"சிலந்தி', "ரணதந்த்ரா' படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் "அருவா சண்ட.'
""கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக்கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும் இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும்விதமாக, உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சிக்காகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசியவிருது கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இந்தப் படத்தில் மூன்று அட்டகாசமான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன்.
வைரமுத்து எழுதிய "சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ', "தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ' என்ற பாடலை தரண் இசையில் நடிகை ரம்யா நம்பீசன் அருமையாகப் பாடியிருக்கிறார். உடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தரணுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் மீண்டும் மகுடம் சூட்டும்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.
புதுமுகம் ராஜா, மாளவிகா மேனன் நாயகன்- நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் "ஆடுகளம்' நரேன், சௌந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, சுஜாதா, இயக்குனர் மாரிமுத்து, "காதல்' சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் வி. ராஜா பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாடல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.