ஹாலிவுட் படங்களை கிழிகிழி என கிழித்த படம்தான் "ரிட்டர்ன் ஆஃப் ஸ்பார்ட்டன்ஸ்.' இந்தப் படத்தில் "ஸ்பார்ட்டன்' படத்தை மையமாக வைத்து, முடிந்தவரை அவர்களால் எந்தெந்த ஆங்கிலப் படங்களையெல்லாம் உள்ளே சேர்த்து கிழிக்க முடியுமோ அவ்வளவு கிழித்தனர். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆமா சும்மாவா, லாஜிக்கா எடுக்கிறேன்னு எவ்வளவு கதை விடுறாங்க? இதுமாதிரி படங்களை வச்சு செய்யணும்னு ஏங்கிட்டு இருந்தவங்களுக்கு இந்தப் படம் மனதிருப்திய கொடுத்தது. இதுபோன்ற படங்களுக்கு "ஸ்பூஃப் ஜானர்' என்று பெயர் வைத்து கலாய்த்து வந்தனர். எந்த ஒரு விஷயத்தையும் ஹாலிலிவுட்டில் பின்பற்றினால் அதை பாலிவுட்டில் பின்பற்றுவது வழக்கம். பின்னர் அது அப்படியே தமிழகம் வந்தடைந்துவிடும்.
அப்படி தமிழகத்துக்கு வந்தது "ஸ்பூஃப் ஜானர்'. 2010-ஆம் ஆண்டு ரிலீசான 'தமிழ்ப் படம்' என்ற பெயரில் தமிழ்ப் படங்களைக் கிழிக்க ஒரு தனி படமே எடுக்கப்பட்டது. இதில் "அகில உலக சூப்பர் ஸ்டார்' சிவா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களாக மனோபாலா, வெண்ணிறாடை மூர்த்தி, எம்.எஸ் பாஸ்கர் என்று வயதானவர்களை இப்படத்தில் "பாய்ஸ்' பட இளைஞர்களாகக் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர் சி.எஸ். அமுதன். இந்தப் படம் ராஜ்கிரணின் "அரண்மனைக்கிளி'-யில் ஆரம்பித்து 2010-ஆம் ஆண்டுக்கு முன்வந்த அனைத்துப் படங்களையும் பாரபட்சமில்லாமல் கிழித்தது. திரைத்துறையில் இந்தப் படத்திற்கு பல விமர்சனங்கள் வந்தாலும் மக்களிடையே வரவேற்பு பெற்று ஹிட் அடித்தது. சிவா என்ன கதாபாத்திரத்தில் நடித்தார் என்றெல்லாம் சொல்வது கடினம். ஆனால், காட்சிகளின் கோர்வை எல்லாரையும் ரசிக்கவைத்தது.
தற்போது இந்தப் படத்தின் அடுத்த பாகமான "தமிழ்ப் படம் 2.0' டீசர் வெளியாகி எல்லாரையும் சிரிக்கவும் எதிர்பார்க்கவும் வைத்துள்ளது. டீசர் ஆரம்பத்திலேயே சிவா போலீசாக பதவியேற்பது போன்று காட்டுகிறார்கள்.
டீசரை பார்த்தமட்டிலும் என்னென்ன படங்களை இவர்கள் கிழித்திருப்பார்கள் என்று பார்ப்போம்.
