சினிமாவில் பலதுறைகளில் ஒருவர் வெற்றிபெற்றாலும், அவர்களின் மனதுக்குப் பிடித்த துறைகளில் மட்டுமே கடைசிவரை பயணிப்பார்கள். அந்த வகையில், திரைப்படத் தயாரிப்பு, இயக்கம் உள்ளிட்ட பலதுறைகளில் பணியாற்றிய கவிஞர் இதயஜோதி, பாடல்கள் எழுதுவதை மட்டுமே தனது உயிராக நினைத்து இன்னமும் சினிமாவில் வெற்றிகரமான பாடலாசிரியராகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
1968-ஆம் ஆண்டு தனது முதல் பாட்டை எழுதிய இதயஜோதி, தொடர்ந்து பல வெற்றிப் பாடல்களை எழுதினார். இவரது பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா, சுசீலா, சைலஜா என பல முன்னணிப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். "கலாச்சாரம் 2018', "சகவாசம்' ஆகிய இரண்டு படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். மேலும் சில படங்களில் பாடல்கள் எழுதிவருகிறார்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி; இதுவரை 200-க்கும்மேற்பட்ட பக்திப் பாடல்களும் எழுதியிருக்கிறார்.
தற்போது, இசையரசர் தஷி இசையமைப்பில் கடவுள்கள் முருகன் மற்றும் கண்ணன் ஆகியோரைப் பற்றி இவர் எழுதியிருக்கும் "கண்ணும் கந்தனும்' பக்தி பாடல் ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது.