நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கடந்தமுறை நடந்தபோது, சங்கத்தின் செயலாளர் விஷாலுக்கு எதிராக கலகக்கொடி பிடித்தார் டி. ராஜேந்தர். "தேர்தலிலில் நின்றபோது கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?' என ஆவேசக்குரல்கள் பலமாக எதிரொலித்து தள்ளுமுள்ளானது.
சிலர் மேடையை நோக்கி பாய்ந்தனர்.
அரண்டு போன விஷால் பொதுக் குழுவை பாதியிலேயே நிறுத்திவிட்டுக் கிளம்பினார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கடந்த வாரம் நடந்தபோது, விஷாலின் எதிர்ப்பாளர்கள் பலர் கலந்துகொள்ளாததால் கலாட்டா நடக்காமல் நடந்து முடிந்துள்ளது பொதுக்குழு. ஆனால் பெரும் பான்மையான தயாரிப்பாளர்கள் இப்போது விஷாலுக்கு எதிராக பொங்கி எழ ஆரம்பித்துவிட்டார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் வெற்றிபெற்ற விஷால், ""சிறிய படங்கள், தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவேன். பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமிப்பதை நிறுத்தி சிறிய படங்களும் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண ஏற்பாடு செய்வேன்'' என ஏகப்பட்ட வாக்குறுதிகளை வாரி இறைத்தார். ஆனால் விஷாலின் நடவடிக்கைகள் எல்லாமே ஏறுக்கு மாறாக இருக்கிறது.
க்யூப் கட்டணக்கொள்ளைக்கு எதிராகத்தான் சினிமா ஸ்டிரைக்கை அறிவித்தார் விஷால். 30 நாட்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நீடித்தும் க்யூப் கம்பெனி இறங்கிவரவில்லை. உடனே புதிய கம்பெனி ஒன்றுடன் ஒப்பந்தம் போட்டார் விஷால். இதெல்லாமே "நீ அடிக்குற மாதிரி அடி, நான் அழுகுற மாதிரி அழுகுறேன்' என்ற கதைதான். ""சரி, வாங்க பேசுவோம்'' என தியேட்டர்காரர்களையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினரையும் அழைத்து என்ன பேசினார்களோ, எப்படிப் பேசினார்களோ தெரியாது. ""நம்ம கண்டிஷனுக்கு க்யூப் ஓ.கே. சொல்லிருச்சு. அதனால ஸ்டிரைக் வாபஸ்'' என்றார் விஷால். மொதல்ல 5 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த க்யூப், இப்ப 4 ரூபாய் 90 காசுக்கு ஒத்துக்கிச்சாம். அப்படின்னா, ஸ்டிரைக்கின்போது ஒப்பந்தம் போட்ட புது கம்பெனியின் கதி? கோவிந்தா கோவிந்தாதான்.
""உங்களுக்கு என்ன பிரச்சினைன்னாலும் எங்கிட்ட வாங்க. உங்க படத்துக்கு நியாயமான வருமானம் கிடைக்க நான் கியாரண்டி'' அப்படின்னு சினிமா விழாக்களில் ஜில்லுன்னு பேசுவார் விஷால். ஆனால் அவரின் சமீபத்திய அடாவடி அக்கப்போர்களால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை நிலைமைக்குப் போகும் அளவுக்கு விரக்தி அடைந்ததுதான் மிச்சம். ""வாரத்திற்கு 2 பெரிய படங்கள், 2 சின்னப் படங்கள்தான் ரிலீஸ் பண்ண வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் ரிலீசிங் கமிட்டியில் லெட்டர் கொடுத்தபின் வரிசைக்கிரமமாக ரிலீஸ் தேதியை அந்தக் கமிட்டி முடிவு செய்யும்'' என்றார் விஷால்.
ஆனால் ஆகஸ்ட் 3-ஆம் தேதி 11 சின்னப் படங்களுக்கு ரிலீஸ் தேதியைக் கொடுத்து பல தயாரிப்பாளர்களை பைத்தியமாக்கிவிட்டார் விஷால். பல மாதங்களாக தேதி கேட்டு, நொந்து நொம்பலமான "ஓடு ராஜா ஓடு' படத்தின் தயாரிப்பாளர் விஜய் மூலன், ""நீங்க வௌங்கவே மாட்டீங்க'' என கவுன்சில் முன்பு நின்று மண்ணை வாரி தூற்றிய பின்பு, ஆக. 17-ஆம் தேதி அவரின் படத்துக்கு ரிலீஸ் தேதி கொடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட எல்லா அடாவடிக்கும் காரணகர்த்தா விஷாலின் மேனேஜர் சங்கர்தான். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகக்கூட இல்லாத இவரை ரிலீசிங் கமிட்டி மெம்பராக்கியுள்ளார் விஷால். ஆனால் சங்கத்தில் சங்கர் வைத்ததுதான் சட்டம். சின்னப் படங்களின் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டுப் போனால், ""அந்த தேதியில் பெரிய படம் வந்துச்சுன்னா நீ நாசமா போயிருவே. அதனால நான் சொல்ற தேதியில ரிலீஸ் பண்ணு'' என ராவடி பண்ணுகிறாராம் சங்கர். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் சகட்டுமேனிக்கு ""வாடா போடா'' என ரவுடி ரேஞ்சில் கூப்பிடுவதுதான் சங்கரின் ஸ்டைல்.
சின்னப் படங்களின் தயாரிப்பாளர்களின் நிலைமை இப்படி என்றால், 30 ஆண்டு களுக்கும்மேலாக தயாரிப்புத்துறையில் இருப்பவர், கமல், ரஜினியை வைத்து படம் எடுத்தவர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தவர்- இப்படிப் பட்ட பெருமைகளுக்குச் சொந்தக்காரர் பி.எல். தேனப்பன். ராம் டைரக்ஷனில் மம்முட்டி, அஞ்சலி, பேபி சாதனா ஆகியோரை வைத்து "பேரன்பு' என்ற அருமையான படத்தைத் தயாரித்தார் தேனப்பன். பல வெளிநாடுகளில் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது "பேரன்பு.'
கடந்த மாதம் "பேரன்பு'-வின் ஆடியோ & டீசர் வெளியீட்டு விழாவை சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்தினார் தேனப்பன். வெளிநாடுகளில் ஏகப்பட்ட விருதுகளை வாங்கிய தேனப்பன், உள்ளூரில் "பேரன்பு'-வை திரையிட முடியாமல் பெரும் பாடுபடுகிறார்.
""சங்கர் போன்ற அடாவடிப் பேர்வழிகள் இருக்கும்வரை சங்கமே அபராதத்துல ஓடும்'' என்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள்.