தமிழில் "பாபா', "உன்னை சரணடைந்தேன்', "வீராப்பு', "மிலிட்டரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது; தெலுங்கு. கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத் திரை தொடர்களிலும் நடித்தார்.
ஃபேஷன் டிசைனிங் கில் வேலைகளில் அதிக ஆர்வம் இருந்ததால் ஆறு வருஷத்துக்குமுன்பு, தனது கணவருடன் சேர்ந்து டகமநஐ இர்ன்ற்ண்வ்ன்ங் & இங்ஹன்ற்ஹ் கர்ன்ய்ஞ்ங் கடையை சென்னையில் தொடங்கினார். இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும்கூட பலரும் சந்தோஷியிடம் பயிற்சிக்கு வருகின்றனர்.
இந்தநிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் பிரபலமான ஐடிசி சோழா ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடத்தினார் சந்தோஷி. இந்த நிகழ்வில் நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், சின்னத்திரை நடிகைகள் "சரவணன் மீனாட்சி' புகழ் ரக்சிதா தினேஷ், "ரோஜா' புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, "பிக்பாஸ்' (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குநரும் மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
""என்னுடைய மேக்கப் கலையின் திறமையை காட்டுவதற்கு லட்சுமி அகர்வால் ஒரு பொருத்தமான நபராக இருப்பார் என அவரை அழைத்தேன். அவரும் ஒப்புக்கொண்டு இங்கே வருகை தந்திருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறைத்தான் தற்போது தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியில் படமாக எடுத்துவருகிறார்கள்.
லட்சுமி அகர்வால் பேசும்போது, ""2009 வரை முகத்தை மறைத்தபடிதான் எங்கும் சென்றுவந்தேன். ஆனால், அதன்பிறகு தான் நான் ஒன்றும் கிரிமினல் இல்லையே, எதற்காக முகத்தை மூடி மறைக்கவேண்டும்.
யாருக்கெல்லாம் என்னைப் பார்த்து அசிங்கமாக தோன்றுகிறதோ முதலில் அவர்கள்தான் தங்களைப் பார்த்து அசிங்கப்பட்டுக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்தேன். ஆசிட் வீச்சால் தாக்குதலுக்கு ஆளானது ஒருமுறைதான். ஆனால் இந்த சமூகத்தில் அதை சுட்டிக்காட்டியே பலமுறை நான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன்'' என உருக்கமுடன் பேசினார்.
நிகழ்ச்சியில் புதுப்பொலிவுடன் "கேட்வாக்' வந்தார் நமீதா.