மிதிலை மாமன்னர் ஜனக மகராஜா ஒருநாள் இரவு ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். தூக்கத்தின் நடுவில் ஒரு கனவு கண்டார். அதில் அவர் ஒரு பிச்சைக்காரனாகப் பெருந்துயரம் அடைவதைக் கண்ணுற்றார்.
கனவில் அவர் படாதபாடு பட்டுப் பெருந் துன்பத்திற்கு ஆளானார். அந்த நிகழ்வு கனவுபோல அவருக்குத் தெரியவில்லை. உண்மையிலேயே, நடப்பதுபோன்று தோன்றியது. தூக்கத்தில் திடுக்கிட்டுக் காக்கும் கடவுளான கண்ணனை "நாராயணா' என்று உரக்கக் கூப்பிட்டார். கண் விழித்துப் பார்த்தார். அரண்மனைப் பின்புலம் கண்களில் பட்டது. சில மணித்துளிகளுக்குமுன்பு பிச்சைக்காரனாக இருந்த அவர் இப்போது மன்னராக இருந்தார். இது தொடர்ச்சியாகப் பல நாட்கள் நடந்தேறியது.
தினம், தினம் இரவில் தூங்கும்போது, பிச்சைக்காரனாக மாறி படாதபாடுபடுவார். பகலில் எழுந்தால் சகல ஐஸ்வரியங்களுடன் இருப்பார். ஜனக மகராஜனுக்கு ஒரு பெருத்த சந்தேகம் மனதில் எழுந்தது. "நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பதுபோல் கனவு கண்டேனா அல்லது பிச்சைக்காரனாக இருந்து மன்னராக இருப்பதுபோல் கனவு காண்கிறேனா?'' என மனதில் உலாவந்தது. மந்திரி, ராஜாகுரு, தலைமைப்புலவர் பண்டிதர்கள் எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் உரிய பதில் தெரியவில்லை. அந்த சந்தேகம் அவர் மனதில் இருந்து, பெரிய அரிப்பை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. நான் பிச்சைக்காரனா? மன்னனா? என்ற வினாக்களை எழுப்பியவாறு, மிகுந்த மனக்கவலையில் இருந்தார். பின்பு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மன்னரின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்குப் பெரும் பரிசு ஒன்று காத்திருப்பதாகவும் முரசறைந்து வெளியிட்டார். நாட்டிலுள்ள அனைத்து வித்வான்களும் அரசவையில் கூடினர். பக்கத்து நாடுகளில் இருந்து பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர் கள் எல்லாரும் வந்தார்கள். யாராலும் பதில் சொல்ல இயலவில்லை.
வெளியூரிலிருந்து, அஷ்ட வக்கிர மகரிஷி என்ற ஒரு முனிவர் விபிதக நாட்டுக்கு வந்தார். அவர் உடல் எண்கோண வடிவில் வளைந்து இருக்கும். அவர் தன் தாயில் கருவறையில் இருக்கும்போது, கத்துக்குட்டியான அவருடைய தந்தை வேதத்தைத் தவறாகப் படிப்பாராம். கருவறையினுள் இருந்த மகா ஞானியான குழந்தை, அதைக்கேட்க சகிக்காமல், உடலைத் திருப்புமாம். அப்படி எட்டுமுறை திரும்பி உடல், அட்ட கோணலாக, வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற காரணப் பெயரும் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜனகனின் அறிவிப்பைக் கேள்விப்பட்டு, அஷ்ட வக்கிர மகிரிஷியும் ஜனகனின் தர்பாருக்கு வருகைபுரிந்தார். பண்டிதர்களின் பெருங்கூட்டத்தினால் அவை நிறைந்தது. யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை. என் கேள்விக்கு உரிய பதில் சொல்ல இந்த அவையில் ஒருவரும் இல்லையா? என ஜனகர் மிகுந்த மனவேதனையுடன் கேட்டார். "நான் சொல்கிறேன்' என்று அஷ்டா வக்கிரர் கம்பீரமாக எழுந்தார். அரசவை முழுவதும், அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தது. அடுத்த வினாடியே, அனைவரும் எக்காளமாகச் சிரித்தனர். குள்ளமாக, எண்கோணலாக வளைந்த உடலை வைத்துக்கொண்டு, ஒரு மாறுபட்ட உருவம் சபைக்கு வந்திருக்கி றதே என்பதுதான் அவர்களின் கேலிக் கும், கிண்டலுக்கும் காரணம். அனைவரும் விழுந்து, விழுந்து, கை கொட்டிச் சிரித்தார்கள். சிரிப்பொலி முழுவதும், அடங்குவரை அஷ்டவக்கிரர் மௌனம் சாதித்தார். "என் கேள்விக்குப் பதில், தெரிந்தால் சொல்லுங்கள்'' என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.
