நடிகரும், தயாரிப்பாளரு மான அருண்பாண்டியனின் பிறந்த நாள் விழா "ஜுங்கா' படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண்பாண்டியன், விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விஜய்சேதுபதி பேசுகையில், ""இயக்குநர் கோகுல்மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இதுதான் "ஜுங்கா'வில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம்.
அதன்பிறகுதான் அருண்பாண்டியன் வந்தார். அவரை ஒரு "கருப்பு தங்கம்' என்று சொல்லலாம். அவருக்கும் எனக்கும் இடையே எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லை. படத்தின் கதையை கேட்காமல் தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார்.
ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது இயக்குநரிடம் தொலைபேசிமூலம் கதையின் ஒன் லைன் என்ன என்று கேட்டார். அதன்பிறகு படத்திற்கு பட்ஜெட் போடுவதாகட்டும், லொக்கேஷன் தேடுவதாகட்டும் எதிலும் தலையிடவில்லை. தணிக்கைக்கு அனுப்பும்போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தை ஒருமுறை பார்க்கவேண்டும் என்ற காரணத்தால் படத்தை ஒரு முறை பார்த்தார். நான் கோகுல்மீது நம்பிக்கை வைப்ப தும், கோகுல் என்மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது. இயல்பானது. ஆனால் எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அதுதான் ஆச்சரியமான விஷயம்.
இன்றைக்கு சந்தோஷமான விஷயமும்கூட.
சரண்யா பொன்வண்ணன் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட். "தென்மேற்கு பருவகாற்று' படத்தில் அவர் நடிக்கும் காட்சியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறை என்னை வியக்கவைத்தது.
சரண்யா மேடத்துடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை வரமாகக் கருதுகிறேன்'' என நெகிழ்ச்சியுடன் பேசிய விஜய் சேதுபதி, ""மடோனாவிற்கும் என்மீதும் பெரிய நம்பிக்கை. என்னைப் பொருத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்குமுன் நான் நடிகை காயத்ரியை அப்படி பலமுறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி'' என மனம் திறந்து மடோனாவை பாராட்டினார்.