொருந்தும் என்பதை நிமிர்ந்து

தலைக்கனம் இன்றியென் தகுதியால் சொல்கிறேன்!

இலக்கணம் இலக்கியம் எழுத்தெண்ணிப் படித்தவன்

நொடிக்கும் பொழுதில் நூறு கவிதை

வடிக்கும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவன்.’’

என்கிறார். அதோடு தான் கொண்ட பெரியார் பற்றையும் பதிவு செய்கிறார்.

ஏனெனில் தன்மானம் இழந்து கிடந்த தமிழரின் வாழ்வில் பகுத்தறிவைப் பதியனிட்டுச் சுயமரியாதைச் சூடேற்றி எழவைத்த பெரியார் என்கிற பெயரே இன்றைக்கும் பலருக்குள் தீச்சுடுவது போலச் சுடுகிறது. இதை

“பெரியார் கொள்கை பேசுவ தற்கொரு

மரியாதை வேண்டும்; மனத்தில் கொண்டுதான்

கரிகால் வளவன் காட்சிதந் தாற்போல்

நரைமுடி யோடு நாற்பத் தாறு

வருடமே ஆனஎன் வயதையும் தாண்டிய

உருவத்தை இயற்கை உவந்து தந்தது.

உணரத் தக்கவர் உள்ளவா றென்திறம்

உணரா திருக்கிறார்..’’

-என்கிறார்.

வெற்று விளம்பர வெளிச்சத்தில் கவிஞர்களாகச் சுற்றிச் சுற்றி வருகிறவர்களைச் சாடுகிற புலவர், தன் தகுதியை இன்னும் மக்கள் உணராதிருப்பது தன் தவறன்று என்பதையும் பதிவு செய்கிறார்.

“காலத் தாலும்

காலமா காதவன் கவிஞன், நானும்

எந்தக் காலத்தும் இறந்து போகாதவன்.’’

-என்கிற கம்பீரத்தோடு

“வெளிச்சம் போடும் விளம்பர நாளில்

பளிச்சென இந்நாள் பாமரர் கண்எனைப்

பார்க்கா திருப்பது பழியன்று; தமிழின்

சீர்முழு தறிந்த சிற்சிலர் மட்டுமே

என்னை அறிதல் இயலும்.’’

-என்பதையும் சொல்கிறார். “பாவேந்தர் பிள்ளைத் தமிழ்’’ படைத்த புலவர். அவர் நெருப்புக் கவிதைகளை நிறைய நெய்திருக்கிறார் ஆனால் திரைப்பாடல்களை மட்டுமே எழுதுகிறவன் தான் கவிஞன் என்றெண்ணுகிற பாமர நிலையை எண்ணி நகைக்கத்தானே முடியும்?

“நான் யார்?’’ என்கிற கவிதையில்

“இன்பத் தமிழுக்கு எழுச்சி வருமானம்

ஈட்டி வருபவன் நான் - அவள்

இன்னல் தவிர்த்திட எண்ணும் இளைஞருக்கு

ஈட்டி தருபவன் நான்.

துன்பம் தொடர்கையில் தூய தமிழிசை

மீட்டி வருபவன்நான்- தமிழ்த்

தூண்டிலில் மாட்டியோர் கூண்டில் சிறைப்படின்

மீட்டித் தருபவன்நான்.

தென்னவர் ஞானமும் முன்னவர் மானமும்

காட்டி வருபவன் நான்- தமிழ்ச்

சிங்க மறக்குலம் பொங்கு மறக்களம்

காட்டி வருபவன் நான்.’’

-என்று கொஞ்சி வரும் சந்தத்தில் தன் நெஞ்சம் நிமிர்த்திப் பாடுகிறார்.

தந்தை பெரியாரின் மேல் மாறாப் பற்றுக் கொண்ட கவிமறவர் அவரை விதந்தோதுகிற விதமே தனி அழகானது.

’அணையாத நெருப்பு’ -என்கிற கவிதையில் பெரியாரின் கைத்தடியையும் கவிதையாக்குகிறார்.

“கோத்திரம் வளர்த்தும் குலமுறை பிரித்தும்

சூத்திரர் என்று சொல்லிய வாய்களுக்

காப்படித் திட்ட ஆண்மை மறவன்

மூப்பறி யாது முதிர்ந்த அறிஞன்

மலம்துடைப் போரையும் மனிதருள் மனிதராய்

நலம்பெற வைத்த நாயகன்; அன்று

தான்நடப் பதற்கா தந்தை பெரியார்

ஊன்றினார் கைத்தடி? உண்மையில் இந்த

முத்தமிழ் நாட்டின் முதுகெலும் பல்லவா

கைத்தடி என்றவர் கையில் இருந்தது.’’

