நடிகர்களின் மகன்கள் நடிகர்களாகும் பழக்கத்தை தொடங்கி வைத்தது பாலிவுட் சினிமாதான். அதிலும் கபூர் குடும்பம்தான் முதலில் தொடங்கி வைத்தது. மகன்களை மட்டுமே சினிமாவில் இறக்கிய பழக்கம் போய், மகள்களையும் சினிமாவில் நடிக்க வைக்கும் போக்கு சமீப ஆண்டுகளாய் தொடர்கிறது.
பாலிவுட்டில் பிரிதிவிராஜ் கபூர், அவருடைய மகன்கள் ராஜ்கபூர், சசிகபூர், ரந்தீர்கபூர், ராஜ்கபூரின் மகன் ரிஷிகபூர் என தொடங்கிய சினிமா வாரிசுப் பட்டியல், கரீனா கபூர், சோனம் கபூர் என பெண் வாரிசுகள் வரை நீள்கிறது. சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, ஷாருக்கான் மகள் சுஹானா ஆகியோரும் இந்தித் திரைப் படங்களில் அறிமுகமாகி இருக்கிறார்கள்.
இப்போது, நடிகர்களின் மகள்களும், நடிகைகளின் மகள்களும் ஜோடி சேர்வது புதிய ட்ரெண்டாகி வருகிறது. இந்தித் திரைப்படங்களில் தொடங்கிய இந்தப் பழக்கம், தமிழ்த் திரைப்படங்களிலும் அறிமுகமாகி இருக்கிறது.
நடிகர் கமல்ஹாஸனின் அண்ணன் சாருஹாஸன் சினிமாவில் நுழைந்தது எதிர்பாராத நிகழ்வு. ஆனால், அவருடைய மகள் சுஹாசினியும், தங்கை அனு ஹாஸனும் சினிமாவில் நடித்தது திட்டமிடப்பட்ட நிகழ்வாக அமைந்தது.
ஒரு காலத்தில் கமல் ஹாஸனும் சிவகுமாரும் பல படங்களில் சேர்ந்து நடித்தார்கள். அப்போது தங்கள் பிள்ளை களும் சினிமாவுக்கே வருவார்கள் என்று இருவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால், சிவகுமார் மகன் சூர்யாவுடன், கமல் மகள் ஸ்ருதி "ஏழாம் அறிவு' படத்தில் அறிமுகமானார். அதற்கு முன்னரே "லக்கி' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி இருந்தா லும் தமிழில் அதுதான் முதல் படம்.
நடிகர் கார்த்திக்கின் பையன் கவுதம் கார்த்திக். இவர் நடித்த "கடல்' படத்தில் முதலில் நடிகை சமந்தா நடிப்பதாக இருந்தது. ஏதோ காரணத்தால் அவர் விலகிக்கொண்டார். டைரக்டர் மணிரத்னம் டைரக்ட் செய்த அந்தப் படத்தில் கவுதமின் அப்பா கார்த்திக்குடன் அறிமுகமான ராதாவின் இரண்டாவது மகள் துளசியை கதாநாயகியாக அறிமுகம் செய்தனர்.
நடிகை அம்பிகாவின் பையன் ராம் கேசவுடன், நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா "கலாசல்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நடிகர் விஷால். அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை தனது படத்தில் அறிமுகப்படுத்தினார்.
"பட்டத்து யானை' என்ற அந்தப்படம் சரியாக போக வில்லை. இதையடுத்து, சமீபத்தில் அர்ஜுனே, தனது மகளை "சொல்லிவிடவா' என்ற படத்தில், தனது இயக்கத்திலேயே நடிக்க வைத்தார். அதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
பல நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி. அவருடைய மகன் ஜீவாவுடன் அறிமுகமானவர் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. "கோ' படத்தில் இருவருக்குமே ஜோடிப் பொருத்தம் மிக நன்றாக இருந்தது என்று கோலிவுலிட்டே பேசிக்கொண்டது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ்விக்ரம் டைரக்டர் பாலாவின் "வர்மா'வில் படத்தில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இதை நடிகை கவுதமி மறுத்துவிட்டார். தனது மகள் சுப்புலட்சுமி படிப்பில்தான் கவனம் செலுத்துகிறார் என்றும், படிப்பு முடியும்வரை சினிமாவுக்கு அவர் வரமாட்டார் என்றும் கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் சொல்லிவிட்டார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மலையாளப் படவுலகில் ஏராளமான படங்களில் நடித்த மேனகாவின் இளையமகள் கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுடன் அறிமுகமாகி தமிழிலும் தெலுங்கிலும் லீட் ஹீரோயினாக ஜொலிக்கிறார்.
நான்தான்டா போலீஸ் எவன்டா என்னைக் கேக்குறதுன்னு ஃபேமஸான நடிகர் ராஜசேகர் - ஜீவிதா ஜோடியின் மகள் ஷிவானி தெலுங்கிலும் தமிழிலும் அறிமுமாகிறார். டாக்டருக்கு படித்த இவரை தமிழில் விஷ்ணு விஷால் ஆக்டராக அறிமுகம் செய்கிறார்.
மலையாள இயக்குனர் பிரியதர்ஷன்- நடிகை லிஸியின் மகள் கல்யாணி பெற்றோருக்கு தொடர்பே இல்லாத தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் நாகார்ஜுனாவின் மகனுக்கு ஜோடியாக அவர் அறிமுகமாகிறார்.
அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் அவருடைய படிப்பு முடிந்து திரும்பியதும் நடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தாராம்.
விஜயகாந்த் நடித்த "வைதேகி காத்திருந்தாள்' படத்தில் அவருடைய முறைப்பெண்ணாக வந்து, அரளி விதையை அரைத்துக் குடித்து இறக்கும் பிரமிளா ஜோஷியின் மகள் மேக்னா.
இவர் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் "கிருஷ்ணலீலை' படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், அந்தப் படத்தை முடிப்பதற்கு முன்பே "எங்க வீட்டுப் பிள்ளை' என்ற படத்தில் நடிக்கப் போய்விட்டார். இதையடுத்து தொடக்கமே சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.