சென்னையி லுள்ள ஜோதிட நிலையத்திற்கு அரசு உயர் அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும், நாடியில் பலனறிய வந்திருந்தனர்.
அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாக வந்தீர்கள்' என்றேன்.
"ஐயா, எனது கணவர் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் உள்ளார். பணம், சொத்து, அந்தஸ்து என எதிலும் குறைவில்லை. ஆனால் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போல் நிம்மதியிழந்து வாழ்கிறோம். எங்களுக்கு இரண்டு மகள்கள், மூத்தவளுக்கு 36 வயதாகின்றது, இளைய மகளுக்கு 30 வயதாகின்றது. இருவருக்கும் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது. மூத்த மகளுக்கு கடந்த எட்டு வருடங்களாக திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறோம்.
திருமணத்தடை விலகி திருமணம் நடைபெற ஜோதிடர்கள் கூறிய கோவில் களுக்கு சென்று பரிகார பூஜைகள், திருக்கல்யாணம் என அனைத்தையும் செய்தோம். ஆனால் பலன் இல்லை. மூத்த மகள் எனக்கு திருமணமே வேண்டாம் என்கிறாள். மகள்களுக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற எங்கள் உறவினர்கள் கேள்விக்கு என்னால் பதில் கூறவும் முடியவில்லை. என் மகள்களின் திருமணத்தடைக்கு காரணம் கூறி, அவர்களுக்குத் திருமணம் நடைபெற, அகத்தியர்தான் வழி காட்ட வேண்டும்'' என்றார்.
அந்த தாய் கூறியதைக் கேட்டுவிட்டு, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் ஓலையில் எழுத்து வடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவர்கள் மகள்கள் திருமணத்தடைக்கு, கணவனின் வம்ச பாவ - சாபப் பதிவுகள் எதுவும் காரணமில்லை. இந்தத் தாயின் வம்ச முன்னோர்கள்கால வாழ்வில், இவர் குடும்பத்தில் வாழவந்த பெண்ணிற்கும், குடும்பத்தில் பிறந்த பெண்ணிற்கும் இவள் வம்ச முன்னோர்கள் செய்த பாவம்தான் காரணம்.
இவளது தந்தையின் பாட்டன்களில் ஒருவன், மனைவி, குழந்தைகள், குடும்பம் என இருக்கும்போதே தன் மனைவியின் தங்கையை விரும்பி பழகி, அவளை இரண்டாவது மனைவியாக மணம் புரிந்துகொண்டான். அவளுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குடும்பத் தின் அனைத்து நிர்வாகப் பொறுப்பினையும், மூத்த மனைவிதான் நிர்வகித்து வந்தாள்.
முதல் மனைவி தன் பிள்ளைகளுக்கு, பருவவயதில் சிறப்பாகத் திருமணம் செய்துவைத்தாள். ஆனால் இரண்டாவது மனைவியான தன் தங்கையின் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. கணவனும், இளைய மனைவியின் மகளைப் பற்றிக் கவலைப் படவில்லை. இறுதியில் இளைய மனைவி, தன் முயற்சியால் ஒருவனுக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைத்தாள். அந்தத் திருமணத்திற்கு முதல் மனைவியான அக்காவும் செல்லவில்லை. தன் கணவனையும் செல்லவிடாமல் தடுத்துவிட்டாள்.
இளைய மனைவி, என் கணவனாக வராவிட்டாலும், தான் பெற்ற மகள் திருமணத்திற்கு, ஒரு தந்தையாக வந்து ஆசிர்வாதம் செய்யவில்லையே என்று மனம் வெறுத்து, இந்த நிலைக்கு என் அக்காள்தான் காரணம், என்று கூறி தன் அக்காளுக்கு சாபமிட்டாள்.
