அரசியல்வாதியின் வாரிசு அரசியல்வாதியாக வேண்டுமென்று விதி வகுக்கப்பட்டிருக்கிறதோ இல்லையோ, நடிகர்களின் வாரிசு நடிகராவது என்று இப்போது விதி வகுக்கப்பட்டுவிட்டது.
நடிகர்திலகம் சிவாஜியின் வீட்டில் பலத்த போராட்டத் துக்குப் பிறகு பிரபுவை சினிமாவில் அனுமதித்தார் சிவாஜி. அவரும் எதிர்பார்த்ததற்கு மேலேயே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்தார். அதற்குப் பிறகு ஜூனியர் சிவாஜி என்று சிவாஜியின் பேரன் சினிமாவுக்கு வந்தாலும், உடனடியாக காணாமல் போனார்.
ஆனால், பிரபு தனது மகன் விக்ரம் பிரபுவை சிவாஜி குடும்பத்துப் பிள்ளையாக சினிமாவில் நிலைநிறுத்துவதில் வெற்றியடைந்திருக்கிறார்.
நடிகர் எம்.ஆர். ராதா திரையுலகை கலக்கியதைப்போல இல்லாவிட்டாலும், அவருடைய மகன்கள் எம்.ஆர்.ஆர். வாசு ஒரு காலகட்டத்தில் சினிமாவில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தார். அவருக்குப் பிறகு, ராதாவின் மகள்கள் ராதிகா, நிரோஷா இன்னொரு மகன் எம்.ஆர். ராதாரவி, வாசுவின் மகன் வாசு விக்ரம் என்று சினிமாவில் ராதாவின் வாரிசுகள் அடுத்தடுத்து நுழைந்திருக்கிறார்கள்.
நவரசத்திலகம் முத்துராமன் எதிர்பாராமல் மரணம் அடைந்த சூழலில், அவருடைய மகன் கார்த்திக்கை பாரதிராஜா தனது "அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகம் செய்தார்.
அந்தப் படத்தில் அப்பாவி அய்யர் வீட்டு இளைஞனாக நடித்த கார்த்திக் இளைஞர்களை எளிதில் கவர்ந்தார். இப்போது, அவருடைய மகன் கவுதம் கார்த்திக்கையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். கவுதமிற்கு இப்போதைய அவசரத் தேவை அவருடைய அப்பாவைப் போல ஒரு ஹிட் படம்.
நடிகர் சிவக்குமார் தனது மகன்களை நடிகர்களாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வளர்த்தாரோ என்னவோ தெரியாது. ஆனால், அப்பாவியாக சினிமாவில் நுழைந்த சூர்யா தனக்கென ஒரு இடத்தை தக்கவைக்க படாதபாடுபட வேண்டியதாயிற்று. ஆனால், டைரக்டராகப் பயிற்சியெடுத்த இரண்டாவது பையன் கார்த்திக் அண்ணனைக் காட்டிலும் படு ஸ்பீடாக திரையில் கால் ஊன்றினார்.
நடிகர் முரளி தனது மகனுக்கு சினிமாவில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருந்த நிலையில் திடீரென மரணம் அடைந்தார். ஆனால், தந்தையின் பெயரைக் காப்பாற்றும் வகையில் அவருடைய மகன் அதர்வா சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களை கொடுத்துவருகிறார்.
(வாரிசு சுவாரஸ்யங்கள் தொடரும்)