""மலையாள நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மோகன்லால் பொறுப்பேற்றபிறகு, நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அவருக்கெதிராக பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தநிலையில் நடிகை ரம்யா நம்பீசனும் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தார். நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது கேரள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம் கட்டப்படுவதாகவும், அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்தில் பங்கேற்று ரம்யா நம்பீசன் பேசியபோது... ""நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியவரை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து நான் ராஜினாமா செய்ததால் எனக்கு பிரச்சினைகள் வருகின்றன. புதிய படங்களில் நடிக்கவிடாமல் தடுக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனக்கு எதிராக தவறான வதந்திகளும் பரப்புகின்றனர். படப்பிடிப்பில் தொல்லை கொடுக்கக் கூடியவர் என என்னைப் பத்தி தப்புத்தப்பா தகவல்களை பரப்பி பட வாய்ப்புகளைக் கிடைக்க விடாமல் செய்கிறார்கள்'' என்று மறைமுகமாக நடிகர் மோகன்லாலை தாக்கிப் பேசியுள்ளார்.