கண்டிப்பாகச் சொல்கிறேன். அதற்குமுன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளை யும், கசப்புக் கடைக்காரர் களையும் வெளியே அனுப்புங்கள் என்றார் அஷ்டவக்கிரர். மன்னர் உடனே எழுந்து, என்ன சொல்கிறீர்கள். இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்தக் கசாப்புக் கடைக்காரனும், தோல் வியாபாரியும் இல்லை என்றார். அஷ்ட வக்கிரரின், வார்த்தைகளைக் கேட்டு, சபை கொதித்தெழுந்தது. என்ன திமிர் இந்தக் குரங்கனுக்கு என்று வினா எழுப்பி சப்தமிட்டார். ராஜகுரு வேதம் கற்றுணர்ந்த பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனைக் கழிவிலேற்றுங்கள் என்று அவையோர் அனைவரும் கூச்சலிட்டனர்.
ஏன் அப்படிச் சொன்னீர்கள் என்று பரிவுடன் கேட்டார் ஜனகர். கற்றுணர்ந்த அவையோர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா என்று கேட்டார். உரத்த குரலில், அஷ்டா வக்கிரர் பதில் சொன்னார். நாடு போற்றும் மன்னவரே, உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். சபை முழுக்க என்னைப் பார்த்து சிரித்தது. ஏன் சிரித்தார்கள். என் குறைவான ஞானத் தைக் கண்டு சிரித்தார்களா? இல்லை என் உருவத்தைப் பார்த்துச் சிரித்தார்களா? என் தோலின் நிறத்தையும், என் உருவத்தையும் வைத்து இவர்கள் என் அறிவை மதிப் பிட்டார்கள். என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள், தோல் வியாபாரிகள்தானே? தோலின் தரத்தையும், நிறத்தையும் வைத்துத்தான் தோல் வியாபாரி "ஆட்டுத்தோலுக்கு விலை பேசுவான். கசாப்புக் கடைக்காரன் ஆட்டின் உருவம் கண்டு மதிப்பு போடுவான். இவர்களும் என்னை அப்படித்தான் மதிப்பிட்டார்கள். அதனால்தான் இவர்களைத் தோல் வியாபாரிகள் என்றேன். பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரி களுக்கு என்ன வேலை? அதனால்தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன் என்றார் அஷ்டவக்கிரர்.
அவமானமடைந்த பண்டிதர்கள் தலைகுனிந்து சபையைவிட்டு வெளியேறினார்கள். வந்தவர் மகாபெரியவர் என ஜனவரும் அனைவரும் அறிந்தனர். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார். ஜனகருக்கு அஷ்டவக்கிரர் சொன்ன அந்த உபதேசம், "அஷ்டாவக்கிர கீதை' என்ற பெயருடன் விளங்குகிறது.
அந்த உபதேசத்தைப் பெற்ற ஜனகன் அன்று முதல் மகா ஞானியாகிவிட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன? "தூங்கினப்போ கண்டதும் கனவுதான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான். உன்னுடைய ராஜ வாழ்வும், பிச்சைகார வாழ்வும், இரண்டும் உண்மை இல்லை. ராஜாவா இருக்கறப்ப மகிழ்ச்சி அடையாதே, தூங்கறப்போ அந்த மகிழ்ச்சி போய்விடும். பிச்சைக்காரனாக இருக்கறப்ப வருத்தப்படாதே, விழித்தவுடன் அந்த வருத்தம் மறைந்துவிடும். இரண்டு நிலையிலும் ஒரேமாதிரியாக இருக்கக் கற்றுக்கொள் என்றார். உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை; ஏக இறைவனைத் தவிர'' என்று சொல்லி முடித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/28/bodyshape-2026-02-28-18-18-33.jpg)