-என்றார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவுகளைக் கண்ணீர் ததும்பக்

“காஞ்சியில் கடைச்சங்கம்’’ என்ற கவிதையில்...

“சந்தன வீட்டில் சாத்திய கதவை

எந்த நாளில்தான் இனிநீ திறப்பாய்?’’

-என்று கண்ணீருடன் வேண்டுகிறார். புலவர், நாத்திகர்தான் என்றாலும் நற்றமிழ்ப்பாட்டுக்குக் கோயிலில் இடமில்லை என்போரைக் கண்டு கொதிக்கிறார். “நீயே சொல்லடி’’ என்கிற கவியரங்கக் கவிதையில்...

“எரிமலைக் குழம்பில் எடுத்துப் போட்ட

சிறுபுழுப் போலஎன் சிந்தை கொதித்தது.

செவியில் அக்கினித் திராவகம் பாய்ந்தது.

இவைக்கெலாம் காரணம் என்னடி? எவனோ

சோரம் போன சொறிநாய் வயிற்றுப்

பாரமாய்ப் பிறந்த பதடி ஒருவன்

பாட்டுத் தமிழைப் பாடினால் கோயில்

தீட்டுப் படுமெனச் செப்பினான்; இனிமேல்

வாதம் செய்யும் வழக்கம் இல்லை. என்

பாதக் குறடு பதில்சொல் லும்நான்

பாரதி தாசன் பார்வையில் மூட்டிய

வீர நெருப்பின் விளைச்சல்.’’-என்றும்

“பெரியார் தந்தை பிறந்த நாடிது

நரியார் துரைத்தனம் நடக்கா தென்று

நீயே சொல்லடி நிமிர்ந்து.’’

-என்றும் கொதிக்கிறார். புலமைப்பித்தன் போன்ற தேர்ந்த மரபுக்கவிஞர்களைத் தெரியாதவர்கள் போலக் கடந்து போக முயல்கிற கயமை அற்பத் தனமானது. அப்படிப்பட்டவர்களுக்குப் பதில் சொல்வதைப் போலவோ என்னவோ பொங்கும் தமிழுணர்வு பொசுங்கி விடாது என்பதை...

“எங்கள் உடம்பின்மேல்

இருக்கின்ற உரோமங்கள்

பொங்கும் புரட்சிக்குப்

புதுநெருப்புக் குச்சிகள்!

எங்களுக்குச் சாப்பாடே

கந்தகந்தான்! குடிதண்ணீர்

பொங்குகிற அக்கினித்

திராவகந்தான்! நாங்கள்

நெருப்பில்தான் அழுக்கையே

நித்தம் கழுவுகிறோம்.

அருமைத் தமிழ்மொழிமேல்

ஆதிக்கம் செய்யவந்த

இந்திப் புழுக்கத்தால்

ஏற்பட்ட வேர்வையினைச்

செந்தீயால் கழுவிய

செய்திநீ அறியாயோ?’’

-என்று பொங்குகிறார். ஆதிக்கச் சக்திகளுக்கு அடிவருடுகிறவர்கள் பாதிக்கப்படுபவர்களுக்காக எழுதுகிறவர்களைக் கண்டால் பதறாமல் என்ன செய்வார்கள்?

தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்ற புலவர், மூட நம்பிக்கைகளைப் பரப்புகிற எழுத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர். வள்ளுவத்தில் உள்ளம் பறி கொடுத்தவர் ஒன்றே முக்கால் அடியில் ஏன் எழுதினார் என்பதற்கு விளக்கம் சொல்கிறார். நியாயமான விளக்கம்தான்.

“வரி குறைத்த வள்ளல்’’ என்கிற கவிதையில்

“வரியதிகம் போடாமல் ஆட்சி செய்த

மன்னவனே வள்ளுவன்தான்! ஒன்றே முக்கால்

வரிபோட்டு மானுடத்தைக் காக்க வந்த

வரலாறே முப்பானூல்! எதுசொன் னாலும்

புரியாத தமிழ்ச்சாதிக் கிதற்கு மேலே

போட்டாலும் பயனில்லை என்ற றிந்தே

வரிகுறைத்தான்!அவன்விதித்தே ஒன்றே முக்கால்

வரிகூடத் தாங்காத வறுமை இங்கே!’’

