இயக்குநர் களஞ்சியம் இயக்கியுள்ள படம் 'முந்திரிக்காடு' இப்படம் தமிழக உழைக்கும் மக்களின் வாழ்வியல் சார்ந்த கதையாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் நாயகியாக புதுமுகம் சுபப்ரியா நடித்துள்ளார். இவருடைய தந்தை திரையுலகில் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். அவரும் டிசைனர்ஸ் சசி அண்ட் சசியும் ஆரம்ப காலத்தில் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். சசி அலுவலகத்துக்குப் பல உதவி இயக்குநர்கள் வருவார்கள். குழந்தையாக இருக்கும்போதே போஸ் கொடுப்பது, ஒருவரைப் பார்த்து அதேபோல முகபாவம் காட்டுவது என்று படுசுட்டியாக இருந்திருக்கிறார் சுபப்ரியா .கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தபின் நடிக்க விரும்பிய சுபப்ரியா, ஐந்து ஆண்டுகள் பயிற்சி எடுத்தார். பரதம், நடனம், சினிமா, சிலம்பம், நடிப்புப் பயிற்சி எனப் பலவற்றையும் பெற்ற பிறகே திரை நுழைவு செய்துள்ளார்.
இவரது தோற்றம், ஆர்வம் பிடித்துப் போய் இயக்குநர், களஞ்சியம் இயக்கும் "முந்திரிக்காடு' படத்திற்குத் தேர்வாகி நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தமிழ் பேசும் நடிகை வேண்டும் என்கிற தகுதியில் இவ் வாய்ப்பு கிடைத்தது.
"முந்திரிக்காடு' அனுபவம் பற்றி சுபப்ரியா பேசும்போது,""அது மறக்கமுடியாத அனுபவம். கல், முள், காடு என்று மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். இதனால் சில விபத்துகளும் ஏற்பட்டன. களஞ்சியம் சார் நிறைய சொல்லிலித் தருவார், நடிப்பு சரியாக வரும்வரை விடமாட்டார்.
படத்தைப் பார்த்தபோது பட்டகஷ்டம் வீண்போகவில்லை என்று மகிழ்ச்சியாக இருந்தது. படம் நிச்சயம் பேசப்படும். விருதும் வாங்கும்.
அந்தப்படத்தில் சீமான் சாரும் நடித்தார். அவர் என்னைத் தன் தங்கையைப்போல பார்த்துக்கொண்டார். அக்கறையோடு விசாரித்தார். என் நடிப்பைப் பார்த்துப் பாராட்டினார். தரையில் அமர்ந்தார். எல்லாரிடமும் எளிமையாகப் பழகினார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது'' என்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் பிரெஞ்சு என ஐந்து மொழிகளில் பேசுவார் சுபப்ரியா.
"அறம்' பட நாயகி நயன்தாரா போன்ற கம்பீரமான, கண்ணியமான கதாபாத்திரங்களில் தோன்றி தமிழ், தெலுங்கில் பிரகாசிக்க வேண்டும் என்பது இவரது கனவு.
சுபப்ரியாவின் கனவு மெய்ப் படட்டுமே!