விஜய்யின் ஒவ்வொரு படமும் ரிலீசாகும்போது பின்னாலேயே ஏதாவது ஒரு பிரச்சினை வரிசைகட்டி நிற்கும் அல்லது நிற்க வைக்கப்படும். ஆனால் இப்போது "சர்கார்' ரிலீசாகப் போகும் நேரத்தில் எந்தப் பிரச்சினையும் கிளம்பாததால், விஜய்யே அரசியல் பேச்சை ஆரம்பித்து, படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
அவரின் பொலிலிடிக்கல் பில்டிங்கிற்கு ஸ்ட்ராங்கான பேஸ்மட்டமாக சன் பிக்சர்ஸ் இருப்பதுதான் ஆச்சரியம்.
கடந்த 30-ஆம் தேதி ஞாயிறன்று, சென்னை தாம்பரத்தையடுத்துள்ள சாய் இன்ஜினீயரிங் கல்லூரியின் பெரிய ஆடிட்டோரியத்தில் "சர்கார்' ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதிமாறன். விஜய்யின் ரசிகர்கள், திரை உலக வி.ஐ.பி.க்கள், "சர்கார்' பட ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், வில்லி வரலட்சுமி மற்றும் டெக்னீஷியன்களால் ஆடிட்டோரியமே நிரம்பி வழிந்தது.
எந்தப்பட விழாவாக இருந்தாலும் சரி, உம்முன்னும் கம்முன்னும் இருக்கும் விஜய் சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டுக் கிளம்பிவிடுவார். ஆனால் இந்த "சர்கார்' விழாவிலோ ரொம்பவே கேஷுவலாகவும் தனது ரசிகர்களை நண்பா என அழைத்தும் ஆச்சர்யப்படுத்தி னார்.
""உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னு இருந்து, கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். இது யாரோ ஒருவர் சொன்னதுதான். "மெர்சல்' படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் இந்த "சர்காரி'-லோ அரசியலில் "மெர்சல்' செய்திருக்கிறார் டைரக்டர் முருகதாஸ். சின்னத் திரையிலும் சினிமாவிலும் சர்காராக இருப்பவர் கலாநிதிமாறன் என பேசிக் கொண்டே வந்த விஜய்யை இடைமறித்து, ஏற்கெனவே ஒத்திகை பார்த்திருந்த கேள்வி யைக் கேட்டார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரசன்னா.
""படத்தில் நீங்கள் முதல்வராக நடிக்கிறீர்களா?'' இந்தக் கேள்வி கேட்கப் பட்டதும், ""படத்தில் முதல்வராக நடிக்கவில்லை.
நிஜத்தில் ஒருவேளை முதல்வரானால், அந்த இடத்தில் முதல்வராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன்'' என ஒரிஜினல் பஞ்ச் டயலாக் பேசியவர் அந்தக் கால மன்னர் ஒருவரைப் பற்றிய குட்டிக் கதை ஒன்றைச் சொல்லி, ""மாநிலத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சரியாக இருக்கவேண்டும். புழுக்கத்துக்குப் பின் மழை வருவதுபோல, நெருக்கடி அதிகரிக்கும்போது நொந்து நூலாகி நல்லவர்கள் முன்னே வருவார்கள்.
அப்படிவரும் ஒருத்தருக்கு கீழே நல்ல சர்கார் வரும்'' என பொளந்து கட்டினார் விஜய்.
-ஈ.பா. பரமேஷ்வரன்