-என்கிறார். அதோடு மக்கள் சிந்தனையைப் பாழ் படுத்துகிற படைப்புகளைச் சாடுகிற போது, தன் கொள் கைப் பிடிப்பைக் கொடி உயர்த்திக் காட்டுகி றார்.

“ஒதியமரக் காடுகள்போல் இலக்கி யங்கள்

ஒருசேர இருந்தென்ன நன்மை, இந்த

இதிகாசம் புராணங்கள் காப்பி யங்கள்

எல்லாமே தமிழர்களை மடைய ராக்கச்

சதிகாரர் இயற்றியவை.. திருக்கு றள்போல்

சமுதாயம் சீர்திருத்த மார்க்கம் சொல்ல

எதைஎழுதி வைத்துள்ளார்?’’

-என்று கேட்கிறார் புலவர். இப்படிப்பட்ட சிந்தனைகள் புலவரின் கவிதைகளில் நிறைந்து வழிகின்றன. சுதந்திரம் யாருக்கு வந்தது என்கிற கேள்வி புலவருக்குள் எழுகிறது. “அப்போது பார்க்கலாம்“ என்கிற கவிதையை -

1983 சனவரியில் எழுதினார். அதில்

“எல்லோர்க்கு மாகத்தான்

சுதந்திரம் வந்தது- அதை

இந்தி வெறியர்க்கு

மட்டும்யார் தந்தது?

பொல்லாங்கு சூழ்ந்திடும்

ஒருமொழி ஆதிக்கம்- நம்

“புண்ணிய பாரத’’

எல்லையைப் பாதிக்கும்.’’

என்று எச்சரிக்கிறார். அதோடு

“கந்தகத் தால்தீயை

அணைத்திடக் கூடுமோ?- உங்கள்

கட்டளைப் படிஎல்லாம்

தமிழினம் ஆடுமா?’’

-என்று கேட்டார்.

இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்

பறித்துக் கொள்வது ஒவ்வாது. மொழிவாரி மாநிலங்களின் உணர்வுகளை உரசிப் பார்க்க எண்ணுவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். ஒருமைப்பாடு என்று வாயளவில் அளந்து பயனில்லை.கூட்டாட்சித் தத்துவம் நிலைபெற வேண்டும். சுரண்டப்படுபவர்களாகவே மக்கள்

இருந்தால் என்ன ஆவது?

1983ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் “உரிமைக்கொடி தன்னைத் தூக்கு’’ என்ற கவிதையில் தன் மன உணர்வுகளை

மடைதிறந்த வெள்ளமாய்ப் பாய்ச்சுகிறார் புலவர்.

“வெள்ளைக் கழுதைக்குக் கொள்ளை கொடுத்தநாம்

தில்லிக் கழுதைக்கும் அன்றோ- வரி

அள்ளித் தினம்தந்து கொள்ளை கொடுக்கிறோம்!

அடடே நமக்கிது நன்றோ?

ஒருமை எனச்சொல்லி ஊளை இடுகின்ற

ஊத்தை மனிதரைத் தாக்கு- நம்

அருமைத் தமிழன்னை உரிமைக் கொடிதன்னை

ஏற்றஉன் தோளினைத் தூக்கு.’’

-இக்கவிதை எழுதப்பட்டு முப்பத்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் உயிர்ப்போடு இருக்கிறது கவிதை. அதோடு காலம் காலமாக ஒருமைப்பாடு என்கிற முழக்கத்தைப் போட்டுக்கொண்டு எதிர் மறையாக நடந்து கொள்பவர்களைப் பார்த்து...

“உரிமை போன ஒருமைப்பா டிங்குள

எருமைகள் கூட ஏற்றுக் கொள்ளாது.’’

-என்று கொதிக்கிறார். “இதோ பார் இந்தியா’’ என்ற கவிதையில்...

“அடிமையாய்த் தமிழை ஆக்கும்

ஆதிக்கம் தொடர்ந்தால் இந்தக்

கொடிநாளும் கொடிய நாளாய்

அல்லவோ மாறும்?’’

-என்று கேட்கிறார்.

“பகற்கனா பலிக்காது’’ என்ற கவிதையில்

“பிரிவினையை விட்டுவிட்டோம்.. உண்மை. ஆனால்

பேசுகின்ற வாயெல்லாம் மணக்கும் எங்கள்

அருந்தமிழின் உரிமைகளைப் பறிக்க மட்டும்

அனுமதியோம்...இதுஉறுதி..’’

-என்று சூளுரைக்கிறார்.

