தனது "பசங்க' புரொடக்ஷன் கம்பெனிமூலம் ஜி.வி. பிரகாஷை ஹீரோவாகப் போட்டு தயாரித்த "செம' படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டார் டைரக்டரும் தயாரிப்பாளருமான பாண்டிராஜ். அடுத்து கார்த்தியை வைத்து எடுத்த படம் முடியும் கட்டத்தில் உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆனவுடன் சிவகார்த்திகேயனை வைத்து ஒருபடம் எடுக்கலாம் என்ற முடிவுடன் சிவாவை அணுகியுள்ளார் பாண்டிராஜ்.
தான் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் "சீமராஜா', அடுத்தடுத்து நயன் தாரா, ராகுல் பிரீத்சிங்குடன் ஜோடிபோடும் படங்களின் லிஸ்டைச் சொல்லிவிட்டு, பாண்டிராஜ் சொன்ன கதையின் ஒன்லைனை கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன். ""மேற்படி படங்களையெல்லாம் முடிச்சுட்டு, கண்டிப்பா உங்களுக்கு படம் பண்றேன்'' என சந்தோஷமாக சொல்லி ""இப்போதைய மார்க்கெட் நிலவரப்படி தனது சம்பளம் இவ்வளவு என்றாலும், என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் நீங்கள் என்பதற்காக, குறைச்சுக்கிறேன்'' என உண்மை நிலவரத்தை உள்ளபடி சொல்லி வழி அனுப்பியிருக்கிறார் சிவா.
""அப்படியா'' என அரை மனசோடு கிளம்பிப்போன பாண்டிராஜ், தனது நட்பு வட்டத்தில், "அறிமுகப்படுத்திய என்னிடமே கெத்து காட்டுறாரு. இத்தனை கோடி சம்பளம் கொடுக்குறதுக்கு அவரு என்ன சூப்பர் ஸ்டாரா?' என சூடாகவே பேசியிருக்கிறார்.
இந்த சூடான பேச்சு சிவகார்த்திகேயன் காதுக்குப்போனதும், ""பேசுனா பேசிட்டுப் போறாரு விடுங்க. சரி நான் கேக்குறேன், இவரு மட்டும் மொத படத்துக்கு வாங்குன சம்பளத்துக்கு நான் டைரக்ஷன் பண்ணச் சொன்னா பண்ணுவாரா? மார்க்கெட் வேல்யூ இருக்குற வரைக்கும்தான் நமக்கு மதிப்பு. இன்னும் பத்து வருஷம் கழிச்சு நாம எப்படி இருப்போம்னு நமக்கே தெரியாது'' என பட்டவர்த்தனமாகவும் பட்டெனவும் பேசினாராம் சிவகார்த்திகேயன்.
சிவா மனசுல நெஜம்!