சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியானது "பெட்ரோமாக்ஸ்'. இந்தப் படத்தில், வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது.
திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே- இப்படி ஒரு வெளிச்சத்தைப் பெறுவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி, தனது சினிமா வாழ்க்கையில் ஒருபடி மேலே ஏறிவந்திருக்கிறார்.
"பெட்ரோமாக்ஸை'-த் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாணுடன் "தனுசு ராசி நேயர்களே' என்கிற படத்தில் முழுநீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
டிஎஸ்கே பல விஷயங்களை நம்மிடம், ""நான் ஆதித்யா டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தேன். அங்கிருந்து வெளியேவந்து என் நண்பன் நடிகர் அசாருடன் சேர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சி செய்துவந்தேன். அந்த சமயத்தில்தான் விஜய் டிவியில் "கலக்கப்போவது யாரு சீசன்-7'-ல் கலந்துகொள்ளும் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்தது.
இதற்குமுன் தொலைக்காட்சியில் நடித்தது, சில படங்களில் நடித்தது என அனைத் தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, புதிதாகக் களம் இறங்கியதுபோல உத்வேகத்துடன் அதில் பங்கேற்று, டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்று சிம்புவின் கையால் பரிசு பெற்றோம்.
இந்த சமயத்தில்தான் "பெட்ரோமாக்ஸ்' படத்தில் சினிமா ஆர்வமிக்க ஒரு இளைஞன் கேரக்டரில் நடிக்க சரியான ஆளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வாய்ப்பு எனது நண்பன் அசாருக்கு தேடிவந்தது..
ஆனால், இயக்குநர் ரோஹின் வெங்கடேசனிடம் அந்த கேரக்டரில் நடிப்பதற்காக என்னை சிபாரிசு செய்தார். பல ஆடிசன் களுக்குப் பிறகே அந்த கேரக்டரில் என்னைத் தேர்வுசெய்தார் ரோஹின் வெங்கடேசன்.
பல நகைச்சுவை நடிகர்கள் தங்களது மிமிக்ரி திறமையால் பெரிய இடத்தை அடைந்துள் ளார்கள். எனக்கும் மிமிக்ரி திறமை இருந்தது என்பதால், "பெட்ரோமாக்ஸ்' படத்தில் அந்தக் கதாபாத்திரத் திற்கு என்னை அவர் ஒப்பந்தம் செய்தார்.
படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பெண்கூட இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், தேவதையாக தமன்னா வந்து இறங்கினார்.
பெரிய நடிகை என்கிற பந்தா எதுவும் இல்லாமல் எல்லாரிடமும் இயல்பாகப் பழகினார். படப்பிடிப்பில் சூர்யா, விக்ரம், "பாகுபலி' காளகேயன்போல நான் மிமிக்ரி செய்து நடிக்கும் காமெடி காட்சிகள், மிமிக்ரி வசனங்களைப் பார்த்துவிட்டு, இயக்குநரிடம் "யார் இந்த பையன்?' என்று விசாரித்துள்ளார் தமன்னா.
என்னுடைய நடிப்பால் அவர் மனதில் நானும் இடம்பிடித்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிய வந்தது.