இந்தியச் சுதந்திரம் சும்மா வந்ததில்லை. அதன் வேருக்கு யார் செந்நீரைச் செலுத்தினார்கள் என்பதை வரலாறு சொல்லும். ஆனால் வந்த சுதந்திரம் யார் வீட்டு வாசலில் கிடக்கிறது? “இதோ பார் இந்தியா’’ என்ற கவிதையில்

“மேடையில் நம்மைநாம் விளம்பரப் படுத்த

ஊமையாய்ப் போன உத்தமர்.. நமது

சுதந்திரத் தேவியைச் சுமங்கலி யாக்க

விதவையாய்த் தங்கள் வீட்டுப் பெண்களின்

தாலியை அறுத்துத் தாயின் கொடிமரக்

கால்களில் அல்லவா கட்டினார்! நெற்றிப்

பொட்டொளி இழந்த பூவையரால்தான்

dd

பட்டொளி வீசி நம்கொடி பறப்பது.’’

-என்று கடுமையாகக் குரல் எழுப்புகிறார்.

“என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’’ கவிதையில்

வறுமை நிலை மாறாத நிலையைக்

“கிழித்த கோட்டைத் தாண்டா திருப்பதே

பழிபட ராத பத்தினிப் பெண்ணின்

இலக்கணம் என்றே இயம்புவர்! அந்த

இலக்கணப் படிக்குநம் இந்தியத் தாயும்

சத்திய மாகப் பத்தினிப் பெண்தான்.

கிழித்த வறுமைக் கோட்டை இதுவரை

தாண்டிச் சென்றதாய்த் தகவல் உண்டா?’’

-என்று எள்ளி நகைத்தார்.

ஈழ விடுதலையை எண்ணித் துடித்த புலவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு நெருக்கமான நேயம் காட்டியவர்.அங்கே மக்கள் படும் கொடுமைகளைக் கண்டு கொதித்தவர். மத்திய அரசு மனம் வைக்கவில்லையே என்று பொங்கியவர். “அந்தத் தேதி என்று வரும்?’’ என்ற கவிதையில், ’ஈழம் பற்றி எரிந்த நெஞ்சில் ஆழமாய் வீசிய ஆவேசப் புயலிது’ என்ற குறி்ப்போடு தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டிவைக்கிறார்.

“கூடுண்டு சிறுகுருவி தங்க, எங்கள்

குலமிங்கே காவலொடு வாழ்வ தற்குக்

கூடுண்டா? நாடுண்டா? நாங்கள் எல்லாம்

கூலிமக்கள், ஏழைமக்கள், நாங்கள் பட்ட

பாடுண்டு காலமெல்லாம்.. எங்கட் கென்று

படுத்துறங்கக் குடிசையுண்டா? எஜமா னர்கள்

நாடென்றால் பாரதமே ஒரேநா டென்பார்!

நாதியற்றுச் செத்தாலும் கேட்க மாட்டார்!

மார்வாரி பஞ்சாபி செத்தி ருந்தால்

மனம்பதைக்கும். தசைதுடிக்கும்.. இந்த நேரம்

போர்கூட நடந்திருக்கும்! வடக்கு மண்ணில்

புரட்சியே வெடித்திருக்கும்.. நாங்கள் எல்லாம்

ஆர்பெற்ற பிள்ளைகளோ, எங்கட் காக

ஆரழுவார்? ஆர்துடிப்பார்? சுதந்தி ரத்தின்

தேரோடும் நாளினிலும் தெற்கு மூலைச்

சேரியிலே வாழ்கின்ற அடிமை நாங்கள்!.’’

-என்று அவரது கவிதை கலக்கத்தோடு கேள்வி எழுப்புகிறது. அதைத் தொட்டு அன்றைய காலகட்டத்தில் மத்திய அரசின் பீடத்தில் இருந்த மரியாதைக்குரிய இந்திரா அம்மையாருக்கு முறையீட்டை வைப்பதைப் போல

“கொஞ்சம்நீ மனம்வைத்து முறைத்துப் பார்த்தால்

கொழும்புக்குக் கொழுப்படங்கும்! இல்லை என்றால்

வஞ்சனைநீ செய்கின்றாய் என்று சொல்ல

வாய்மறுக்கும்.. ஆயினும்என் மனம்சொல் லாதா?’’

