ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதைவிட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பதுதான் முக்கியம். இதை கவனத்தில் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் "எழுமின்'. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி. விஜி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர்- சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18-ஆம் தேதி இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விவேக், இயக்குநர் வி.பி. விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ் வரன், கலை இயக்குநர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நடிகர் விவேக் பேசும்போது, ""அக்டோபர் 18-ஆம் தேதி என்றதும் எல்லார் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. "எழுமின்' அன்றுதான் ரிலீஸ். 18-ஆம் தேதி "வடசென்னை', "சண்டக்கோழி' என இரண்டு பெரிய படங்கள் வருகின்றன. இவர்களோடு நாங்களும் வருகிறோம்.
இந்தப்படத்தைப் பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்"" என்று கோரிக்கை வைத்தார்.
அதன்பின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.பி. விஜி பேசும்போது, ""விவேக் சாரின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் இப்படத்தைப் பார்ப் பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்'' என்றார்.