வையின் புகழுக்(கு) ஈடாக வேறெவரும்

திவ்விய மானவர்கள் இலையன்றோ திருநாட்டில்!

வற்றாத பேராறும் வானுயர்ந்த பெருமலையும்

எற்றானும் மிக்குயர்ந்த எழில்நிறைந்த திருநாட்டின்

Advertisment

செல்வந்தான் ஆனாலும் ஔவையின் திருமொழிக்கு

நிகராகா அவையெல்லாம் நிச்சயம் வாய்மைத்தாம்!

ovai

Advertisment

நற்றமிழ் வரலாற்றில் சங்கமதன் பொற்காலம்

சொற்றமிழில் காப்பியங்கள் தோன்றிய தோர்காலம்

அடுத்தசில நூற்றாண்டு இருட்காலம் எனலாமே!

மடுத்தவல் காரிருளை உடைத்தெழுந்த காலந்தான்

சமயத் தமிழ்வளர்த்த சால்புமிகு காலமதாம்!

இமயப் பெருமைமிகு எழில்ஞான சம்பந்தர்,

தமதாகும் பணிசெய்து கிடப்பதாம் அப்பர்பிரான்,

சிவனையே ஏவல்கொள் தோழமை சுந்தரரும்

உருகுமணி வாசகரும் ஓதரிய பனுவல்பல

திருவாக்காய் மலர்ந்திட்ட சீர்மை மிகு காலந்தான்

அக்காலம் நம்ஔவை விநாயகர் அகவல்பாடி

தக்கபுகழ் கொண்டிரண்டாம் ஔவையெனக்

கொளலாகும்.

திருமந்திரமும் இக்காலத் திடைதனில் தோன்றியதே!

அருமந்தி ரத்துஞான அடைவு மிகக்கொண்டு,

சங்கத் தமிழ்ச்சால்பும், சமயத் தமிழ்த்திறமும்,

மங்காப் புகழ்ஈட்ட விநாயகர் அகவல்தந்தார்!

yanaselvan

நரசிம்மப் பல்லவன்தான் வடக்கில்வா தாபிவென்று

தரக்கொண்ட விநாயகரே தமிழ்நாட்டின் மூலவராம்!

ஆதலினால் ஏழாம்நூற் றாண்டின்பின் எழுந்தருளி

ஓதரிய முதன்மையுற்ற பிள்ளையாரை நம்ஔவை

தீதகலப் பாடியதே விநாயகர் அகவலதாம்!

மாதரசி ஔவைதமிழ் மதிப்பை உணர்ந்தோமா?

வண்ணமருங்கு பூந்துகிலா டையுடன் சிறுசிலம்பு

பொன்னரைஞாண் பேழைவயிறு, பெரும்பாரக் கோடென்று

நற்றமிழ்ச் சொற்கள் நல்கிய நடைகண்டு

கற்றோர் மனத்தெழும் களிப்பெனும் நீரூற்று!

அமுதநிலை யுமாதித்தன் இயக்கமும், அருள்தரும்

குமுதசகாயம் குணத்தையும் உணர்த்தி வரும்அல்லல்

களைந்தே தெவிட்டாத ஞானத் தெளிவுகாட்டி

களைந்தாய் முன்னைவினை யின்முதலை முற்றிலும்!

சத்தத்தின் உள்ளுறை சதாசிவம் காட்டியே

சித்தத்தின் உள்ளேசீர் சிவலிங்கம் காட்டினாய்!

அணுவிற்குள் அணுவாக அப்பாலுக்(கு) அப்பாலாய்

கணுமுற்றி நின்றதாம் கரும்பே என்றெல்லாம்

சித்தர்மொழி சைவசித் தாந்தமொழி எல்லாமும்

எளிமையாய், இனிமையாய் எவரும் படித்துணர

வளிசூழ் ஞாலத்து வனப்பையும் படைப்பின்

அளவிடற்கரிய ஆற்றலும் அறிவும் திறனொடு

திளைத்திடு ஞானத்தின் தெளிவும் உணர்த்திய

விநாயகர் அகவல்திரு மந்திரமாம், மனனம்செய

அநாயாச மாகவரும் அருளமுதாம் செபித்திட

ஏற்றதொரு தெள்ளமுதாம் நற்பனுவல் என்றெல்லாம்

பற்பலவாய்ப் போற்றி மகிழப்பொற் பாட்டுரைத்த

ஔவைப்பாட் டியெனச்சொல்ல மனம்இல்லை ஆதலினால்,

கௌவைமலி வையத்து காணும் முழுநிலவாய்

கறையில்லா வெண்ணிலவாய்க் இளம்பெண்ணாய்க் காணுகின்றேன்.

கற்பனையோ கற்சிலையோ கசமுகமோ பெருவயிறோ,

சொற்புனைந்த சித்திரமாய் நம்மனத்தில் சிலிர்க்குமெனில்

தீயவை அணுகாத தெளிவூட்டி அருளுமெனில்,

நாயடியேன் யெனநம்மை பணிவுகொள்ள வைக்குமெனில்,

எல்லார்க்கும் நன்மைசெயும் இதயத்தை நல்குமெனில்,

பொல்லார்க்கும் இங்கிதம்செய் புனிதம் வழங்குமெனில்

ஒன்றே கடவுளென்றும் ஒருசாதிதான் உண்டென்றும்

அன்பூட்டி வளர்க்கின்ற அவர்விநாய கரென்றால்

தென்பூட்டும் ஔவைதன் தண்டமிழால் போற்றிடுவோம்!

(போற்றுதும்)