-என்றும்

“அழும்வரைக்கும் அழுதுபார்ப்போம்.. எங்கள் நெஞ்சின்

அழுகைக்கும் எல்லையுண்டு! தாக்கப் பெற்று

விழும்வரைக்கும் விழுந்துகொண்டே இருப்போம்! நாங்கள்

விழுவதற்கும் எல்லையுண்டு! அபயம் கேட்டுத்

தொழும்வரைக்கும் தொழுதுகொண்டே இருப்போம்! நாங்கள்

தெழுவதற்கும் எல்லையுண்டு! நாங்கள் பொங்கி

எழும்வரைக்கும் விட்டுவிட வேண்டாம்! ஓர்நாள்

இளந்தமிழர் வெடிகுண்டை எடுக்க நேரும்!’’

-என்றும் எழுதிவிட்டு இறுதியாக

“எங்கள் தமிழர்கள் இன்று பிரிந்தனர்

ஒன்றுபடும் ஒரு தேதிவரும்

ஈனக் கயவரின் ஊனைப் பிளந்தனர்

என்று புதுப்புதுச் சேதிவரும்!’’

-என்றும் எரிமலையாக வெடித்தார். அதேபோல் “இரத்தம் துடிக்குமே!’’ என்று 1983 ஏப்ரல் மாதம் எழுதிய கவிதையில்

“எங்கள் தமிழ்த்தாய்கள் கற்பைச் சிதைத்ததும்

இளையோர் பலப்பலர் உயிரை வதைத்ததும்

இங்குநம் தில்லிதான் ஏனென்று கேட்டதா?

எச்சரிக் கைக்கொரு கடிதந்தான் போட்டதா?’’

-என்று கொதித்தார்.

காலங்கள் மாறின. காட்சிகள் மாறின. ஆட்சிகள் மாறின. ஆனால் நம்மவர் துயரங்கள் மட்டும் தொடர்கின்றன. அதனால்தானோ என்னவோ பல்லாண்டுகளுக்கு முன்பே “துள்ளி வருகுது ஈட்டி’’ என்கிற கவிதையில்,இது வன்முறை அல்ல.. இதுதான் நன்முறை என்று சொல்லி...

“உரிமை போனதோர் ஒருமைப் பாடு- இங்

குள்ள தமிழர்கள் அனைவருக்கும் கேடு

எருமை மேய ஏற்றதோர் காடு- எனும்

எண்ணம் மாற்றுக! இது தமிழ்நாடு.’’

-என்று தன் கருத்தைப் பதிவு செய்தார்.

புலவர் புலமைப்பித்தன் திரை இசைப்பாடல்களில் சிகரம் தொட்டவர். இலக்கியச் செழுமைமிக்க செம்மாந்த பாடல்களை வழங்கியவர். அதேபோல் தனிக்கவிதைகளில் இன உணர்வை, மொழி உணர்வை, மாநில உரிமையை, திராவிடக் கருத்தியலை, பொதுவுடைமைச் சிந்தனைகளைப் பல்வேறு நிலைகளில் முன்னெடுத்துச் சென்றவர். “தீயின் பசி தீருமா?’’ என்ற கவிதையில் அவர் குரல்...

“ஏழைகள் சிந்திய வேர்வைத் துளியினை

இந்நிலம் தேக்கியது- அதில்

எத்தனை மாடங்கள் எத்தனை கூடங்கள்

இப்புவி ஆக்கியது.

ஆக்கிய மாடங்கள் கோடியில் ஒன்றிலும்

அவன்குடி ஏறவில்லை- பல

ஆயிரம் ஆயிரம் ஆண்டுக ளாயிந்த

அவலமும் மாறவில்லை.’’

-என்று ஒலித்தது. திசைகளெங்கும் இக்குரல் ஒலிக்க வேண்டும்.

எண்பத்தைந்து வயதைத் தொடுகிறார் புலவர். இப்போதாவது அவர் கவிதைகள் யாவும் ஒட்டு மொத்தத் தொகுப்பாக வெளிவர வேண்டும் என்பது நம் எல்லோரின் விருப்பம்.

எழுதுவதற்கு ஏராளமானவை உண்டு. இந்தக் கட்டுரை அவரைக் கொஞ்சமாகத் தொட்டுக் காட்டியிருக்கிறது. திரை இசைப் பாடல்களை மட்டும் வைத்துக் கொண்டு அவரை அளக்க முற்படுவது ஒரு வகையில் அவரின் இலக்கியச் சிம்மாசனத்தை இருட்டடிப்புச் செய்ய முற்படுவதாகத்தான் இருக்கும். திராவிடப் போராளியான புலவர் புலமைப்பித்தனின் கவிதைகள் ஒரு காலகட்டத்தின் அரசியல், சமுதாய வரலாறாக சுடர்கிறது. அதை எவராலும் அழிக்கவோ மறைக்கவோ முடியாது.