சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "ரோஜா' சீரியலில் ரோஜாவுக்கு கண்பார்வை கிடைக்கவேண்டும் என்பதற்காக கணவர் சிபு பல டிசைன்களில் பரிகாரம் பண்ணுவதை கடந்த இதழில் "ரோஜாவின் ரோதனை!' என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
இந்த இதழில் அதே சன் டி.வி.யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் "ராசாத்தி'-யில் ராசாத்திக்காக காதலன் பாண்டியன் செய்யும் பரிகாரம் பற்றியும் இனிப்பு பணியாரம் பற்றியும் பார்ப்போம்; படிப்போம்.
"ராசாத்தி' சீரியலில் புதிதாக தேவயானி என்ட்ரியானபிறகு, ஒரு கார் விபத்தில் படுகாயம் அடைகிறார் ராசாத்தியாக நடிக்கும் பவானி ரெட்டி. ராசாத்தியைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார்கள். ஆனால் காதலன் பாண்டியனோ ஆஸ்பத்திரிக்கு ஓடாமல், நேராக அம்மன் கோவிலுக்கு ஓடுகிறார். மின்னல் வெட்டுகிறது, மழை கொட்டுகிறது, காற்று பலமாக அடிக்கிறது.
அங்கே ஆஸ்பத்திரியில் ராசாத்திக்கு சிகிச்சை, இங்கே அம்மன் கோவிலில் காதலன் வழிபாடு என கட் பண்ணி, கட் பண்ணி காண்பிக்கிறார்கள். "ஆத்தா! ராசாத்திக்காவே நான் பொறந்திருக்கேன். அவ இல்லாட்டி நான் செத்துருவேன்! என் கையில ஏத்திருக்க இந்த சூடம் அணையுறதுக்குள்ள ராசாத்திய காப்பாத்திரு ஆத்தா' என மனமுருக வேண்டுகிறார் பாண்டியன்.
வாட் எ மெடிக்கல் மிராக்கிள்! பாண்டியனின் கையில் இருக்கும் சூடம் அணைவதற்கும், அங்கே ஆஸ்பத்திரியில் ராசாத்தி கண் முழிப்பதற்கும் சரியா இருக்கு. தகவல் கேள்விப் பட்டு துள்ளிக் குதித்து ஓடுகிறார் பாண்டியன்.
கடந்த 18-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோட்தான் சூப்பர் டக்கரான சமாச்சாரம். ஒரு சீனில் பாண்டியனின் கைகளில் மல்லிகைப் பூவைக் கொடுத்து, ""ராசாத்தி தலையில் வை பாண்டியன்'' என்கிறார் தேவயானி. ""அதெல்லாம் வேணாம்'' என்கிறார் ராசாத்தி. வெட்கப்படுகிறார் பாண்டியன். ""கட்டிக்கப் போறவ தலையில பூ வைக்கிறதுக்கு என்ன வெட்கம்? வை பாண்டியா'' என தேவயானி சொன்னதும், ""எனக்கென்னெ வெட்கம்'' எனச்சொல்லி, வெட்கப்பட்டவாறே ராசாத்தி தலையில் பூ வைக்கிறார் பாண்டியன்.
இதுக்கடுத்த சீன்தான் வாட்யா... எப்படிய்யா? இப்படியெல்லாம் யோசிக்கிறீக ரகம்! அதாவது என்னன்னா... ராசாத்தியின் பிரண்ட் ஒருத்தி, ராசாத்தியை தேடிவந்து டிபன் பாக்ஸ் ஒன்றை தருகிறார். ஆச்சர்யத்துடன் டிபன் பாக்ஸை திறந் தால், அதில் இனிப்பு பணியாரம். ""என்ன இன்னைக்கு விசேஷம்? இனிப்பு பணியாரம் கொண்டுவந்துருக்க?'' என ராசாத்தி கேட்கிறார்.
""பிச்சு ஒருவாய் சாப்ட்டு பாரு, ஒன்னோட கண்ணுக்குள்ள பாண்டியன் தெரிவாரு''என்கிறாள் பிரண்ட்.
பிரண்ட் சொன்னமாதிரியே ஒரு வாய் இனிப்பு பணியாரத்தை சாப்பிட்டதும். டொட்டடாய்ங்... டொட்டடாய்ங்... ரீரிகார்டிங்குடன் பல தினுசாக ராசாத்தியின் கண்களுக்குள் கும்மியடிக்கி றார் பாண்டியன்.
ஏய் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா!
-ஈ.பா .பரமேஷ்வரன்