படத்தின் நேம் பிளேட்டை போட்டவுடனேயே, முதல் ஷாட்டாக சிவா ஜன்னல் வெளிச்சத்தில் கழுத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு தலையில் தொப்பி அணிந்தவாறு அமர்ந்துள்ளார். இதே பாணியில்தான் விஷாலின் "துப்பறிவாளனின்' போஸ்டர் இருந்தது. அடுத்த ஃபேட்டவுட்டில் இப்படத்தின் ஹீரோயின் காட்டப்படுகிறார். இது "விவேகம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காஜல் அகர்வால் "வெறியேறிட' பாட்டு பாடும் காட்சியை போன்றே இருக்கிறது. (அதற்கு முன்பே வெளியே வந்தவர்களுக்கு தெரியாமலிலிருக்கலாம்) இதனைத் தொடர்ந்து "ஒ ஹம் க்ஷஹள்ண்ஸ்ரீஹப்ப்ஹ் ஜ்ஹற்ஸ்ரீட்ம்ஹய்' என்கிற வசனம் எழுதப்பட்டும், இங்கு 24 மணிநேரம் மட்டும் ஓடக்கூடிய வாட்சுகள் கிடைக்கும் என்று எழுதப்பட்ட இடம் வாட்ச் கடை போன்று இருக்கிறது. பார்த்தாலே தெரிகிறது சூர்யாவின் "24' படமாகத்தான் இருக்கும் என்று. சத்யராஜ் அல்வா கடை என்று ஒரு ஷாட் உள்ளது. போன படத்தில் ஒபாமா அவரிடம் பேசுவது போன்று இருக்கும், அதற்கு சான்றாக இந்த டீசரில் சிவா நின்றபடி மொபைல் பேச பின்னே ஒபாமா சிவாவுக்கு மெடல் போட்டுவிடுவது போன்று ஒரு புகைப்படம் இருக்கிறது. இதில் தனுஷின் லூனா மொபட், நீதானே பொன் வசந்தம் ஸ்பாட், தென்னை மர உசரத்துக்கு கார் பறக்க (இது எந்தப் படம் என்று சொல்லவே தேவையில்லை) என்று பல படங்களை கிழித்துவிட்டு செல்கிறது.
திருட்டு விசிடி தடுப்புப் பிரிவு என்றும் அதற்கு ஆய்வாளர் விஷால் என்றும் ஒரு காட்சியில் காட்டப்பட்டுள்ளது. "அருவி'-யில் வரும் அந்த மான்கராத்தே போன்ற கைவிரல்களை காட்டும் ஷாட். ஆங்கில படமான "காட்பாதரி'-ல் குதிரையை வெட்டி மெத்தையில் கிடப்பது போன்று ஒரு காட்சியிருக்கும். அதுவும் இதில் இடம்பெற்றிருக்கிறது. "துப்பாக்கி'-யில் வரும் மொட்டைமாடி காட்சி, "மங்காத்தா', "மணி மணி' காட்சியும் இருக்கிறது. கஸ்தூரியின் ஐட்டம் டான்சும் இதில் இருக்கிறது. "மெர்சல்' காட்சி, "விக்ரம் வேதா'-வில் இருக்கும் உரையாடல் காட்சி இருக்க அதில் இவர்களின் உரையாடல் செம கிழியாக ஆக இருக்கும் என்றே தோன்றுகிறது. இந்த முறையும் 2010-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வந்த அனைத்துப் படங்களையும் வச்சு செய்திருப்பார்கள் என்று தெரியவருகிறது.
மேலும் இந்த முறை சினிமாவை மட்டுமல்லாமல் காமெடியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியலையும் கிழித்திருக்கிறார்கள். ஓபிஎஸ் அழுதுகொண்டே முதல்வராக பதவியேற்ற தருணத்தை இதில் சிவா தத்ரூபமாக நடித்திருக்கிறார். பின்னால் இருக்கும் கட்டவுட்டில் சிவா ரகசிய பதவியேற்பு விழா என்றிருப்பது என இரண்டு வருடங்களாக தமிழக அரசியல் சூழலை கிழிப்பது போன்று இருக்கிறது. பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டு ஓடிய மல்லையா பெயரில் சர்பத் கடை என்று ஒரு கட் அவுட் காட்சி என்று நேஷனல் லெவல் அரசியலும் பேசியிருக்கிறது "தமிழ்ப் படம் 2.0.' ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்குக்கு காத்திருக்கிறதுபோல.
-சந்தோஷ்