"மிகமிக அவசரம்' இப்படி ஒரு டைட்டிலை எந்த நேரம் பார்த்து வைத்தார்களோ தெரிய வில்லை. படம் ரிலீஸ் ஆவதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டார்கள் படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிய சுரேஷ் காமாட்சியும், படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணிய லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரும்.
படத் தயாரிப்பில் ஒன்றரை ஆண்டுகள், அதன்பின் சினிமாத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், போலீஸ் உயரதிகாரிகளுக்கு படம் போட்டுக் காட்டியது என இந்தவகையில் ஒன்றரை ஆண்டுகள் ஓடின. ஒருவழியாக ரவீந்தர் சந்திரசேகரிடம் படத்தை விற்றார் சுரேஷ் காமாட்சி. அக். 11-ஆம் தேதி ரிலீஸ் என முடிவுசெய்து அதற்கான வேலைகளில் இறங்கி, பத்திரிகையாளர் கள் காட்சியும் போட்டார் சந்திரசேகர்.
நல்ல காரியம் நடக்கும்போது ஒண்ணு அபசகுணமா எதாவது நடக்கும், இல்லேன்னா அதிரடியா எதாவது நடக்கும். அதேமாதிரிதான், "மிக மிக அவசரம்' பட ரிலீசுக்கும் நடந்தது. "தமிழகம் முழுக்கவே இந்தப் படத்திற்கு 17 தியேட்டர்கள்தான்!
அதுவும் மொத்தம் 34 ஷோக்கள்தான்' என்ற குண்டைத் தூக்கி, சந்திரசேகர் தலையில் போட்டார்கள் தியேட்டர் ஓனர்கள். (இதையெல்லாம் 2019 அக். 29 தேதியிட்ட "சினிக்கூத்து' இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.)
"என்னய்யா இது...? அக்கிரமமா இருக்கு...? என லிப்ரா சந்திரசேகர் பொங்கி எழுந்தாலும் அவரால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. ஒருவழியாக எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து கடந்த 8-ஆம் தேதி "மிகமிக அவசரம்' ரிலீஸ் என நாள் குறிக்கப்பட்டது.
125 தியேட்டர்களில் "மிகமிக அவசரம்' ரிலீசாகியுள்ளது. இப்போது ரிலீசானதன் பின்னணியிலும் ஒரு சூட்சுமம் இருப்பதாகச் சொல்கிறார்கள்!
"பிகில்' ரிலீசின்போது விஜய்க்கு லேசாக ஜெர்க் கொடுத்தது ஆளுங் கட்சி. "" "பிகில்' படத்தின் ஸ்பெஷல் காட்சிகளுக்கு அனுமதி இல்லை'' என திகில் கிளப்பினார் செய்தி- விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ. இதனால் மிரண்டு போன "பிகில்' தயாரிப்பாளரான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி அகோரம், சிலபல ரகசிய டீலிங்குகளை நடத்தினார். அதன் பின் அமைச்சர் எதையுமே கண்டு கொள்ளவில்லை. ஸ்பெஷல் காட்சிகளும் ஓடின.
"பிகிலு'-க்கு திகில் கிளப்பிய அதே அமைச்சர் கடம்பூர் ராஜூதான், கடந்த சில நாட்களுக்கு முன்பு "மிகமிக அவசரம்' படத்தைப் பார்த்தார். அவசரம் அவசரமாக படத்தின் ஹீரோயினான ஸ்ரீபிரியங்காவையும் அவரது பெற்றோரையும் தனது வீட்டுக்கு அழைத்தார்.
""படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருந்தம்மா! நிஜமான பெண் போலீசை நடிப்புல கொண்டு வந்துட்ட. தமிழ்ப் பொண்ணான நீ சினிமாவுல நல்ல இடத்துக்கு வருவாய். வரணும்!'' என அன்போடு வாழ்த்தி வழியனுப்பியிருக்கிறார் அமைச்சர். அடுத்ததாக முதல்வர் எடப்பாடிக்கும் படம் போட்டுக் காட்ட ஏற்பாடு கள் நடக்கிறதாம்.
அமைச்சர் பாராட்டிய சந்தோஷத்துட னும், முதல்வர் பார்த்தால் இன்னும் சந்தோஷம் என்ற நினைப்புடனும் "மிகமிக அவசரம்' ரிலீஸ் மகிழ்ச்சியுடனும் பூரிப்புடனும் இருக்கிறார் ஹீரோயின் ஸ்ரீபிரியங்கா.
""அமைச்சர் கடம்பூர் ராஜு என்னைப் பாராட்டிய தருணத்தில், கடவுள் எனக்குத்தந்த பரிசு என நினைத்தேன்''- தியேட்டர் ஓனர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தில் இப்படிப் பேசினார் ஸ்ரீபிரியங்கா.