என் மகளின் திருமணத்திற்கு தடைசெய்து, அவளின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தடுத்து, எங்களை அனாதையைப்போல், வாழச் செய்தது என் உடன்பிறந்த அக்காள்தான். அவள் எங்களுக்குச் செய்த இந்த பாவத்தால் நான் பட்ட கஷ்டத்தை, இனி அவள் எத்தனைப் பிறவி எடுத்தாலும் அனுபவிக்க வேண்டும்.
என் மகளுக்கு இப்பிறவியில் திருமணம் தடைபட்டதுபோல், அடுத்தடுத்த பிறவிகளில் அவளுக்குப் பிறக்கும், பெண் குழந்தைகளுக்கு திருமணம் தடையாகவேண்டும். என் மகள் திருமணம் பற்றி எல்லாரும் கேட்டதுபோல், அவள் மகள் திருமணம் எப்போது, என்று ஊரும், உறவும் கேட்கும். நான் என் மகளை நினைத்து, மன வேதனைப்பட்டதுபோல் அவளும் தான் பெற்ற மகள்களை நினைத்து வேதனைப்படவேண்டும். அவள் பெற்ற மகள்களுக்கு என் மகள் வயதில் குறைந்தவள்தான். இதேபோன்று, அவள் பெறும் மகள்களில் இளைய மகளுக்கு திருமணம் நடந்தபின்புதான், மூத்த மகளுக்குத் திருமணம் நடக்கும் என தான் அனுபவித்த அனைத்து துன்பங்களையும், சாபமாக வாரியிறைத்துவிட்டு மாண்டு போனாள்.
அந்த ஆத்மாவின் கோபம், அந்த வம்சத்தில் பிறந்த இவளை இப்பிறவியில் தொடர்ந்து இவள் மகள்களின் திருமணத் தைத் தடை செய்துவருகிறது. இவளின் இளைய மகளுக்குத் திருமணம் நடந்தால்தான், மூத்த மகளுக்கு திருமணம் நடக்கும் என்றார்.
அகத்தியர் கூறியதைக்கேட்ட அந்தத் தாய் ஐயா, மூத்தவள் இருக்க இளையவளுக்கு திருமணம் செய்தால், உறவுகளும், சமுதாயமும் ஏற்றுக்கொள்ளுமா? மூத்தவளுக்கு ஏதோ குறையிருப்பதால்தான், இளைய மகளுக்கு திருமணம் செய்கின்றார்களோ என்று மற்றவர்கள் கூறமாட்டார்களா? இதனை நாங்கள் எப்படி செய்வதென்று கேட்டார்.
அம்மா, சாஸ்திரம், சம்பிரதாயம், சமுதாய கொள்கை என இவற்றுக்கு முக்கியத்துவம் தந்து மகள்களுக்கு திருமணம் செய்வதும் அல்லது அகத்தியர் கூறுவதை ஏற்றுக்கொண்டு முதலில் இளைய மகளுக்கு திருமணம் செய்துவைப்பதும் உங்கள் முடிவுதான். இதுவரை நீங்கள் சாஸ்திரம், ஜோதிடம் பார்த்து, பரிகாரங்களைச் செய்து, என்ன பலன் அடைந்தீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும் என்றேன்.
அகத்தியர் கூறியபடியே செய்கின்றோம் . எங்கள் குழந்தைகளுக்கு மாப்பிள்ளைகள் யார்? அவர்களைப் பற்றிய விவரங்களை அகத்தியரிடமே, கேட்டுக் கூறுங்கள் என்றார் அந்த அம்மாள்.
இரண்டு பெண்களுக்கும் அமையும் மாப்பிள்ளைகள், அவர்கள் செய்யும் தொழில்கள், குடும்பம், திருமணம் நடைபெறும் காலம், என அனைத்தையும் கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார் இன்றையநாளில் நிறைய ஆண்கள்- பெண்கள் திருமணம் தடையாகிவருவதற்கு கிரகங்கள் காரணமில்லை, வம்சத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளின் சாபம்தான் காரணம் என்பதை நானும் அறிந்து கொண்டேன்.
செல்: 99441 13267