ஏ.எல். விஜய் டைரக்ஷனில் "கரு' என பெயரிடப்பட்டு, இப்போது "தியா' என பெயர் மாறி ரிலீசாகியிருக்கிறது.
"" "தியா' என்னுடைய சினிமா கேரியரையே மாற்றிவிடும் அளவுக்கு இருக்கும். இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எனது அம்மா படித்து முடித்ததும், "இதைவிட சிறந்த படம் உனக்கு கிடைக்காது, அதனால் எந்த கண்டிஷனும் போடாம ஒத்துக்க' என்றார்.
படம் முழுவதும் முடிந்தபின் மனசுக்கு அவ்வளவு திருப்தி. இந்த சீன்தான் பெட்டர்னு சொல்லமுடியாத அளவுக்கு எல்லா சீனுமே பெட்டர்தான். ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்! எனக்கு மகளாக நடித்த வெரோனிகா என்ற குழந்தை நட்சத்திரம், நிஜமாகவே என்னை அம்மாவாக நினைக்க ஆரம்பித்ததுதான் ஹைலைட். எனக்கு கிடைக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம் டைரக்டர் ஏ.எல். விஜய்தான்.
என்னைப்பத்தி என்னென்னமோ புரளியையும் வதந்தியையும் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆந்திர அமைச்சர் ஒருவரின் மகனுடன் ரகசிய திருமணம் ஆகிருச்சுன்னு கிளப்பிவிட்டார்கள். நான் அகம்பாவம் பிடிச்சவ, செட்ல யாரையும் மதிக்காதவன்னு இந்த "தியா'படத்தின் ஹீரோ நாகசவுர்யா ரொம்பவே தப்பா பேசியிருக்காரு. டைரக்டர் ஏ.எல். விஜய்க்கும் கேமராமேன் நிரவ்ஷாவுக்கும் என்னைப் பற்றித் தெரிந்ததால், "நீ எதுவும் ஃபீல் பண்ணாதம்மா'ன்னு ஆறுதல்படுத்தினார்கள். பொதுவா எந்தப்பட ஷூட்டிங்னாலும் நான் யாரிடமும் வளவளன்னு பேசமாட்டேன். நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருப்பேன்.
இப்பக்கூட நாகசவுர்யாகிட்ட எக்ஸ்கியூஸ் கேட்க நான் ரெடி. இப்ப தமிழ்ல தனுஷுடன் "மாரி-2', செல்வராகவன்- சூர்யா காம்பினேஷனில் "என்.ஜி.கே.' ஆகிய ரெண்டு படங்களில் மட்டுமே கமிட் ஆகியிருக்கேன். சிவகார்த்திகேயனுடனோ, மிஷ்கின் படத்திலோ நான் கமிட் ஆகவேயில்லை. ஆனா அவர்களின் படங்களில் எல்லாம் நடிப்பதாக ஒரு வதந்தி, நடிக்க மறுத்ததாக ஒரு புரளி.
நான் ஜார்ஜியாவில் டாக்டர் படிப்பு படிச்சிருக்கேன். என்னைப் பத்தி இப்படியே வதந்தி கிளப்பிக் கொண்டிருந்தால், மருத்துவத் தொழிலுக்குப் போறதத் தவிர எனக்கு வேற வழியில்ல.'' இப்படி சலிலிப்புடனும் கடுப்புடனும் கொட்டித் தீர்த்தார் சாய்பல்லவி.
ஏம்பா அந்தப் புள்ளயப் போட்டு இப்படி பாடாப்படுத்துறீங்க?
-பரமு