ஸ்ட்ரெய்ட்டா, விவகாரத்துக்கு வருவோம்! சினிமா சம்பந்தப்பட்ட வர்களில் வெகுசிலர், இன்னொரு விதத்தில் சம்பாதிக்கவும் செய்கின்றனர்.
அவர்களுக்கென்று புரோக்கர்கள் உள்ளனர். இவர்களின் வேலையே, துணை நடிகைகளின் ஆல்பத்தைக் காட்டி, இவ்வளவு ரேட் என்று பேசி, வாடிக்கையாளர்களை இழுப்பதுதான். அப்போது சிலர், ஆல்பத்தில் இடம் பெறாத குறிப்பிட்ட நடிகை வேண்டும் என்று அடம் பிடிப்பர். புரோக்கர்களும் வேறுவழியின்றி, சம்பந்தப்பட்ட நடிகையை, உரியவர்கள் மூலம் அணுகி, ஏற்பாடு செய்வர். இந்த இடத்தில்தான் சிக்கல் இருக்கிறது. பெரிய நடிகையோ, துணை நடிகையோ, நடிப்பைத் தவிர வேறு அட்ஜஸ்ட்மென்டுகளுக்கு வளைந்து கொடுக்காத, தரமான நடிகைகள் பலர் உண்டு.
அவர்களிடம் போய், இந்த புரோக்கர் கள் தலையைச் சொரிந்து நின்றால், விரட்டியடித்து விடுவார்கள். இந்த நடைமுறையெல்லாம் இப்போது மாறிவிட்டது. இது வாட்ஸப் காலமாயிற்றே! வர்றியாம்மா? என்று வாட்ஸப்பில் நூல் விட்டுப் பார்ப்போம். படிந்தால், ரேட் பேசுவோம். இல்லையென்றால், விட்டுவிடுவோம் என்று, எந்த ஒரு துணை நடிகைக்கும் சாதாரணமாக மெசேஜ் அனுப்பி விடுகிறார்கள். பலரும் இத்தகைய அழைப்புக்களைக் கண்டுகொள்வதும் இல்லை; வெளியில் சொல்வதும் இல்லை.
சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்துவரும் ஜெயலட்சுமிக்கும் புரோக்கர்களிடமிருந்து வாட்ஸப் அழைப்பு போயிருக்கிறது. தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் கைவசம் இருக்கிறார்கள். டேட்டிங் சென்றால் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சம் வரை கிடைக்கும் என்று வாட்ஸப் மூலம் தெரிவித்திருக்கிறார்கள் துணை நடிகை ஏஜெண்டுகளான முருகப்பெருமாளும், கவியரசும். அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து, தொடர்ந்து வாட்ஸப் மெசேஜ் வர, பொறுமை இழந்த ஜெயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். விபசாரத்தடுப்பு பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்திருக்கின்றனர்.
பரவாயில்லையே! துணிச்சலோடு போலீஸிடம் புகார் அளித்திருக்கிறாரே!
யார் இந்த நடிகை? என்ற விபரங்களை சேகரித்தோம். கேரளாவைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தமிழில் "கோரிப்பாளையம்', "அப்பா', "விசாரணை', "பிரிவோம் சந்திப்போம்', "வேட்டைக் காரன்' போன்ற பல படங்களில் நடித்தவர். சின்னத்திரை சீரியலான தமிழ்க் கடவுள் முருகனில் இவர் ஏற்றிருக்கும் வேடம் மகாலட்சுமி.