"சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாகதான் போய் கேட்டேன். ட்ரீம் வாரியர் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது.
இயக்குநர் கௌதம் இரண்டு மணி நேரம் கதை சொன்னார்.
அரசாங்கப் பள்ளி எப்படி நடக்கவேண்டுமென்ற மெசேஜ் ஏற்கெனவே வந்திருக்கிறது. ஆனாலும், இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். புதிய இயக்குநர்கள் கதை சொல்லும்போது, படம்மூலமாக சமூகத்துக்கு என்ன கருத்து சொல்லப்போகிறோம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள். நடிகர்களின் மார்க்கெட், வியாபாரம் பற்றி யோசிக்காமல் கதைக்கு உண்மையாக இருக்கிறார்கள். இந்தப் படத்தில் எனது புதிய நடிப்பைப் பார்க்கலாம். "நீங்கள் நடிக்கலாம், ஆனால் அதில் கீதாராணி டீச்சர் இருக்க வேண்டும்' என்று சொல்வார் இயக்குநர். அவரது கோபம் தெரியவேண்டும் என்பார்.
ஒளிப்பதிவாளர் கோகுல் என்னை ஒல்லியாகக் காண்பிக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். அவரது உழைப்பு அபாரமாக இருந்தது.
ட்விட்டரில் சிலர் "பெண் சமுத்திரகனி, "சாட்டை' படம்' என்றெல்லாம் சொல்லிஇருந்தார்கள். இந்தப் படத்தில் அதே அரசாங்கப் பள்ளிகள் தொடர்பான கருத்து இருக்கலாம். ஆனால், படம் அப்படியில்லை. 100 படங்கள் இதே போன்று வந்தாலும்கூட, இது தேவைதான்.
அகரம் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள். அதில் சுமார் 35% மாணவர்களிடம் பேசும்போது, அவர்களது வகுப்பறைக்கு ஒரு வருடம் ஆசிரியர்களே வரவில்லை என்றார்கள். அந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்து விட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும்? தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கப் பள்ளியில் படித்தவர்கள்தான். ஆகவே, இதேமாதிரியான கருத்துகள் 100 படத்தில் வந்தால்கூட நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம்.
இப்படியெல்லாம் "ராட்சசி' பட புரமோவில் பொங்கித் தீர்த்தவர் சூர்யாவின் மனைவியும் அப்படத்தின் ஹீரோயினுமான ஜோதிகாதான்.